Tuesday, August 26, 2008

மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரின் கோட்டையினை தாக்கியழித்த 205 ஆவது வெற்றிவிழா



தமிழீழத் தேசியத் தலைவரினால் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு, மீட்கப்பட்ட முல்லைத்தீவு மண்ணில் 1803 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் முல்லைத்தீவு ஆங்கிலேயப் படையினரின் கோட்டையினை மாவீரன் பண்டாரவன்னியன் தாக்கியழித்ததன் 205 ஆவது வெற்றிவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் சர்வன், புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன், ஒட்டிசுட்டான், நெடுங்கேணிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் ஆகியோர் ஏற்றினர்.

தமிழீழத் தேசியக் கொடியினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்றினார்.

பண்டாரவன்னியன் கொடியினை பண்டாரவன்னியன் அறங்காவலர் கழகச் செயலாளர் சி.வேதவனம் ஏற்றினார்.

பண்டாரவன்னியன் நினைவுக்கல்லுக்கான சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஏற்றினார்.

நினைவுக்கல்லினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் திரைநீக்கம் செய்தார்.

நினைவுக்கல்லுக்கான மலர்மாலையினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.பார்த்தீபன் சூட்டினார்.

நிகழ்வரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு ச.கனகரத்தினம் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு பண்டாரவன்னியன் அறங்காவல் கழக உபதலைவர் க.சரவணபவன் மலர்மாலை சூட்டினார்.

தலைமையுரையினை ஒட்டிசுட்டான் உதவி அரசாங்க அதிபர் சுபாஜினி மதியழகன் நிகழ்த்தினார்.

விழாவுரையினை க.பார்த்தீபன் நிகழ்த்தினார்.

சிறப்புரையினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஆற்றினார்.

சிறப்புரையினைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவருக்கான மாவீரன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு வெற்றிவிழா மலர் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.

மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிவிழாவை முன்னிட்டு சான்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமாரின் துணைவியார் அம்பிகா நந்தகுமார், கலைஞர் பொன்னையா சேதுபதி, கலைஞர் சு.கணபதிப்பிள்ளை, கலைஞர் நடேசு செல்லத்தம்பி, கலைஞர் மாணிக்கம் ரூபமூர்த்தி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

அத்துடன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

பேச்சுப் போட்டியில் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய மாணவி ந.சாமந்தி, கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.அனோஜா, அ.சகாயராணி, கற்சிலைமடு அரசினர்த் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி யோ.தீபனா, கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி க.சுரேந்தினி ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர்.

கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி ப.தனோஜிகா, கற்சிலைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.கீதா, கிளிநொச்சி தமிழ்ச்சோலை வித்தியாலய மாணவி சு.மணிமேகலை ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர்.

கவிதைக்கான பரிசினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் வே.சுதன் பெற்றார்.

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன்

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன்

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு சிறப்பு மலருக்கு வழங்கிய வாழ்த்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன்.

செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும்.

இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர்.

தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடியுள்ளனர்.

இதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவன்தான் மாவீரன் பண்டாரவன்னியன்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய அந்த மாவீரனது கதைகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. அந்தப்போர்கள் நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது மனதில் உணர்வெழுச்சி பொங்குகின்றது.

இதற்கெல்லாம் வரலாற்று உணர்வுதான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயர்விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று உணர்வுதான் காரணமாக இருக்கின்றது.

பண்டாரவன்னியன் போன்று இந்த மண்ணின் வீரப்புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலையுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும் என்றார் அவர்.