Wednesday, March 30, 2016

நெல் கொள்முதல் பணிகள் மந்தமாக நடப்பதாக விவசாயிகள் புகார்


அரியலூர் மாவட்டம் குருவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், நெல் அறுவடைப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 40 கிலோ நெல் ஒரு மூட்டையாக கணக்கிடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. 

நாளொன்றுக்கு 700 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், கடந்த 20 நாட்களாக சாலையோரத்திலேயே நெல்லைக் கொட்டி விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். பாதுகாப்பு இல்லாத நிலையில், இரவு பகலாக நெல்லை பாதுகாத்து வருவதாகக் கூறும்  விவசாயிகள், நெல் கொள்முதல் பணம் கிடைத்தால்தான் கடனைத் திருப்பித் தரமுடியும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

நெல் மணிகள் அதிக நாட்கள் வெயிலில் காய்ந்தால் எடை குறையும் என்பதால், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நாளொன்றுக்கு அதிக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

மேலும், அரசு நிர்ணயித்த விலையில் பிடித்தம் செய்யாமல் நெல்லுக்கு பணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் கேட்ட போது, விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மியான்மர் நாட்டில் ஜனநாயக முறைப்படி புதிய அதிபர் பொறுப்பேற்பு


அதிபராக முடியாத ஆங் சான் சூகி, அதிபரானார் ஹிதின் கியாவ்.

மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

இந்நிலையில், தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வரும் 31–ந் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து புதிய அதிபர் வரும் ஏப்ரல் 1–ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். 

அண்மையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் மியான்மர் நாட்டின் புதிய அதிபராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, 56 ஆண்டுகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிதின் கியாவ், கடந்த வாரம் தனது புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், ஆங் சான் சூகியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆங் சான் சூகி பல முக்கிய துறைகளின் அமைச்சராக விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.