Friday, November 13, 2015

எல் அண்ட் டி யிடமிருந்து அதானி குழுமத்திற்கு மாறிய காட்டுப்பள்ளி துறைமுகம்

எல் அண்ட் டி நிறுவனத்திடமிருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழும நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2,500 கோடி 
ரூபாய்க்கு இது கையகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி துறைமுகம் நிறுவனம் தமிழகத்தில் லார்சன் அண்ட் டூப்ரோ நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக அதானி குழுமம் எடுத்துள்ள நடவடிக்கை இது என்று கருதப் படுகிறது.

அதானி குழும நிறுவனமான அதானிபோர்ட்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல 
நிறுவனம் (ஏபிஎஸ்இஇஸட்) நிறுவனம் ஏற்கெனவே கேரள மாநில அரசுடன் 
ஒப்பந்தம் செய்துள்ளது. கேரள மாநிலத்தில் விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. ரூ. 4,089 கோடிக்கான 
இந்த சர்வதேச ஆழ்கடல் பன்முக துறைமுகத்தை பிபிபி அடிப்படையில் அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் 
லிமிடெட் நிறுவனம் (எல்டிஎஸ்பி) நிறுவனம் காட்டுப் பள்ளியில் துறைமுகத்தை  நிர்வகித்து வருகிறது. இதை அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு இந்தத் துறைமுகம் வாங்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரூ.2,500 கோடி இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக இரு நிறுவனங்களும்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. காட்டுப்பள்ளி துறைமுகமானது எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்கும் பணியில் அதானி குழும நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த விற்பனைக்கு மாநில மற்றும் 

மத்திய அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான அனுமதிக்காக காத்திருக்கும் அதேவேளையில் இந்நிறுவன செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனம் செய்து கொண்டுள்ளது.காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உள்ளன. இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை. இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் டியுஇ சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.

நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டில் காட்டுப்பள்ளி துறை முகத்தைக் கையகப்படுத்தியது மிகவும் முக்கியமான நடவடிக்கை என்று அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமம் 7 துறைமுகங்கள் அதாவது முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட்டினம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

திப்பு ஜெயந்தி விழா - போராட்டம்

கர்னாடகாவில் நவம்பர் 10ம் தேதி அன்று திப்பு ஜெயந்தி விழா
கொண்டாட்டத்தின் போது விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம்
நடத்தினர். இதில் குடகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம் நடத்திய போது வன்முறை வெடித்தது.

இச்சம்பவத்தின் போது குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின்
மாவட்ட செயலாளர் குட்டப்பா பலியானார். இது விபத்து அல்ல கொலை என்றும் மாநில அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியும், கெம்ப கவுடா விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என் கூறிய எழுத்தாளர் கிரிஷ் கார்னாடை கண்டித்தும் நவம்பர் 11 அன்று பெங்களூரு டவுன் ஹால் முன்பு விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் சித்தராமையா முஸ்லீம்களின் ஆதரவை பெறுவதற்காக திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர்.


இதனிடையே கிரிஷ் கார்னாடின் பேச்சை கண்டித்து பாஜக சார்பிலும் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்பட்டது. வாக்கு வங்கியை பெறுவதற்காக காங்கிரஸ் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது என்றும், காங்கிரசின் இந்த செயல் பெங்களூரு நகரை வடிவமைத்த கெம்ப கவுடாவை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்றும் பாஜக வினர் குற்றம் சாட்டினர். இதனிடையே இதுகுறித்து கர்னாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது, குடகு சம்பவத்தை வைத்து பாஜகஅரசியல் செய்து வருவதாகவும், அரசியல் சுயலாபத்திற்காக மக்களை தூண்டிவருவதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே இதுகுறித்துவிசாரணை நடத்த மைசூர் மண்டல ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் பலியான குட்டப்பாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ஈழப்பிடும் அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

போராட்டத்தின் போது போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின் செயலாளர் குட்டப்பா 15 அடி சுவர் மீது ஏற முயன்று தவறி விழுந்து பலியானார். ஆனால் இந்து  அமைப்பை சேர்ந்தவர்கள், குட்டப்பா முஸ்லீம் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார் என குற்றம் சாட்டி வரும் விஷ்வ இந்து அமைப்பினர், நவம்பர் 13 அன்று கர்னாட மாநிலத்தின் மைசூரு, கோலார், சிக்மகளூரு ஹாசன் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். 

ரயில் முன்பதிவில் மாற்றம்


இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால் டிக்கெட் முன்பதிவு 
செய்யலாம். நவம்பர் 12-ம் தேதி முதல், ரயில்கள் புறப்படுவதற்கு அரை மணி நேரம்  முன்னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பயண இறுதி அட்டவணை தயாராகும் முறையில் மாற்றங்கள் செய்துள்ள தொடர்வண்டி துறை, இப்போது இரண்டு முறை அட்டவணையை தயாரிக்க உள்ளது.

முதல் முன்பதிவு பயண அட்டவணை, தொடர்வண்டி கிளம்புவதற்கு நான்கு மணி நேரங்கள் முன்னால் தயாரிக்கப்பட்டு வந்த முறையோடு இப்போது, அரை மணி நேரம் முன்பாக ஒரு முறை இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது. 


மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இணையம் மற்றும் முன்பதிவு கவுண்டர்களில் என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்யலாம். இருக்கும் பெர்த்களின் எண்ணிக்கையைப் பொருத்து, குறிப்பிட்ட ரயில்களுக்கு, முதல் முன்பதிவு பயண அட்டவணை தயாரான பின்னரும், முன்பதிவு செய்ய முடியும்.

இதற்காக நவம்பர் 12-ம்  தேதியில் இருந்து, முதல் முன்பதிவு பயண அட்டவணையை 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே இறுதி செய்யும்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனிலோ அல்லது இல்லை தொடர்வண்டி நிலையத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தெந்த ரயிலில் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ரயில் கிளம்பும் முன்னதாக இரண்டாவது மற்றும் இறுதி முன்பதிவு பயண அட்டவணை, ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பதக்கங்களை திருப்பி அளித்த ராணுவ வீரர்கள்

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டம்: பதக்கங்களை திருப்பி அளித்த முன்னாள் 
ராணுவ வீரர்கள் மத்திய அரசின் விருதுகளையும், அங்கீகாரங்களையும் திருப்பி அளிக்கும் தற்காலத்திய போக்கை அடியொட்டி ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தில் கோரிக்கையை முழுமையாக ஏற்காத மத்திய அரசை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பெற்ற பதக்கங்களை திருப்பி அளித்தனர்.


போருக்காக பெற்ற பதக்கங்கள் மற்றும் பிறவற்றை அங்கீகரித்து வழங்கிய 
பதக்கங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் சண்டிகர் அருகே பஞ்சகுலாவில் 
உதவி ஆணையரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதே போல் ஜலந்தர், அமிர்தசரஸ்,  பாடியாலா, ரோஹ்டக், ஹிசார், அம்பாலா ஆகிய இடங்களிலும் முன்னாள்  ராணுவ வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்ததாக தகவல்கள் வந்துள்ளன. 

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்திய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு 
மேற்கொண்ட அறிவிப்பின் மேல் தற்போது தங்கள் எதிர்ப்பைத் திருப்பியுள்ளனர் முன்னாள் ராணுவ வீரர்கள். மோடி அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதியில் பின்வாங்கியதால் இந்த தீபாவளி 'கருப்பு தீபாவளி' தினமாக அனுசரிக்க போவதாக தெரிவித்தனர்.

காதலிக்க மறுத்தவருக்கு வெட்டு

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மதூர் தாலுக்காவை சேர்ந்தவர் பிருந்தா குமாரி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது அவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த ரவிக்குமாரால் சரமாரியாக வெட்டபட்டார். ரவிக்குமார் கடந்த ஒன்றரை வருடமாக பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். 
மேலும் ரவிகுமார் கடந்த இரண்டுவருடமாக பிருந்தா குமாரி வீட்டில் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவர் பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தது தெறிந்தவுடன் அவரை பெற்றோர்கள் பணியிலிருந்து நீக்கியுள்ளனர். ஒருபுறம் காதல் மறுக்கப்பட்ட விரக்தி மறுபுறம் வேலையை 
விட்டு நீக்கியதால் ஏற்பட்ட அவமானத்தாலும் பிருந்தா குமாரியை பலிதீர்க்க 
முடிவு செய்த ரவிகுமார் கடந்த சனிகிழமை அன்று பிருந்தா ல்லூரி முடித்து வீடு  திரும்பிக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் 3 பேருடன் முகமூடி அணிந்து சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். குறிப்பாக பிருந்தாவின் முகத்தை குறிவைத்து ரவிகுமாரும் அவரது நண்பர்களும் வெட்ட முயற்சிசெய்துள்ளனர். 

இந்த தாக்குதலில் தன்னை பாதுகாத்துகொள்ள பிருந்தா தனது கையால் தடுத்து முயற்சி செய்த போது சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுகள் பிருந்தாவின் இரண்டு கைகளிளும் விழுந்து அவர் கைகள் துண்டாகும் நிலைக்கு காயம்  அடைந்தது. மண்டியா அரசுமருத்துவமனியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உடனடியாக பிருந்தாவை பெங்களூரில் உள்ள ஹொஸ்மட் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

கடந்த இரண்டு தினங்களாக சுமார் 14  மணிநேரம் அருவைசிகிசைக்கு பிறகு பிருந்தாவின் கைகள் தற்பொழுது பாதுகாக்கப்பட்டுள்ளன.குறைந்தது 6 வாரங்கள் பிருந்தா ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மண்டியா காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரவிகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் ரவிக்குமாருடன் இந்த  தாக்குதலில் ஈடுபட்ட இருவர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது 
செய்ய தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள தேர்தலில் அஇஅதிமுக வெற்றி

கேரளா மாநில உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கோவை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து
பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான, பாலக்காடு மாவட்டம்,  கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டு எஸ்.ஹெலன் அமலோற்பவமேரி, 7-வது வார்டு ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டு  எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டு பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 3-வது வார்டு எல்.பாலகிருஷ்ணன்,  பீர்மேடு பஞ்சாயத்து 1-வது  வார்டு எஸ்.பிரவீணா ஆகிய 6 பேர் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர்.  அதிலும், 5 மகளிர் வெற்றி பெற்றுள்ளனர். 
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கொட நாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோவை விமான நிலையத்தில் வாழ்த்து பெற்றனர்.


தேவிகுளம், மறையூர், பீர்மேடு பகுதிகளில் அதிமுக பெற்றுள்ள வெற்றி, முல்லை பெரியாறு அணைப்பகுதியில் கேரள வனத்துறை மற்றும் நீர்பாசனத் 
துறையினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பீகார் தேர்தல் - மதச்சார்பின்மைக்கு வெற்றி, சகிப்புத்தன்மைக்கு தோல்வி

பீகார் தேர்தல் - மதச்சார்பின்மைக்கு வெற்றி, சகிப்புத்தன்மைக்கு தோல்வி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் - நிதிஷ்குமார் கூட்டணிமிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. இந்த தேர்தல் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் இந்த தேர்தல் முடிவுகளை மிக ஆவலோடு எதிர்நோக்கி இருந்ததது. பாஜக தலைமையிலான மதவெறி கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருப்பது நாட்டு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நிதிஷும் லாலுவும் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள், தங்களுக்கென்று வாக்கு வங்கிகளை வைத்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அரசியல் களத்தில் நின்றவர்கள். 


ஆனால், நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அவர்கள் கூட்டணி அமைத்தது மிகவும் பாராட்டுக்குரியது. தங்களது மனமாச்சரியங்களை, கருத்து முரண்களை அரசியல் எதிர்ப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, நிதிஷ்குமாரும், லாலுவும்  மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டும் - நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தை தேர்தல் நிலைப்பாடாகக் கொண்டு மக்களை சந்தித்தனர். இந்த நிலைப்பாட்டை பீகார் மக்கள் வரவேற்று, வெற்றியும் தந்துள்ளனர். நாட்டில் மதவாதத்தை, வெறுப்பு அரசியலை, சகிப்பின்மையை விதைப்பவர்களை 
மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற யதார்த்த உண்மையை இந்தத் 
தேர்தல் மூலம் நாட்டுக்கு பீகார் மக்கள் உணர்த்தியிருக்கின்றனர். 

பீகார் மக்களின் தீர்ப்பு என்பது மதவாத சக்திகளுக்கு மட்டுமான சமிக்ஞை அல்ல; வெற்றி பெற்ற லாலு-நிதிஷ் கூட்டணிக்கும் இதில் படிப்பினை இருக்கிறது. மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்தால் இதுதான் நிலை என்பதையும் சேர்த்தே பீகார் மக்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி உணர்ந்து செயல்பட வேண்டும். 

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா?

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா?
-வாலாசா வல்லவன்


சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் தமிழ்நாட்டில் நடத்தி வந்ததை அனைவரும் அறிவோம். சுயமரியாதை திருமணத்திற்கான தேவை ஏன் வந்தது என்றால் நமக்கு (சூத்திரர்களுக்கு) பார்ப்பன சாத்திரப்படி திருமணம் செய்துகொள்ள தகுதி இல்லை என்பதாலும், பார்ப்பான் நம்மை அவமரியாதையாக நடத்துவதாலும், நம்முடைய மொழியைஅவன் புறக்கணிப்பதாலும் சுயமரியாதைத் திருமணத்திற்கான தேவை ஏற்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் சுயரியாதை திருமணங்களை நடத்தி வந்தாலும், அவற்றில் பார்ப்பனர்கள் இல்லையயன்பதைத் தவிர சடங்குகள் இடம் பெற்றிருந்தன. முதன்முதலாக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் குத்தூசி குருசாமிக்கும்-குஞ்சிதம் அம்மையாருக்கும் 8.12.1929இல் நடத்தி வைத்ததே சடங்குகளற்ற சாதி மறுப்பு திருமணம் ஆகும், அதன் பிறகு, தமிழகத்தில் வேகமாக சுயமரியாதைத் திருமணங்கள நடைபெற ஆரம்பித்தன.

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் ஏன் தேவைப்பட்டது?

இன்றைய திராவிடர் கழகத் தலைவரான கி. வீரமணியின் மாமனாரின் (சிதம்பரம் செட்டியார்) முதல் மனைவியின் பிள்ளைகளுக்கும், மூன்றாம் மனைவியின் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக வழக்கு நடைபெற்று வந்தது.

அது என்னவென்றால், வீரமணியின் மாமனார் சிதம்பரம் செட்டியார் அவருடைய முதல் மனைவியின் பெயர் நாச்சியம்மை, இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தெய்வ யானை, முதல் மனைவி இறந்தவுடன் வள்ளி யம்மை என்பவரை இரண்டாவது மனைவியார் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மக்கள் இல்லை. அவரும் இறந்துவிட்டார். மூன்றாவது மனைவியாக திருவண்ணா மலையைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்ற ரெட்டியார் சாதியைச் சார்ந்த விதவையை 14.7.1934 இல் பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் சிதம்பரம் செட்டியாரின் முதல் மனைவியின் மகள் தெய்வயானை ஆச்சி என்பவர் தேவ கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் தன் தந்தை சிதம்பரம்-ரெங்கம்மாள் என்பவரை சுய மரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அத் திருமணம் செல்லாது, அவர்களது வாரிசுகளுக்கு என் தந்தை யின் சொத்தில் இருந்து பாகப்பிரிவினை செய்து கொடுக்கக் கூடாது என்பதே அவ் வழக்கு. சிதம்பரம் செட்டியார் தன் சொந்த உழைப்பில் வந்த சொத்தை யாருக்கு வேண்டு மானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத் தீர்ப்பை எதிர்த்து 28.9.1948இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நீண்ட நாட்கள் விசாரணை செய்யப்பட்டு 20.8.1953 அன்று சென்னை உயர்நீதி மன்றம் 25 பக்கத் தீர்ப்பை வழங்கியது. அத் தீர்ப்பில் புரோகித ஒழிப்புச் சங்கம் மூலம் செய்யப்பட்ட திருமணம் ஏற்புடையது அல்ல. சிதம்பரம் செட்டியாராக இருந்தாலும் அவருக்கு வைசியருக்கான தகுதி கிடையாது. அவர் சூத்திரர்தான், செட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல், ரெங்கம்மாளின் ரெட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல் இத் திருமணம் நடைபெற்றிருப்பதால் இதை, சட்டபூர்வத் திருமணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதுடன், இவர்களுக்குப் பிறந்த குழந்தை சட்டப்படியான வாரிசு அல்ல என்ற போதிலும் ஆதிகாலம் தொட்டே இந்துக்கள் வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கு சொத்து எழுதிவைக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. சிதம்பரம் செட்டியார் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. இதனால்தான் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் தேவைப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்த உடனே அன்றைய இராசாசி அரசு சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டது. சட்டமன்றத்தில் மசோதா முன்மொழியப் பட்டது. ஆனால் குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புப் போர் காரணமாக இராசாசி விரைவிலேயே ஆட்சியை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

1957இல் தி.மு.க.வைச் சேர்ந்த களம்பூர் அண்ணாமலை சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீவிரமாகப் பேசினார், அரசு செவி சாய்க்கவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்த செ. மாதவன் சுயமரியாதைத் திருமணச் சட்டம் தொடர்பாக ஒரு தனியார் மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்றும்படி வேண்டினார். அப்போதைய காங்கிரசு சட்ட அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் என்கிற பார்ப்பனர் அம் மசோதாவை தோற்கடித்தார்.

1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி யாகும்படி சட்டம் செய்ய தீவிர முனைப்பு காட்டி சட்ட மன்றத்திலும் 27.11.1967இல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதற்கு 17.1.1968 அன்று குடிஅரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. 20.1.1968 நாளிட்ட அரசிதழில் இச்சட்டம் வெளியிடப்பட்டது.

இந்த சட்டம் முழு வெற்றியா என்பதுதான் என்னுடைய வினா?

முதலில் இந்தச் சட்டத்திற்கு பெயர் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் (Self Respect Marriage Validaity Act) என்று இருந்திருக்க வேண்டும். வேறு எந்தச் சட்டத்திலும் இதை பிணைத்திருக்கக்கூடாது. ஆனால் தமிழக அரசின் சட்டமோ இச்சட்டம் “1967ஆம் ஆண்டு இந்து திருமணச் (தமிழ்நாடு திருத்த) சட்டம்'' எனப் பெயர். 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (மத்திய சட்டம் 25/1955) 7ஆவது பிரிவுக்கு பின்னர் ‘7-A’ என்ற புதிய பிரிவை சேர்த்துக்கொள்வது என்கிற தன்மையில் அமைந்துள்ளது.

இந்து திருமணச் சட்டம்

சாதி வழக்கம் உள்ளூர் வழக்கம் போன்றவற்றிற்கு இடமுண்டு. இவறறை பயன்படுத்தி இது நீண்டகாலமாக நடப்பதால் 1928முதல் Local custom என்ற அடிப்படையில் இதில் நுழைக்கப்பட்டுள்ளது.

ஆரியச் சட்டங்கள் மிகவும் வலிமையானவை. சதபதி என்கிற மணவலம் 7 தப்படி வைக்கவில்லை என்றால்கூட திருமணம் செல்லாது என்று உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது. ஆனால் நம்முடைய சட்டமோ பலவீனமானது இதையும் ஒன்றாக அதில் சேர்த்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சுவது போன்றது. நாம் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்க வழி செய்யாமல் சந்து பொந்து ஆளை தேடி ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன்.

எந்த இந்துச் சட்டம் நம்மை காலம் காலமாக சூத்திரனாக வைத்துக்கொண்டு இருக்கிறதோ அதே இந்து சட்டத்தில், இந்து திருமணச் சட்டத்தின் உட்பிரிவில் இதைச் சேர்த்திருப்பது எப்படி சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளுக்கு வெற்றியாகும். ஏற்கெனவே இந்து திருமணச் சட்டத்தில் எட்டு வகை திருமண முறை உள்ளது. இது ஒன்பதாவது வகை இந்து திருமண முறையாகும். அதற்கு மேல் இதில் என்ன உள்ளது?

மணமேடையில் பார்ப்பான் சூத்திரத் தன்மை இருக்காதே ஒழிய சட்டப்படி இத்திருமணம் செய்து கொண்டாலும் சூத்திரப்பட்டம் ஒழியப் போவது இல்லை. குறைந்த பட்சம் இந்தச் சட்டத்தை சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவிலாவது சேர்ந்திருக்க வேண்டும் (Special Marriage ACt 1882) இல் இயற்றப்பட்டது. இரண்டு வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் இத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்துகொள்ள வழிவகை உண்டு. எந்த இந்துச் சட்டம் நம்மை சூத்திரனாக வைத்திக்கிறதோ அதே இந்துச் சட்டத்தில் சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தைச் சேர்த்திருப்பதின்மூலம் அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி பலி என்பது போன்றதுதான் அது.

பகுத்தறிவாளர்கள் இதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.

நன்றி - கீற்று இணையதளம்

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் ஒரு கொள்கையாக  சுயமரியாதை திருமணம் உள்ளது. அந்த வழியில் வந்த அண்ணா, 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனதும், சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார். இதற்காக இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து திருமண சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை. மாறாக, நண்பர், உறவினர் முன்னிலையில் மாப்பிள்ளையும் பெண்ணும் மாலையோ, மோதிரமோ மாற்றிக் கொண்டாலே அது திருமணமாக கருதப்படும் என்று சுயமரியாதை திருமணச் சட்டம் கூறியுள்ளது.
இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.அசுவத்தாமன் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும்  என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், வழங்கிய தீர்ப்பில்  இந்து மதம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதன்படி, வெவ்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றபடி திருமண சடங்குகளை  வைத்துக்கொண்டு திருமணங்களை நடத்துகின்றனர். 


அந்த வகையில் இந்துக்களிடையே மேலும் ஒரு திருமண முறையாக சுயமரியாதை திருமணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை நோக்கம் இருக்க கூடாது. அந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் என்னவென்றால், திருமணம் என்பது புரோகிதர் முன்னிலையில் நடந்தால்தான் அது செல்லும் என்ற நிலையை மாற்றுவதுதான். அவர்கள் இல்லாமலேயே, மற்றவர்கள் முன்னிலையில் நடப்பதும் செல்லக்கூடிய திருமணம்தான் என்பதுதான் அந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்.

 உறவினர், நண்பர்கள் முன்னிலையில் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது அல்லது தாலி கட்டிக் கொள்வது ஆகிய நிகழ்வோடு திருமணம் முழுமையாக நடந்துவிடுகிறது. இது சட்டப்படி செல்லக்கூடிய திருமணமாகும் என்று  குறிப்பிட்டுள்ளனர். மேலும், 

சுயமரியாதை திருமணங்கள் செல்லக்கூடியவை அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் 54-வது முறையாக விபத்து

சென்னை விமான நிலையத்தில் 54-வது முறையாக விபத்து

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள், கிரானைட் கற்கள்,  மேற்கூரை விழுவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரை நடந்த 53 விபத்துகளில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) 9.11.15 பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. 
அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!

தமிழுக்கு நன்கொடை அளிப்போம்!
ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!


அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 376 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. உலகத் தர வரிசையில் அது முதன்மையான இடத்தை பெற்றுள்ளது.  உலகின் பிற செம்மொழிகளுக்கு அங்கு இருக்கைகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.  ஆனால் செம்மொழியான ஆதி தமிழுக்கு இது வரையில் அங்கு இருக்கை உருவாகவில்லை.  இது நாள் வரை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இரண்டு சமூகங்கள் தான் தம் மக்களின் முயற்சியால் இருக்கைகள் நிறுவியுள்ளன.  நூற்றுக்கணக்கான பிற இருக்கைகள் எல்லாம் பெரும் செல்வந்தர்களாலும், அரசாங்கங்களாலும் ஏற்படுத்தப்பட்டவை.  தமிழுக்காக ஓர் இருக்கை  நிறுவும் மூன்றாவது மக்கள் தொகையாக  நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.  


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை உலகத்தின் அறிவு  மையம் என்று
சொல்வார்கள். அறிவும் ஆற்றலும் உள்ள முதல்தரமான பேராசிரியர்களை
ஹார்வார்ட் ஈர்க்கும். அதேசமயம் உலகத்து பல நாடுகளிலிருந்தும் ஆர்வமான, தரமான மாணவர்கள் தமிழை கற்பதற்கும்  ஆராய்வதற்குமாக ஹார்வார்ட்டை  நாடுவார்கள்; உலகத் தரத்தில் ஆராய்ச்சிகளும் பயிற்றுவித்தலும் நிகழும். இங்கே நிறுவப்பட்ட ஆய்வு முறைகளும் ஒப்பியல் முறைகளும் உலக அங்கீகாரம் பெற்றவை; மதிப்பு வாய்ந்தவை. அதனால் தமிழ் ஆராய்ச்சிகளின் பயன் பலரையும் சென்றடையும் என்று கூறப்படுகிறது.

தமிழ் இருக்கை தொடங்குவதற்கு ஆறு மில்லியன் டாலர்கள் (சுமார் 40 கோடி 
ரூபாய்) தேவைப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் திரு 
ஜானகிராமனும் திரு திருஞானசம்பந்தமும் கூட்டாக ஒரு மில்லியன் டாலர்கள் செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள். மீதி ஐந்து மில்லியன் டாலர்களை உலகத்து தமிழ் மக்களிடமிருந்து திரட்டி இருக்கை உருவாக வழி செய்யவேண்டும். இந்த இருக்கையின் உருவாக்கத்தில் தமிழ் நாடு அரசின் உதவி பெரிதும்  எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பல்கலைக்கழகங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை  நழுவவிடாமல் உதவலாம். அவைகளுக்கு எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன்  ஏற்படப்போகும் தொடர்பு இரு பல்கலைக்கழகங்களின்  வளர்ச்சிக்கும் உதவும். தமிழ் நிறுவனங்கள்,  தொழிலதிபர்கள், கல்வியாளர்கள்,  தமிழ் பற்றாளர்கள் என அனைத்து மக்களிடமிருந்தும் உதவி எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க 5000 தமிழர்கள் ஒன்றுபட்டாலே போதும்,  ஒரு வருட கால அவகாசத்துக்குள் வேண்டிய நிதியை திரட்டிவிடலாம்.

மூன்று விதங்களில் நிதி வழங்கலாம்:

1) உங்கள் காசோலையை “Tamil Chair Inc.” என்ற பெயருக்கு எழுதி
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.


Tamil Chair Inc.
Attn: Dr. Sornam Sankar,
4113 Tiber Falls Dr,
Ellicott City, MD 21043,
USA

2) உங்கள் காசோலையை “Harvard University” என்ற பெயருக்கு எழுதி  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.மறக்காமல் காசோலையில் Memo என்றிருக்கும் கோடிட்ட இடத்தில் Tamil Chair என்று குறிப்பிடுவது அவசியம். இல்லையெனில் அது பிற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

Office of the Recording Secretary
Harvard University
124 Mount Auburn Street
Cambridge, MA 02138
USA

3) வங்கி மூலம் நேரடியாக பணம் செலுத்துதல்.

Bank of America
100 Federal Street,
Boston, MA 02110
President & Fellows of Harvard College,
RSO account
Account #: 9429263621
ACH ABA: 011000138
Wire ABA: 026009593
Swift Code: BOFAUS3N
Donor: (To be provided by donor)
Purpose: Sangam Professorship in Tamil

தமிழில் ஆர்வமான இளம் தலைமுறையினர் இன்று வெளிநாடுகளில்  பல  துறைகளில் கல்வி கற்கின்றனர். அவர்களும் பிற நாட்டினரும்  தமிழின்  பழமையான இலக்கியங்களைப் படித்து ஆராய இந்த இருக்கை உதவும்.   
உன்னதமான சான்றோர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக பேணி வளர்க்கப்பட்ட சுவையான செம்மொழி நம்முடைய தமிழ். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து நாம் சிறப்பிக்க வேண்டும். 1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் செல்டிக் மொழிக்கு இரண்டு இருக்கைகள் ஹார்வார்டில் இருக்கின்றன. 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஓர்  இருக்கையாவது நிறுவவேண்டியது எத்தனை அவசியம்? இந்த இருக்கை அமைய 
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு நிதி வழங்கி ஆதரவு 
தரவேண்டும். இதனால் தமிழுக்கு பெருமை. எங்கள் வருங்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுப் போகும் அரிய செல்வமாக இது விளங்கும்.

இது தொடர்பான
இணைய முகவரி http://harvardtamilchair.com/