Thursday, November 20, 2008

மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் 14 நாட்கள் சுற்றுப்பயணம்

இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் நாள் வரை 14 நாட்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் எழிலன் தலைமையில் 15 பேர் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.

இதன் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு கறுப்புக் கொடி அசைத்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது:

நம் நாடு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் உண்மை நிலை என்ன? என்று நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் உள்ள பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன.

இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போர் அறிவிப்பு செய்த பிறகு, பாதிரியார் ஒருவரை அவர் தங்கியிருக்கும் இடத்தை விட்டு செல்லுமாறு அரசு ஆணையிட்டது. அதையடுத்து அந்தப் பாதிரியாரும் மூட்டை, முடிச்சுகளை கட்டிக் கொண்டு போக புறப்பட்டார். அப்போது இரண்டு குழந்தைகள் அங்கு வந்தனர். அவர்களிடம் எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாதிரியார் 2 பேனாக்களைக் கொடுத்தார்.

அந்தப் பேனாவை பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகள் பாதிரியாரிடமே அவற்றைத் திருப்பிக் கொடுத்தன. நாங்கள் உயிருடன் இருப்போமா அல்லது இருக்கமாட்டோமா என்று தெரியவில்லை. எனவே, வேறு ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பேனாவைக் கொண்டு போய் கொடுங்கள் என்று அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா?

தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் சுற்றுப்பயணம் செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

சுற்றுப்பயண வேனின் இருபுறங்களிலும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கும் வகையில் அமைந்துள்ளன.





பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ப

பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்:

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாகவுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழா்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:30 நிமிடம் தொடக்கம் மாலை 6:30 மணிவரை இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் பிரித்தானியாவில் உள்ள சில அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவிலான தமிழர்கள் பங்கேற்றனர்.



பிரித்தானிய பிரதமருடனான கேள்வி நேரம் நேற்று என்பதனாலும் நேற்றைய நாளில் பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவார்கள் என்பதனாலும் நேற்றைய நாளினை கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்திருந்ததாக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

பிரித்தானியாவின் தற்போது நிலவும் குளிரான காலநிலையிலும் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் தம்முடன் பாடசாலை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.

மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இக்கவனயீர்ப்பு நிகழ்வு அமைந்தது.

- சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானிய அரசு வற்புறுத்த வேண்டுமென கோருவது

- இலங்கையில் தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பிரித்தானிய அரசு அங்கீகரிக்க கோருவது

- தமிழின எழுச்சிக்கு ஒத்துழைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பது

ஆகியனவே அந்த மூன்று நோக்கங்கள் ஆகும்.



பிரித்தானியாவின் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன் அங்கிருந்த மக்கள் மத்தியில் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு பிரித்தானிய தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கீத் வாஸ், தமிழர்களுக்கான அனைத்து கட்சிக்குழுவின் தலைவரான விரேந்திர சர்மா, சியோப்கெயின் மக்டொனா, சுசான் கிரைமர், அன்ரூ பெலிங், ரொம் பிரேக், ஜோன் ரையன், பரிகார்டினர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாண்ட் வாத்திய இசை முழங்கப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு என தனியான தமிழீழ தனியரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய தமிழர்களின் விருப்பம் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.



சிறிலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாகவும் அங்குள்ள தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாகவும் பிரித்தானிய மக்களுக்கு எடுத்து விளக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

“இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்து”

“தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி”

“தமிழ்நாட்டுக்கு நன்றி - பிரித்தானிய தமிழர்”

“சிறந்த தேசம் - தமிழ்நாடு”

“நன்றியுள்ள மக்கள் - தமிழீழ மக்கள்”

“அப்பாவி தமிழர்கள் மீதான குண்டு வீச்சை நிறுத்து”

“சிறிலங்கா ஒரு பயங்கரவாத அரசு”

”பிரித்தானியாவே சிறிலங்கா அரசு மீது பொருளாதார தடையை விதி”

”ஐ.நாவே சிறிலங்கா மீது ஆயுத தடையை விதி”

“ஐரோப்பிய ஒன்றியமே ஜீ.எஸ்.பீ. பிளஸ் - யுத்த நிதிக்கான வழி”

என ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளின் வாசகங்கள் காணப்பட்டன.

ஆங்கிலம் மற்றும் தமிழில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.