Monday, February 29, 2016

கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் சிறுமி ஒருவருக்கு கையில் பச்சை குத்தப்பட்டது. வேதனையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத சம்பவம் அமைச்சர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி,  வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில்,  668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
 
பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்திக்கொண்டனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ தற்பொழுது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் முன்னிலையிலேயே அந்த சிறுமிக்கு பச்சை குத்தப்பட்டுள்ளது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
சிறுமிக்கு வலுக்கட்டாயமாக பச்சை குத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.  இது தொடர்பாக வழக்கு ஒன்று ரெடியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அன்புமணி ஆகிய நான்...

சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார்.
அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது. தமிழத்தில் மாற்றம் வேண்டும். புதுமை வேண்டுமென்ற எண்ணத்தின் என்னை முதல்வராக தேர்வு செய்ய லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். 

கடந்த 50 ஆண்டுகள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளீர்கள். அந்த வாய்ப்பை இந்த முறை எனக்கு கொடுங்கள். 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்யாததை அன்புமணி ஆகிய நான் 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன்.அது மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் சேர்த்து என்னால் திட்டமிட முடியும். இது எங்களால் மட்டும்தான் செய்ய முடியும். இது ஆணவமான பேச்சு அல்ல. நம்பிக்கைமிகுந்த பேச்சு 

இந்த இடத்தில் நான் மகாத்மா காந்தியின் வாசகங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன். முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள். அடுத்து ஏளனம் செய்வார்கள். அடுத்து உங்களை கடுமையாக எதிர்ப்பார்கள், கடைசியில் உங்ககளை ஏற்றுக் கொள்வார்கள்.  

கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த கூட்டத்தில் என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த போது ஏளனம் செய்தார்கள். இவர் முதல் அமைச்சரா? இவரால் முடியுமா? என்று கிண்டலடித்தார்கள். ஆனால் 32 மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து மக்களையும் மனம் தளராமல் சந்தித்தேன். எட்டு திசைகளிலும் 8 மண்டல மாநாடுகளை நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை பெண்களை கவர்ந்து இழுத்திருக்கிறோம்.

நாம் கடந்து வந்த பாதை சாதாரண பாதை கிடையாது. ராமதாஸ் அவர்களின் 34 ஆண்டு கால உழைப்பு. தொண்டர்களின் உழைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது.  இப்போது அவர்களுக்கு நம்மை கண்டு பயம் வந்து விட்டது. காந்தி சொன்ன வார்த்தை இப்போது நிறைவடையப் போகிறது. ஆம் அடுத்த இரண்டே மாதத்தில் நாம் வெற்றி பெறப் போகிறோம். 

தமிழகத்தில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு மாற்றம் நிகழப் போகிறது. ஒரு பக்கம் சாத்தான். இன்னொரு பக்கம் கடல். இருவருக்கும் மத்தியில் டாக்டர் என்ற வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. 35 வயதிலேயே பதவியை நான் பார்த்து விட்டேன். எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. 

தற்போதைய நிலையில் தேர்தல் களத்தில் வீர நடை போடும் ஒரே கட்சி பா.ம.கதான். திமுக அதிமுகவைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என ராமதாஸ் கூறியிருக்கிறார். வந்தால் மகிழ்ச்சி... வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் மக்களை நம்பி களம் இறங்குகிறோம். மது விலக்கு வேண்டுமென்று கதறும் பெண்களை நம்பி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். 

இந்த தேர்தலில் 66 வயது நிரம்பிய திமுக தனித்து நிற்கத் தயங்குகிறது. 44 வயது அதிமுக தனித்து போட்டியிட பயந்து நிற்கிறது. யாராவாது வருவார்களா? என்று கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார். எதிரிகளே இல்லையென்று சொன்ன ஜெயலலிதாவை சுற்றி எதிரிகளாகத்தான் இருக்கிறார்கள். 

மதுவை விலக்குதான் முதல் கையெழுத்து 


தமிழகத்தின் முக்கிய பிரச்சினை மது. தமிழகத்தில் உள்ள  1 கோடியே 97 லட்சம் குடும்பங்களில் இந்த மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை. தாத்தாவில் இருந்து பேரன் வரை அல்லது குடும்ப உறுப்பினர்கள் என யாராவது ஒருவர் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பார். அதிக மது விற்பனை, கணவனை இழந்த பெண்கள் அதிகமான இருப்பது, குடி பழக்கத்தால் சாலை விபத்துக்கள், தற்கொலைகள் அதிகமாக நடப்பது என தமிழகம் எதிர்மறையான விஷயங்களில்தான் முதலிடத்தில் உள்ளது.
பல ஆண்டு காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ராமதாஸ் மதுவை ஒழிக்கப் போராடி வருகிறார். பெண்கள், மாணவர்கள் மது குடிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையே அழிந்து விடும். மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடி வரும் ஒரே கட்சி பா.ம.கதான்.திமுகவின் முன்னோடிகள் பெரியார், அண்ணா ஆகியோர் மதுவை எதிர்த்தார்கள். ஆனால் இன்று தமிழகத்திற்கு மதுவை கொடுத்த கட்சியாக திமுக இருக்கிறது.

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்தே மது விலக்கு கையொப்பமாகத்தான் இருக்கும். அதே வேளையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுரவமான மற்றொரு வேலை வழங்கப்படும். மது அடிமைகளை மீட்க மறு வாழ்வு மையம் அமைக்கப்படும். சாதாரண மக்களின் பங்களிப்புடன் தமிழகத்தில் கள்ளச்சாரயம் ஒழிக்கப்படும். 

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் பொறுங்கள். மது விலக்கு கையெழுத்து போட்டு விட்டுதான் அடுத்த வேலையை பார்ப்போன். மது சமூகத்தின் ஒழுக்கக் கேடுகளுக்கு நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் ஒரு பிரச்னை. அதனால்தான் அதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டியது உள்ளது. 

தமிழகத்தின் வருமானத்தை பெருக்க அன்பு மணியின் திட்டங்கள்


தமிழகத்தில்  ஆற்றில் ஒரு யூனிட் மணல் எடுக்க ரூ.674 வசூலிக்கப்படுகிறது. வெளியே ஒரு யூனிட் மணலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்கிறார்கள். 5 ஆயிரம் யூனிட் மணல் அள்ளினால் ஆயிரம் யூனிட்டுக்குதான் கணக்கு தருவார்கள். இதன் முலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை வருவாயாக மாற்றினால் தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும்.  

அடுத்து தாதுமணல் கொள்ளை. இதனை முறையாக செய்தால்  50,000 கோடி வருமானம் வரும். கிரானைட் கொள்ளையை தடுத்தால் 30,000 கோடி வருமானம் வரும். இவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும். 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தனியாக  டோல் ஃப்ரீ நம்பர் தருவோம்.  தமிழகத்தில் எந்த பகுதியில்  கள்ளச் சாரயம் விற்றாலும்  அந்த எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் உண்மையாக இருந்தால்ரூ.ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும். ரகசியம் பாதுகாக்கப்படும். அதே வேளையில் அந்த கிராம நிர்வாக அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கத்துக்குள்ளாவார்கள். 

டாஸ்மாக்கில்  82 பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கவுரவமிக்க மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும்.  

தமிழகத்தில் 12 மது ஆலைகளில் திமுகவுக்கு 6 அதிமுகவுக்கு 3 சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மது ஆலைகள் இருக்கிறது. மது விற்பனை மூலம் திமுகவுக்கு ஆண்டுதோறும் ரூ.16ஆயிரத் கோடி கிடைக்கிறது. மதுவை ஒழிப்பதாக சொல்லும் ஸ்டாலின்  மக்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் 6 மது ஆலைகளை மூட வைக்க முடியுமா? 

அன்புமணி பிடிவாதக்காரன். சொன்னால் செய்வான். நான் மதுவை ஒழிப்பேன். என்னால் மட்டும்தான் மதுவை ஒழிக்க முடியும் என்று ஆணவத்தில் சொல்லவில்லை. தைரியத்தோடு நம்பிக்கையோடு சொல்கிறேன்.


ஊழலை ஒழிக்க தீர்வு 


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழலின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. இதற்கு ஒரே தீர்வு. ஊழல் பெருச்சாளிகளான அதிமுக, திமுக வேண்டாம். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். சுயாட்சி அந்தஸ்த்துடன் அது செயல்படும். ஆண்டு தோறும் முதல்வர், அமைச்சர்கள் சொத்து மதிப்பு வெளியிடப்படும். ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். முதல் கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். இதனால் முதல்வர் தவறு செய்தால் கூட தப்பிக்க முடியாது. லஞ்சம் கேட்டால் டோல்ப்ரீ எண்ணில் புகார் தரலாம். இதுவெல்லாம் நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும். 

கடந்த 50 ஆண்டுகளில் சீர்குலைந்து போய் கிடக்கும் நிர்வாகத்தை சுண்ணாம்பு அடித்து புதிய நிர்வாகமாக மாற்றுவேன். சுகாதரத்துறை அமைச்சராக இருந்த போது 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மண்டபத்தில் தண்டனை காலம் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்காது. 

சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது? அம்மாவில் ஆரம்பித்து அம்மாவில் முடிகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறைகள் கடைபிடிப்போம். எதிர்கட்சிகளுக்கு எங்களை விட அதிகமாக பேச வாய்ப்பு அளிப்போம். ஆட்டுக்குட்டி, மிக்ஸி தரமாட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு அளிப்பேன். தமிழக மக்களை தன்மானத்துடன் வாழ வைப்பேன்.
 
தமிழகத்துக்கு  திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும். தமிழகத்தை முன்னேற்றபாதைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது'' என்று பேசினார். 

மறைந்தார் நகைச்சுவை நடிகர் குமரி முத்து

நகைச்சுவை நடிகரான 77 வயது குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி (29 பிப்ரவரி) காலை குமரி முத்துவின் உயிர் பிரிந்தது. 

நடிகர் குமரி முத்து, 1978 -ம் ஆண்டு 'இவள் ஒரு சீதை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
தனது வித்தியாசமான சிரிப்பினால், மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர், 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும்   குமரி முத்து நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சியான தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டு, நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

ஆஸ்கர் மேடையில் அதிரவைத்த டிகாப்ரியோ

ந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதைப் பெற வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!”  - இது மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக  ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சாஷீனின் குரல்.
ஆம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை புறக்கணித்த கலைஞன்,  'நான் ஏன் விருதை மறுக்கிறேன்...?' என்று எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு சிறு பகுதி இது.  மார்லன், நமது முந்தைய தலைமுறையின் ஆதர்ச நாயகன். தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, அவர் விருதை மறுக்கவில்லை... தன் நாட்டின் தொல்குடிகளான செவ்விந்தியர்கள், எப்படி நிஜத்திலும், திரையிலும் மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று வருந்திய  கலைஞனின் கலகக்குரல்தான் அந்த கடிதம். உலகமே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஒரு விழா மேடையில், தன் தேசத்திற்கு எதிராக சுட்டு விரலை நீட்டிய உண்மையான கலைஞன் அவர். 

மார்லன் திரை நாயகன் மட்டுமல்ல... நிஜ நாயகனும் கூட.  ஒரு முறை லண்டன் நகரத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது, கருப்பின மக்களின் மெழுகுவர்த்தி பேரணி செல்வதை அறிகிறார். பல கருப்பின அப்பாவி மக்கள், எந்த குற்றமும் செய்யாமல் பல நாட்கள் லண்டன் சிறைகளில் வாடுகிறார்கள், அவர்களை விடுவிக்கக்கோரிதான் அந்த பேரணி. தான் உலகம் கொண்டாடும் நாயகன் என்ற எந்த மமதையும் இல்லாமல், உற்சாகமாக பேரணியில் கலந்து கொள்கிறார், கோஷமிடுகிறார். 

ஆம். மார்லன் அப்படிதான். உண்மை எப்போதும் எந்த அரிதாரமும் பூசி திரிவதில்லை. உண்மை உருமாறாதது, நிர்வாணமானது-  நாம் பார்க்க மறுத்தாலும். அது அங்கு அப்படியேதான் இருக்கும். அந்த உண்மையை பேசிய கலகக் கலைஞன் மார்லன். “நான் படங்களில் நடிப்பது, பணத்திற்காகதான்...” என்று உண்மையை உரக்க சொன்னவர் அவர். 

ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்:

நாம் எப்போதும் உண்மையை சந்திக்க தயங்குகிறோம்.  அந்த உண்மையை சந்திக்கும் பண்பு, நம் சிறு வயதிலிருந்தே துவங்கி விடுகிறது. தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் நாள் இன்னும் தள்ளிப் போகாதா என்று ஏங்குவது, விடுமுறையை கொண்டாட மட்டுமல்ல... விடைத்தாளை சந்திக்கவும் பயந்துதான். அதே பண்புதான் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. முகத்தில் அறைந்தாற்போல் உண்மையை பேசுபவர்களை நமக்கு பிடிப்பதில்லை. இது தனி மனிதனின் குணம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், தேசத்தின் குணமாகவும் இதுதான் இருக்கிறது. தம் தேசத்திற்கு எதிராக யாராவது சுடும் உண்மையை பேசினால்,  அவர் மீது தேச விரோத முத்திரை குத்தப்பட்டு, விலக்கி வைக்கப்படுகிறார்.

பல ஆண்டுகள் காத்திருப்புக்குன் பின் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விருது கிடைக்கிறது. நாம் என்ன செய்வோம்...? இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு, விழா ஏற்பாட்டளர்களை புகழ்ந்து பேசுவோம். இல்லையென்றால், நாம் இந்த விருது வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று ஒரு கதை அளப்போம். எத்தனை பேர் நமக்கு கிடைத்த மேடையை, உலகம் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்னையைப் பற்றி பேச பயன் படுத்துவோம்...?

ஆனால்,  லியோனார்டோ டி காப்ரியோ பயன்படுத்தி இருக்கிறார்.  “நாம் ஆதரிக்க வேண்டும்-  புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை  மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை,  புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”

-  இது ஆஸ்கர் மேடையில் காப்ரியோ பேசியது. 

மேம்போக்காக பார்த்தால், இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், பருவநிலை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும், தொடர்ந்து கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்காவில் நின்று கொண்டு பேச ஒரு கலைஞனுக்கு மாபெரும் துணிச்சல் வேண்டும். 

புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும், அதற்காக கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள  வேண்டும் என்று ஐ.நா மன்றம் வலியுறுத்தியது. ஆனால்,  இதில் தன் பங்களிப்பை அமெரிக்கா போல வளர்ந்த நாடுகள் புறந்தள்ளி வந்தன. பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, அண்மையில் தான் பாரிசில் நடந்த மாநாட்டில் கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள முன்வந்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அந்நாடுகள் அதை செயல்படுத்துமா என்பது கேள்வி குறி...

இந்த சூழலில் காப்ரியோவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. அவரின் பேச்சு தட்டையானது அல்ல.  மறைமுகமாக தன் நாட்டின் மீது தான் குற்றம் சுமத்துகிறார்.  

பேராசையின் அரசியல்:
ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் பேர் பருவநிலை மாற்றத்தால் இறக்கிறார்கள். முப்பது கோடி பேர் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். பருவநிலை மாற்றம் இயற்கையான நிகழ்வல்ல... அது ஒரு சிலரின் பேராசை, நிறுவனங்களின் பணத்தாசை, வளர்நத நாடுகள் தாங்கள்தான் அனைத்து நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தில், வரைமுறை இல்லாமல் செய்யும் ஆயுத உற்பத்தியும், அதன்  விளைவுகளும்தான் புவிவெப்பமயமாதல்.

இத்தகைய சூழலில் நாம் காப்ரியோவின் பேச்சை, மற்றுமொரு பேச்சாக கடந்து சென்றுவிட முடியாது... 

மார்லனின் உரைக்கு பின்புதான்,  செவ்விந்தியர்கள் மீது கவனம் குவிந்தது. அவர்கள் நலன் குறித்து பேச்சு எழுந்தது.  இப்போது, 43 ஆண்டுகளுக்கு பின்பு காப்ரியோ, விழா மேடையில் ஒரு கலகக் குரலை எழுப்பி உள்ளார். 

பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு,  போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார்.

இந்தநிலையில் 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவருக்கு பல எதிர்ப்பு வந்தாலும் அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே, ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியைக் காண பசீருக்கு டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி. இது குறித்து முகமது பசீர் கூறுகையில், ”இந்திய அணித்தலைவர் தோனி எனக்கு நேற்று முன்தினம் நடந்த போட்டிக்கான டிக்கெட் வழங்கினார். அதேசமயம் நான் அப்ரிடியிடம் கேட்கவில்லை. அவரிடம் நான் பேசமாட்டேன். அப்ரிடிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை. எங்களது அணியில் ஒற்றுமை என்பதே கிடையாது” என்று கூறியுள்ளார்.