Sunday, November 15, 2015

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவகாலம் டிசம்பர் 24இல் ஆரம்பம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி பூரணைத் தினத்துடன் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தை முன்னிட்டு சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நல்லதண்ணியில் அமைந்துள்ள கிராம சேவகர் அலுவலுகத்தில் நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான சிவனொளி பாதமலை யாத்திரைப் பருவக் காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி காலை சுபவேளையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பவனி பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை அன்றையதினம் இரவு வந்தடையவுள்ளது.
அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப் பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர், 24 ஆம் திகதி அதிகாலை விசேட பூஜைகள் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2015, 2016 ஆம் வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.

சிவனொளிபாத மலைப்பிரதேசத்தில் பொலித்தீன் பாவனை, மதுபாவனை என்பன இம்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டது.மேலும், சிவனொளிபாத மலைக்கு வருகை தரவுள்ள யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த யாத்திரிகர்களுக்காக ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்குவரத்துச் சேவைகளை நல்லத்தண்ணி நகர் வரை நடத்துவதற்கு ஹட்டன் பஸ் டிப்போ நடவடிக்கை எடுக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

126 மீனவர்கள் தமிழகம் வந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் தாயகம் வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், நாகபட்டினம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற 127 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின் மன்னார், ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் புத்தளம் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 126 பேர் சிறை வைக்கப்பட்டனர். இவர்களில் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.


இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதனால், சிறையில் இருந்த மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இதன்படி தீபாவளிக்கு முந்தைய தினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால், கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் தீபாவளியன்று நாடு திரும்ப முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.

இதன்படி விடுவிக்கப்பட்ட 126 மீனவர்களில் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 48 மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கும், எஞ்சிய 78 மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 17 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்தான். இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்றம் ஊர்காவல்துறை நீதிமன்றம் என்பதால் அங்கிருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு அனுப்பி வைககப்பட்டனர்.


நவம்பர் 13 அன்று இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 126 மீனவர்களில் 48 பேர் இரவு 7 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகள், மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜ், எமரிட் மற்றும் சிறையில் இருந்து மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் வரவேற்றனர். 

அதிக கட்டணம் வசூலித்த நடத்துனருக்கு அபராதம்

கொழும்பில் இருந்து மாத்தளைக்கு பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த  நடத்துனருக்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தை இரண்டு தினங்களுக்கு சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பிலிருந்து மாத்தளைக்கான கட்டணம் 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் சொகுசு பேருந்து, பயணிகளிடம் 355 ரூபா கட்டணம் வசூலித்ததாக மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையிடம் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. 
சம்பந்தப்பட்ட பஸ் வண்டியின் நடத்துனரையும் உரிமையாளரையும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏ.ஜீ. ரணசிங்க விசாரணைக்கு உட்படுத்தினார். இதனையடுத்து பஸ் நடத்துனருக்கு அபராதமும் குறிப்பிட்ட பஸ் வண்டிக்கு இரண்டு நாள் போக்குவரத்து தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

செஸ் போட்டியில் 11 பதக்கங்கள் வென்று சாதனை

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்கள் சென்னை திரும்பினர்.

உலகளவில் சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டி கடந்த வாரம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐம்பது பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய சிறுவர் சிறுமியர்கள் மொத்தம் 11 
பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த மகாலட்சுமி, வைசாலி, பிரக்கனந்தா, ரக்‌ஷிதா மற்றும் பரத் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்க பத்தகங்களை வென்றுள்ளனர். மேலும் வர்ஷினி மற்றும் தேவ் ஷா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.


இந்த உலக தர செஸ் போட்டியில் இதற்கு முன்பு இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் கடந்த 2006ம் ஆண்டு ஐந்து தங்க பதக்கங்களை வென்றனர். அதன் பிறகு 9 வருடங்களுக்கு பிறகு அதிக பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இன்று அதிகாலை சென்னை திரும்பிய பதக்கங்கள் வென்ற சிறுவர் சிறுமியர்க்கு ஆல் இந்தியா செஸ் பெட்ஃரேஷன், பெற்றோர் மற்றும் உறவினர் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது