Sunday, May 08, 2016

சோழர்களின் நீர் மேலாண்மை...

சோழர்களின் நீர் மேலாண்மையும், நதி நீர் இணைப்பு திட்டமும்...!


பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி நீர் இணைப்பாக இருந்துகிறது. இந்த இயல்பினால் தான் உலகின் பழமையான அணையை கட்டியவன் சோழன்  என்று பெருமை கொள்கிறோம். ஆனால், அதே சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளை  பற்றி பேச மறுக்கிறோம். 

கரிகாலனின் கல்லணை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்தான். இப்போது கட்டப்படும் அணைகள் போலானது அல்ல, சோழன் கட்டிய கல்லணை. சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்க்காமல், கல், மண் மற்றும் களிமண் கொண்டு கட்டப்பட்ட அணை அது. அதனால்தான், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் பொறியியலை கண்டு வியந்து கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்று பெயர் சூட்டினார். இது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், சோழர்கள்  அணைகளை மட்டும் கட்டவில்லை. கல்லணைக்கு நிகரான தொழிற் நுட்பம் அவர்கள் வெட்டிய ஏரிகளிலும் இருந்தது. 

ராஜகேசரி பெருவழியும், நொய்யல் ஆறும்:
பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடி.  

எழுத்தாளர் இரா. முருகவேளிடம் இந்த பெருவழி குறித்து பேசியபோது, “இந்த பெருவழியில் பெரும் வணிக குழுக்கள் பயணித்தன. வணிக குழுக்கள் என்றால் பத்து இருபது பேர் அல்ல. குறைந்தது 1000 மாட்டு வண்டிகளில் தானியங்கள், பஞ்சுகள் மற்றும் பிறச் செலவங்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் பயணித்து இருக்கிறார்கள். கொடுமுடி முதல் பாலக்காடு வரை இந்த பெருவழியை ஒட்டிய பகுதிகள் மிகவும் வறட்சியானதாக இருந்து இருக்கிறது. அதனால், அந்த பாதையில் பயணிப்பவர்களின் நலனுக்காக கோவை பகுதியில் மட்டும் 32 நீர் நிலைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது. 

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் அவர் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும்.

கோவை மாவட்டம் பீடபூமி பகுதி. அதனால் மற்ற ஆறுகளைவிட நொய்யலாற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பெரும் மழை பெய்தால் கூட வேகமாக பயணித்து காவிரி உடன் விரைவாக கலந்துவிடும். அதனால், இந்த ஆற்றின் பயன்களை அந்த பகுதி மக்கள், முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வெட்டபட்ட இந்த ஏரிகள், ஆற்றின் வேகத்தை ஆற்றுப்படுத்தியது மட்டும் இல்லாமல்,  அந்த பகுதியையும் எப்போதும் செழிப்பாக வைத்து இருந்து இருக்கிறது.

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரிகளையும் மெல்ல கொன்று வருகிறோம். அதன் மூலமாக நொய்யலையும். ஆம் நொய்யல் அழிவிற்கு சாயப்பட்டறைகள் மட்டும் காரணம் அல்ல. இந்த ஏரிகளின் அழிவும்தான். முன்பு ஒரு காலத்தில் நொய்யலில் ஏராளமான நீர் நாய்கள் இருந்து இருக்கின்றன. ஆனால், இப்போது ஒன்றை கூட பார்க்க முடியவில்லை. அந்த நிலை நாளை அதனை ஒட்டி வாழும் நமக்கும் ஏற்படலாம்...” என்கிறார் முருகவேள்.  

நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் வேலையா...?
இந்த நீர் நிலைகளை காக்க வக்கற்ற இந்த அரசும் நாமும்தான் இப்போது நதி நீர் இணைப்பை பற்றி அதி தீவிரமாக பேசி வருகிறோம்.  அனைத்து கட்சிகளும் நம்மை கவர்வதற்காக நதி நீர் இணைப்பு திட்டத்தையும் தம் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து இருக்கிறது. உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா...பயன் தருமா...? என்ற நம் கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பதிலாக இருக்கிறது. 

சூழலியலாளர் பியூஷ், “நதி நீர் இணைப்பு நன்மைகளை தருவதை விட மாநிலங்களுக்கிடையே  பிரச்னையைதான் உண்டாக்கும். இது போல் பெரிய திட்டங்களை நாம் யோசிப்பது மூலமாக, தீர்வை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் மேலும் நாம் சிக்கலாக்குகிறோம்.” என்கிறார். 

“ஒரு வேளை இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், டன் கணக்கில் கான்கீரீட் கலவைகள் ஆற்றில் கொட்ட்டப்படும். இது மேலும் மேலும் ஆற்றை மாசுப்படுத்துமே தவிர, எந்த நல் பயன்களையும் தராது...” என்கிறார் பியூஷ். 

ஏற்கெனவே, மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் கர்நாடக வனப்பகுதிகளில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பியூஷின் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும், பூவுலகு அமைப்பைச் சேர்ந்த சுந்தராஜன்,  “இன்றைய மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்த 20 லட்சம் கோடி தேவை. பராமரிக்க வருடத்திற்கு 2 லட்சம் கோடி தேவை. இவ்வளவு நிதி எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பி ஏமாற்றும் திட்டம்”  என்கிறார். 

அரசின் வாதம்:
இந்தியாவில் சில நதிகளில் மிகவும் செழிப்பாக வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. சில நதிகளில் பருவகாலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் போது, அனைத்து நதிகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்க செய்து விட முடியும். அதனால் நமது விவசாய பரப்பு 175 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விரிவடையும்,  34000 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்க முடியும். -  இது அரசின் வாதம்.

ஆனால், இந்த அடிப்படை புரிதலே தவறு என்கிறார் இந்திய நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டெல்லி ஐஐடி பேராசிரியர் கோசைன்.
“பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்வைக்கிறார்கள். வற்றாத நதிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பது இமயமலை பனிப்பாறைகள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இன்னும் சில காலத்தில்  முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில், வற்றாத நதிகள் என்று ஒன்று இல்லாமலேயே ஆகிவிடும். பின்பு, நதிகளை இணைத்து என்ன பயன்...?” என்று அவர் வைக்கும் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

நதிகள் இணைப்பிற்கு அரசு சொல்லும் இன்னொரு காரணம், தேவையில்லாமல் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும் என்பது. ஆனால், இந்த வாதமும் தவறு என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

சுந்தராஜன், ”கடல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நதிகள் அதன் இயல்பில் கடலில் கலக்க வேண்டும். அதை தடுத்தால் கடல் மரணித்துவிடும். அதற்கு நம் சமகால உதாரணம்  'Dead Sea'. ஜோர்டான் நதியை கடலில் கலக்க விடாமல் செய்ததுதான் அந்த கடல் மெல்ல இறக்க காரணம். அது மட்டுமல்லாமல், நதி கடலில் கலக்கும் கழிமுகத்தில்தான், மீன்கள் குஞ்சு பொறிக்கும், அந்த பகுதியில்தான் அலையாத்தி காடுகள் உண்டாகும். நாம் நதி, கடலில் கலப்பதை தடுக்கிறோமென்றால், இவை அனைத்தையும் அழிக்கிறோம் என்று அர்த்தம்”


பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலேயே தீர்வு காணுங்கள்...?
சரி நம் நீர் பிரச்னைக்கு தீர்வென்ன...? நம் வரலாற்றை மீள்வாசிப்பது மூலமே நம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆம். சோழர்களின் நீர் மேலாண்மை.  

இவர்கள் பெரிய அணைகள், நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்காக திட்டமிடும் பணத்தில் பத்து சதவீதத்தைக் கொண்டே, நம் அனைத்து குளங்கள், ஏரிகளையும் மீட்டுவிட முடியும் மற்றும் ஆயிரக்கணக்கில் புது நீர் நிலைகளையும் உண்டாக்கிவிட முடியும். அதன்  மூலம் அந்தந்த பகுதியில் நீர் வளம் பெருகும். அந்த பகுதி பிரச்னை அந்த பகுதியிலேயே தீர்க்கப்படும்.

நாம் ஒரு பொருளை ஒரு இடத்தில் தொலைக்கிறோமேன்றால், தொலைத்த இடத்தில் தேடுவோமா அல்லது நமக்கு விருப்பமான இடத்தில் தேடுவோமா...? அது போலதான் நீர் பிரச்னையும். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் அதிக நீர் நிலைகளை உண்டாக்கி தீர்க்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிந்து நீர் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது.
 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நான்கு ஆண்டுகளுக்கு  முன் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வந்தது. அப்போது திருவள்ளூரிலிரிந்து தண்ணீர் எடுக்க அரசு முடிவு செய்கிறது. இரண்டு, மூன்று முறை தண்ணீர் எடுக்க அந்த பகுதி விவசாயிகளும் அனுமதித்தார்கள். ஆனால், அதன் பின் எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் எடுக்க சென்ற வண்டியை சிறைப்பிடித்து வைத்து விட்டார்கள். பக்கத்து பக்கத்து மாவட்டத்திலேயே இவ்வளவு சிக்கல் உண்டென்றால், பல மாநிலங்களின் சம்மதம் கோரும் இந்த திட்டத்தில் எவ்வளவு சிக்கல் இருக்கும்....?

இவர்கள் பெரிய அணைகள், நதி நீர் இணப்புகளை முன் வைக்க இன்னொரு காரணம் அதில் விளையாடும் பெரும் பணம் மற்றும் அதை ஒட்டிய ஊழல். அதனால்தான் சுலபமான தீர்வை கண்டு கொள்ள ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள். நாம் எளிய தீர்வை முன் வைத்து, அதை செயல்படுத்த அரசை நிர்பந்திக்கும் போது, இவர்களின் ஊழல்களையும் தடுத்து விட முடியும். இனியாவது நாம், கங்கையையும் காவிரியையும் இணைக்க கோராமல், நம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரியையும், கண்மாயையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசை நிர்பந்திப்போம்.

தீர்வு எளிமையான ஒன்றாக இருக்கிறது. நாம் எந்த பாதையில் பயணிக்க போகிறோம்...
?

8 கேப்டன்களை உருவாக்கிய தோனி!

8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! 

சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும்.  இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும்.
கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம்  வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு,  ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார்த்தால், அவரை வெறுப்பவர் கூட விரும்புவார்கள்.  
 
ஒரு கேப்டன் சிறந்த அணியை மட்டும் உருவாக்குவதில்லை. அணியில் இருக்கும் அனைவரையும் சிறந்த வீரனாகவும், அணியை வழி நடத்தும் திறனையும் உருவாக்குவார். தான் இல்லாத காலத்திலும் அணி சிறப்பாக செயல்பட,  சிறந்த கேப்டன்களை உருவாக்குவதிலும் தோனி செஞ்சுரி அடிக்கிறார்.

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பாப் டூப்ளஸிஸ், பிராவோ, ஜாசன் ஹோல்டர், ஜார்ஜ் பெய்லி என பட்டியல் நீளுகின்றது.

விராட் கோலி


இந்திய அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன், வருங்கால இந்திய அணியின் கேப்டன், பெங்களூர் அணியின் கேப்டன், தோனியின் தளபதி என சொல்லிக் கொண்டே போகலாம். இவர் இந்திய அணிக்கு வரும் முன்னரே,  U-19 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்தவர். கேப்டனாக முன்னரே சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும்,  தோனியிடம் இருந்து நிதானத்தை கற்றுக்கொண்டார். தனது ஆக்ரோஷமான அணுமுறையை குறைத்து, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தோனி குறித்து கோலி கூறுகையில், ”ஒரு அணியின் தலைவராக எல்லாவற்றிலும் சிறப்பாக பணியாற்ற கூடியவர். அவருடன் வெகு நாட்களாக இருக்கிறேன் என்ற முறையில் கூறுகிறேன், இன்னமும் நிறைய இருகின்றது அவரிடம் தெரிந்து கொள்வதற்கு, குறிப்பாக இக்கட்டான சூழ்நிலையில் நிதானமாக செயல்படுவது" என்கிறார்.

ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் முக்கிய தூண்களில் ரோஹித் ஷர்மாவும் ஒருவர். நடுவரிசையில் களமிறங்கி ஆடி வந்த இவரை சச்சின், ஷேவாக் காலத்திற்கு பிறகு துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கினார் தோனி. அதன் பிறகு இவர் செய்த சாதனைகள் பல. இரண்டு முறை இரட்டை சதம், அதிலும் இலங்கை அணிக்கு எதிராக அடித்த 264 ரன்கள் மகத்தான சாதனையாகும். ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக வாங்கப்பட்டபோது பாண்டிங், அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தொடர்ந்து பார்ம் இல்லாமல் தொடர,  கேப்டன் பதவி ரோஹித் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்டது. பாண்டிங், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் பெற்று தர முடியாத கோப்பையை மும்பை அணிக்காக இரண்டு முறை வென்று அசத்தினார். மும்பை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு,  “சச்சின் மற்றும் தோனியுடன் விளையாடிய அனுபவத்தைக்  கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்த முடியும் என்று நம்புவதாக” கூறினார் ரோஹித் ஷர்மா.

சுரேஷ் ரெய்னா 

இந்திய அணியில் தோனிக்கு கோலி தளபதி என்றால், சென்னை அணியில் டோனியின் தளபதி சுரேஷ் ரெய்னாதான். சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டபோது, சென்னை அணி வீரர்கள் புனே மற்றும் குஜராத் அணிகளில் பிரிந்து ஆடும் சூழல் ஏற்பட்டது. மெக்குலம் பிராவோ போன்ற உலக கேப்டன்கள் அணியில் இருந்த போதும், ரெய்னாவைதான் கேப்டன் பதவி தேடி வந்தது. அதற்கு முக்கிய காரணம் அவர் தோனியுடன் அதிகமாக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால்தான் என்கிறார்கள். “சென்னை அணியில் தோனியின் தலைமையில்தான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என்னை ஒரு முதிர்ந்த வீரராக மாற்றியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்தான்.” என்கிறார் ரெய்னா. சென்னை அணியில் முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அனைத்து போட்டியிலும் ஆடியவர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய்


சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரராக ஜொலித்தவர் முரளி விஜய். ஐ.பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் சதங்கள் அடித்து வந்த நேரத்தில்,  இந்திய வீரராக இருந்து இரண்டு சதமடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த தமிழன். தற்போதைய பஞ்சாப் அணியின் கேப்டனான இவர், இதற்கு முன்னர் கேப்டனாக பெரிய தொடர்களை எதிர்கொண்ட அனுபவம் இல்லாத போதும்,  சென்னை அணியில்,  தோனி தலைமையில் ஆடியது ஒன்றையே போதுமான தகுதியாக பஞ்சாப் அணி நிர்வாகம் கருதியது போலும். 

டிவைன் பிராவோ


மே.இ தீவுகள் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர். மும்பை அணியில் இருந்து 2011 ம் ஆண்டு ஏலத்தில்,  சென்னை அணிக்கு வாங்கப்பட்டார். தோனிதான் அவரை 'டெத் ஓவர்ஸ்' என்று அழைக்கப்படும் கடைசி கட்ட ஓவர்களை போட பயன்படுத்துவார். சென்னை அணிக்காக பெரும்பாலும் தனது நான்கு ஓவர்களையும் கடைசியில்தான் வீசுவார் பிராவோ. இன்று அவர் டெத் ஓவர்களின் கிங் என்று அழைக்கப்படுகிறார். இவரும் மே.இ தீவுகள் அணியின் கேப்டனாக சிறப்பாக பணியாற்றினார். தோனியின் கேப்டன் யுக்திகள் தனக்கு எப்பொழுதும் ஆச்சர்யம் தருவதாக கூறுகிறார் பிராவோ. தற்போது இவர் ரெய்னா தலைமையிலான குஜராத் லைன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். 

ஜாசன் ஹோல்டர்:

மேற்கு இந்திய தீவுகள் அணியின் உயரமான ஆல் ரவுண்டர். அந்த அணிக்காக அவர் அறிமுகமான இரண்டு நாட்களிலேயே, 2013 ம் ஆண்டில் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த ஒரு தொடரில் ஆடிய அவருக்கு,  மேற்கு இந்திய தீவுகள் அணியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. 23 வயதில் அந்த அணியின் கேப்டனாக ஆனார் ஹோல்டர். மே.இ தீவுகள் அணியின் இளம் கேப்டனாக வலம் வந்து,  2015 ம் ஆண்டு உலககோப்பை தொடரில்,   அந்த அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றார்.


பாப் டூப்ளஸிஸ் 

தென்னாப்பிரிக்க அணியின் டி 20 அணியின் கேப்டன். 2011 ம் ஆண்டில்,  சென்னை அணி இவரை ஏலத்தில் எடுக்கும்போது இவர் யார் என்று பலருக்கு தெரியாது. அதே பாப் டூப்ளஸிஸ்,  2013 ம் ஆண்டில்,  அந்த அணியின் முழு நேர டி 20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுகிறார். இவர் தொடர்ந்து சென்னை அணியில் 2015 வரை ஆடியவர்.  சென்னை அணி தடை செய்யப்பட்டபோது தோனி தலைமையிலான புனே அணியில் இடம்பிடித்தார். 

ஜார்ஜ் பெய்லி 

2012 ம் ஆண்டில்,  ஆஸ்திரேலிய அணியின் டி 20  கேப்டனாக ஜார்ஜ் பெய்லி  அறிவிக்கப்பட்டபோது,  பலருக்கு ஆச்சர்யம். காரணம்,  அவர் அதுவரை எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடவில்லை. எந்த சர்வதேச போட்டியும் ஆடாமால் கேப்டன் ஆகும் இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை  பெற்றார். முன்னதாக 2009 முதல் 2012 வரை சென்னை அணியில் இடம் பிடித்திருந்தார் அவர். சென்னை அணிக்காக சில போட்டிகள்தான் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நான்கு வருடங்களும் சென்னை அணியுடன் பயணம் செய்தார் ஜார்ஜ் பெய்லி. பின்னர் ஆஸ்திரேலிய அணியின்  ஒருநாள் போட்டியிலும்,  துணை கேப்டன் பதவி அவரை தேடி வந்தது. நடுவில் மூன்று ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஜார்ஜ் பெய்லி, தற்போது தோனியின் புனே அணியில் உள்ளார்.   

இந்தியாவில் மட்டுமல்லாது,  உலக அரங்கிலும் தோனியின் கேப்டன் யுக்திகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதற்கு இது பெரிய சான்றாகும். தற்போது புனே அணியில் ஆடி வரும் இலங்கை அணியின் திசேரா பெரேரா,  விரைவில் இலங்கை அணியின் கேப்டனாக அறிவிக்கபட்டாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 

இத்தனை சாதனைக்கு சொந்தக்காரரான தோனியின் புனே அணி,  தற்போது ஐ.பி.எல் தொடரில் மோசமாக ஆடி வருகின்றது. இது குறித்து தோனி கூறுகையில்,”விரைவில் புதிய முறையில் இந்த தொடரை எதிர்கொண்டு வெற்றி பாதைக்கு வருவோம்” என்றார்.
இதெல்லாம் எங்க ‘தல’க்கு சாதாரணம் என ரசிகர்களும் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். 

மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்


விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ)

                                              மாற்று போட்டியாளராக களமிறங்கும் பேட்ரிக்
கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங்,  தனது அணிக்காக விளையாடிய
போது  மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

டினாமோ புக்காரெஸ்ட் அணியை சேர்ந்த கால்பந்து வீரர்  பேட்ரிக் எகெங்  (26).  இவர், வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில்,  தனது அணி சார்பில் 62வது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார்.
 
                                             மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பேட்ரிக்

ஆனால் போட்டி நடந்தபோது மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.  அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்,  2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார்.  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி புக்காரெஸ்ட் அணி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கால்பந்து வீரர் பேட்ரிக் கிளாட் எகெங்கை இன்றிரவு (நேற்று) இழந்து விட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரின் சார்பிலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய கடவுள் அருள் புரியட்டும்" என தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு எகெங்கின் முன்னாள் அணியான கார்டோபாவும் ட்விட்டரில், பேட்ரிக் எகெங்கின் மரணத்திற்கு எங்களது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளது.