Thursday, September 11, 2008

அன்பளிப்பு ராடார்

புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை


வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இருந்தபோதிலும், வவுனியா முகாமில் வெளிநாட்டவர்கள் எவரும் பணிபுரியவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார்.

"இவ்வாறான நிலைமைகளைக் கையாள்வதற்கு எம்மிடம் போதியளவு ஆட்கள் உள்ளார்கள். வெளிநாட்டவர்கள் எமது படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனக்கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை" எனவும் அமைச்சர் நேற்று முன்நாள் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்திருந்தார்.

காயமடைந்த இரண்டு இந்திய தொழில்நுட்ப நிபுணர்களான ஏ.கே.தாகூர், சிந்தமாணி ராவுட் ஆகிய இருவரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து வவுனியா முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்திய ராடர் சாதனத்தை பராமரிப்பதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வந்து தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2005 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இந்த ராடர் சாதனம் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது முதலாவது வான் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இதன் தரம் மேம்படுத்தப்பட்டது. இதற்கான உதவிகளையும் இந்தியாவே வழங்கியது.

வவுனியா முகாமில் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றியதை ஏற்றுக்கொள்ளும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், "காயமடைந்த இருவரும் தொழில்நுட்ப நிபுணர்களாகப் பணிபுரிந்தவர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ராடர் சாதனத்தைப் பராமரிப்பதற்காக இவர்கள் காலத்துக்குக் காலம் கிரமமான முறையில் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றார்கள்" எனவும் குறிப்பிட்டார்.

காயமடைந்த இந்த இருவரும் தீவிரமான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகளில் தரை மற்றும் வான் வழியாக நேற்று முன்நாள் தொடுத்த கடுமையான தாக்குதலில் படையினர் குறைந்தபட்சம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாமிலிருந்த இந்தியா வழங்கிய ராடர் சாதனம் தாக்கியழிக்கப்பட்ட போது அதற்கான தொழில்நுட்பவியலாளர்களாகப் பணிபுரிந்த இரண்டு இந்தியர்கள் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமை தெரிந்ததே.

நன்றி புதினம்

முகமூடியை கிழித்துள்ள வவுனியா ரா அதிகாரி பாராட்டு

சிறிலங்கா இராணுவத்தின் பிரசார முகமூடியை கிழித்துள்ள வவுனியா தாக்குதல்: பி.இராமன்


சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து அவர் எழுதியுள்ள பத்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா இராணுவத்தினர், தமது தாக்குதல்களால் புலிகளின் ஒட்டுமொத்த மன உறுதியையும் சிதைத்துவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறாரகள்.

ஆனால், வவுனியா தாக்குதலை பார்க்கப்போனால் புலிகளின் மூத்த தளபதிகளோ போராளிகளோ எள்ளளவும் தமது உறுதியில் குலைந்துவிட்டதாக கணிப்பிடமுடியாது என்று அடித்துக்கூறவேண்டியுள்ளது.

புலிகளது மனஉறுதி தொடர்ந்து உச்ச நிலையிலேயே காணப்படுகிறது. அவர்களின் தளபதிகளின் நேர்த்தியான திட்டமிடலும் குறைந்த ஆள்பலத்துடனும் ஆயுத பலத்துடனும் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் வியூகங்களும் அவர்களின் வீரத்தின் வீச்சை வெளிப்படுத்தியிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போராட்ட வலுவை முற்றாக அழித்து போராளிகளின் மனஉறுதியை சிதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அண்மையில் கூறியிருந்தது.

இராணுவம் கூறியதைப்போல உண்மையிலேயே நடைபெற்றிருந்தால், புலிகளின் தளபதிகளினதும் போராளிகளதும் ஓர்மம் குறைந்திருக்கும். புலிகள் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்து அதன் உறுப்பினர்கள் அந்த அமைப்பிலிருந்து தப்பியோடியிருப்பர்.

அவ்வாறு ஏதாவது நடைபெற்றதா?

அதற்குரிய எந்த அறிகுறியும் புலிகள் அமைப்பிலிருந்து தென்படவில்லை.

பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து ஆயுதங்களை பெற்று ஓயாது சண்டையிடும் சிறிலங்கா படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் சளைக்காது சமரிட்டு வருகின்றனர்.

வன்னி மீது எத்தனை தடவைகள் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் சென்று தாக்குதல்களை நடத்தினாலும் அங்கிருந்து புலிகள் தொடர்ந்தும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

புலிகளின் இந்த தாக்குதல்களினால் - சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட - இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

ஈரானிடமிருந்து பெறும் பணத்தினால் பெருந்தொகையான ஆயுதங்களை தனது நேச நாடுகளிடம் பெற்று அவற்றை போரில் பயன்படுத்துவதில் மட்டும்தான் சிறிலங்கா படைகள் ஆசுவாசப்பட்டுக்கொள்கின்றன். இந்த வசதி புலிகளுக்கு இல்லை என்பது உண்மை.

விடுதலைப் புலிகளினது நேர்த்தியான திட்டமிடலையும் அரச படையினருக்கு எதிரான அவர்களது ஓர்மத்தையும் அண்மையில் இடம்பெற்ற வவுனியா தாக்குதல் தெளிவாக காண்பித்திருக்கின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் அனுராதபுரம் படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்று - ஒரு படி மேலே சென்று - வான் வழியாகவும் தரை வழியாகவும் - ஆட்லறி மூலமும் மிகவும் கவனமாக திட்டமிட்டு வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் மேற்கொண்ட புலிகளின் வானூர்திகளை கொழும்பிலிருந்து சென்ற தமது சிறப்பு தாக்குதல் வானூர்திகள் சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்குரிய ஒளிப்பட ஆவணம் தம்மிடம் இல்லை என்று வான்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

அனுராதபுர படைத்தளம் மீதான புலிகளின் வான் தாக்குதலின்போதும் அது ஒரு கண்துடைப்பு தாக்குதல் என்றும் புலிகள் தமது இலக்கை அடையவில்லை என்றும் சிறிலங்கா அரசு முதலில் கூறியிருந்தது. ஆனால், பின்னர் வெளிவந்த சுயாதீன அறிக்கைகள் இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய இழப்பை வெளிக்கொண்டு வந்தது.

வவுனியா படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்திகள் ஆறு நிமிடங்கள் மாத்திரமே வவுனியா வான் பரப்பின் மேல் பறப்பில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, அவ்வளவு நேரத்திற்குள் கொழும்புக்கு தகவல் போய், அங்கிருந்து வந்து புலிகளின் வானூர்தியை தாக்கியழிக்க வல்ல வேகமான வானூர்திகள் எவையும் சிறிலங்காவிடம் இல்லை.

சிறிலங்கா இராணுவம் தாம் ஈட்டிய வெற்றிகளை பூதாகாரப்படுத்தி வெளியிட்டுவிட்டு தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைத்துவரும் வேளையில், விடுதலைப் புலிகள் ஆதாரங்களுடன் இழப்பு விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தாம் போரில் பாரிய இழப்புக்களை சந்தித்தாலும் கூட அதனை புலிகள் ஒருபோதும் மூடிமறைக்க முயற்சிப்பதில்லை.

இதனால்தான், விடுதலைப் புலிகளின் அறிக்கைகளை போராளிகளும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் நம்பகத்தன்மை உடையவையாக பார்க்கின்றனர்.

வவுனியா தாக்குதலை பொறுத்த வரையில் விடுதலைப் புலிகள் விடுத்த அறிக்கை, சிறிலங்கா அரசு விடுத்த அறிக்கையிலும் பார்க்க கூடுதல் நம்பகத்தன்மை உடையது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்