Friday, December 18, 2015

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி திமுக உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை (டிசம்பர் 18) நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மனு அளித்தனர்.

டிசம்பர் 28 ஆம் தேதி அலங்காநல்லூரில் மதுரை திமுக சார்பில் எனது தலைமையில் மிகப் பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்  என்று திமுக பொருளாளர்  தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 15, 2015

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது மூடநம்பிக்கைதான்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைபோடுவது மூட நம்பிக்கை என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் மைசூருவில் டிசம்பர் 13ல்  நடந்த நோபல் பரிசு நூற்றாண்டு தொடர்சொற்பொழிவு-4-இல் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப் பில் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் பேசினார்.


அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ளதற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்ததல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின் தங்கிவிட்டன. மூடநம்பிக்கைகள், ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன என்று கூறினார்.


ஜோதிடமும் ஹோமியோபதியும் மனரீதியான நம்பிக்கையால் செயல் படுகின்றன. ஜோதிடம், குத்துமதிப்பாக கூறப்படும் ஆலோசனைகளால் ஆனது. அவரவர் வீட்டை தூய்மையாகவும் வெளிச் சமாகவும் வைப்பதற்கு ஜோதிட ஆலோசனைகள் தேவையில்லை. இந்தியர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட வேண்டும் அல்லது குறையவேண்டும். இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப் போது, அது வெற்றிகர மாக விண்ணில் ஏவுவதற்காக அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று கூறினார் .


மங்கள்யான் விண்கலத்தை ஏவுவதற்கு பொருத்தமான நாளாக செவ்வாய்க்கிழமையையும் தேர்ந்தெடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்தியநாடுகளில் காணமுடியாதது. மக்களிடையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தி யாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்? என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நாடகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் கூறினார்.


ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக் கையும் இந்தியாவில் குவிந்துள்ளன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர் வினையால் தான் உண் மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களி டையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் கருதியதன் விளைவால் கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதிடம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன்.


மண்ணின் மைந்தர்களை நினைவுகூர்ந்த மாணவர்கள்

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 21.11.2015 அன்று காலை 11.15மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வன் கிரிஷாந்த் நகுலதாஸ் ஏற்றிவைத்தார். அதன்பின்பு   அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடரினை வீரவேங்கை சாந்தன் அவர்களின் தங்கை திருமதி சுகுமாரன் ஏற்றிவைக்க மாவீரர் துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட்டது. 

எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சகோதரர் அல்லது உறவினர்களில் எமது மண்ணுக்காக தம் உயிரை மாய்த்தவர்களின் பெற்றோர்களும் இச்சுடரை ஏற்றினார்கள்.  அடுத்து மாவிரரர் தொடர்பான தலைமை உரையினை எமது பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி சசிகரன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து மாவீரர் தொடர்பான நிகழ்ச்சிகளான கவிதை, பேச்சு, நடனம் மற்றும் நாடகம் போன்ற மாவிரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எமது பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக விழ விழ எழுவோம் என்ற எழுச்சி பாடலுக்கு நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் தட்டி எழுப்பினார்கள் வளர்தமிழ் 4 மாணவர்கள்.  

உல்பா தலைவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம்

உல்பா இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர் அனுப் சேத்தியாவை, 20 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் நவம்பர் 11 அன்று இந்தியாவிடம் ஒப்படைத்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு வந்த சோட்டா ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்நிலையில் உல்பா அமைப்பின் முக்கிய தலைவர் கோலப் பருவா என்ற அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் வங்கதேசம் ஒப்படைத்தது. இவர் மீது கொலைகள், கடத்தல்கள், வங்கி கொள்ளைகள் உட்பட பல வழக்குகள் உள்ளது. கடந்த 91ம் ஆண்டில் அனுப் சேத்தியா அசாமில் கைது செய்யப்பட்டார். அப்போதைய அசாம் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியா, இவரை சிறையில் இருந்து விடுவித்தார். அதன்பின் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றார். இவரை ஒப்படைக்கக் கோரி இந்தியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்து வந்தது. ஆனால் வங்கதேசத்தில் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த அரசுகள் இதை கண்டு கொள்ளாமல் இருந்தன. 

கடந்த 1997ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சிக்காலத்தில் அனுப் சேத்தியா கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் ஊடுருவியது மற்றும் வெளிநாட்டு பணம், ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை முடிந்ததும், அரசியல் தஞ்சம் கோரினார். அதனால் இவரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பும், இந்தியாவிடம் அவரை ஒப்படைக்காமல் வங்கதேச அரசு இழுத்தடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் அரசியல் தஞ்சம் அளிக்கக் கோரி, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அனுப் சேத்தியா கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் நேரடியாக தலையிட்டனர். இதையடுத்து அனுப் சேத்தியா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கிடையே, அசாம் முதல்வர் தருண் கோகோய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அனுப் சேத்தியா, தற்போது அரசுக்கும், உல்பா அமைப்புக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். மத்திய அரசும் அனுப் சேத்தியாவை விடுவித்து, அமைதி நடவடிக்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

அனுப் சேட்டியா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை போனில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா மேற்கொள்ளும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார். 

Monday, December 14, 2015

சுற்றுலா சென்ற போது விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் பலி.

பெங்களூரு கே.ஆர்.புறம் சிட்டி கல்லூரி மற்றும் சைதன்யா கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் (13-12-2015) கல்லூரியை புறக்கணித்து சொகுசு காரில் நந்தி பெட்டா என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றனர். நந்தி பெட்டா செல்லும் வழியில் தேவனஹள்ளி என்ற இடத்தில் அவர்கள் வாகனம் மிக வேகமாக சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்தனர். மேலும் 6 பேரை வைட் பீல்ட் பகுதியில் உள்ள சத்ய சாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது அங்கு சிகிச்சை பயனளிக்காமல் இருவர் உயிரிழந்தனர். மேலும் தற்பொழுது நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

விபத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிரண் குமார் என்ற மாணவன் 13-12-2015 அன்று காலையில் கல்லூரிக்கு வரும் போது தனது 3 சக மாணவர்களை அழைத்துக்கொண்டு காரில் கல்லூரிக்கு வந்துள்ளான். கே.ஆர். புறம் சிட்டி கல்லூரியில் மாணவர்கள் காரில் வர தடைவிதிக்க பட்டுள்ளது. அதனால் காருடன் கல்லூரிக்குள் வந்த மாணவர்களை காவலாளி தடுத்து நிறுத்தி காரை வெளியே விட்டுவிட்டு வர வலியுறுத்தியுள்ளார்.
காருடன் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டதால் அந்த நான்கு பேரும் சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். இதனிடையே அவர்கள் சநந்தி பெட்டா செல்லும் வழியில் சைதன்யா கல்லூரிக்கு சென்று அங்கு வகுப்பில் இருந்த நான்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தற்பொழுது நான்கு மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர்.

Friday, December 11, 2015

வண்ண தாள்களில் அழகிய மோட்டார் சைக்கிள்

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற இளைஞர் மக்களை வியக்கவைக்கும் அளவில் பத்தாயிரம் ஏ4 வர்ண தாள்களை கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவமைத்துள்ளார்.

இவர் செய்துள்ள கைப்பணி வேலைகளை தினமும் இப்பகுதி மக்கள் பார்வையிடுகின்றனர். அத்துடன் இவற்றை விலை கொடுத்தும் கொள்வனவு செய்கின்றனர்.

நவீன உலகில் நாமும் ஆக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு இவ்வாறான வேலைப்பாடுகளை செய்து வருவதாக சந்திக அருண சாந்த கூறினார். 

மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி அபார வெற்றி

நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளது. அதிக இடங் களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது.

சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும்கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அந்நாட்டின் அரசியல மைப்பு சட்டத்தின்படி, மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த மூன்று கோடி மக்களில் 80 சதவீதம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை பதிவு செய்தனர். வாக்குப் பதிவு முடிந்த ஞாயிற்றுக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் முழுமையான தேர்தல் முடிவு அறிவிப்பதில் கடந்த நான்கு நாட்களாக தாமதம் ஏற்பட்டது. ஆங் சான் சூகி தான் போட்டியிட்ட காஹ்மூ தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. முன்பு அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த ராணுவ ஆட்சியாளர்கள் தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 348 தொகுதிகளில் ஆங் சான் சூகி தலைமை யிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்ற தாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் 13.11.2015 முறைப்படி அறிவித்துள்ளது. அந்த கட்சி வெற்றிபெற்ற இடங்களின் அடிப்படை யில் நாடாளுமன்ற கீழ் சபையில் 21 இடங்களை தேர்தல் ஆணையம் இக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. எனவே, முழு மெஜாரிட்டி யுடன் ஆங் சான் சூகி-யின் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி அதிபராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மியான்மரில் வெளி நாட்டவரை மணந்தவர்கள் அதிபர் பதவி வகிக்க முடியாது என்ற ராணுவ ஆட்சியின்போது தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இதனால் ஆங்கிலேயரான மைக்கேல் ஆரிசை மணந்த ஆங் சான் சூகியால் அதிபர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்ட போது, ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் அரசின் முடிவு களை தானே எடுக்க இருப்பதாகவும், அதிபருக் கும் மேலான தலைமை பொறுப்பை வகிக்க இருப்பதாகவும் ஆங் சான் சூகி சமீபத்தில் தெரிவித்தி ருந்தது நினைவிருக்கலாம்.

ராணுவத்தின் சார்பில் போட்டியிட்ட மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி கண்டாலும் நாட்டின் அதிகாரம் முழுவதும் ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங், அதிபர் தெய்ன்சீன் ஆகியோரிடம்தான் இன்னும் இருக்கிறது. எனவே, அமையவிருக்கும் புதிய அரசாங்கத்துக்கு அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாக ஆங் சான் சூகி அதிபர் தெய்ன் சீனை நேற்று சந்தித்து பேசினார். 

புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் 19 எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் பியேர் ட்ரூடோவின் மகனும், லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ புதிய பிரதமராகப் பதவியேற்கிறார். தேர்தலில், மொத்தமுள்ள 338 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி 184 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமலே அவர் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு 39.5 சதவீத வாக்குகளும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைத்தன. புதிய ஜனநாயகக் கட்சி 19.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. 

இதையடுத்து, கனடா வரலாற்றில் மிக நீண்ட காலமாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஸ்டீஃபன் ஹார்ப்பரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றத் தேர்தலில் லிபரல் கட்சி மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

அந்தத் தேர்தலில் வெறும் 34 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அக்கட்சி, வலிமையற்ற புதிய ஜனநாயகக் கட்சிக்கும் அடுத்தபடியாக 3-ஆவது இடத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், அந்தக் கட்சிக்கு ஜஸ்டின் ட்ரூடோ புத்துயிர் அளித்து, இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்கு சாதகமான நிலைப்பாடுகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பேர் வெற்றியடைந்துள்ளனர்.

தற்போது ஆட்சியமைக்கவிருக்கும் லிபரல் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வேட்பாளரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கனடா மக்கள் தொகையில் 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் கனடாவில் வசிக்கும் 19 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஏனெனில் கடந்த தேர்தலில் 8 இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். 

இந்நிலையில், லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் திருதியோ கனடாவின் 23-ஆவது பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அதில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தோ கனடியரான ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். 
இந்தியாவில் பிறந்த சஜ்ஜன் 5 வயதாக இருக்கும் போது தனது குடும்பத்துடன் கனடா சென்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகையில் 456,090 உள்ள சீக்கியர்களில் 18 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 138,675 உள்ள தமிழர்களின் பிரதிநிதியாக லிபரல் கட்சியை சேர்ந்த கேரி அனந்தசங்கரி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏன் இந்த நிலை? கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இலங்கை தமிழரான ராதிகா சிற்சபேசன் இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

செந்தூரன் உயிர் அர்ப்பணிப்பு

கல்வியிலும், பழக்க வழக்கங்களிலும் ஆசிரியர்களே போற்றும் நல்ல மாணவனாக திகழ்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் அவர்களின் அகால மரணச் செய்தி எம்மை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அமைதியான குணாதிசயமுடைய செந்தூரன் அவர்கள், திடீரென ஒரு அரசியல் கோரிக்கையை முன்வைத்து தற்கொலை செய்திருப்பதை எண்ணிப்பார்க்கும்போது, பெருமையாக தமிழ் மக்கள் கருதுவார்கள்.

ஆனால் ஒரு கோரிக்கைக்காக உயிரை பலியிடும் முடிவானது அவரது பெற்றோருக்கும், கல்விச் சமூகத்திற்கும், நண்பர்களுக்கும், மக்களை நேசிக்கும் எமக்கும் பேரிழப்பையே ஏற்படுத்தியுள்ளது.


செந்தூரனுக்காக கவலை கொள்ளும் அதேவேளை அதை ஒரு முன்னுதாரணமாக எதிர்காலத்தில் எவரும் பின்பற்றி, எமது இனம் இழந்த இழப்புக்களை தொடர்கதையாக்கிவிடக் கூடாது. தமிழர்களாகிய நாம் இழந்த உயிர்கள் போதும். இனியும் நாம் உயிர்களை இழக்கத் தயாரில்லை. எமது உரிமையையும், விடுதலையையும், நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் வென்றெடுக்க உறுதியெடுத்து செந்தூரனுக்கு இறுதி மரியாதை செய்வோம்.

Thursday, December 10, 2015

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது.

ஸ்ரீநிவாஸ் - தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வைத்ததில் பெரும் பங்காற்றியவர். இணையப் பயன்பாடு பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமான சொத்து என்பதை தகர்த்து சாமானியர்களும் அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மென்பொருட் களை அறிமுகம் செய்தவர்.

`தெய்வமுரசு’ ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர்,  எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத் தமிழ் பட்டயப் படிப்பை நடத்தியவர். ஸ்ரீநிவாஸ் இப்போது உயிரோடு  இல்லை என்ற செய்தி அவரைச் சார்ந்தவர்களுக்கே கூட தெரியாது. ஆர்ப்பரித்து ஓடிய அடையாற்று வெள்ளம் அவரையும் அவரது மனைவி சங்கராந்தியையும் இணை பிரிக்காமல் இழுத்துச் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

ஈக்காட்டுத்தாங்கல் மாஞ் சோலை தெருவில் ஸ்ரீநிவாஸ் வீடு. பக்கத்து தெருவில் அவரது தம்பி கந்தசாமியின் வீடு. அடையாற் றில் வெள்ளம் வந்து 
கொண்டிருந் ததால் தம்பியின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று செவ்வாய்க்கிழமை இரவு முழுக்கத் தூங்காமல் உழன்று கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். புதன்கிழமை பொழுது விடிந்ததுமே அலைபேசியில் தம்பியைத் தொடர்புகொண்டவர், அவரை தனது தெரு 
முனைக்கு வரும்படி சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொல்லிவிட்டு தனது வீட்டைவிட்டு இறங்கி தெருவில் இறங்கி 
நடந்தவரை பேயென பாய்ந்து வந்த வெள்ளம் அதன் போக்கிலேயே இழுத்துச் 
சென்று விட்டது. இதைப் பார்த்துக் கதறித் துடித்த சங்கராந்தியையும் விட்டு 
வைக்கவில்லை அடையாற்று வெள்ளம்.


Monday, December 07, 2015

சவுதியில் கை வெட்டப்பட்ட கஸ்தூரி சென்னை திரும்பினார்

சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குச் சென்று, உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூரைச் சேர்ந்த கஸ்தூரி தாயகம் திரும்பினார். வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் சவுதியில் வீட்டு வேலைக்கு சென்றிருந்தார். ரியாத் நகரில் பணிபுரிந்த அவர், அங்கு வீட்டு உரிமையாளரின் சித்ரவதைக்கு உள்ளானதுடன், அவரது வலது கையும் துண்டிக்கப்பட்டது. 

மேலும், இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் பேரில், விமானம் மூலம் தாயகம் திரும்பினார். அவரை, சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். தமிழக அரசு அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று கஸ்தூரியை வரவேற்று, தேவையான உயர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கஸ்தூரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் மாத வட்டியான 8,330 ரூபாய் கஸ்தூரிக்கு மாதந்தோறும் அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல் திருநங்கை எஸ்ஐ பிரித்திகா யாஷினி

தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா. மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு நவம்பர் 5-ம் தேதிவிசாரணைக்கு வந்தது. 

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார். எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம்

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அந்த பதவியை பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் வகிப்பார் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தலைவராக என்.சீனிவாசன் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங், பெட்டிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியும் பறிபோயுள்ளது. 
அவரை அந்த பதவியில் இருந்து நீக்கும் முடிவு இன்று மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசனை ஐசிசி தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. வரும் ஜூன் மாதம் வரை ஐசிசி தலைவர் பதவியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தும் இடங்களை தேர்வு செய்வதில் சீனிவாசனுக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய மூத்த தலைவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த முடிவு என்று தெரிகிறது. 

Monday, November 30, 2015

அசோக் சிங்கால் காலமானார்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் மறைந்த அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் 89 வயதான அசோக் சிங்காலுக்கு கடந்த 14-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக் சிங்கால் உயிர் பிரிந்தது. 
பின்னர் அசோக் சிங்கால் உடல் டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அசோக் சிங்காலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யவர்தன் ரத்தோர் மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி - பிரகாஷ் ஜவடேகர் உறுதி

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றானது ஜல்லிக்கட்டு, தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் மற்றும் கோயில் திருவிழாக்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனிடையே கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை அகற்ற வேண்டும் என தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நவம்பர் 6ஆம் தேதி அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். ஜல்லிக்கட்டை அனுமதிக்க விரைவில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படும். மேலும் மாட்டுவண்டி பந்தயத்தையும் மீண்டும் நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்ட ரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும். பாரம்பரியமான விளையாட்டுகளை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுவதும் அதையடுத்து உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குவதும் வழக்கமாக இருக்கிறது. எனவே இந்தாண்டு போட்டிகள் நடத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு நடத்தும் போட்டியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

சாதியை அடையாளப்படுத்தும் மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் தங்கள் சாதியை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அவரவர் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக, கைகளில் வண்ண கயிறுகளை கட்டுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, செய்திகளும் ஓரிரு வாரங்களுக்கு முன்பு வெளியாயின.  மாணவர்கள் மத்தியில் சாதீய உணர்வு மேலோங்கி வருவதால், பள்ளிகளில் மோதல் சம்பவங்கள் உருவாகும் நிலை உருவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினையை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழ்நாடு சமூக நீதித்துறை மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. 

விஜயகாந்த் - கோவன் சந்திப்பு

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் 28.11.2015 அன்று சந்தித்தார். 

அப்பொழுது அவர் பாடிய பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்களை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது தேமுதிக இளைஞர் அணி செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ், மக்கள் அதிகார மையம்த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.வழக்கறிஞர் ராஜூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வெற்றிவேல் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தப்பிய இளம் குற்றவாளிகள்

பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 12 பேர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கீழரண் சாலை பாபு ரோட்டில் சமூக பாதுகாப்புத்துறையின் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்றவழக்கில் கைது செய்யப்படும் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இதன்படி, 31 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில், மரியவசந்துரு, தர்மா, முருகன், கதிரவன், ஹரிகரசுதன், திவாகர், முத்துமணி, மணிகண்டன், நாகராஜ், ஆகாஷ், தினேஷ், சதீஸ்குமார்  ஆகிய  12 பேர், குளியலறையின் சன்னல் கம்பிகளை அறுத்து, அகற்றி,  போர்வைகளை கயிறு போல் கட்டி, அதன் வழியாக இறங்கி  நவம்பர் 28 அதிகாலை 3 மணியளவில் தப்பி ஓடியுள்ளனர்.

தப்பியோடியவர்கள், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள்.

இது குறித்து கூர் நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் மன்னர் கொடுத்த புகாரின் பேரில், மாநகர துணை ஆணையர் சசிமோகன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு குறைபாடுகளா? அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களை செய்ய திட்டமிட்ட தப்ப வைக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் முதல் முறையாக ஒரே நேரத்தில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 பேர் தப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவீரர் நாள் - டென்மார்க்

டென்மார்கில்  நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு டென்மார்க்  நட்டில் இரண்டு இடங்களில் எழுச்சியாக நடைபெற்றது Herning  மற்றும் Holbæk ல் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றறது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றலுடன்  தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்தனர்.

Sunday, November 22, 2015

தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது இலங்கை அரசு: விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

இலங்கை சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டு அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குலைக்க வழிவகுக்கும் என்றும், இலங்கை அரசு தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது என்றும் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான பேர் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, தங்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்னைக்கு நவம்பர் 7-ம் தேதிக்குள் தீர்வு காண்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து தமிழ் கைதிகள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், நவம்பர் 7-ம் தேதி வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பதால் கடந்த சில நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒருவர் உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழ் அரசியல் கைதிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக அவர்கள், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்படுத்துவார்களே தவிர, கைவிடமாட்டார்கள். சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் இலங்கை அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்க வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாசர், கார்த்தி, கருணாஸ், மற்றும் பொன்வண்ணன்  ஆகியோர்  21.11.2015 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். 
தேமுதிக இளைஞரணி செயலாளர் திரு எல்.கே. சுதீஷ் அவர்கள் உடனிருந்தார். 
இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.பி. அணையில் மதகு பழுது - வீணான தண்ணீர்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக தொடர்ந்து இரண்டாவதாக நாளாக சுமார் 1000 கன அடி  தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது இதனால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடந்த பத்து நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.  அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை தன் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக முழு கொள்ளளவான 52 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது, இதனால் அதிகாரிகள் அணையில் பிரதான ஏழாவது மதகு வழியாக வெளியேற்றப்பட்ட நீரை நிறுத்த முற்பட்டனர் அனால் மதகு பழுது காரணமாக மூட முடியவில்லை.

இதனால் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் மதகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் இன்னமும்  மதகு சரிசெய்ய முடியாததால் அணையில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் தொடர்ந்து ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது, இதனால் அணையின் நீர்மட்டம் 52 அடியில் இருந்து 50.95 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது - பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் மலேசியவாழ் தமிழர்களிடையே, பிரதமர் மோடி வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் உள்ள நட்பு, வெறும் முகத்தில் மட்டுமே சிரிப்பைக் காட்டும் நட்பு இல்லை என்று கூறினார். திருவள்ளுவரின் "முகநக நட்பது நட்பன்று"  என்ற குறளுக்கேற்ப, இந்திய -மலேசிய நட்பு உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மலேசிய வாழ் இந்தியர்களின் அன்பும், நட்பும் தனது இதயத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையத்திற்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டீப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டீக்கப்பட்டுள்ளது. 8 தமிழர் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இலங்கையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 தமிழர் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீது அப்போதைய ராஜபக்சே அரசு தடை விதித்தது. 


இந்தத் தடையில் தற்போது மாற்றம் செய்துள்ளது சிறிசேன அரசு. தனிநபர்கள் மீதான தடையிலும் மாற்றம் செய்யப்பட்டு, 155 பேர் மீதான தடையும் தளர்த்தப்பட்டுள்ளது. 
பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு, உலக தமிழர் அமைப்பு, கனடிய தமிழர் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் ஆகியவை தடை நீக்கப்பட்ட அமைப்புகளில் சில. இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கம், நாடு கடந்த ஈழத் தமிழ் அரசாங்கம் உள்ளிட்ட மேலும் 8 அமைப்புகள் மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Sri Lankan government by a gazette extraordinary issued on Friday delisted several alleged pro-LTEE Tamil organizations and individuals proscribed by the previous government last year. The previous government on March 21, 2014, delisted 16 organizations and 424 individuals under the UN Act No: 45 of 
1968. The Extraordinary Gazette notification issued by the Secretary to the Defense Ministry on 20 November 2015 replaces the previous notification and bans eight organizations and 155 individuals.
Liberation Tigers of Tamil Eelam (LTTE), Tamil Rehabilitation Organization (TRO), Tamil Coordinating Committee (TCC), World Tamil Movement (WTM), Transnational Government of Tamil Eelam (TGTE), Tamil Eelam Peoples Assembly (TEPA), World Tamil Relief Fund (WTRF) and Headquarters Group (HQ) are continued to be listed as terrorist organizations. Global Tamil Forum (GTF), British Tamil Forum (BTF), National Council of Canadian Tamils (NCCT), Tamil Youth Organization (TYO), World Tamil Coordinating Committee (WTCC), Canadian Tamil Congress (CTC), Australian Tamil Congress (ATC), and Tamil National Council (TNC) have been de-listed.
Sri Lanka's Foreign Minister Mangala Samaraweera in March 2015 said the government will review the proscription of 16 Tamil organizations and over 400 individuals by the previous government.

Thursday, November 19, 2015

லேடி வெல்லிங்டன் கல்லூரி பெயரை மாற்றமுடியாது - உயர் நீதிமன்றம்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெல்லிங்கடன் கல்லூரி பெயரை மாற்றி விட்டு அதற்கு சுதந்திர போராட்ட வீரர் சிங்காரவேலரின் பெயரை வைக்க கோரி கவுதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே, சிங்காரவேலரின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு நினைவில்லம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிங்காரவேலரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டினர். மேலும் வில்லிங்டன் கல்லூரியின் பெயரை மாற்றுவது குறித்து தாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாகவும் தெரிவித்தனர். 

Sunday, November 15, 2015

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவகாலம் டிசம்பர் 24இல் ஆரம்பம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி பூரணைத் தினத்துடன் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தை முன்னிட்டு சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நல்லதண்ணியில் அமைந்துள்ள கிராம சேவகர் அலுவலுகத்தில் நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான சிவனொளி பாதமலை யாத்திரைப் பருவக் காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி காலை சுபவேளையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பவனி பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை அன்றையதினம் இரவு வந்தடையவுள்ளது.
அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப் பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர், 24 ஆம் திகதி அதிகாலை விசேட பூஜைகள் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2015, 2016 ஆம் வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.

சிவனொளிபாத மலைப்பிரதேசத்தில் பொலித்தீன் பாவனை, மதுபாவனை என்பன இம்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டது.மேலும், சிவனொளிபாத மலைக்கு வருகை தரவுள்ள யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த யாத்திரிகர்களுக்காக ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்குவரத்துச் சேவைகளை நல்லத்தண்ணி நகர் வரை நடத்துவதற்கு ஹட்டன் பஸ் டிப்போ நடவடிக்கை எடுக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

126 மீனவர்கள் தமிழகம் வந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் தாயகம் வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், நாகபட்டினம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற 127 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின் மன்னார், ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் புத்தளம் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 126 பேர் சிறை வைக்கப்பட்டனர். இவர்களில் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.


இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதனால், சிறையில் இருந்த மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இதன்படி தீபாவளிக்கு முந்தைய தினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால், கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் தீபாவளியன்று நாடு திரும்ப முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.

இதன்படி விடுவிக்கப்பட்ட 126 மீனவர்களில் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 48 மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கும், எஞ்சிய 78 மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 17 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்தான். இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்றம் ஊர்காவல்துறை நீதிமன்றம் என்பதால் அங்கிருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு அனுப்பி வைககப்பட்டனர்.


நவம்பர் 13 அன்று இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 126 மீனவர்களில் 48 பேர் இரவு 7 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகள், மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜ், எமரிட் மற்றும் சிறையில் இருந்து மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் வரவேற்றனர். 

அதிக கட்டணம் வசூலித்த நடத்துனருக்கு அபராதம்

கொழும்பில் இருந்து மாத்தளைக்கு பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த  நடத்துனருக்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தை இரண்டு தினங்களுக்கு சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பிலிருந்து மாத்தளைக்கான கட்டணம் 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் சொகுசு பேருந்து, பயணிகளிடம் 355 ரூபா கட்டணம் வசூலித்ததாக மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையிடம் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. 
சம்பந்தப்பட்ட பஸ் வண்டியின் நடத்துனரையும் உரிமையாளரையும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏ.ஜீ. ரணசிங்க விசாரணைக்கு உட்படுத்தினார். இதனையடுத்து பஸ் நடத்துனருக்கு அபராதமும் குறிப்பிட்ட பஸ் வண்டிக்கு இரண்டு நாள் போக்குவரத்து தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

செஸ் போட்டியில் 11 பதக்கங்கள் வென்று சாதனை

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்கள் சென்னை திரும்பினர்.

உலகளவில் சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டி கடந்த வாரம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐம்பது பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய சிறுவர் சிறுமியர்கள் மொத்தம் 11 
பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த மகாலட்சுமி, வைசாலி, பிரக்கனந்தா, ரக்‌ஷிதா மற்றும் பரத் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்க பத்தகங்களை வென்றுள்ளனர். மேலும் வர்ஷினி மற்றும் தேவ் ஷா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.


இந்த உலக தர செஸ் போட்டியில் இதற்கு முன்பு இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் கடந்த 2006ம் ஆண்டு ஐந்து தங்க பதக்கங்களை வென்றனர். அதன் பிறகு 9 வருடங்களுக்கு பிறகு அதிக பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இன்று அதிகாலை சென்னை திரும்பிய பதக்கங்கள் வென்ற சிறுவர் சிறுமியர்க்கு ஆல் இந்தியா செஸ் பெட்ஃரேஷன், பெற்றோர் மற்றும் உறவினர் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Friday, November 13, 2015

எல் அண்ட் டி யிடமிருந்து அதானி குழுமத்திற்கு மாறிய காட்டுப்பள்ளி துறைமுகம்

எல் அண்ட் டி நிறுவனத்திடமிருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழும நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2,500 கோடி 
ரூபாய்க்கு இது கையகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி துறைமுகம் நிறுவனம் தமிழகத்தில் லார்சன் அண்ட் டூப்ரோ நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக அதானி குழுமம் எடுத்துள்ள நடவடிக்கை இது என்று கருதப் படுகிறது.

அதானி குழும நிறுவனமான அதானிபோர்ட்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல 
நிறுவனம் (ஏபிஎஸ்இஇஸட்) நிறுவனம் ஏற்கெனவே கேரள மாநில அரசுடன் 
ஒப்பந்தம் செய்துள்ளது. கேரள மாநிலத்தில் விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. ரூ. 4,089 கோடிக்கான 
இந்த சர்வதேச ஆழ்கடல் பன்முக துறைமுகத்தை பிபிபி அடிப்படையில் அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் 
லிமிடெட் நிறுவனம் (எல்டிஎஸ்பி) நிறுவனம் காட்டுப் பள்ளியில் துறைமுகத்தை  நிர்வகித்து வருகிறது. இதை அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு இந்தத் துறைமுகம் வாங்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரூ.2,500 கோடி இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக இரு நிறுவனங்களும்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. காட்டுப்பள்ளி துறைமுகமானது எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்கும் பணியில் அதானி குழும நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த விற்பனைக்கு மாநில மற்றும் 

மத்திய அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான அனுமதிக்காக காத்திருக்கும் அதேவேளையில் இந்நிறுவன செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனம் செய்து கொண்டுள்ளது.காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உள்ளன. இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை. இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் டியுஇ சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.

நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டில் காட்டுப்பள்ளி துறை முகத்தைக் கையகப்படுத்தியது மிகவும் முக்கியமான நடவடிக்கை என்று அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமம் 7 துறைமுகங்கள் அதாவது முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட்டினம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

திப்பு ஜெயந்தி விழா - போராட்டம்

கர்னாடகாவில் நவம்பர் 10ம் தேதி அன்று திப்பு ஜெயந்தி விழா
கொண்டாட்டத்தின் போது விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம்
நடத்தினர். இதில் குடகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம் நடத்திய போது வன்முறை வெடித்தது.

இச்சம்பவத்தின் போது குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின்
மாவட்ட செயலாளர் குட்டப்பா பலியானார். இது விபத்து அல்ல கொலை என்றும் மாநில அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியும், கெம்ப கவுடா விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என் கூறிய எழுத்தாளர் கிரிஷ் கார்னாடை கண்டித்தும் நவம்பர் 11 அன்று பெங்களூரு டவுன் ஹால் முன்பு விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் சித்தராமையா முஸ்லீம்களின் ஆதரவை பெறுவதற்காக திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர்.


இதனிடையே கிரிஷ் கார்னாடின் பேச்சை கண்டித்து பாஜக சார்பிலும் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்பட்டது. வாக்கு வங்கியை பெறுவதற்காக காங்கிரஸ் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது என்றும், காங்கிரசின் இந்த செயல் பெங்களூரு நகரை வடிவமைத்த கெம்ப கவுடாவை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்றும் பாஜக வினர் குற்றம் சாட்டினர். இதனிடையே இதுகுறித்து கர்னாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது, குடகு சம்பவத்தை வைத்து பாஜகஅரசியல் செய்து வருவதாகவும், அரசியல் சுயலாபத்திற்காக மக்களை தூண்டிவருவதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே இதுகுறித்துவிசாரணை நடத்த மைசூர் மண்டல ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் பலியான குட்டப்பாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ஈழப்பிடும் அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

போராட்டத்தின் போது போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின் செயலாளர் குட்டப்பா 15 அடி சுவர் மீது ஏற முயன்று தவறி விழுந்து பலியானார். ஆனால் இந்து  அமைப்பை சேர்ந்தவர்கள், குட்டப்பா முஸ்லீம் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார் என குற்றம் சாட்டி வரும் விஷ்வ இந்து அமைப்பினர், நவம்பர் 13 அன்று கர்னாட மாநிலத்தின் மைசூரு, கோலார், சிக்மகளூரு ஹாசன் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். 

ரயில் முன்பதிவில் மாற்றம்


இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால் டிக்கெட் முன்பதிவு 
செய்யலாம். நவம்பர் 12-ம் தேதி முதல், ரயில்கள் புறப்படுவதற்கு அரை மணி நேரம்  முன்னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பயண இறுதி அட்டவணை தயாராகும் முறையில் மாற்றங்கள் செய்துள்ள தொடர்வண்டி துறை, இப்போது இரண்டு முறை அட்டவணையை தயாரிக்க உள்ளது.

முதல் முன்பதிவு பயண அட்டவணை, தொடர்வண்டி கிளம்புவதற்கு நான்கு மணி நேரங்கள் முன்னால் தயாரிக்கப்பட்டு வந்த முறையோடு இப்போது, அரை மணி நேரம் முன்பாக ஒரு முறை இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது. 


மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இணையம் மற்றும் முன்பதிவு கவுண்டர்களில் என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்யலாம். இருக்கும் பெர்த்களின் எண்ணிக்கையைப் பொருத்து, குறிப்பிட்ட ரயில்களுக்கு, முதல் முன்பதிவு பயண அட்டவணை தயாரான பின்னரும், முன்பதிவு செய்ய முடியும்.

இதற்காக நவம்பர் 12-ம்  தேதியில் இருந்து, முதல் முன்பதிவு பயண அட்டவணையை 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே இறுதி செய்யும்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனிலோ அல்லது இல்லை தொடர்வண்டி நிலையத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தெந்த ரயிலில் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ரயில் கிளம்பும் முன்னதாக இரண்டாவது மற்றும் இறுதி முன்பதிவு பயண அட்டவணை, ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பதக்கங்களை திருப்பி அளித்த ராணுவ வீரர்கள்

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டம்: பதக்கங்களை திருப்பி அளித்த முன்னாள் 
ராணுவ வீரர்கள் மத்திய அரசின் விருதுகளையும், அங்கீகாரங்களையும் திருப்பி அளிக்கும் தற்காலத்திய போக்கை அடியொட்டி ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தில் கோரிக்கையை முழுமையாக ஏற்காத மத்திய அரசை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பெற்ற பதக்கங்களை திருப்பி அளித்தனர்.


போருக்காக பெற்ற பதக்கங்கள் மற்றும் பிறவற்றை அங்கீகரித்து வழங்கிய 
பதக்கங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் சண்டிகர் அருகே பஞ்சகுலாவில் 
உதவி ஆணையரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதே போல் ஜலந்தர், அமிர்தசரஸ்,  பாடியாலா, ரோஹ்டக், ஹிசார், அம்பாலா ஆகிய இடங்களிலும் முன்னாள்  ராணுவ வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்ததாக தகவல்கள் வந்துள்ளன. 

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்திய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு 
மேற்கொண்ட அறிவிப்பின் மேல் தற்போது தங்கள் எதிர்ப்பைத் திருப்பியுள்ளனர் முன்னாள் ராணுவ வீரர்கள். மோடி அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதியில் பின்வாங்கியதால் இந்த தீபாவளி 'கருப்பு தீபாவளி' தினமாக அனுசரிக்க போவதாக தெரிவித்தனர்.

காதலிக்க மறுத்தவருக்கு வெட்டு

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மதூர் தாலுக்காவை சேர்ந்தவர் பிருந்தா குமாரி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது அவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த ரவிக்குமாரால் சரமாரியாக வெட்டபட்டார். ரவிக்குமார் கடந்த ஒன்றரை வருடமாக பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். 
மேலும் ரவிகுமார் கடந்த இரண்டுவருடமாக பிருந்தா குமாரி வீட்டில் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவர் பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தது தெறிந்தவுடன் அவரை பெற்றோர்கள் பணியிலிருந்து நீக்கியுள்ளனர். ஒருபுறம் காதல் மறுக்கப்பட்ட விரக்தி மறுபுறம் வேலையை 
விட்டு நீக்கியதால் ஏற்பட்ட அவமானத்தாலும் பிருந்தா குமாரியை பலிதீர்க்க 
முடிவு செய்த ரவிகுமார் கடந்த சனிகிழமை அன்று பிருந்தா ல்லூரி முடித்து வீடு  திரும்பிக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் 3 பேருடன் முகமூடி அணிந்து சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். குறிப்பாக பிருந்தாவின் முகத்தை குறிவைத்து ரவிகுமாரும் அவரது நண்பர்களும் வெட்ட முயற்சிசெய்துள்ளனர். 

இந்த தாக்குதலில் தன்னை பாதுகாத்துகொள்ள பிருந்தா தனது கையால் தடுத்து முயற்சி செய்த போது சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுகள் பிருந்தாவின் இரண்டு கைகளிளும் விழுந்து அவர் கைகள் துண்டாகும் நிலைக்கு காயம்  அடைந்தது. மண்டியா அரசுமருத்துவமனியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உடனடியாக பிருந்தாவை பெங்களூரில் உள்ள ஹொஸ்மட் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

கடந்த இரண்டு தினங்களாக சுமார் 14  மணிநேரம் அருவைசிகிசைக்கு பிறகு பிருந்தாவின் கைகள் தற்பொழுது பாதுகாக்கப்பட்டுள்ளன.குறைந்தது 6 வாரங்கள் பிருந்தா ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மண்டியா காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரவிகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் ரவிக்குமாருடன் இந்த  தாக்குதலில் ஈடுபட்ட இருவர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது 
செய்ய தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள தேர்தலில் அஇஅதிமுக வெற்றி

கேரளா மாநில உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கோவை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து
பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான, பாலக்காடு மாவட்டம்,  கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டு எஸ்.ஹெலன் அமலோற்பவமேரி, 7-வது வார்டு ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டு  எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டு பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 3-வது வார்டு எல்.பாலகிருஷ்ணன்,  பீர்மேடு பஞ்சாயத்து 1-வது  வார்டு எஸ்.பிரவீணா ஆகிய 6 பேர் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர்.  அதிலும், 5 மகளிர் வெற்றி பெற்றுள்ளனர். 
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கொட நாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோவை விமான நிலையத்தில் வாழ்த்து பெற்றனர்.


தேவிகுளம், மறையூர், பீர்மேடு பகுதிகளில் அதிமுக பெற்றுள்ள வெற்றி, முல்லை பெரியாறு அணைப்பகுதியில் கேரள வனத்துறை மற்றும் நீர்பாசனத் 
துறையினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.