Sunday, August 16, 2015

´விசா´வுக்காகக் காத்திருந்தேன்! - டாக்டர் அம்பேத்கர்

´விசா´வுக்காகக் காத்திருந்தேன்! - டாக்டர் அம்பேத்கர்
இந்தியாவில் தீண்டாமை இருப்பதை அயல்நாட்டினர் அறிந்திருக்கக்கூடும். உண்மையில் அது எவ்வளவு அடக்கு முறை நிறைந்தது என்பதை அவர்கள், அடுத்த வீட்டில் இருந்தாலும், அறிந்து கொள்ள இயலவில்லை என்றே கூறலாம். அதிக எண்ணிக்கை கொண்ட இந்துக்கள் கொண்ட ஒரு கிராமத்தின் ஓர் ஓரத்தில் எவ்வாறு ஒரு சில தீண்டாதவர்கள் வசிக்க இயலும் என்பதையும், தினமும் கிராமத்தைச் சுற்றிச் சென்று, அங்கிருக்கும் அருவருக்கத்தக்க கழிவுகளை அகற்றியும், ஊர் மக்கள் பணிக்கும் சில்லறை வேலைகளைச் செய்து கொண்டும், இந்துக்களின் வீட்டு வாசல்களில் நின்று அவர்கள் இடும் உணவைப் பெற்றுக் கொண்டும், இந்து பனியாவின் கடையில் எட்டி நின்று கொண்டே தங்களுக்குத் தேவையான பொருட்களையும், எண்ணெய்யையும் வாங்கிக் கொண்டும், அந்தக் கிராமத்தை ஒவ்வொரு வழியிலும் தங்களின் வீட்டைப் போல் நினைத்துக் கொண்டிருந்தாலும் கிராமத்தார் எவரையும் தொட்டுவிடாமலும், தன்னை யாரும் தொட்டு விடாமலும் நடந்துக்கொள்வதைப் புரிந்து கொள்வது அவர்களுக்கு எளிதானதல்ல.


உயர்ஜாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறமுறயும் என்பதுதான் பிரச்சனை. இதைப்பற்றி ஒன்று பொதுவாக விவரித்துக் கூறலாம். அல்லது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை தனிப்பட்டவர்களின் அனுபவங்களைக் கூறலாம். இந்த இரு வழிகளே நமது இந்த நோக்கத்தை நிறைவேற்ற இயன்ற சிறந்த வழிகளாகும். முந்தையதை விட, பிந்தைய வழியே மேலானது என நான் உணர்கிறேன். இந்த அனுபவங்களைத் தேர்ந்து எடுக்கையில், எனது சொந்த அனுபவங்களிலிருந்து சிலவற்றையும், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து சிலவற்றையும் எடுத்துக் கொண்டேன். எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவ நிகழ்ச்சிகளைக் கொண்டு இதனை நான் தொடங்குகிறேன்.

தண்ணீர் இன்றி உணவருந்த முடியாத இளம் வயதில் பட்ட கொடுமை!

பம்பாய் இராஜஸ்தானியின் இரத்னகிரி மாவட்டத்து, தபோலி தாலுகாவிலிருந்து வந்தது எங்கள் குடும்பம். கிழக்கு இந்தியக் கும்பெனியின் ஆட்சி இந்தியாவில் தொடங்கிய போதே எனது முன்னோர்கள் தங்களின் பாரம்பரியமான தொழிலை விட்டுவிட்டு கும்பெனியின் பட்டாளத்தில் பணியாற்ற வந்துவிட்டார்கள். என் தந்தையும் குடும்பப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, இராணுவப் பணியேற்றார். இராணுவத்தில் படிப்படியாக பதவி உதவி பெற்ற அவர் ஓய்வு பெறும்போது சுபேதார் அந்தஸ்தில் இருந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் என் தந்தை, தபோலியில் தங்கலாம் என்ற எண்ணத்தோடு, எங்கள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தபோலி வந்தார். ஆனால், சில காரணங்களுக்காக என் தந்தை தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். எங்கள் குடும்பம் தபோலியை விட்டுப் புறப்பட்டு சதாரா சென்று அங்கு 1904-வரை வாழ்ந்தது.

எனக்கு நினைவிருந்து நான் பதிவு செய்யும் எனது முதல் அனுபவ நிகழ்வு நாங்கள் சதாராவில் இருந்தபோது 1901-இல் ஏற்பட்டது. அப்போது என் தாயார் உயிருடன் இல்லை; இறந்துபோய் விட்டார். சதாரா மாவட்டம் கடாவ் தாலுகாவில் உள்ள கார்கோன் என்ற இடத்தில் அரசுப் பணியில் காசாளராகப் பணியாற்ற என் தந்தை சென்றுவிட்டார். பஞ்சத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருந்த நிலையில், பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு வேலை தரும் நோக்கத்தில் ஓர் ஏரியைத் தூர் வாரும் பணியை அங்கு பம்பாய் அரசு துவங்கி இருந்தது. எங்கள் தந்தை கார்கோன் சென்றபோது, என்னையும், என் அண்ணனையும், இறந்துபோன எனது அக்காவின் இரண்டு மகன்களையும் தனியாக, என் அத்தை மற்றும் அக்கம் பக்கத்து மக்களின் பொறுப்பில் எங்களை விட்டுவிட்டுச் சென்றார்.

நான் அறிந்த மனிதர்களில் என் அத்தை மிகவும் அன்பானவர் என்றாலும், எங்களுக்கு அவரால் எந்த உதவியும் இல்லை. மற்றவர்களைப் போலன்றி மிகவும் சிறிய உருவம் கொண்டவராக இருந்த என் அத்தைக்கு, அவரது கால்களிலும் ஏதோ ஒரு வகையான ஊனம் இருந்தது. மற்றவர்களின் உதவி இன்றி அவரால் இங்கும் அங்கும் நகர்ந்து செல்லவும் முடியாது. அநேகமாக அவரை யாராவது தூக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். எனக்குச் சகோதரிகள் இருந்தனர் என்றாலும், அவர்களுக்குத் திருமணமாகி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வெகு தொலைவில் வாழ்ந்து வந்தார்கள். எங்கள் அத்தையின் உதவியும் இன்றி சமைப்பது என்பதே எங்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. நாங்கள் நால்வரும் பள்ளிக்கு சென்று கொண்டும், வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டும் இருக்க வேண்டிய நிலையே நிலவியது. எங்களால் ரொட்டி சுடமுடியாது என்பதால் புலவு சோற்றை மட்டுமே நாங்கள் உண்டு வாழ்ந்தோம். அரிசியையும், கறியையும் சேர்த்து வேக வைத்து புலவு தயாரிப்பது எங்களுக்கு எளிதாக இருந்தது.

அவர் காசாளராக இருந்ததால் எங்களைக் காண அடிக்கடி சதாராவுக்கு வர எங்கள் தந்தையால் இயலவில்லை. அதனால் கோடை விடுமுறைக்கு கோர்கான் வந்து அவருடன் தங்கியிருக்கும்படி கேட்டு எங்களுக்குக் கடிதம் எழுதினார். எங்கள் வாழ்நாளில் அதுவரை நாங்கள் ரயிலையே பார்த்தது இல்லை என்பதால் அவரது அழைப்பு எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

நாங்கள் புறப்பட்டுச் செல்வதற்காக பலமான ஏற்பாடுகளைச் செய்தோம்.
இங்கிலாந்து நாட்டுத் துணியில் புதிய சட்டைகள் தைக்கப்பட்டன; அழகான, அலங்காரத் தொப்பிகள் வாங்கப்பட்டன; புதிய காலணிகள், பட்டுக் கரை போட்ட வேட்டிகள் அனைத்தும் எங்கள் பயணத்துக்காக வாங்கப்பட்டன. எவ்வாறு நாங்கள் பயணம் செய்து வரவேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எங்கள் தந்தை தனது கடிதத்தில் எழுதியிருந்தார். அத்துடன் எப்போது நாங்கள் வருகிறோம் என்பதை முன்கூட்டியே கடிதம் மூலம் தெரிவித்தால், தான் நேரில் ரயிலடிக்கு வந்தோ அல்லது தனது சேவகரை அனுப்பியோ கோர்கானுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த ஏற்பாட்டின்படி, நானும், என் அண்ணனும், என் அக்கா மகன்களும் சதாராவை விட்டுப் புறப்பட்டோம்.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என் அத்தையைப் பார்த்துக் கொள்வதாக வாக்களித்ததால் அத்தையை வீட்டிலேயே விட்டு விட்டுப் புறப்பட்டோம். ரயில்வே நிலையம் எங்கள் இடத்திலிருந்து 10-மைல் தொலைவில் இருந்தபடியால், ஓர் இரட்ரைக் குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு நாங்கள் ரயிலடிக்குச் சென்றோம். இந்த அருமையான வாய்ப்புக்காக நாங்கள் புதிய உடைகள் அணிந்து கொண்டிருந்தோம். நாங்கள் மகிழ்சியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டும்போது, எங்களைப் பிரியும் துயரத்தில் எங்கள் அத்தை கீழே விழுந்து புரண்டு அழுதார்.

ரயில் நிலையத்தை நாங்கள் அடைந்தவுடன், என் அண்ணன் பயணச் சீட்டுக்களை வாங்கியபின், எனக்கும், எங்கள் அக்கா மகன்களுக்கும் எங்கள் விருப்பம் போல் செலவு செய்ய கைச்செலவுக்காக தலா இரண்டு அணா கொடுத்தார். உடனே நாங்கள் ஆளுக்கு ஒரு புட்டி எலுமிச்சம்பழரசம் வாங்கி அருந்தியதன் மூலம் எங்கள் ஆடம்பரமான வாழ்க்கையைத் தொடங்கினோம். சிறிது நேரத்தில் ஊதிக் கொண்டு வந்த இரயிலில் உடனே நாங்கள் ஏறிக்கொண்டோம். இல்லாவிட்டால் எங்களை விட்டுவிட்டு இரயில் சென்றுவிடுமோ என்று நாங்கள் அஞ்சினோம். கோர்கானுக்கு மிக அருகில் உள்ள மாசூரில் நாங்கள் இறங்க வேண்டும் என்று எங்களுக்குக் கூறப்பட்டிருந்தது.

மாலை 5-மணிக்கு இரயில் மாசூரை வந்தடைந்தது. மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு நாங்கள் இரயிலை விட்டு இறங்கினோம். சில நிமிட நேரத்தில் அந்த நிலையத்தில் இரயிலை விட்டு இறங்கியவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று எதிர்பார்த்து நாங்கள் நால்வரும் இரயிலடியிலேயே காத்திருந்தோம். வெகுநேரம் காத்திருந்தும் எவரும் வரவில்லை. ஒரு மணி நேரம் கழிந்த பின் ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எங்களிடம் விசாரித்தார். பயணச் சீட்டு இருக்கிறதா என்று அவர் எங்களைக் கேட்டார். நாங்கள் எங்கள் பயணச் சீட்டுகளை அவரிடம் காட்டினோம். நீங்கள் ஏன் தயங்கி நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் எங்களைக் கேட்டார். நாங்கள் கோர்கான் செல்ல வேண்டும் என்றும், எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று நாங்கள் காத்திருப்பதாகவும், கோர்கானுக்கு எப்படி போவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவரிடம் நாங்கள் கூறினோம்.

நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். இந்துக்களின் வழக்கம் போல நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறிவிட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினரில் மஹரும் ஒன்று) அவர் முகம் திடிரென மாறிவிட்டது. அதிசயிக்கத்தக்க வெறுப்பு உணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மறைந்து எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.

அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டு வண்டி வாடகைக்குக் கிடைத்தால் கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்துவிட்டபடியால், தீண்டத்தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக் கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை. இரண்டு மடங்கு கட்டணம் தருவதாக நாங்கள் கூறியபோதும் பயன் ஏதுமில்லை.

எங்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்ற தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. எங்களைப் பார்த்து "உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?" என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. "எங்களால் வண்டி ஓட்ட முடியும்" என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று, "வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டிவருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்" என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன் தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.

புறப்பட நாங்கள் தயாராகும்போது மாலை 6.30-மணி ஆகிவிட்டது. இருட்டுவதற்கு முன் நாங்கள் கோர்கானை அடைய முடியும் என்ற உறுதி மொழி எங்களுக்கு அளிக்கப்படும் வரை இரயில் நிலையத்தை விட்டுப் போகாமல் இருக்கவே நாங்கள் ஆவலாய் இருந்தோம். அதனால் பயண தூரம் மற்றும் கோர்கானை எந்த நேரத்திற்குள் சென்று அடையலாம் என்ற விவரங்களை மாட்டு வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். பயண நேரம் 3- மணிக்கு மேல் ஆகாது என்று அவர் எங்களுக்கு உறுதி அளித்தார். அவரது சொற்களை நம்பி எங்களது சுமைகளை மாட்டு வண்டியில் வைத்து விட்டு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு நன்றி கூறிவிட்டு, நாங்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டோம். எங்களில் ஒருவர் வண்டி மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொள்ள வண்டியை ஓட்டத்தொடங்கினோம். வண்டிக்காரர் வண்டிக்குப் பின்னால் நடந்து வந்தார்.

இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கங்கே தண்ணீர் சிறிதளவு குட்டை குட்டையாக நின்றுகொண்டு இருந்ததைத் தவிர ஆறு முற்றிலுமாக வறண்டிருந்தது. அதைத் தாண்டிச் சென்றால் தண்ணீர் கிடைக்காது என்பதால் அங்கே தங்கி எங்களது உணவை முடித்துக் கொண்டு செல்லலாம் என்று வண்டிக்காரர் கூறினார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். வண்டி வாடகையில் ஒரு பகுதியைத் தனக்குத் தரும்படி கேட்ட வண்டிக்காரர் கிராமத்துக்குச் சென்று தனது உணவை முடித்துக் கொண்டு வருவதாகக் கூறினார். என் அண்ணன் அவருக்குச் சிறிது பணம் கொடுத்தார். விரைவில் வந்துவிடுவதாகக் கூறி வண்டிக்காரர் புறப்பட்டுச் சென்றார்.

எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம். வழியில் உண்பதற்காக நல்ல உணவைத் தயாரிக்கும்படி எங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பெண்களை எங்கள் அத்தை ஏற்பாடு செய்திருந்தார். உணவுக் கூடையைத் திறந்து நாங்கள் உண்ணத் தொடங்கினோம். கழுவுவதற்கு எங்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் இருக்குமிடத்திற்கு எங்களில் ஒருவர் சென்றார். ஆனால் அங்கிருந்தது தண்ணீரே அல்ல. தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்றுநீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரம்பும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று.

வண்டிக்காரர் வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோதும், நீண்ட நேரம் கழிந்த பின்னும் அவர் வரவே இல்லை. அவர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அவர் வந்து சேர்ந்த பின் நாங்கள் புறப்பட்டோம். நான்கு அய்ந்து மைல் தூரம் நாங்கள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கைவிட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்.

ஆனால் இது பற்றி அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க எங்களுக்குத் துணிவு வரவில்லை. எங்களது இலக்கான கோர்கானை எவ்வளவு விரைவாக அடையமுடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதிலேயே நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். சிறிது நேரம் வண்டி செல்வதையே நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். ஆனால் விரைவில் எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்து கொண்டது. இருளைப் போக்கும் விளக்குகள் எதுவும் சாலையில் இல்லை. சாலையில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. நாங்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்த இயன்ற ஓர் ஆணையோ, பெண்ணையோ அல்லது கால் நடையையோ கூட நாங்கள் சாலையில் எங்களைக் கடந்து செல்வதையோ எதிர் வருவதையோ பார்க்கவில்லை. எங்களைச் சூழ்ந்திருந்த தனிமை எங்களுக்கு அச்சத்தை அளித்தது. எங்களது ஆவல் அதிகமாக ஆக, ஆக நாங்கள் தைரியத்தை வரவழித்துக் கொண்டோம்.

மாசூரிலிருந்து வெகு தூரம் 3-மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்துவிட்டோம். ஆனால் கோர்கான் வந்த அடையாளமே தெரியவில்லை. எங்களுக்குள் ஒரு விந்தையான எண்ணம் எழுந்தது. வண்டிக்காரர் எங்களை ஏதோ தனியான இடத்துக்குக் கொண்டு சென்று எங்களைக் கொன்றுவிட சதித் திட்டம் தீட்டி இருப்பாரோ என்று நாங்கள் அய்யப்பட்டோம். நாங்கள் நிறைய தங்க நகைகள் போட்டிருந்தது எங்கள் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கோர்கானுக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் ஏன் கோர்கானை அடைய இவ்வளவு தாமதம் ஆகிறது என்றும் நாங்கள் அவரைக் கேட்டோம். கோர்கானுக்கு இன்னும் அதிக தூரமில்லை; விரைவில் நாம் அங்கு சென்றடைந்துவிடுவோம் என்றே அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவு 10- மணி ஆனபோதும் கோர்கான் வராததால் சிறுவர்களாகிய நாங்கள் அழத் தொடங்கியதுடன் வண்டிக்காரரைத் திட்டவும் தொடங்கிவிட்டோம். எங்களது அழுகையும், புலம்பலும் வெகு நேரம் நீடித்தது. வண்டிக்காரர் எந்தப் பதிலும் கூறவே இல்லை. திடீரென்று சிறிது தூரத்தில் விளக்கு ஒன்று எரிவதை நாங்கள் கண்டோம். "அந்த விளக்கைப் பார்த்தீர்களா? சுங்கச் சாவடி விளக்கு அது. இரவு நாம் அங்கே தங்குவோம்" என்று வண்டிக்காரர் கூறினார். எங்களுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டதில் எங்கள் அழுமை நின்றது. அந்த விளக்கு தொலைவில் இருப்பதாகவே தோன்றியது; அதை நாங்கள் விரைவில் அடைய முடியும் என்று தோன்றவில்லை. சுங்கச்சாவடி குடிசையை அடைய இரண்டு மணிநேரம் ஆனது. இந்த இடைவெளி எங்கள் ஆவலை அதிகரிக்கச் செய்ததால் நாங்கள் வண்டிக்காரரிடம் அந்த இடத்தை அடைய ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது நாம் அதே சாலையில் சென்று கொண்டிருக்கிறோமா என்பது போன்ற பலவிதமான கேள்விகளையும் கேட்டுக் கொண்டே வந்தோம்.

இறுதியில் நடுஇரவு நேரத்தில் வண்டி சுங்கச்சாவடி குடிசையை வந்தடைந்தது. அது ஒரு மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது; ஆனால் மலையின் அந்தப் பக்கத்தில் இருந்தது. நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, இரவு தங்குவதற்காக வந்திருந்த பல மாட்டு வண்டிகள் அங்கு இருந்ததை நாங்கள் கண்டோம். எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால் நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது என்று  வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே "நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்" என்று கூறினார்.

அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. "உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை" என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டும் அவர் எங்களிடம் சொன்னார்.

மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு, வண்டி தரையில் சாய்த்து வைக்கப்பட்டது. வண்டிக்குள் இருந்த பலகை மேல் எங்கள் படுக்கைகளை விரித்துக் கொண்டு நாங்கள் படுத்துக் கொண்டோம். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்துவிட்டோம் என்பதால் நடந்ததைப் பற்றி நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால் அண்மையில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி எங்களால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்க வேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம். அதுதான் அன்றிரவு இறுதியாக எங்கள் மனதில் தோன்றிய சிந்தனையாகும். பாதுகாப்பான இடத்திற்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம் என்று நான் சொன்னேன். என்றாலும் என் அண்ணன் அவ்வாறு கருதவில்லை என்று தெரிந்தது. நாம் நால்வரும் ஒரே நேரத்தில் உறங்குவது சரியல்ல என்றும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறிய அவர், ஒரு நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே உறங்கலாம் இரண்டுபேர் விழித்துக் கொண்டிருக்கலாம் என்று யோசனை சொன்னார். இவ்வாறு அந்த இரவை நாங்கள் அந்த மலை அடிவாரத்தில் கழித்தோம்.

விடியற்காலை 5-மணிக்கு எங்கள் வண்டிக்காரர் வந்து நாம் கோர்கானுக்குப் புறப்படலாம் என்று கூறினார். நாங்கள் ஒரேயடியாக மறுத்துவிட்டோம். காலை 8-மணிக்கு முன் நாங்கள் நகரமாட்டோம் என்று அவரிடம் கூறிவிட்டோம். எங்களை எந்த ஆபத்திலும் உட்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. வண்டிக்காரர் பதிலேதும் கூறவில்லை. எனவே காலை 8-மணிக்குப் புறப்பட்ட நாங்கள் 11-மணிக்கு கோர்கானைச் சென்றடைந்தோம்.

எங்களைக் கண்ட எங்கள் தந்தை வியப்படைந்தார். நாங்கள் வரப் போவதைப் பற்றிய தகவல் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். அவருக்குக் கடிதம் எழுதிவிட்டுத்தான் வந்ததாக நாங்கள் அவரிடம் கூறினோம். எங்கள் தந்தையின் பணியாளரின் தவறு என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எங்களின் கடிதத்தை அந்தப் பணியாளர் எங்கள் தந்தையிடம் கொடுக்கத் தவறிவிட்டார்.

இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அது நிகழ்ந்தபோது எனக்கு 9-வயதிருக்கும். ஆனால் அது என் மனதில் மறையாத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பே நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், தீண்டத்தகாதவர்கள் சில அவமானங்களுக்கும், பாகுபாட்டுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திருந்தேன்.

எடுத்துக்காட்டாக, என்னுடைய தர வரிசைப்படி எனது வகுப்பறையில் மற்ற மாணவர்களிடையே நான் உட்கார முடியாது. வகுப்பறையில் ஒரு தனியான கோணிப்பை மீதுதான் உட்கார வேண்டும் என்றும், பள்ளியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர் நான் பயன்படுத்திய கோணித்துணியைத் தொடவும் மாட்டார் என்பதையும் நான் அறிவேன். ஒவ்வொரு நாள் மாலையும் நான் அந்தக் கோணித் துணியைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டு, மறுநாள் காலை மறுபடியும் வீட்டிலிருந்து அதைப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளியில் தீண்டத்தக்க பிரிவுப் பிள்ளைகள் தாகம் எடுக்கும்போது தண்ணீர்க் குழாயிடம் சென்று அதைத் திறந்து தண்ணீர் குடித்து, தாகத்தைத் தணித்துக் கொள்வதை நான் அறிவேன். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஆசிரியரின் அனுமதி மட்டுமே. ஆனால் எனது நிலைமையே வேறு. நான் அந்த தண்ணீர்க் குழாயைத் தொட முடியாது. தீண்டத்தக்க ஒருவர் குழாயைத் திறந்துவிட்டால் தவிர, எனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வழி இல்லை. என்னைப் பொறுத்தவரை ஆசிரியரின் அனுமதி மட்டும் போதாது. தண்ணீர்க்குழாயைத் திறந்து விடப் பள்ளி ஊழியர் அங்கே இருக்க வேண்டும்; தண்ணீர் திறந்து விடுவதற்கு அந்தப் பணியாளர் ஒருவரைத்தான் பள்ளி ஆசிரியர் பயன்படுத்துவார். அந்தப் பணியாளர் இல்லையென்றால் நான் தண்ணீர் குடிக்காமலேயே போக வேண்டியதுதான். பணியாளர் இல்லை என்றால் எனக்குத் தண்ணீர் இல்லை என்றுதான் சுருக்கமாகக் கூறவேண்டும்.

வீட்டில் என் சகோதரிகள் துணிகளைத் துவைப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். சதாராவில் துணி வெளுப்பவர் இல்லாமல் இல்லை அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் முடியாது என்பதுமில்லை. தீண்டத்தகாதவரின் துணிகளை எந்தத்துணி வெளுப்பவரும் வெளுக்கமாட்டார் என்பதால், எங்கள் துணிகளை என் சகோதரிகளே வெளுப்பார்கள். எங்கள் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு முடிவெட்டுவது, முகச் சவரம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளையும் எங்கள் மூத்தச் சகோதரியே செய்வார்; எங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் சிறந்த முடித்திருத்தக் கலைஞராகவே ஆகிவிட்டார். சதாராவில் முடிதிருத்துபவர்கள் இல்லாமல் இல்லை; அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் இயலாது என்பதுமில்லை. ஆனாலும் எந்த முடிதிருத்துபவரும் தீண்டத்தகாத ஒருவருக்கு சவரம் செய்ய ஒப்புக் கொள்ளமாட்டார் என்பதால் தான் இப்பணியை என் சகோதரி செய்து வந்தார். இவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் கோர்கான் செல்லும்போது நேர்ந்த நிகழ்ச்சி இதற்கு முன் நான் எப்போதுமே அனுபவித்திராத பேரதிர்ச்சியை எனக்கு அளித்தது. தீண்டாமையைப் பற்றி என்னை அந்த நிகழ்ச்சி சிந்திக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன், தீண்டாமை என்பது பல தீண்டத்தகாதவர்களுக்கும், தீண்டத்தக்கவர்களுக்கும் சாதாரணமான விஷயமாக இருந்ததாகும்.


பரோடா பார்சி விடுதியில் பட்டபாடு!

1916-இல் நான் இந்தியாவுக்குத் திரும்பினேன். உயர் கல்விக்காக மேதரு பரோடா மன்னர் அவர்களால் நான் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். 1913-முதல் 1917-வரை நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நான் பயின்றேன். 1917-இல் இலண்டனுக்குச் சென்ற நான் இலண்டன் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பயிலச் சேர்ந்தேன். ஆனால் என் கல்வியை முடிக்காமல் இடையில் இலண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் நிலை எனக்கு ஏற்பட்டது.

பரோடா சமஸ்தானத்தினால் நான் படிக்க வைக்கப்பட்டேன் என்பதால், அந்தச் சமஸ்தானத்திற்காகப் பணியாற்ற நான் கடமைப்பட்டிருந்தேன். அதன்படி நான் இந்தியாவை வந்தடைந்தவுடன் நேiடியாகப் பரோடாவுக்குச் சென்றேன். நான் பரோடாவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான காரணங்கள் நான் இங்கே சொல்ல வந்த விஷயங்களுக்குத் தொடர்புடையன அல்ல. அதனால் அவற்றைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. பரோடாவில் எனக்கு ஏற்பட்ட சமூக அனுபவங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் நான் அவற்றை விவரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சனையாகவே இருப்பான் என்பதையும் அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்துவிட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது "எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்" என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது.

விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். நான் பொய் சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். அமெரிக்காவுக்குப் படிக்க வந்த என் நண்பர்கள் பரோடாவில் இருந்தனர். அவர்களிடம் சென்றால் என்னை வரவேற்பார்களா? வரவேற்பார்கள் என்று என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. தங்கள் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவனை அனுமதித்ததற்காக அவர்கள் சங்கடப்பட நேரலாம். எங்கு போவது, என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே சிறிது நேரம் இரயில் நிலையத்திலேயே நின்று நின்றுக்கொண்டிருந்தேன்.

முகாமில் தங்குவதற்கு ஏதேனும் இடமிருக்கிறதா என்று விசாரிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் இரயிலில் வந்த அனைத்துப் பயணிகளும் இரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டபடியால் நான் மட்டும் தனியாக இருந்தேன். எந்தச் சவாரியும் கிடைக்காத சில குதிரை வண்டிக்காரர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்த நான், முகாமில் ஏதேனும் தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராட்டுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த உள்ளத்துடனும் அச்சமற்ற மனத்துடனும் எனது சுமைகளைக் குதிரை வண்டியில் வைத்துவிட்டு பார்சி விடுதிக்குச் செல்லுமாறு கூறினேன்.

அந்த உணவு விடுதி இரண்டு மாடிக் கட்டடமாக இருந்தது. தரைத் தளத்தில் பார்சி முதியவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். அவர் அதன் பராமரிப்பாளர்; அத்துடன் அங்கு தங்கும் பயணிகளுக்கு உணவும் அளித்து வந்தார். வண்டி விடுதியை அடைந்ததும் அவர் என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். நான் மேலே சென்றபோது வண்டிக்காரர் எனது சுமைகளை எடுத்து வந்தார். நான் அவருக்குக் கூலி கொடுத்ததும் அவர் சென்றுவிட்டார். தங்குவதற்கு இடமில்லையே என்ற பிரச்சினை தீர்ந்து போனதால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் என் உடைகளைக் களைந்தேன்.

இதற்கிடையில் விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன்.

"எவ்வாறு நீ தங்க முடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வரவேண்டும்" என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பார்சி பெயரை உபயோகப்படுத்திக் கொள்கிறேன் என்று நான் கூறினேன். "எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே" என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக்கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

நீண்ட காலமாக எந்தப் பயணியும் அங்கு வந்து தங்கவில்லை போலும்; சிறிதளவு பணம் சம்பாதிக்க வந்த ஒரு வாய்ப்பையும் இழக்கவும் அவர் தயாராக இல்லை என்று தோன்றியது. தங்குவதற்கும், உணவு அருந்துவதற்கும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ருபாய் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கே நான் தங்க அவர் ஒப்புக் கொண்டார்; என்னை ஒரு பார்சி என்று அவரது பதிவேட்டில் குறித்துக் கொண்டார். அவர் கீழே இறங்கிச் சென்றதும் நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். பிரச்சனை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை. இந்த விடுதியில் நான் தங்கியிருந்ததற்கு ஏற்பட்ட சோகமான முடிவைப் பற்றி விவரிக்கும் முன்பாக, அங்கு நான் வாழ்ந்த குறுகிய காலத்தில் நான் எனது நேரத்தை எவ்வாறு கழித்தேன் என்பதை இங்கே விவரிக்கத்தான் வேண்டும்.

முதல் மாடியில் இருந்த விடுதியில் ஒரு சிறிய படுக்கை அறை இருந்தது. அதனையொட்டி தண்ணீர்க் குழாயுடன் கூடிய ஒரு சிறு குளியறை இருந்தது. எஞ்சியிருந்தது எல்லாம் ஒரு பெரிய கூடம் தான். நான் அங்கே தங்கியிருந்தபோது அந்தப் பெரிய கூடம் முழுவதும் பலகைகள், பெஞ்சுகள், உடைந்த நாற்காலிகள் போன்ற அனைத்து வகையான குப்பைக் கூளங்களால் நிரம்பி இருந்தது. அவைகளுக்கு இடையே நான் ஒருவன் மட்டும் தனி ஆளாக வாழ்ந்து வந்தேன். காலையில் விடுதிக்காப்பாளர் தேநீருடன் மாடிக்க வருவார். எனது காலைச் சிற்றுண்டி அல்லது உணவுடன் 9.30-மணிக்கு மறுபடியும் வருவார். இரவு எனக்காக உணவுடன் 8.30-மணிக்கு மூன்றாம் முறையாக அவர் வருவார். அவர் தவிர்க்க இயலாத நேரங்களில் மட்டுமே மேலே வருவார். அப்படி வந்தாலும் என்னுடன் அவர் பேசுவதற்கு தயங்கியதேயில்லை. எப்படியோ நாள்கள் கழிந்தன.

பரோமா மன்னரின் அக்கவுண்டன்ட் ஜெனரால் அலுவலகத்தில் நன்னடத்தைக் காலப் பணியாளராக நான் நியமிக்கப்பட்டேன். அலுவலகத்துக்குச் செல்ல காலை 10-மணி அளவில் விடுதியை விட்டுப் புறப்படுவேன்; அலுவலகம் முடிந்த பின் என்னால் வெளியில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ, கழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் என் நண்பர்களுடன் கழித்துவிட்டு இரவு 8-மணி அளவில்தான் விடுதிக்குத் திரும்புவேன். இரவைக் கழிக்க விடுதிக்குத் திரும்ப வேண்டுமே என்ற எண்ணமே என்னை மிகவும் அச்சுறுத்தியது.

ஓய்வெடுப்பதற்கு வானத்தின் கீழ் எனக்கு வேறு போக்கிடம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அந்த விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். விடுதியின் முதல் மாடியில் இருந்த பெரிய கூடத்தில் பேச்சுத் துணைக்கும் ஒரு மனிதரும் கிடையாது. நான் தனிமையில் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கூடம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். இருளைப் போக்க மின் விளக்கோ, எண்ணெய் விளக்கோ கூட இருக்கவில்லை. எனது உபயோகத்துக்காக விடுதிக் காப்பாளர் ஒரு சிறிய அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வருவார். அதன் வெளிச்சம் சில அங்குல தூரத்துக்கு மேல் விழாது. ஏதோ ஒரு நிலவறையில் இருப்பதைப் போல் உணர்ந்த நான், பேசுவதற்கு மனிதர் எவராவது கிடைக்க மாட்டாரா என்று ஏங்கி இருந்தேன். ஆனால் எவரும் கிடைக்கவில்லை. மனிதர் நட்பு கிடைக்காமல் போன நிலையில் நான், புத்தகங்களை நாடினேன்; எப்போது பார்த்தாலும் நான் படித்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு படிப்பதில் மூழ்கி இருந்த நான் எனது தனிமையை மறந்தேன்.

ஆனால் அக்கூடத்தைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்ட வவ்வால்கள் பறப்பதும், கீச்சிடுவதுமான ஓசைகள் எனது கவனத்தைத் திசைதிருப்பி நான் எதை மறக்க நினைத்தேனோ விந்தையானதொரு இடத்தில் விந்தை நிறைந்த ஒரு சூழ்நிலையில் நான் இருப்பதை நினைவுபடுத்தி என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அது நிலவறை போன்றிருந்தாலும், அது தங்குவதற்கான ஓர் இடம் என்பதால், எந்த இடமும் இல்லாத நிலையில் அந்த இடமாவது இருக்கிறதே என்ற எண்ணத்தால் என் வருத்தத்தையும், கோபத்தையும் நான் அடக்கிக் கொண்டேன்.

நான் பரோடா வரும்போது பம்பாயில் விட்டுவிட்டு வந்த எனது எஞ்சிய பொருள்களை எடுத்துக் கொண்டு வந்த என் அக்கா மகன் மனதை வருத்தும் என் நிலையைக் கண்டு பெருங் குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டான். அவனை நான் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. இந்த நிலையில் அந்தப் பார்சி விடுதியில் ஒரு பார்சி போல என்னைக் காட்டிக் கொண்டு நான் வாழ்ந்து வந்தேன். இவ்வாறு பார்சி போல காட்டிக் கொண்டு நீண்ட நாள்கள் அங்கே தங்கியிருக்க முடியாது என்பதையும், என்றாவது ஒரு நாள் நான் பார்சி இல்லை என்பது தெரியப் போகிறது என்பதையும் நான் அறிந்தே இருந்தேன். அதனால் அரசு வீடு ஒன்றைப் பெற நான் முயன்று கொண்டிருந்தேன். ஆனால் பிரதம மந்திரியோ என் கோரிக்கையை நான் நினைத்தது போல் அவசரமானது என்று கருதவில்லை. எனது விண்ணப்பம் ஓர் அதிகாரியிடமிருந்து மற்றொரு அதிகாரிக்குச் சென்று கொண்டிருந்தது. எனக்கு இறுதியாகப் பதில் கிடைப்பதற்கு முன் விடுதியை விட்டு நான் வெளியேற வேண்டிய கடுமையான நெருக்கடி எழுந்தது.

நான் விடுதிக்கு வந்து தங்கத் தொடங்கிய 11-ஆவது நாள் அன்று காலை உணவை முடித்துக் கொண்டு உடை உடுத்திக் கொண்டு அலுவலகத்துக்குச் செல்ல எனது அறையை விட்டு வெளியே வந்தேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக அவற்றை நான் கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது, பெரும் எண்ணிக்கைக் கொண்ட மனிதர்கள் மாடிப்படிகளில் ஏறி வரும் ஓசை கேட்டது. தங்குவதற்காக வந்துள்ள சுற்றுலாப் பயணிகளாக அவர்கள் இருப்பார்கள் எனக் கருதிய நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப் பார்வையுடன், உயரமான தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர்.

என் அறை முன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். "நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்" என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூறமுடியவில்லை. என் போலித்தனத்தை என்னால் தொடர முடியவில்லை. உண்மையிலே நான் செய்தது ஒரு மோசடிதான்; என் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. நான் ஒரு பார்சி தான் என்று கூறி அந்த விளையாட்டைத் தொடர்ந்திருந்தால் கோபம் கொண்டிருந்த வெறி பிடித்திருந்த அந்தப் பார்சிக் கூட்டம் என்னைத் தாக்கி சாகடித்திருப்பார்கள் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.

எனது அடக்கமும், அமைதியும் இந்த அழிவைத் தவிர்த்தது. எப்போது காலி செய்யப்போகிறாய் என்று அவர்களில் ஒருவர் கேட்டார். அப்போது எனது தங்குமிடத்தை எனது உயிரை விட மேலானதாக மதித்தேன். அக்கேள்வியில் பொதிந்திருந்த கருத்து கடுமையான ஒன்று. அதனால் நான் மவுனத்தைக் கலைத்து, இன்னும் ஒரு வாரம் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்குள் வீடு கேட்டு நான் அளித்த விண்ணப்பத்தின் மீது சாதகமான முடிவு ஏற்பட்டு விடும் என்று நான் கருதினேன். ஆனால் நான் கூறுவதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அந்தப் பார்சிகள் இருக்கவில்லை. அவர்கள் எனக்குக் கெடு நிர்ணயித்தார்கள். "மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்" என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன். எனது தங்குமிடம் என்றும், எனது மதிப்பு மிகுந்த உடைமை, எனக்கு மறுக்கப்பட்டது. அது சிறைக் கைதியின் அறையை விட எந்த விதத்திலும் மேலானதல்ல; என்றாலும் அது எனக்கு மதிப்பு மிகுந்ததாகவே இருந்தது.

அந்தப் பார்சிகள் சென்ற பிறகு இதிலிருந்து மீள ஒரு வழியைக் கண்டுபிடிப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டு சிறிது நேரம் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். விரைவில் அரசு வீடு ஒன்று கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது; அவ்வாறு கிடைத்துவிட்டால் என் தொல்லைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அதனால் இப்போது எனக்கு உள்ள பிரச்சினை ஒரு தற்காலிகப் பிரச்சினைதான்; அதனால் நண்பர்களிடம் செல்வது இதற்குத் தகுந்த தீர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன். பரோடா சமஸ்தானத்தில் தீண்டத்தகாதவர்களாக உள்ள நண்பர்கள் எவரும் எனக்கு இல்லை. ஆனால் மற்ற சமூகங்களைச் சேர்ந்த நண்பர்கள் எனக்கு இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்து மற்றொருவர் இந்தியக் கிறிஸ்தவர். முதலில் இந்து நண்பர் வீட்டுக்கு நான் சென்று எனக்கு நேர்ந்ததை நான் கூறினேன். அருமையான மனிதரான அவர் என் கதையைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார் என்றாலும் அவர் ஒன்று மட்டும் கூறினார். "என் வீட்டிற்கு நீ வந்தால், என் வேலைக்காரர்கள் போய்விடுவார்கள்" என்று கூறினார். அவர் கோடிட்டுக் காட்டியதைப் புரிந்து கொண்ட நான் எனக்கு இடம் தருமாறு அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியக் கிறிஸ்தவ நண்பர்களிடம் செல்ல நான் விரும்பவில்லை. தன்னுடன் வந்து தங்கும்படி அவர் என்னை முன்பொரு முறை அழைத்திருந்தார். ஆனாலும் பார்சி விடுதியிலேயே தங்கிக் கொள்வதாகக் கூறி அவர் அழைப்பை நான் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். இதன் காரணம் அவரது பழக்க வழக்கங்கள் என் மனம் எற்பவையாக இருக்கவில்லை என்பததான். இப்போது அங்கு செல்வது நானே கிண்டலை வேண்டிப் பெறுவது போன்றது.

எனவே நான் அலுவலகத்திற்குச் சென்றேன். ஆனால் ஒரு தங்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் இந்த வாய்ப்பை உண்மையில் என்னால் தவீர்த்துவிட முடியவில்லை. ஒரு நண்பரைக் கலந்து பேசிய பின், கிறிஸ்தவ நண்பரைச் சென்று சந்தித்து எனக்குத் தங்க இடம் தருவாரா என்று கேட்க முடிவு செய்தேன். நான் அவரை இவ்வாறு கேட்டவுடன் தன் மனைவி மறுநாள் பரோடா வருவதாகவும் இது பற்றித் தன் மனைவிடம் தான் கலந்து பேச வேண்டும் என்று அவர் பதிலளித்தார். அது ஒரு தந்திரமான பதில் என்பதைப் பின்னர் நான் அறிந்து கொண்டேன். அவரும் அவரது மனைவியும் மதம் மாறுவதற்கு முன் பார்ப்பன ஜாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், மதமாற்றத்திற்குப் பின் கணவர் சிந்தனையில் தாராள மனம் கொண்டவராக மாறிவிட்டபோதும், மனைவி பழைமையான வழிகளிலேயே இருந்தார் என்பதும், தன் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவர் தங்க மனைவி இடம் அளிக்கமாட்டார் என்பதும் தெரிய வந்தது. இவ்வாறு எனது கடைசி நம்பிக்கையும் கருகிப் போனது. எனது கிறிஸ்தவ நண்பரின் வீட்டை விட்டுப் புறப்படும்போது மாலை 4-மணி ஆகிவிட்டது. எங்கே செல்வது என்பது ஒன்றே என் முன் இருந்த மாபெரும் கேள்வியாக இருந்தது. நான் பார்சி விடுதியை விட்டு வெளியேறியே ஆகவேண்டும்; ஆனால் நான் சென்று தங்குவதற்கு வேறு இடமில்லை. என் முன் இருந்த ஒரே வழி பம்பாய்க்குத் திரும்பிச் செல்வதுதான்.

பரோடாவில் இருந்து பம்பாய் செல்லும் ரயில் இரவு 9-மணிக்குப் புறப்படும். இடையில் நான் அய்ந்து மணி நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. எங்கு அதைக் கழிப்பது? விடுதிக்குச் செல்லலாமா? நண்பனிடம் செல்லலாமா? மீண்டும் விடுதிக்குச் செல்லும் துணிவு எனக்கு ஏற்படவில்லை. என் நண்பனிடமும் செல்ல நான் விரும்பவில்லை. எனது நிலை பரிதாபப்படத்தக்கதாக இருந்தபோதும், என்னைக் கண்டு எவரும் பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. காமதி கார்டன் என்று அழைக்கப்படும் பொதுப் பூங்காவில் அந்த அய்ந்து மணி நேரத்தையும் கழிக்க முடிவு செய்தேன். இதுபோன்ற நம்பிக்கை இழந்த நிலையில் குழந்தைகள் நினைப்பதைப் போன்று எனக்கு நேர்ந்ததைப் பற்றியும், என் தாய் தந்தையைப் பற்றியும் எண்ணிக் கொண்டு நான் பூங்காவில் உட்கார்ந்திருந்தேன்.

இரவு 8-மணிக்குப்  பூங்காவை விட்டு வெளியே வந்த நான் ஒரு வண்டி வைத்துக் கொண்டு பார்சி விடுதிக்குச் சென்று என் உடைமைகளைக் கீழே எடுத்து வந்தேன். விடுதிக் காப்பாளர் வெளியே வந்தார்; ஆனால் அவரோ நானோ ஒருவரிடம் ஒருவர் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. இத்தகைய துன்பத்திற்கு நான் ஆளானதற்குத் தானும் ஏதோ ஒரு வழியில் காரணமாக இருந்துவிட்டோம் என்று அவர் உணர்ந்தார். அவருக்குச் சேரவேண்டிய பணத்தை நான் கொடுத்தேன். அவர் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டார்; நானும் அமைதியாகவே விடை பெற்றுக் கொண்டேன். பெரும் நம்பிக்கையுடன் பரோடாவுக்குச் சென்ற நான், எனக்குக் கிடைத்த பெரிய பெரிய வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டேன். அது போர்க்காலம். இந்தியக் கல்விப் பணியில் பல வேலைகள் காலியாக இருந்தன. இலண்டனில் உள்ள செல்வாக்கு மிக்க பலரை நானறிவேன். ஆனால் எந்தவித உதவிக்காகவும் அவர்களை நான் நாடியதில்லை. என் கல்விக்குப் பணமளித்து உதவிய பரோடா மன்னருக்குச் சேவை செய்வதே எனது கடமை என்று நான் உணர்ந்திருந்தேன். ஆனால் 11-நாள்கள் மட்டுமே தங்கிவிட்டுப் பரோடாவை விட்டு நான் பம்பாய் திரும்பி செல்ல நேர்ந்தது.

தடிகளைக் கைகளில் ஏந்தி பத்துப் பன்னிரண்டு பார்சிகள் வரிசையாக என் முன் அச்சுறுத்தும் முறையில் நின்று கொண்டிருந்ததும் கருணையை வேண்டியும் அஞ்சிய பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்றிருந்ததுமான காட்சி 18-நீண்ட ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனத்திரையிலிருந்து மறையவே இல்லை. இன்று கூட அந்த நிகழ்ச்சியை என்னால் தெளிவாக நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அதை நினைவுபடுத்திப் பார்த்த எந்த ஒரு நேரத்திலும் என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை. ஒரு இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்பவன், ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவன் தான் என்பதை அப்போதுதான் முதல் முதலாக நான் உணர்ந்து கொண்டேன்.

குதிரை வண்டியிலிருந்து விழுந்த அனுபவம்!

1929-ஆம் ஆண்டில் பம்பாய் அரசாங்கம் தீண்டத் தகாதவர்களின் குறைகளைக் கேட்டறிந்து விசாரணை செய்ய ஒரு கமிட்டியை நியமித்தது. அக்கமிட்டியில் நானும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஒடுக்குமுறை, கொடுமை பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தக் கமிட்டி இராஜதானி முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுவாகப் பிரிந்து பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிந்து பயணம் செய்ய முடிவு செய்தோம். எனக்கும் மற்றொரு உறுப்பினருக்கும் கண்மேஷ் பகுதியின் இரண்டு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. நானும் என் சகதோழரும் எங்களது பணி முடிந்தபின் பிரிந்து சென்றோம். யாரோ ஓர் இந்து சாமியாரைக் காண அவர் சென்றார். பம்பாய் செல்ல நான் ரயிலில் புறப்பட்டேன்.

துலியா அரகே உள்ள ஒரு கிராமத்தில் தீண்டத்தகாதவர்களின் மீது மற்ற ஜாதி இந்துக்கள் அறிவித்திருந்த சமூகப் புறக்கணிப்பு வழக்கு பற்றி விசாரிக்கச் செல்வதற்காக சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் நான் இறங்கினேன். சாலிஸ்கானைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் இரயில் நிலையத்துக்கு வந்து அன்றிரவு அவர்களுடன் தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சமூகப் புறக்கணிப்பு வழக்கை விசாரித்து விட்டு நேரடியாகப் பம்பாய் செல்வது என்பதுதான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் வந்தவர்கள் நான் தங்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதால் இரயில் தங்க ஒப்புக் கொண்டேன். அந்தக் கிராமத்திற்குச் சென்ற நான் அங்கு நிலவும் சூழ்நலையைப் பற்றி அறிந்து கொண்டு அடுத்த இரயிலிலேயே சாலிஸ்கானுக்குத் திரும்பிவிட்டேன்.

சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் தீண்டத்தகாதவர்கள் எனக்காகக் காத்திருப்பதைக் கண்டேன். எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவர்களின் வீடுகள் உள்ள மஹர்வாடா என்ற இடம் இரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அந்த இடத்தை அடைய ஓர் ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. மஹர் வாடா நடந்து செல்லும் தூரத்திலேயே இருந்தது. உடனடியாக நான் அங்கு அழைத்துச் செல்லப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னை உடனே அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லை; ஏன் என்னைக் காக்க வைத்தனர் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு குதிரை வண்டி இரயில் நடைமேடைக்கு அருகே கொண்டுவரப்பட்டு நான் அதில் ஏறிக் கொண்டேன். வண்டி ஓட்டியும் நானும் மட்டும்தான் அந்த வண்டியில் இருந்தோம். மற்றவர்கள் ஒரு குறுக்கு வழியே நடந்து சென்றனர். 200-அடி தூரம் அந்தக் குதிரை வண்டி சென்றபோது ஒரு மோட்டார் காருடன் அது மோதப் பார்த்தது. தினமும் சவாரிக்கு வண்டி ஓட்டிச் செல்லும் வண்டிக்காரர் இவ்வளவு அனுபவமற்றவராக இருக்கிறாரே என்று நான் வியப்படைந்தேன். அங்கே இருந்த போலீஸ்காரர் உரக்க கத்தியதால், காரின் ஓட்டுநர் காரைப் பின் வாங்கியதால், விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

ஒருவாறாக ஆற்றின் மீது உள்ள பாலத்தின் அருகில் நாங்கள் வந்தோம். பாலங்களின் மீது உள்ளது போன்று அதன் மீது ஓரத்தில் தடுப்புச் சுவர் எதுவுமில்லை. அந்தப் பாலம் நாங்கள் வந்த கொண்டிருந்த பாதையிலிருந்து செங்குத்தாக இருந்தது. பாதையிலிருந்து பாலத்திற்கு வரும்போது வளைவில் திரும்ப வேண்டும். ஆனால் பாலத்தின் முதல் பக்கவாட்டுக் கல் அருகே வரும் போது, நேராகச் செல்வதற்குப் பதில் குதிரை திரும்பி ஓடியது. குதிரை வண்டியின் சக்கரம் பக்கவாட்டில் இருந்த கல்லின் மீது வேகமாக மோதியதால் நான் தூக்கி எறியப்பட்டு, பாலத்தின் மீதிருந்த கல் தரையில் வந்து விழுந்தேன். குதிரையும் வண்டியும் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்துவிட்டன. வேகமாக நான் விழுந்ததால், அசைய முடியாமல் இருந்தேன். ஆற்றின் அக்கரையில் மஹர்வாடா இருந்தது. என்னை அழைக்க இரயிலடிக்கு வந்திருந்தவர்கள் எனக்கு முன் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். அழுகை மற்றும் புலம்பலுக்கிடையில் மஹர்வாடாவுக்குக் கொண்டு சென்றனர். கீழே விழுந்ததில் எனக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. எனது கால் எலும்பு முறிந்து பல நாட்கள் என்னால் நடக்க முடியாமல் போனது. இவையெல்லாம் எப்படி நடந்தன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தினமும் அந்தப் பாலத்தில் முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டிருந்த குதிரை வண்டி, அதற்கு முன் வண்டியை பாலத்தில் பாதுகாப்புக்காகக் கொண்டு செல்ல எப்போதும் தவறியதேயில்லை.

விசாரித்தபோது, எனக்கு உண்மைகளைச் சொன்னார்கள். இரயிலடியில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் தீண்டத்தகாத ஒரு பயணியைத் தனது வண்டியில் அழைத்த வர குதிரை வண்டிக்காரன் விரும்பாததுதான். அது அவனது கவுரவத்திற்குக் குறைவானதாம். நான் அவர்களிடம் இருப்பிடத்திற்கு நடந்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை மஹர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. குதிரை வண்டிக்காரன் வண்டியை வாடகைக்குத் தருவது என்றும் ஆனால் வண்டியை அவன் ஓட்டி வரமாட்டான் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மஹர்களால் வண்டியை வாடகைக்கு எடுக்க முடிந்ததே தவிர, அதனை ஓட்ட முடியாது என்பதால் வேறு ஒருவரை வண்டி ஓட்டச் செய்யலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். இதுதான் சரியான தீர்வு என்று அவர்கள் கருதினார்கள். என்றாலும், பயணியின் கவுரவத்தை விட அவரது பாதுகாப்புதான் முக்கியமானது என்பதை மஹர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

பாதுகாப்புதான் முக்கியம் என்று அவர்கள் நினைத்திருந்தால், என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல இயன்ற வண்டி ஓட்டியைக் கொண்டு வந்திருப்பார்கள். உண்மையைக் கூறுவதானால் அவர்களில் எவர் ஒருவராலும் அந்த வண்டியை ஓட்ட முடியாது; ஏனென்றால் அது அவர்கள் தொழிலல்ல. எனவே அவர்களுள் ஒருவரை வண்டி ஓட்டி வரும்படி கேட்டிருக்கிறார்கள். வண்டியில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்ட அவருக்கு வண்டி ஓட்டுவதில் சிரமம் எதுவுமில்லை என்று நினைக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் புறப்பட்ட பின்னர்தான் தன் பொறுப்பை உணர்ந்த அவர் குதிரையைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றம் அடைந்துவிட்டார். என் கவுரவத்தைக் காப்பாற்ற முயன்ற சாலிஸ்கான் மஹர்கள் என் உயிருக்கே ஆபத்து ஏற்படும்படி செய்துவிட்டார்கள்.

அனைத்து தீண்டத்தகாதவர்களையும் விட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று, ஒரு வேலைக்காரனைவிட மேலானவன் அல்லாத அந்தக் குதிரை வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான் என்பது பின்னர் எனக்குத் தெரிய வந்தது.

மகமதியரும் தீண்டாமை பாராட்டினர்!

நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்பவதாக, எங்கள் இயக்கத்தின் சகதோழர்கள் சிலர் 1934-ல் தெரிவித்திருந்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன். வெருலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப் பயண திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக்குச் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று. வெருல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும். அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத். அவுரங்கபாத் செல்லும் முன் தவுலாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும். இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தவுலாபாத் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம் புகழ் பெற்ற இராம்தியோ ராய் என்ற இந்து மன்னரின் தலைநகராக அது ஒரு காலத்தில் விளங்கியது. தவுலாபாத் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நினைவுச் சின்னம் என்பதால் அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதைக் காணத் தவறுவதில்லை. அதன்படி தவுலாபாத் கோட்டையைப் பார்ப்பது என்பது எங்கள் பயணத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.

சில சுற்றுலாக் கார்களையும் பேருந்துகளையும் நாங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் மொத்தம் 30-பேர் இருந்தோம். நாங்கள் நாசிக்கில் இருந்து புறப்பட்டு அவுரங்காபாத் செல்லும் வழியில் உள்ள யியோலாவுக்குச் சென்றோம். எங்களது சுற்றுப் பயணத்தை நாங்கள் வேண்டுமென்றே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் தீண்டத்தகாத மக்கள் எதிர் கொள்ள வேண்டிய இடையூறுகளைத் தவீர்க்க பயணம் செய்ய விரும்பினோம். நாங்கள் தங்குவது என்ற முடிவு செய்த இடங்களில் இருக்கும் எங்கள் மக்களுக்கு மட்டும் நாங்கள் எங்கள் பயணத் திட்டத்தைத் தெரிவித்திருந்தோம். அதனால் நிஜாம் சமஸ்தானத்தில் பல கிராமங்களை நாங்கள் கடந்து சென்றபோது எங்கள் மக்கள் எவரும் வந்து எங்களைச் சந்திக்கவில்லை. ஆனால் நாங்கள் வருகிறோம் என்று தவுலாபாத் நண்பர்களுக்குத் தெரிவித்து இருந்ததால் எங்களை எதிர்பார்த்து அவர்கள் நகரின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கி, தேநீரும் சிற்றுண்டியும் அருந்திவிட்டு, பின்னர் கோட்டையைக் காணச் செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள. எங்களுக்கு அப்போது தேநீர் மிகவும் தேவையாக இருந்தபோதும், இருட்டும் முன் கோட்டையைக் காண, போதிய நேரம் தேவை என்று கருதியதால் அதனை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் உடனே கோட்டைக்குப் புறப்பட்ட நாங்கள் திரும்பி வரும்போது தேநீர் அருந்துவதாக அவர்களிடம் கூறினோம். அதன்படி எங்கள் ஓட்டுநர்களை விரைந்து செல்லும்படி கூறினோம். கோட்டை வாயிலுக்குச் சில நிமிடங்களில் நாங்கள் வந்து சேர்ந்தோம்.

அந்த மாதம் மகமதியர்களக்குப் புனிதமான ரம்ஜான் மாதமாக இருந்தது. கோட்டை வாயிலுக்கு எதிரில் விளிம்பு வரை நீர் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அதனைச் சுற்றி ஒரு கல்நடைப்பாதை இருந்தது. பயணத்தின்போது எங்கள் உடைகளும், உடலும், முகமும் தூசு படிந்து அழுக்காகி இருந்தபடியால், நாங்கள் முகம் கழுவிக் கொள்ள விரும்பினோம். அதிகமாக யோசனை செய்யாமல் எங்களில் சிலர் அந்தக் குளத்தின் கரையில் நின்று கொண்டே தங்களின் முகம் கை கால்களைக் கழுவிக் கொண்டனர். பின்னர் நாங்கள் கோட்டை வாயிலுக்குச் சென்றோம். கோட்டையினுள் ஆயுதந்தாங்கிய இராணுவ வீரர்கள் இருந்தனர். பெரிய கதவுகளைத் திறந்து அவர்கள் எங்களை உள்ளே செல்ல விட்டனர். கோட்டையினுள் செல்வதற்கு அனுமதி பெற என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் தட்டிக் கேட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்குப் பின்னாலிருந்து, "அந்தத் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தப்படுத்தி விட்டார்கள்" என்று கத்திக் கொண்டு நரைத்துப் போன தாடி கொண்ட ஒரு வயது முதிர்ந்த முதியவர் மகமதியர் வந்தார். உடனே அங்கிருந்த மகமதிய இளைஞர்கள் முதியவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கொண்டு எங்களைத் திட்டத் தொடங்கினர். "தீண்டத்தகாதவர்களுக்கு மிகவும் திமிராகிவிட்டது. தங்களின் இழிந்த ஜாதியையும், தாங்கள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்" என்று எங்களை அவர்கள் பயமுறுத்துவது போல் பேசிக்கொண்டே போனார்கள். நாங்கள் வெளியூர்க்காரர்கள் என்றும், உள்ளுர்ப் பழக்க வழக்கங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும் நாங்கள் கூறினோம்.

அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த உள்ளுர்த் தோழர்கள் மீது அவர்கள் கோபம் திரும்பியது. "இந்தக் குளத்தைத் தீண்டத்தகாதவர்கள் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் ஏன் இந்த வெளியூர்க்காரர்களுக்குக் கூறவில்லை" என்ற கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் குளத்துக்குப் போனபோது அவர்கள் அங்கே வந்தே சேரவில்லை. எங்கள் தவறு அல்ல என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். எதையும் கேட்காமல் செய்தது எங்கள் குற்றம்தான் அது. ஆனால் மகமதியர்கள் எனது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. எங்களை அவர்கள் தொடர்ந்து இழிவான சொற்களில் திட்டிக்கொண்டே இருந்தது எங்களை வெறுப்படையச் செய்தது. வெகு எளிதாக அங்கே கலகம் ஏற்பட்டு அதனால் மரணம் கூட சம்பவித்திருக்க இயலும் என்றாலும் நாங்கள் ஒருவாறு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம். எங்களது சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் எந்தக் குற்றவியல் வழக்கிலும் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு மகமதிய இளைஞர் கூறிக் கொண்டே இருந்தான். ஒரு பொதுக் குளத்திலிருந்து தீண்டத்தகாதவர்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதையே அவன் குறித்துக் கூறினான். எனது அமைதியை இழந்த நான் அவனிடம் கோபமான குரலில், ´அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக்குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா?´ என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர்.

காவல்காரரிடம் திரும்பிய நான் கோபமாகவே கேட்டேன், ´கோட்டைக்குள் நாங்கள் போக முடியுமா, முடியாதா என்று சொல். போக முடியாது என்றால் இங்கே நின்று கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை´ என்று கேட்டேன். என் பெயரைக் கேட்ட அவர், நான் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு கோட்டைக் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று பின்னர் திரும்பி வந்தார். கோட்டைக்குள் போகலாம் என்று எங்களிடம் கூறிய காவலர், கோட்டைக்குள் எந்த இடத்தில் இருக்கும் தண்ணீரையும் நாங்கள் தொடக்கூடாது என்று கூறினார். அதை நாங்கள் மீறிவிட்டாமல் இருக்க, எங்களுடன் ஒரு ஆயுதந்தாங்கிய வீரர் அனுப்பப்பட்டார்.

ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் எவ்வாறு ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவர் ஆகிறார் என்பதற்கு நான் ஓர் எடுத்துக் காட்டு அளித்திருந்தேன். இப்போது இந்த நிகழ்ச்சி ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் ஒரு முகமதியருக்கும் தீண்டத்தகாதவரே என்பதைக் காட்டுகிறது.


மனிதத் தன்மையே அற்ற மருத்துவர்!

அடுத்த வழக்கு இதுபோன்று நிலையை எடுத்துக் காட்டுவதாகும். அது கத்தியவார் கிராமத்தில் உள்ள ஒரு தீண்டத்தகாத ஆசிரியரின் வழக்கு. காந்தியால் வெளியிடப்பட்டு வரும் ´யங் இந்தியா´ என்றும் பத்திரிகையின் 1929-டிசம்பர் 12-ஆம் தேதிய பதிப்பில் கீழ்க்கண்ட கடிதம் வெளியிடப்பட்டது. குழந்தை பெற்றிருந்த தனது மனைவிக்கு ஒரு மருத்துவரை மருத்துவம் பார்க்கச் செய்ய, தான் எதிர்கொண்ட இடையூறுகளை அக்கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த அவர், தனது மனைவியும், குழந்தையும் மருத்துவ உதவியின்றி எவ்வாறு இறக்க நேர்ந்தது என்பதையும் கூறியிருக்கிறார். அக் கடிதம் கூறுவதாவது:

"இந்த மாதம் 5-ஆம் தேதி என் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7-ஆம் தேதியன்று உடல் நலமிழந்த என் மனைவிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவளது பலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; அவளது மார்பு விங்கிக் கொண்டது. மூச்சு விடுவதற்கே துன்பப்பட்ட அவளது மார்பெலும்புகளில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. நான் ஒரு மருத்துவரை அழைக்கச் சென்றேன். ஆனால் தான் ஒரு அரிஜன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறிய அவர் எனது குழந்தையையும் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராக இல்லை. பின்னர் நாகர்சேத் மற்றும் கராசியா தர்பாருக்குச் சென்ற நான் எனக்கு உதவும்படி வேண்டினேன். மருத்துவருக்கான மருத்துவக் கட்டணம் இரண்டு ரூபாயை முழுமையாக நான் கொடுப்பதற்கு நாகர்சேத் பிணையாக நின்றார். பின்னர் மருத்துவர் வந்தார்; ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில். அரிஜன் காலனிக்கு வெளியேதான் நோயாளியைச் சோதனை செய்வேன் என்பதுதான் அந்த நிபந்தனை. பிறந்த குழந்தையுடன் என் மனைவியை அரிஜன் காலனிக்கு வெளியே கொண்டு வந்தேன். பின்னர் மருத்துவர் ஒரு தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அந்த முஸ்லிம் அதனை என்னிடம் கொடுத்தார்.

என் மனைவியிடம் கொடுத்த நான் பின்னர் அதைத் திரும்பப் பெற்று முஸ்லிமிடம் கொடுத்தேன். அந்த முஸ்லிம் அதை மருத்துவரிடம் கொடுத்தார். அப்போது இரவு எட்டுமணி ஆகிவிட்டது. ஒரு விளக்கு வெளிச்சத்தில் அந்த தெர்மாமீட்டரைப் பார்த்த மருத்துவர் நோயாளி நிமோனியா நோயால் துன்புறுவதாகக் கூறினார். பின்னர் அங்கிருந்து சென்ற மருத்துவர் மருந்து அனுப்பி வைத்தார். சிறிது ஆளி விதைகளை நான் கடைத் தெருவிலிருந்து வாங்கி வந்து நோயாளி மீது அதைப் பயன்படுத்தினேன். மருத்துவருக்கு இரண்டு ரூபாய் கட்டணத்தை நான் கொடுத்த பிறகும், மறுபடியும் நோயாளியை வந்து பார்க்க அவர் மறுத்துவிட்டார். அந்த நோய் மிகவும் ஆபத்தானது; கடவுள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும். எனது வாழ்க்கையின் ஒளி அணைந்துவிட்டது. அன்று பிற்பகல் இரண்டு மணி அளவில் என் மனைவி இறந்துவிட்டாள்."

அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் பெயர் கொடுக்கப் பட்டிருக்கவில்லை. அதே போல அந்த மருத்துவரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பெயரைக் குறிப்பிட்டால் பழிவாங்கும் செயல்கள் எழலாம் என்ற அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் அச்சத்தினால் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதே அதன் காரணம். ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட உண்மைகள் மறுக்க முடியாதவை.

இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நோய்வாய்ப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிக்கு தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்ய அந்த மருத்துவர், படித்தவராக இருந்தும் கூட, மறுத்துள்ளார். அந்தப் பெண்மணிக்குச் சிகிச்சை செய்ய அவர் மறுத்ததன் காரணமாக அந்தப் பெண்மணி இறந்துபோனார். அவரது தொழில் அவருக்கு விதித்துள்ள கடமையைப் புறக்கணிக்கிறோம் என்ற வருத்தமோ உணர்வோ அந்த மருத்துவர் கொண்டிருக்கவில்லை.

ஒரு தீண்டத்தகாதவரைத் தொடுவதை விட மனிதத் தன்மையே அற்றவனாக இருப்பதையே ஓர் இந்து விரும்புகிறான்.


படித்துவிட்டு வேலைக்கு வந்தும் தீண்டாதவர் பட்ட துன்பம்!

இதை விட மேலும் மோசமான நிகழ்ச்சி ஒன்று உள்ளது. பம்பாய் தாதர் பகுதியில் வுல்லன் மில்லின் பின்பக்கத்தில் உள்ள காசர்வாடியின் பங்கிக்களின் கூட்டம் ஒன்று 1938-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதியன்று இந்துலால் யாத்நிக் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஒரு பங்கி சிறுவன் கீழ்கண்டவாறு தன் அனுபவத்தை விளக்கிக் கூறினான்:

தாய்மொழியிலான இறுதித் தேர்வில் நான் 1933-இல் தேர்வு பெற்றேன். 4-ஆம் வகுப்புவரை நான் ஆங்கிலம் படித்திருந்தேன். பம்பாய் நகராட்சியின் பள்ளிக் கமிட்டிக்கு ஆசிரியர் வேலை கேட்டு நான் விண்ணப்பித்தேன். அப்போது காலியிடம் இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கிவல்லை. தலாதி என்னும் கிராம பட்வாரி வேலைக்காக அகமதாபாத் பிற்படுத்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு நான் விண்ணப்பித்தேன். வெற்றி பெற்ற எனக்கு அந்த வேலை கிடைத்தது. 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி அன்று கெடா மாவட்டம் பொர்சாத் தாலூவின் மம்லதார் அலுவலகத்திற்கு நான் தலாதியாக நியமிக்கப்பட்டேன்.

எனது குடும்பம் குஜராத்திலிருந்து வந்ததுதான் என்ற போதிலும், இதற்கு முன் நான் குஜராத்துக்குச் சென்றதே இல்லை. அங்கு நான் செல்வது இதுவே முதல் முறையாகும். அதே போல் அரசு அலுவலகங்களிலும் தீண்டாமை பாராட்டப்பட்டு வந்தது என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. மேலும் என் விண்ணப்பத்தில் நான் ஓர் அரிஜன் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவர்கள் நான் யார் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்பார்கள் என்றே நான் எதிர்பார்த்தேன். தலாதிப் பணியின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் மம்லதார் அலுவலகத்துக்குச் சென்றபோது அங்கிருந்த குமாஸ்தாவின் போக்கைக் கண்டு நான் வியப்படைந்தேன்.

"நீ யார்" என்று அந்தக் கார்குன் வெறுப்புடன் கேட்டார். "அய்யா நான் ஒரு அரிஜன்" என்று கூறினேன். "போ, போ, போய் எட்டி நில்; என் அருகில் வந்து நிற்க உனக்கு என்ன தைரியம்? நீ அலுவலகத்தில் இருக்கிறாய்; நீ மட்டும் வெளியே இவ்வாறு செய்திருந்தால் நான் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன திமீர் இருக்கும்?" என்று கேட்டார். பின்னர் தலாதியாக என்னை நியமித்த உத்தரவையும், என் சான்றிதழையும் தரையில் வைக்கும்படி என்னைக் கேட்டார். பின்னர் அவர் அதனை எடுத்துக் கொண்டார்.

போர்சாத் மம்லதார் அலுவலகத்தில் நான் பணியாற்றியபோது குடிப்பதற்குத் தண்ணீர் பெறுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். குடிநீர் உள்ள பாத்திரங்கள் வராண்டாவில வைக்கப்பட்டிருக்கும். இந்தத் தண்ணீர்ப் பாத்திரங்களுக்குப் பொறுப்பான ஒரு தண்ணீர்க்காரர் இருந்தார். அலுவலகத்திலுள்ள குமாஸ்தாவுக்குத் தண்ணீர் தேவைப்படும் போது தண்ணீர் ஊற்றுவதுதான் அவர் வேலை. அவர் இல்லாதபோது மற்றவர்கள் பாத்திரங்களில் இருந்து அவர்களாகவே தண்ணீர் எடுத்துக் குடிப்பார்கள். ஆனால் நான் அவ்வாறு செய்ய முடியாது. நான் தொட்டாலே தீட்டாகிவிடும் என்பதால் தண்ணீர்ப் பாத்திரங்களைத் தொட என்னால் முடியாது. அதனால் தண்ணீர்க்காரரின் கருணையையே நம்பி நான் இருக்க வேண்டியதாயிற்று. எனது உபயோகத்துக்காக அங்கே ஓர் அழுக்கடைந்த பானை இருந்தது. என்னைத் தவிர வேறு எவரும் அதைத் தொடவும் மாட்டார்கள். கழுவவும் மாட்டார்கள். இந்தப் பானையில்தான் நான் குடிப்பதற்கு தண்ணீர்க்காரர் தண்ணீர் ஊற்றுவார். ஆனால் அந்தத் தண்ணீர்க்காரர் அந்த இடத்தில் இருந்தால் தான் எனக்குத் தண்ணீர் கிடைக்கும். எனக்குத் தண்ணீர் ஊற்றுவது இந்தத் தண்ணீர்காரருக்குப் பிடிக்காது. தண்ணீருக்காக நான் வருவதைக் கண்டால் அவர் எங்கேயாவது போய்விடுவார்; அதன்பின் எனக்குத் தண்ணீரே கிடைக்காமற்போய்விடும். இவ்வாறு நான் தண்ணீரே குடிக்காமல் போன நாட்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இதே போன்று தங்குமிடத்திற்கும் நான் சிரமப்பட வேண்டியதாயிற்று. போர்சாத்துக்கு நான் முற்றிலும் புதியவன். எந்த ஓர் ஜாதி இந்துவும் வாடகைக்கு எனக்கு வீடு கொடுக்கமாட்டார். என் தகுதிக்கு அதிகமாக ஒரு குமாஸ்தாவாக வாழும் என் முயற்சியை விரும்பாத இந்துக்களுக்குக் கோபம் ஏற்படுமே என்ற அச்சத்தில் எனக்கு வீடு கொடுக்க போர்சாத் தீண்டத்தகாதவர்களும் தயாராக இல்லை. அனைத்தையும் விட மிகப் பெரிய துன்பம் உணவைப் பற்றியது. நான் உண்பதற்கு எனக்கு எந்த ஓர் இடமுமில்லை எனக்கு உணவளிக்கப்போரும் எவருமிலர். தினமும் காலையிலும் மாலையிலும் பாஜாசுகளை வாங்கி, கிராமத்துக்கு வெளியே தனியான ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு மம்லதார் அலுவலக வராண்டாவுக்கு வந்து படுத்து உறங்குவதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன். இவ்வாறு நான்கு நாட்களை நான் கழித்தேன். இவையெல்லாம் என்னால் தாங்க முடியாதவையாக ஆகிவிட்டன. பின்னர் எனது மூதாதையரின் ஊரான ஜெந்த்ராலுக்குச் சென்று வசிக்கச் சென்றேன். அது போர்சாத்திலிருந்து 6-மைல் தொலைவில் இருந்தது. தினமும் நான் பன்னிரண்டு மைல் தொலைவு நடக்க வேண்டியிருந்தது. இதையும் நான் ஒன்றரை மாத காலம் செய்தேன்.

பின்னர் ஒரு தலாத்தியிடம் வேலை கற்றுக் கொள்ள மம்லதார் என்னை அனுப்பினார். இந்த தலாத்தி ஜெந்த்ரால், காபுர், சாஜ்பூர் என்ற மூன்று கிராமங்களுக்குப் பொறுப்பானவர். ஜெந்த்ரால் அவரது தலைமையிடம் இந்தத் தலாத்தியுடன் ஜெந்த்ராலில் நான் இரண்டு மாதம் இருந்தேன். அவர் எனக்கு எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை. கிராம அலுவலகத்துக்குள் நான் ஒரு நாள் கூட சென்றதில்லை. அந்தக் கிராமத் தலைவர் குறிப்பாக என்னை எதிரிபோலவே கருதி நடத்தினார். ஒருமுறை, "பயலே நீயும், உன் தந்தையும், உன் சகோதரனும், கிராம அலவலகத்தைப் பெருக்கும் பணியாளர்கள்; நீ எங்களுக்குச் சமமாக அலுவலகத்தில் உட்கார விரும்புகிறாயா? ஜாக்கிரதையாக இரு; இந்த வேலையை விட்டுவிட்டு நீ ஓடிப் போவதே உனக்கு நல்லது" என்று கூறினார்.

ஒரு நாள் சாஜிபூர் கிராமத்தின் மக்கள் தொகைப் பட்டியல் தயாரிக்க என்னை தாலத்தி அழைத்தார். ஜெந்த்ராலில் இருந்து நான் சாஜிபூருக்குச் சென்றேன். கிராமத்தலைவரும், தாலத்தியும் கிராம அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்ததை நான் கண்டேன். நான் 15-நிமிடம் வெளியே நின்றேன். ஏற்கனவே நான் இத்தகைய வாழ்க்கை பற்றிச் சோர்வடைந்து போயிருந்தேன்; இவ்வாறு அலட்சியப்படுத்தப்படுவது அவமானப்படுத்தப்படுவது கண்டு எனக்குச் சினம் எழுந்தது. அங்கிருந்த நாற்காலி ஒன்றில் நான் உட்கார்ந்து கொண்டேன். நான் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த தலாத்தியும், கிராமத் தலைவரும் எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்திற்குப் பின் மக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி என்னைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. கிராம நூலகத்தின் நூலகரால் அக்கூட்டம் வழிநடத்தி வரப்பட்டு இருந்தது. படித்த ஒரு மனிதர் ஏன் இவ்வாறு கூட்டம் கூட்டிக் கொண்டு வருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. மிக மோசமான சொற்களால் அவர் என்னைத் திட்டத் தொடங்கினார். கிராமப் பணியாளரான ராவனியாவைப் பார்த்து, "இந்தக் கேடு கெட்ட பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தார்கள்?" என்று கேட்டார். ரவனியா என்னை எழுப்பிவிட்டு நாற்காலியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். நான் தரையில் உட்கார்ந்துக் கொண்டேன். அதன்பின் அக்கூட்டம் கிராம அலுவலகத்துக்குள் நுழைந்து என்னைச் சூழ்ந்து கொண்டது. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் என்னைத் திட்டிக் கொண்டும், இன்னும் சிலர் என்னைக் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி விடுவதாக அச்சுறுத்திக் கொண்டும் மிரட்டிக் கொண்டிருந்தனர். என்னை மன்னிக்கும்படியும் என் மீது கருணை காட்டும்படியும் நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். நான் கூறியது எதுவும் அக்கூட்டத்தினரிடையே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என்னை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்றே
எனக்குத் தெரியவில்லை. எனக்கு நேர்ந்த கதியைப் பற்றியும், இக்கூட்டத்தினால் நான் கொல்லப்பட்டால் என் உடலை என்ன செய்வது என்றும் மம்லதாருக்குக் கடிதம் எழுதிவைக்கலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அவர்களுக்கு எதிராக மம்லதாருக்கு நான் புகார் எழுதுகிறேன் என்று தெரிந்தால் ஒருவேளை அவர்கள் என்னைத் தாக்காமல் இருக்கக்கூடும் என்று நான் கருதினேன். ஒரு காகிதம் கொடுக்கும்படி ரவினாவை நான் கேட்டு வாங்கிக் கொண்டு அக்காகிதத்தில் கொட்டை கொட்டையாக அனைவரும் படிக்கும்படியாக கீழ்க்கண்டவாறு எனது பேனா கொண்டு எழுதத் தொடங்கினேன்

பெறுநர்:
மம்லதார், தாலுகா போர்டு

அய்யா,
பர்மார் காளிதாஸ் சிவராமின் பணிவான வணக்கங்களை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று என் மீது சாவின் கரங்கள் விழுந்துவிட்டதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எனது பெற்றோரின் சொற்களை நான் கேட்டிருந்தால் இவ்வாறு எனக்கு நேர்ந்திருக்காது. எனவே என் சாவைப் பற்றி என் பெற்றோருக்குத் தயவு செய்து தெரிவித்து விடுங்கள்.

நான் எழுதியதைப் படித்த நூலகர் உடனே அதனைக் கிழித்துப் போடும்படி கூறினார். நானும் கிழித்துப் போட்டேன். என் மீது அவர்கள் வசைமாரி பொழிந்தார்கள். "நீ என்ன உன்னை எங்களின் தலாத்தியாக நினைத்து பேச வேண்டும் என்று நினைக்கிறாயா? நீயோ ஒரு பங்கி; இந்த அலுவலகத்திற்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார நீ விரும்புகிறாயா?" என்று கேட்டார். என மீது கருணை காட்டும்படியும், இனி நான் இதுபோல் செய்யமாட்டேன் என்றும், எனது வேலையை நான் விட்டுவிடுவதாகவும் கூறினேன். அந்தக் கும்பல் கலைந்து செல்லும் வரை மாலை 7-மணி வரை நான் அங்கே வைக்கப்பட்டிருந்தேன். அதுவரை தலாத்தியோ, கிராமத்தலைவரோ அங்கே வரவேயில்லை. அதன்பின் 15-நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாய்க்கு என் பெற்றோரிடம் திரும்பி வந்துவிட்டேன்.

நான் தமிழ் தேசியன் அல்ல... - தமிழருவி மணியன்


நான் தமிழ் தேசியன் அல்ல... - தமிழருவி மணியன்

நான் தமிழ் தேசியன் அல்ல... நான் இந்தியன், நான் திராவிட தேசியத்தையோ, தமிழ் தேசியத்தையோ ஆதரிப்பவன் அல்ல.

நான் எப்போதும் இந்தியன்...