Monday, August 19, 2013

நதியோடும் பாதையில்...(9)


ஓங்கிச் சொல்லுதல்


இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட சிந்தனையாளர்  காஞ்சா அய்லையாவின் எழுத்துகளைச் சில   ஆண்டுகளுக்கு முன்புதான் படிக்கத் தொடங்கினேன். தில்லியில் உள்ள என் நண்பர் அண்ணாதுரையும், பேராசிரியர் அரச முருகு பாண்டியனும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி,அவருடைய நூல்களையும் கொடுத்தனர். 

அய்லையாவின் நூல்கள்  எனக்குள் சில புதிய பார்வைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் உருவாக்கின என்று கூறலாம். அவருடைய 'Why i am not a Hindu' என்னும் புத்தகம்தான் நான் முதலில் படித்தது. அடுத்ததாக, ஓராண்டிற்கு முன், 'God as a political philosopher' என்னும் அவரது நூலைப் படிக்கத் தொடங்கினேன். இன்னமும் பாதியில்தான் உள்ளது.முடிக்கவில்லை.


அய்லையா ஆந்திர மாநிலம், வாரங்கல்  மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தபோது, இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தீவிரமாக இடதுசாரி இயக்கங்களில் இயங்கியவர். ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் (OPDR - Organisation for Protection of Democratic Rights) பொதுச் செயலாளராக 1981 முதல் பணியாற்றியவர். பிறகு, புத்தர்,பூலே, பெரியார், அம்பேத்கர், சாகு மகராஜ் , சாவித்திரி பாய் ஆகியோரை உள்வாங்கியபின், பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் தலைவர் கன்ஷி ராமையும் பின்புலமாகக் கொண்டு சிந்திக்கவும், இயங்கவும் தொடங்கியவர்.

அவருடைய நேர்காணல் ஒன்று 'இந்து ஆன்மிகமே பாசிசம்தான்' என்னும் பெயரில் சிறு நூலாக வெளிவந்துள்ளது. முனைவர் தனபால், ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் அவரை நேர்கண்டுள்ளனர். அதனைக் கவின்மலர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 40 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள அந்நூல், சாதி, மதம், மொழி ஆகியனவற்றிற்குள் உள்ள தொடர்புகள் சிலவற்றை  வெளிப்படுத்துகின்றது. அதில், 'அடடா' என வியக்க வைக்கும் செய்திகளும் உள்ளன. 'என்ன இது,இப்படிச் சொல்கின்றாரே' என அதிர வைக்கும் வெடிகளும் உள்ளன.

அந்த நேர்காணலில் மூன்று முதன்மையான செய்திகள் உள்ளன. வர்க்கப் பார்வையிலிருந்து வருணப் பார்வைக்கு அவர் மாறியது எப்படி, ஐரோப்பியப் பாசிசத்திற்கும், இந்தியப் பாசிசத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன, மொழி குறித்த நம் பார்வையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ஆகிய மூன்று செய்திகள் இச்சிறு நூலுள் அடங்கியுள்ளன.

1985 ஆம் ஆண்டு நடைபெற்ற காரம்செடு, படுகொலை, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிவோம். கம்மா சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தலித்துகளான மாதிகா சாதி மக்களை அங்கு கொன்றுவிட்டனர். அதுதான் காரம்செடு படுகொலை. அதனைக் கண்டித்து அய்லையா விடுத்த அறிக்கையில், கம்மா நிலப்பிரபுக்கள், மாதிகா தொழிலாளர்களைக் கொன்றுவிட்டதைக் கண்டித்திருந்தார். சாதி குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டதை இடதுசாரித் தலைவர்கள் ஏற்கவில்லை. நிலப் பிரபுக்கள், தொழிலாளர்களைக் கொன்றுவிட்டனர் என்று மட்டுமே இருக்க வேண்டும் என வாதிட்டனர். அய்லையா அதனை மறுத்தார். அவர்கள் கொலை செய்யப்பட்டது, முதலில் மாதிகாக்கள் என்பதால்தான். பிறகுதான் தொழிலாளர்கள் என்பது வருகிறது என்றார் அய்லையா.

அய்லையாவின் நியாயமான வாதம் அங்கு எடுபடவில்லை. அந்த இடத்தில்தான் அவருடைய அரசியல் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இந்திய சமுதாயத்தில், வர்க்கப் பார்வையுடன், வருணப் பார்வையும் கண்டிப்பான தேவை என்பதை அவர் புரிந்து கொண்டார்.



இரண்டாவதாக, அவர் இந்துப் பாசிசத்தை மிகச் சரியான புரிதலோடு விளக்குகின்றார். ஹிட்லரும், முசோலினியும் அரசியல் தளத்தில் பாசிசத்தை நிறுவினர். ஆனால் இந்தியாவின் இந்துமத வெறியர்களோ, ஆன்மிகத்தின் மீது பாசிசத்தை உருவாக்கி வருகின்றனர் என்கின்றார். ஆன்மிகப் பாசிசத்தை எளிதில் அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிணாமங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம் என்று அவர் கூறுவது எவ்வளவு  உண்மை! 

மேலே காணப்படும் இரு செய்திகளும் மிகச் சரியானவை என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவர் கூறியுள்ள மொழி பற்றிய சிந்தனை நமக்கு அதிர்ச்சி ஊட்டுவதாக உள்ளது. அவர் வரிகளை அப்படியே முதலில் காணலாம்:

"....அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய,
சீராக ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும் என்று 
நினைத்தேன்............பிறகு, சமஸ்கிருதத்தையும்,
பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று 
கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய 
மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன."

சாதி அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒருவர் எப்படி மொழி அடிமைத்தனத்தை மட்டும் ஏற்கின்றார் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்த் தேசியம் என்ற உணர்வுகளோடு வளர்ந்த என் போன்றோருக்கு இக்கூற்று பெரும் அதிர்ச்சியாய்  இருக்குமென்பதில் வியப்பில்லை. ஆனாலும் அவர் கூறும் ஒரு காரணத்தை ஆழ்ந்தும் பார்க்கவேண்டியுள்ளது.

இந்திய மொழிகள் பலவற்றில் சமஸ்கிருதத்தின் வேர்கள் பதிந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மைதான். தமிழ் தனித்தியங்க வல்லது என்பதை அய்லையா மறுக்க மாட்டார் என நம்பலாம். எனினும், சமஸ்கிருதம் என்பதை ஒரு மொழியாக  மட்டும் நாம் பார்க்க முடியாது. அது ஒரு சமூக, பண்பாட்டு வல்லாண்மை. அதன் வேர்களைத் தமிழ் மொழியிலிருந்து பிரித்து விட முடியும் என்றாலும், தமிழ்ப் பண்பாட்டில் கலந்து போயிருக்கிற அதன் நச்சுத் தன்மையை அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. அந்தப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றுதான்,மனிதர்களை இழிவுபடுத்தும் சாதியம். அது கண்டே அய்லையா அஞ்சுகின்றார் என்பது  புரிகின்றது.

ஆங்கில மொழியில் எழுதினால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? ஆங்கில இலக்கியங்களில் கடவுள், மத, மூட நம்பிக்கைகள் எல்லாம் எதுவுமே இல்லையா? கண்டிப்பாக இருக்கின்றது. பேய், பிசாசுகளுக்கெல்லாம் அங்கு பஞ்சமே இல்லை. மொழிகளை அறிவியல் மொழி, மூட மொழி என்றெல்லாம் பிரிப்பது சரியன்று. ஆனாலும் ஒன்றே ஒன்றை நாம் ஏற்றே ஆக வேண்டும். ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் உறுதியாகச் 'சாதிய நஞ்சு' இருக்கவே முடியாது.

சாதி என்பதும், அதன் உடன் விளைவாகத் தோன்றிய தீண்டாமை என்பதும், இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த சில நாடுகளிலும் மட்டுமே உள்ள ஒழிக்கப்பட வேண்டிய தீமைகள். அதனை ஒழிக்க வேண்டும் என்ற  வெளிப்பாடே அய்லையாவின் நேர்காணலில் வெளிவந்துள்ளது என்று கொள்ளலாம்.



பல ஆண்டுகளுக்கு முன்பு, அய்யா பெரியார், வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம்கூட ஆங்கிலத்திலேயே  பேசுவோம் என்று கூறியது இதே கோபத்தின் வெளிப்பாடுதான்.

பெரியாரின் நோக்கமும், அய்லையாவின்  நோக்கமும்  மொழியை ஒழிப்பதன்று; சாதி இழிவை ஒழிப்பதுதான். 'ஓங்கிச் சொல்லுதல்' என்று இவற்றைக் கொள்ளலாம். இது ஒரு 'அறச் சினம்.' இதனைத்தான் சமஸ்கிருதத்தில் 'தார்மீகக் கோபம்' என்று நாம் கூறிப் பழகியுள்ளோம்.

Wednesday, August 07, 2013

இடஒதுக்கீடு: வேலைவாய்ப்பு அல்ல, அதிகாரப்பகிர்வு

இடஒதுக்கீடு: வேலைவாய்ப்பு அல்ல, அதிகாரப்பகிர்வு


வி.பி. சிங்







சாதி அமைப்புதான் நாம் வைத்திருக்கும் மிகப் பெரிய இடஒதுக்கீடு. எல்லாமே முறையாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஒரு பிரிவினர்தான் ஆள வேண்டும்; ஒரு பிரிவினர்தான் அர்ச்சகராக வேண்டும்; ஒரு பிரிவினர் வியாபாரம் செய்ய வேண்டும்; மற்ற பிரிவினர் அடிமை வேலைகளைச் செய்ய வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த சமூக அமைப்பாக இருந்தது. ஒரு பார்ப்பனர், கடினமான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்த வேண்டியதில்லை. தற்பொழுது இந்த நிலைமைகளில் மாற்றங்கள் வரத் தொடங்கி இருந்தாலும், இதற்கு முன்பு அவ்வாறு இருந்ததில்லை. சாதி அமைப்பு முறை உச்சகட்டத்தில் நடைமுறையில் இருந்தபோது, யாருமே மற்றவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய முடியாது.



அதற்குப் பிறகு சாதிகளுக்கிடையே மேலும் உட்பிவுகள் ஏற்படுத்தப்பட்டன. நீங்கள் ஒரு நாவிதராக இருந்தால், நீங்கள் ஒரு நாவிதருக்குரிய வேலையைத்தான் செய்ய வேண்டும்; நீங்கள் பொற்கொல்லராக இருந்தால், பொற்கொல்லருக்குரிய வேலையைத்தான் செய்தாக வேண்டும். நீங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யச் சொன்னால், "அது என்னுடைய வேலை அல்ல; அவரைச் செய்யச் சொல்லுங்கள்' என்று சொல்வார்கள். சாதி அடிப்படையில் அனைத்து வேலைகளும் பல்வேறு பிரிவினருக்கும் பிரித்தளிக்கப்பட்டன. இது, சமூகத்தில் சீர்கேடுகளை உருவாக்கியது. இந்து சமூகம் விலக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகமாக ஆகிவிட்டது. ஒன்றிணைந்த சமூகமே நாட்டைப் பலப்படுத்தும். ஆனால், நம் நாட்டின் நிலை வேறாக இருந்தது.



பல்வேறு நிலைப்பட்ட வெறுப்புகளின் அடிப்படையில் இந்தச் சமூகம் அமைந்திருந்தது. தலித் மக்கள் மிக அதிகளவுக்கு வெறுக்கப்பட்டார்கள்; மற்றவர்கள் சகித்துக் கொள்ளப்பட்டவர்களாக இருந்தார்கள். "தாகூர்'கள் மரியாதைக்குரியவர்களாகவும், பார்ப்பனர்கள் வணங்குதற்குரியவர்களாகவும் கருதப்பட்டனர். இதன் அடிப்படையில் மாபெரும் அநீதிகள் நடந்ததற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். நம்மிடையே ஏராளமான "ஏகலைவன்'கள் உண்டு. இந்நிலையில்தான் தற்பொழுது திறமை என்றொரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்: 80 சதவிகித மக்களை சாதியின் பெயரால் சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட, மிகப் பெரிய திறமைக்கெதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? இந்தியாவில் ஜவகர்லால் நேரு, இடஒதுக்கீட்டுக்கான அடிப்படையை நிறுவினார். அதன் பிறகு மொரார்ஜி தேசாய் வந்தார்; "ஜன்சங்' அவருடன் இருந்தது; வாஜ்பாயும், அத்வானியும் அவருடன் இருந்தனர். அவர்கள்தான் மண்டல் குழுவை நியமித்தனர். இறுதியில் ஒரு சுவர் உருவாக்கப்பட்டது. நான் மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அந்தச் சுவர்களின் மீது கூரையை அமைத்தேன். அதன்பிறகு, "நீ என்ன செய்திருக்கிறாய் தெரியுமா?' என்று எல்லோரும் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். ஆனால், அதற்குப் பிறகு வாஜ்பாய் இன்னொரு படி மேலே சென்று, மேலும் சில அறைகளைக் கட்டினார். தற்பொழுது அர்ஜுன் சிங் அதில் பொருட்களை இட்டு நிறைவு செய்து வருகிறார். இது நீண்ட கால நடைமுறையின் ஒரு பகுதியாகும்.



இத்தகைய நடைமுறையில் ஒவ்வொரு நிலையிலும் கடும் எதிர்ப்புகள் காணப்பட்டன. ஆனால், பணக்காரர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தரமான கல்வி குறித்து யாரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிப்பது இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே தரமான கல்வியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவர்கள் நிரந்தரமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உறுதியை நாம் அளிக்கிறோம். இத்தகையோர் அதிகாரத்திற்கு வந்தால், என்ன மாதிரியான திட்டங்களை உருவாக்குவார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். அய்.அய்.டி.யையும், அய்.அய்.எம். களையுமே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்நிறுவனங்களில் எல்லாம் யார் படிக்கிறார்கள்? மிக அதிகளவு கட்டணம் செலுத்தக்கூடிய பணக்கார வீட்டுக் குழந்தைகள்தான் இந்நிறுவனங்களில் படிக்கிறார்கள். இத்தகைய நடைமுறையில், திறமைக்குக் குந்தகம் ஏற்படுவதை எதை வைத்து ஈடுகட்ட முடியும்? திறமை பாழாகும் இத்தகைய இடஒதுக்கீடு குறித்து யாரும் பேசுவதில்லையே! இத்தகைய போக்கு, உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, ஆரம்பக் கல்வி நிலையிலிருந்தே தொடங்கி விடுகிறது. தரமான கல்வி அளிக்கும் பணக்காரப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது, பெற்றோர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் நிலை ஒன்றும் ரகசியமானதல்ல. அரசின் கல்விக் கட்டுமானம் மிக மோசமான நிலையில் உள்ளது.



இங்கிலாந்தில் உள்ள இணக்கமான பள்ளிகளின் தத்துவம்தான் இதற்கான பதிலாக இருக்கும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பணக்கார, ஏழை, வட்டார அளவிலான குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒரேவித கல்வி அளிக்கப்படுகிறது. இத்தகைய இணக்கமான பள்ளிகளைப் போன்று இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஒரேவித தரத்தையும், பாடத்திட்டத்தையும் பின்பற்ற வேண்டும். தேவை ஏற்பட்டால், அரசு மானியங்கள் வழங்க வேண்டும். இதை அரசு உறுதி செய்யும் நிலையில், தொடக்கப்பள்ளியிலிருந்தே கல்வியில் சீர்மை கடைப்பிடிக்கப்பட்டால், இட ஒதுக்கீட்டுக்கான தேவையே இருக்காது. ஆனால், இதற்கு மாறாக தொடக்க நிலையிலிருந்தே பணக்காரர்களுக்கான இடஒதுக்கீடுதான் நீடித்து வருகிறது. இதில் ஒரு ஏழையின் குழந்தை எப்படி போட்டிப்போட முடியும்?



நீங்கள் ஒரு குழந்தையின் தொடக்க நிலையிலிருந்தே அதை அநியாயமாகப் பின்தங்கி இருக்க வைத்துவிட்டு, அதற்குப்பிறகு திறமை குறித்து அக்குழந்தைக்கு எதிரான வாதத்தையும் முன்வைக்கின்றீர்கள். நம்முடைய தென்னிந்திய மாநிலங்களில் இடஒதுக்கீடு உள்ளது. இங்கு எந்தவிதத் தகுதியும் குறைந்துவிடவில்லையே! வளர்ச்சிக்கான திறமையை அனுமதிப்பதுதான் திறமைக்கு ஆதரவான முயற்சி. கடந்த காலங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு, வாய்ப்புகளை வழங்குவதுதான் திறமைக்கு ஆதரவான செயல். இது திறமைக்கு எதிரானது அல்ல. தென் மாநிலங்களில், திறந்த போட்டியில் போட்டியிடும் ஒரு மாணவர் மருத்துவக் கல்லூரியில் 81 சதவிகிதம் பெற்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு மாணவர் 79 சதவிகிதம் பெற்றால், திறமை போய்விடும் என்ற கேள்வி எங்கே எழுகிறது? பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே இடஒதுக்கீட்டுப் பிரிவினரிடையே தானே போட்டி ஏற்படும்.



குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். உற்பத்தியை அதிகரிப்போம். இரட்டிப்பு வேளை பணி செய்வோம். உண்மையில், சிறுபான்மை நிறுவனங்களைப் போல, பிற்படுத்தப்பட்ட மக்களும் தங்களுடைய நிறுவனங்களைத் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதிகளவில் நிறுவனங்கள் இருந்தால், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் வரும் மாணவர்களிடம் தேர்ந்த மனித ஆற்றல் குறைவதற்கு வாய்ப்பு இருக்காது.



இடஒதுக்கீட்டினால் சாதி அடையாளங்கள் நிரந்தரமாக நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. மண்டல் குழு அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை நான் நினைவு கூர்கிறேன். இத்தகைய தீர்ப்புகளை யாருமே படிப்பதில்லை. ஒருவர் பிறப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டால், அவருக்கான நிவாரணம் பிறப்பின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று அத்தீர்ப்பு சொல்கிறது. இல்லை எனில், நீங்கள் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பீர்கள்? எனவே, இடஒதுக்கீடு என்பது உள்ளபடியே சாதியத்தை ஆதரிப்பதாக ஆகாது. ஏனெனில் நிவாரணம் அளிக்க, பாதிப்பு எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.



என்னைப் பொறுத்த அளவில், அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளவற்றை மட்டும்தான் நாம் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சிலருக்கு எதிர்வினையான அரசியல் விளைவுகள் ஏற்படும் எனில், அது இயல்பானது. நான் எல்லா இடங்களிலும் சொல்வது இதுதான். நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால், மக்கள் வாக்களிக்கச் செல்லும்பொழுது அவர்கள் விவசாயிகளை, தொழிலாளர்களை, கைவினைஞர்களை மறந்து விடுகிறார்கள். தங்கள் சாதிகளை மட்டுமே நனைவில் கொள்கிறார்கள். "நான் என்னுடைய ஜாதிக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என்ற போக்கு, வளர்ச்சியின்மைக்கு வழிவகுத்துவிட்டது.



மண்டல் குழு பரிந்துரைகள் பொதுவாக சொல்லப்படுவது போல சாதியமயமானது அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்திலும், பீகாரிலும் "குர்மி' என்ற சாதி பிற்படுத்தப்பட்ட சாதியாகும்; ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அல்ல. வடமாநிலங்களில் "சத்யரின் முன்னேறிய பிரிவினர். ஆனால், குஜராத்தில் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள். எனவே, மண்டல் குழு அறிக்கை, மேல் மற்றும் அடித்தட்டு சாதிகள் என்ற அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்தப்படவில்லை. பொருளாதார மற்றும் பிற அளவுகோல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள், மண்டல் குழு அறிக்கையைப் படிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.



ஒரு குறிப்பிட்ட சமூகம் பிற்படுத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்று நிறுவுவதற்கு மண்டல் 36 அளவு கோல்களை வைத்துள்ளார். அதில் பொருளாதார அளவுகோலும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் எத்தகைய வீட்டில் வசிக்கிறது நல்ல வீடா, குடிசை வீடா; சுய வேலைவாய்ப்புகளை யார் உருவாக்குகிறார்கள் சந்தைக்கான பொருட்களை யார் உற்பத்தி செய்கிறார்கள்; கல்வித் தகுதி ஆகியவை குறித்தும் இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவு, ஒரு குறிப்பிட்ட சாதி நாட்டின் ஒரு பகுதியில் இடஒதுக்கீடு கோருபவையாகவும், அதே சாதிக்குப் பிற பகுதியில் இடஒதுக்கீடு தேவையற்றதாகவும் இருக்கிறது. காழ்ப்புணர்வினால் யாருமே மண்டல் குழு அறிக்கையைப் படிக்கத் தயாராக இல்லை. அவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள்.



இடஒதுக்கீடு என்பது அதிகாரப்படுத்துவது. மண்டல் குழு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதன் உண்மையான நோக்கம், வெறும் வேலைவாய்ப்புகளை அளிப்பது அல்ல. அதன் உண்மையான நோக்கம் ஆட்சி நிர்வாகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களை பங்கேற்க வைப்பதும் அதிகாரம் அளிப்பதும்தான். அது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நான் சமூகப் புரட்சி என்பேன். பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம்வரை, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினடமிருந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு, அமைதியான அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவேதான், நான் இதை சமூகப் புரட்சி என்கிறேன். ஆதிக்க சாதியினர் இத்துணை நூற்றாண்டுகளாகச் செய்தது என்ன? 80 சதவிகித இந்தியாவை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.



தமிழில் : அமிழ்தினி

நன்றி : 'தெகல்கா'





Sunday, August 04, 2013

நதியோடும் பாதையில்...(6) - இடது சாரிகளும் ஈழச்சிக்கலும்



 அண்மையில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.  எங்கள் பேச்சு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துத் திரும்பியது. அவர் சொன்ன ஒரு செய்தி, ஓரளவு நாம் அறிந்ததுதான் என்றாலும், கம்யூனிஸ்ட்களின் மீது இருந்த கடைசி நம்பிக்கையையும் போக்கி விடுவதாக இருந்தது.

எத்தனை அவமானங்களுக்கு உள்ளானாலும், வரும் தேர்தலிலும் அ,தி.மு.க.வை ஆதரிப்பதுதான் அவர்களின் மேலிட முடிவாம். காங்கிரஸ், பா.ஜ.க., மம்தா தவிர்த்த மூன்றாவது அணியை ஏற்படுத்துவதும், வெற்றி பெற்றால்(?), முலாயம் சிங் அல்லது ஜெயாவை உயர் பதவிக்கு முன்மொழிவதும் அவர்கள் திட்டமாம். தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. எதிர்ப்புக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பார்களாம்.


 தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் ஆகியன ஈழச் சிக்கலை, தேர்தல் வரும் நேரத்தில் முழு மூச்சுடன் முன்னெடுக்கப் போகின்றனராம்.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே ஒழித்துக் கட்டிவிடுவது அவர்களின் நோக்கமாம்.

சரி, ஈழப் பிரச்சினையில் உங்கள் நிலை என்ன என்று கேட்டேன். எங்கள் நிலை எப்போதும் போலத்தான் என்றார் நண்பர். 'எப்போதும் போல' என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்தானே? இதோ அவர்களின் கட்சி ஆவணங்களிலிருந்து சில செய்திகளைப் பார்ப்போம்.

2012 ஏப்ரலில் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் பேரவைக் கூட்டத் தீர்மானம்:
"The CPI(M) stands for a united Sri Lanka in which the Tamil minorities can live in peace and harmony with the majority Sinhala community"

(பெரும்பான்மையான சிங்கள சமூகத்தோடு, சிறுபான்மையினரான தமிழர்கள் அமைதியாகவும், இணக்கமாகவும் சேர்ந்து வாழக் கூடிய ஒன்றுபட்ட ஸ்ரீ லங்கா என்பதே சி.பி.எம். கட்சியின் நிலைபாடு ஆகும்.")

இன்றுவரை, சி.பி.எம். கட்சி அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. தனித் தமிழ் ஈழம் என்னும் கோட்பாட்டை அவர்கள் ஒருநாளும் ஏற்பதில்லை.  அது மட்டுமின்றி, ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு போன்றனவற்றைக் கூட அவர்கள் மறுக்கின்றனர். 27.03.2013 அன்று வெளியான, தமிழ் மாநில சி.பி.எம். கட்சியின் அறிக்கை கீழ் வருமாறு கூறுகின்றது.

            "Demanding referendum on the demand for a separate eelam or announcing that Sri Lanka is not to be regarded as a friendly country will not only not help solve the Sri Lankan Tamil issue. It will in fact complicate the issue further."

             "The immediate task before us today is not to demand an international inquiry into the war crimes committed by the Sri Lankan forces." 

(தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பைக் கோருவதோ, ஸ்ரீ லங்காவை நம் நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ அவர்களின் சிக்கலைத் தீர்க்க உதவாது. உண்மையில், அது மென்மேலும் சிக்கலைக் கூட்டும்.)

(ஸ்ரீ லங்கா ராணுவம் இழைத்த போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைக் கோருவது, நம் முன் உள்ள உடனடிப் பிரச்சினை அன்று.) 


கட்சியின் அறிக்கை மூன்று செய்திகளைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றது.
(1) பொது வாக்கெடுப்பு தேவையில்லை
(2) ஸ்ரீ லங்கா நம்முடைய நட்பு நாடுதான்
(3) போர்க் குற்றங்களை விசாரிப்பது உடனடித் தேவை இல்லை.

போர்க் குற்றங்கள் பற்றிக் குறிப்பிடும்போது கூட, அரசு இழைத்த போர்க் குற்றங்கள் என்று கூறாமல், ராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் என்று குறிப்பிடும் சி.பி.எம்.மின் 'நேர்மையை' என்னென்பது! (அண்ணன் வைகோ அவர்கள் கூட, தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் தடை விதிக்கப்பட்டால், அரசைக் கண்டிப்பார்.  அ.தி.மு.க. ஆட்சி தடை விதித்தால், காவல் துறையைக் கண்டிப்பார்.)

இலங்கை நம் நட்பு நாடு என்றும், ஒன்றுபட்ட இலங்கையே எங்கள் நிலைப்பாடு என்றும், பொது வாக்கெடுப்பு கூடத் தேவையில்லை என்றும், சர்வதேச வாக்கெடுப்புக்கு இப்போதென்ன அவசியம் என்றும் அறிக்கை விடும் சி.பி.எம். கட்சியுடன், தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களால் இணக்கமாகச் செல்ல முடிகிறது.அவர்களுக்கு எதிராகவோ, அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணிக்கு எதிராகவோ எந்தச் சீமானும் இடி முழக்கம் செய்வதில்லை. 

 1983 தொடங்கி, தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று மாற்றமில்லாமல் ஒரே குரலில் ஒலித்துவரும் தி.மு.க.வும், போர்க் குற்றங்களின் மீது அனைத்துலக நாடுகளின் புலனாய்வைக் கோரும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று உரத்த குரலில் கூறும் டெசோவும் மட்டுமே இங்கு எதிரிகளாகக் காட்டப்படுகின்றனர்.

இங்குள்ள தமிழ்த் தேசியத் தலைவர்கள்,  செந்தமிழன்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் சி.பி.எம்.மை எதிர்ப்பதில்லை. என்ன நியாயம் இது?    

 இந்தியப் பொதுவுடமைக் கட்சின் (சி.பி.ஐ) நிலைப்பாடும் ஏறத்தாழ அதேதான். அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, சென்னையில் நடைபெற்ற மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தின்போது மிக ஆவேசமாகப் பேசினார். தனி ஈழம் என்றெல்லாம் முழங்கினார். ஆனால் அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு இல்லை. கட்சிக்கு வேறு, மாணவர்கள் முன்னால்  வேறு என்று 'தந்திர உத்தி' (tactics) எல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள். அதனை இரட்டை நிலை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.  கோபப்படுவார்கள் - அது தந்திர உத்தி அவ்வளவுதான்.



அதே இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர்,  20.03.2013 அன்று புது தில்லியில், நாடாளுமன்ற அவைத் தலைவர் மீரா குமார் கூட்டிய கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஈழப் பிரச்சினைக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் அது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ன சொன்னாரோ அதனையே அவர்களும் வழிமொழிந்தார்கள்!  இதோ அந்தச் செய்தி:

 "Leader of opposition Sushma Swaraj, however questioned why all parties had been called for the meeting to discuss an issue which strictly is between the Government and the DMK. Communist Party of india leader gurudas dasgupta was of the similar view." 

(அரசுக்கும் , தி.மு.க.விற்கும் மட்டுமே உரிய ஒரு சிக்கலைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்.)

தில்லிக்குப் போனவுடன், ஈழப்  பிரச்சினை, தி.மு.க.வின் பிரச்சினை ஆகிவிடுகிறது. மாணவர்களின் முன்பு பேசும் வேளையில், அது தங்கள் பிரச்சினையாக மாறிவிடுகிறது. 

என்ன ஒரு வேடிக்கை என்றால், காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் மூவரும் நேர் எதிரிகளைப் போல் பலமுறை மோதிக் கொள்வார்கள்.  ஆனால் பல பிரச்சினைகளில் மூவரின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.ஈழச் சிக்கலில் மட்டுமன்று, காஷ்மீர், இட ஒதுக்கீடு, கூடங்குளம்  எனப் பலவற்றிலும் ஒரே கருத்துடைய மூன்று  கட்சிகள் இங்கே அடிக்கடி மோதி கொள்வதுதான் நமக்குப் புரியாத புதிராக உள்ளது! 


நதியோடும் பாதையில்...(7)


தாங்கள் உண்டு, தங்கள் படிப்பு உண்டு என்று இருந்து விடாமல், நம் மாணவர்கள் சமூக அக்கறையோடு தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். இப்போது இரண்டு தளங்களில் தங்கள் ஈடுபாட்டை அவர்கள் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மதுரை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த நந்தினி என்னும் மாணவி, முழுமையான மதுவிலக்கைக் கோரி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கி, ஐந்தாவது நாள் கைது செய்யப்பட்டுள்ளார். 29.07.2013 அன்று, 'சாதியத்திற்கு எதிரான மாணவர்கள்' என்னும் பெயரில், மாணவர்கள் சென்னையில் ஒரு கருத்தரங்கினை நடத்தியுள்ளனர்.


அறிவியல், தொழில்நுட்ப அறிவில் முன்னேறியுள்ள நம் பிள்ளைகள்  அதற்கு இணையாகச் சமூகப் பார்வையும் உடையவர்களாக இல்லையோ என்ற கவலை இருக்கவே செய்கிறது. அந்த ஆதங்கத்தை முறியடிக்கும் வகையில், ஈழ ஆதரவு, மது எதிர்ப்பு, சாதி ஒழிப்பு முதலான சமூகச் சிக்கல்களில் தங்கள் பங்கினை மாணவர்கள் ஆற்ற முன்வந்திருப்பது மிகுந்த ஊக்கம் தருவதாக உள்ளது. அதே வேளையில் இப்போராட்டங்கள் குறித்த நம் பார்வைகள் சிலவற்றையும் நாம் பதிவு செய்வதில் தவறில்லை.

எந்தப் போராட்டத்திற்குப் பின்னும் சில பின்புலங்கள் இருக்கவே செய்யும். 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின்புலத்தில் தி.மு.க. ஊட்டிய உணர்வும், காட்டிய ஆதரவும் இருந்தன. அதனைப் போல இன்றைய மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னாலும் சில அரசியல் கட்சிகள் இருக்கலாம். அதில் ஒன்றும் பெரிய பிழையில்லை. ஆனால் அவ்வாறு பின்னால் நின்று மாணவர்களை இயக்கும் சக்திகளின் நோக்கம், போராட்டக் காரணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி வேறு மறைக்கப்பட்ட உள்  நோக்கங்களுக்காக அச்செயல் அமைந்துவிடக் கூடாது.

மாணவர்கள் நடத்திய ஈழ ஆதரவுப் போராட்டத்தின் பின்புலத்தில் இருந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், மறைக்கப்பட்ட ஓர் உள்நோக்கம் இருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தி.மு.கவைச் சேர்ந்த அல்லது தி.மு.க.வை ஆதரிக்கக் கூடிய எவரும் மாணவர்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருந்தனர்.

அதன் காரணமாக, ஈழ ஆதரவுப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் பெரும் ஆர்வத்தைக் காட்டவில்லை. மாணவர்கள் ஒருங்கிணைக்கப்  படவில்லை. ஈழ வரலாறு குறித்தோ, உலக நாடுகளின் அழுத்தத்தை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பது குறித்தோ எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்லப்படவில்லை.

பின்னால் நின்று இயக்கியவர்களின் உண்மையான நோக்கம் ஈழ ஆதரவு என்பதாக அல்லாமல், தி.மு.க. எதிர்ப்பு என்பதாக இருந்தது என்பதுதான் அதற்கான காரணம்.  இவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்கின்றவர்கள் ஈழத்திற்கும் நல்லது செய்யவில்லை, மாணவர்களுக்கும் நல்லது செய்யவில்லை என்பதைக் காலம் உணர்த்தும்.

இன்று, மாணவி நந்தினி, மதுவிலக்கிற்காகப்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையிலும் சில எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.    

எந்த ஒரு போராட்டமானாலும், அதன் நோக்கம், வழிமுறை ஆகிய இரண்டும் கவனிக்கப்பட வேண்டும். நந்தினியின் போராட்ட நோக்கம் சரியானதே. குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் பல இங்கே சீரழிந்து போகின்றன. எனவே அத்தீமையை  எதிர்த்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் அதற்காக அம்மாணவி தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை நடைமுறைக்கு உகந்ததாகத் தோன்றவில்லை.

அறவழிப் போர் என்பது சரிதான். ஒருநாள் பட்டினிப்போர் என்பது கூட, கவன ஈர்ப்பு என்ற முறையில் தவறில்லை. ஆனால் வாழ வேண்டிய பிள்ளைகள் காலவரையற்ற பட்டினிப்போரை மேற்கொள்ள வேண்டியதில்லை. இப்படிச் சொன்னவுடன், போராட்டத்தை மழுங்கடிக்கின்றோம் என விமர்சனம் எழும் என்பதை அறிந்தே இதனை எழுதுகின்றேன்.

ராஜீவ் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் தமிழர்கள் மூவர் உயிர்களைக் காக்க அன்று நடைபெற்ற காலவரையற்ற பட்டினிப் போரை நாம் அனைவரும் ஆதரிக்கவே செய்தோம். ஈழத்தில் ஓர் இன அழிப்பு நடைபெறவிருந்த நேரத்தில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மேற்கொண்ட காலவரையற்ற பட்டினிப்போரையும் ஏற்கவே செய்தோம். அவையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என்ற காரணத்திற்காக அப்படி ஒரு போராட்டம் தேவைப்பட்டிருக்கலாம்.

மதுவிற்கு எதிரான போராட்டத்தை அப்படிச் சொல்ல முடியாது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு உள்ள ஒரு தீய பழக்கத்தை இரண்டு மூன்று நாள்களில் நிறுத்திவிட முடியாது. நீண்ட தொடர் இயக்கங்களின் மூலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திச் சிறிது சிறிதாக மாற்றவேண்டிய பழக்கம் இது.நெடுநாள் சிக்கல்களுக்கு எல்லாம் இப்போராட்ட முறை பயன் தராது. இவற்றை எதிர்த்து நாம் வாழ்ந்து போராட வேண்டுமே அல்லாமல், மாண்டு மடிந்துவிடக் கூடாது.

இந்த உண்மைகளை எல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லாமல், போராட்டப் பந்தலில் நின்று நாங்கள் இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று தலைவர்கள் பேசுவது ஏற்புடையது அன்று. காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டுள்ள 20 வயது மாணவியை ஊக்கப்படுத்தும் எந்தத் தலைவரும், அதுபோன்ற ஒரு போராட்டத்தை அதே காரணத்திற்காக மேற்கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.


பெரியவர் சசி பெருமாள் அத்தகைய போராட்டத்தில் ஈடுபட்ட போதும் கூட, பூரண மதுவிலக்கைத் தன் கோரிக்கையாக வைக்கவில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. பூரண மதுவிலக்கு உடனடியான நடைமுறைச் சாத்தியம் அற்றது.

இவையெல்லாம் எல்லோருக்கும் தெரியும். எனினும் இங்கே ஒரு திசை திருப்பும் நாடகம் நடந்து கொண்டுள்ளது. அரசியலற்ற போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் போராட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும். இன்று தமிழ்நாட்டில் சாதி வெறி திட்டமிட்டு வளர்க்கப் படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக்கிடக்கின்றது. விலைவாசி விண்ணைத் தொடுகின்றது. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்களும், மாணவர்களும் இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதற்கும் மதுவிலக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைப்பது நல்ல வாய்ப்பாக அமையும். இந்த உள் அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் உணர்ச்சி வயப்பட்டு போராட்டங்களில் இறங்கிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்!

சாதியத்திற்கு எதிரான மாணவர்கள் என்னும் அமைப்பு இன்றைய காலத்தின் தேவை. இந்த அமைப்பிற்குப் பின்னும் ஒரு கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - இருப்பதை உணர முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலையும் அக்கருத்தரங்கில் இருந்தது. இந்த உண்மைகளை நாம் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அது தனி ஒரு கட்சிக்கு எதிரானது இல்லை. அக்கட்சி ஊட்டிவரும் சாதி வெறிக்கு மட்டுமே எதிரானது. எனவே அந்த அமைப்பு தேவையான ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.

எனினும் அவ்வமைப்பின் பொறுப்பாளர்களாக இருக்கும் மாணவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் மோதலை உருவாக்கும் ஓர் அமைப்பாக அது ஆகி விடாமல், ஜனநாயக வாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும் இடைப்பட்ட முரண்பாட்டை வெளிப்படுத்தும் அமைப்பாக அதனை வளர்த்திட வேண்டும். அப்படிச் செய்தால், சரியான காலகட்டத்தில், மாணவர்கள் செய்திருக்கும் சரியான செயலாக அது வரலாற்றில் நிலைக்கும்.
ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... 'ஃபாதர் இமானுவேல்’. 


கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி. தன் வலி மிகுந்த‌ எழுத்தினால், ராஜதந்திர‌ப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர் மேற்கொள்ளும் 'டிப்ளமேட்டிக்’ வேலைகளால், ராஜபக்ஷேவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் ஃபாதர் இமானுவேல். 80 வயதைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றில் வசித்து வருகிறார்... 

''எப்படி இருக்கிறீர்கள்... உங்களைக் கண்டுபிடிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே!'' 

''ஏதோ இருக்கிறேன்! எம்முடைய புலம்பெயர் வாழ்வும், பாதுகாப்பின்மையும், நீதிக்கான போராட்டமும், தொடர் செயல்பாடுகளும் பெரும்பாலும் எம‌து இருப்பை மறைத்தே வைக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்டது. நான் கிறிஸ்துவ மதத்தில் ரோமிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய‌ப் பதவிகளை வகித்தவன். கிழக்காசிய நாடுகளின் கிறிஸ்துவ மதப் பொறுப்பாளராக இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 

'இலங்கை’ எமது தாய்நாடு என்றால், 'இந்தியா’ எமது தந்தை நாடு. ஆனால், ராஜ பக்ஷேவின் அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் என்னைப் 'புலி ஃபாதர்’ எனத் தொடர்ந்து தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். இதனால் இலங்கை, இந்தியாவுக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனாலேயே எனது நடமாட்டங்கள் சுருங்கிவிட்டன. உடல் மூப்பு காரணமாக, சுகவீனமும் அவ்வப்போது என்னை முடக்கிப் போட்டு விடுகிறது!'' 

'''புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அமைப்புகளும் தங்கள் நலனில் அக்கறைக் காட்டுவது இல்லை’ என்ற குரல்கள் ஈழத்திலிருந்து ஒலிக்கின்றனவே?'' 

''புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமிழ் மக்களும் அரசியல் பேசுவது மட்டுமல்ல; தாயகத்தில் வாடும் மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. செல்வாக்கு உள்ளவர்கள், அங்கு உள்ள நமது உறவுகளைக் குடும்பம் குடும்பமாகத் தத்து எடுக்க வேண்டும். சர்வ சாதாரணமாக செலவழிக்கும் ஐந்து அல்லது பத்து பவுண்ட்களைக் கூட ஈழத்துக்கு அனுப்பலாம். 'ஈழம்’ எனும் வேருக்கு நம்முடைய சிறு உதவிகள்தான் நீர் வார்க்கும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டும்!'' 

''இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் சாதி பிரச்னைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?'' 

''உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960-களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்பு பேசினாலும், நான் அவரை பெரிதும் மதிக்கிறேன். 

இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் சாதிக்கு எதிராக தீவிரமானப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள் கூட ஈழத்தைச் சின்னா பின்னமாக்கி விடும் என்பதை எந்த நொடியும் மறந்து விடாதீர்கள்!'' 

''தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் ஆரம்பித்த அஹிம்சைப் போராட்டம், அதன் பிறகு 30 ஆண்டு கால‌ஆயுதப் போராட்டம் ஆகிய அனைத்தும் முள்ளிவாய்க்காலில் ஒரு தேக்கத்தை அடைந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டு களாக உங்களைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் டிப்ளமேட் லாபி, பொலிட்டிகல் நெட்வொர்க்கிங் ஆகியவை ஈழப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுமா?'' 

''சிங்களப் பேரினவாதத்தின் முன் தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டமும், புலிகளின் ஆயுதப் போராட்டமும் கை கொடுக்கவில்லை. இது, அநீதிகள் நிறைந்த உலகம். அதுவும் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, புரட்சிப் போராட்டங்களின் மீது சர்வதேசத்தின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. எனவே, இனி அரசியல் போராட்டமே எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம். 

எங்களுடைய டிப்ளமேட் செயல் பாடுகளின் சோதனை முயற்சிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நல்ல பலன் அளித்தது. அதன் வெளிப்பாடே அமெரிக்காவின் இரண்டு தீர்மானங்களும். கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, முன்னேற விரும்புகிறோம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் இருந்து எம்மைத் திருத்திக்கொள்கிறோம்; மன்னிப்பும் கேட்க விரும்புகிறோம். 

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நார்வே எனப் பல நாடுகள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. எங்களின் இந்தச் செயல்பாடுகளுக்கான விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!'' 

''இலங்கையின் வட பகுதிகளில் நடைபெறவிருக்கும் மாகாணத் தேர்தலில், ஈழ அரசாங்கத்தின் அதிகார அழுத்தத்தை மீறி தமிழர்கள் வெற்றி பெறுவார்களா?'' 

''தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இந்தத் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் அனைவருக்கும் வாக்குரிமை, முறையான வாக்குப் பதிவு எனத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால், தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். ராஜபக்ஷே அரசின் மீதான கோபத்தையும், தமிழர்களின் தாகத்தையும் மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்!'' 

''இந்தியா முன்மொழிந்த 13-வது சட்டத்திருத்த மசோதாவை இலங்கை ஏற்க மறுக்கிறது. அதேவேளையில் ஈழத் தமிழர்களும் அதிருப்தி வெளிப்படுத்துகிறார்கள். 13-வது சட்டத் திருத்தத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''கடந்த சில தசாப்தங்களாக‌ தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப் புலிகளையும் அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்த பிறகு, பான் கீ மூனுக்கும் மன்மோகன்சிங்குக்கும் ராஜபக்ஷே பல வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், அவை எவையுமே செயல்வடிவம் எடுக்கவில்லை. லேண்ட் பவர், போலீஸ் பவர் என எதனையும் இன்று வரை வழங்கவும் இல்லை. 

இந்த நிலையில் எங்களைப் பொறுத்தவரை 13-வது சட்ட திருத்தம் முடிவும் அல்ல; தொடக்கமும் அல்ல. அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இலங்கை அரசின் நரித்தந்திர வேலைகளால் இந்தியாவுக்குப் பெரும் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதிகள் தமிழ்மக்களுக்குக் குறைந்தபட்ச நீதியைக்கூட வழங்க மாட்டார்கள்!'' 

''நவம்பர் மாதம் இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. 'மாநாட்டின் முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே காமன்வெல்த் நாடுகளின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக’ வதந்திகள் உலவுகின்றன... அது உண்மையா?'' 

''அந்த நிலைமை மட்டும் ஒருபோதும் நேர்ந்துவிடக் கூடாது. அது இப்போதைய ஈழத் தமிழர்களின் நிலையை முற்றிலும் மோசமாக்கி விடும். இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை அதன் உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும். இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது. 'ஒருவேளை நீங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றால், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் நீங்களும் பங்கேற்றதற்கு ஒப்பாகும்’ என கனடாவிடம் விளக்கினோம். 

எங்கள் வார்த்தைகளை செவிமடுத்து, 'கனடா அந்த மாநாட்டில் பங்கேற்காது’ எனச் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்களும் எமக்குச் சாதகமான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்!'' 

''நீங்கள் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் உண்டு. பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது எந்த அளவுக்கு உண்மை?'' 

''1986-ல் நான் யாழ்ப்பாண குருமடத்தில் பேராசிரியராக இருந்தபோது ஒருமுறை பிரபாகரனைச் சந்தித்தேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு என்னை அவர் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதும் சந்தித்தேன். அந்த இரண்டு சந்திப்புகளுமே எமது தாயகம் குறித்தும், மக்களின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதிலேயே மையம் கொண்டது. அதன் பிறகு, நான் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டேன். 

'பிரபாகரன் இருக்கிறாரா?’ என்ற கேள்வி எமக்கு இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. அவர் பெயரைச் சொல்லி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபாகரனைக் காட்டிலும், அவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்!'' 

- இரா.வினோத் 
- நன்றி - ஆனந்த விகடன் (07 Aug, 2013)

Wednesday, July 24, 2013

நதியோடும் பாதையில்...(5)

தமிழறிஞர்களின் அடக்கமும் ஆர்ப்பரிப்பும்



தமிழறிஞர் தமிழண்ணல், 20.07.2013 ஆம் நாளிட்ட தினமணியில், 'மொழிக் கொள்கையில் ஏற்பட்ட குழப்பங்கள்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தும், பெரியார், அண்ணா ஆகியோரின் மொழிக் கொள்கை குறித்தும் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழண்ணல், வாழும் தமிழறிஞர்களில் குறிக்கத்தக்க ஒருவர். தமிழ் ஆய்விலும், தமிழ் உணர்விலும் மூத்த முன்னோடி. என் போன்றவர்களுக்கு ஆசிரியராகக் கருதத் தக்கவர். எனினும், அவர் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில மறைப்புகளையும், வெளியாகியுள்ள கருத்துகளுக்கான சில மறுப்புகளையும் நாம் பதிவு செய்தே ஆக வேண்டியுள்ளது.


முதலில் அக்கட்டுரையில் கூறப் பெற்றுள்ள  சில செய்திகளைக் காணலாம்:
                   
"இந்தியை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாநில ஆட்சி கைப்பற்றப்பட்டது. இது ஆங்கிலத்தை ஆதரிக்கும் இயக்கமும் ஆயிற்று."
                 
"ஆரிய மாயையிலிருந்து தமிழரை விடுவிக்க  முயன்ற அண்ணாவும், ஆங்கில மாயையில் தமிழரைச் சிக்க வைக்க வேண்டியவராயினார். இதனால் ஆங்கில மோகம், திராவிட இயக்கத்தில் தொடரலாயிற்று."
                   
"பெரியாரும் ஆங்கிலத்தையே  கல்வி மொழியாக்கப் பெரிதும் வாதிட்டார்."
                   
"ஓர் இந்திய மொழிக்கு அடிமை ஆகாமல் காத்த இது, ,அயல் நாட்டு மொழிக்கு, நம்மை அடிமை ஆக்கிய மொழிக்கு, மீண்டும் அடிமை ஆக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது."

- என்பன போன்ற செய்திகளைத் தன் கருத்தாகக் கட்டுரை ஆசிரியர் வெளியிட்டுள்ளார். இவற்றின் மூலம், ஒரு மறைமுகமான திராவிட இயக்க எதிர்ப்பு முன் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், தினமணி வைத்தியநாத ஐயரும் அதனைத் தன் நாளேட்டில் மகிழ்ந்து வெளியிட்டுள்ளார். 

இக்குற்றச்சாட்டுகள் மிகப் பழையன. தவறான பார்வை உடையன. ஏற்கனவே பலமுறை விடைகளால் முறியடிக்கப் பட்டன. ஆனாலும், திரும்பத் திரும்ப அவை முன்வைக்கப்படும்போது, அவற்றிக்கான விடையை நாமும் எழுத வேண்டியுள்ளது. 

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், இந்திக்கு மாற்றாகத்தான் ஆங்கிலம் நிறுத்தப்பட்டதே அல்லாமல், ஒருநாளும் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் முன் வைக்கப்படவில்லை. அன்று எழுந்த கேள்வி, இந்தியா, ஆங்கிலமா என்பதுதான். இரண்டும் வேண்டாம், தமிழ் போதும் எனச் சொல்லும் சூழல் அன்று இல்லை. இந்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்பிசைவு பெற வேண்டும் என்று அண்ணா பலமுறை கூறியுள்ளார். ஆனால் அதற்கான காலம் அன்று கனிந்திருக்கவில்லை. அதனால்தான் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

திராவிட இயக்கத்தை எப்போதும் குறை சொல்வதில் பேரார்வம் கொண்டுள்ள  தமிழறிஞர்களில் பலர், 1970களில், தனித்தமிழ் இயக்கத் தலைவர்கள் பலரே அக்கருத்தைத்தான் கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்துவதில்லை. 
திரவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், தன் இறுதிக் காலம் வரையில் (1981), இருமொழிக் கொள்கையை ஏற்பவராகவே இருந்தார்.  உலக அறிவு பெற ஆங்கில அறிவு தேவை என்பதே அவருடைய கருத்தாக இருந்தது. 'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' என்னும் தன் நூலில், இந்தியா முழுமைக்கும் ஆங்கிலம், ஆட்சியும், கல்வியும், இணைப்பும் பற்றிய பொது மொழியாக இருப்பது தலை சிறந்த திட்டம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

பாவலரேறு பெருஞ்சித்திரனார், 1970 ஆம் ஆண்டு தான் எழுதியுள்ள 'கோடரிக் காம்புகள்' என்னும் கவிதையில், "அறிவியலை அறிவதற்கும் அகிலமெல்லாம் சுற்றிவரற்கும்" ஆங்கிலமே தேவை என்று எழுதுகின்றார். 1967இல் எழுதிய பாடலொன்றில்,
  
"மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் 
அமிழ்தெனக் கற்க ஆக்கம் பெறுகவே"

என்று தன் கருத்தை அழுத்தமாக எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டுச் சூழல் அவ்வாறிருந்தது என்பதே உண்மை. இப்பாடல் வரிகள் பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு கவிதைத் தொகுதியில் உள்ளன.

பாவாணரையும், பெருஞ்சித்திரனாரையும் யாரும் குறை கூறுவதில்லை. பெரியார், அண்ணா, கலைஞரைக் குறை கூறாமல் இருப்பதுமில்லை. 
.
தமிழ் வழிக் கல்வி பற்றி ஆயிரம் முறை பேசியும், எழுதியும், அறிவுறுத்தியும் பலன் இல்லை என்று கூறிக் கவலைப் படுகின்றார் தமிழண்ணல். ஆனால் 1970 ஆம் ஆண்டே கல்லூரி வரையில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டுவர முயன்ற கலைஞர் பற்றி ஒரு குறிப்பையும் கட்டுரையில் காண முடியவில்லை. 

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பின், முதல்வராக இருந்த தலைவர் கலைஞர், 1970 நவம்பர் 30 அன்று, இனிமேல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழே பயிற்று மொழி என்னும் சட்ட முன்வடிவை முன்மொழிந்தார். அதனை ம.பொ.சி வழிமொழிந்து பேசினார்.  ஆனால் அதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சட்டமன்றத்திலேயே, காங்கிரஸ் உறுப்பினர் விநாயகம், அதனைக் கேலி செய்தார். முதல்வர் கலைஞர் தமிழ் வழிக் கல்விக்காகப் பரிந்து பேசினார். அவ்விவாதங்களை இன்றும் சட்டமன்றக் குறிப்பில் நம்மால் காண முடியும். இன்றைய 'தமிழ்த் தேசியத் தலைவர்' நெடுமாறன் அவர்கள்தான், 10.12.1970 அன்று மதுரையில் மாணவர் மாநாடு கூட்டி, அச்சட்ட முன்வடிவை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாணவர்களைத் தூண்டினார். இவற்றை எல்லாம் யாரேனும் மறுக்க முடியுமா?

பெரியாரின் கல்விக் கொள்கை தவறு என்று தமிழண்ணல் குறிப்பிடுகின்றார். ஆனால் அன்று, தமிழ் வழிக் கல்வியை வரவேற்றுத் தலையங்கம் எழுதியவர் பெரியார்தான். 01.12.1970ஆம் நாளிட்ட 'விடுதலை' நாளேட்டில், 'நமதுகடமை' என்று தலைப்பிட்டு, அதனை வரவேற்று எழுதியுள்ளார். 

இத்தனை உண்மைகளையும் மறைத்துவிட்டு, வைத்தியநாத ஐயரின் விருப்பத்திற்கேற்ப, தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் கட்டுரை எழுதலாமா? சரி போகட்டும், 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ் நாட்டுப் பள்ளிகள் அனைத்திலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்று கலைஞர் அரசு அறிவித்ததே, அதனை எங்கேனும் தன் கட்டுரையில் பேராசிரியர் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அரசு பொறுப்பு ஏற்றவுடன் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அரசு ஆணையே அதுதான் என்கிறார், அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!

பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்ட ஏனோ மனம் வரவில்லை. கண்டிக்க வேண்டியவைகளையேனும் கண்டிக்க வேண்டாமா? ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன், திருவள்ளுவர் படத்தை ஒட்டிகளை (stickers) ஒட்டி மறைத்தார்களே, அச்செயலை எத்தனை தமிழ் அறிஞர்கள் கண்டித்தனர்? இந்தக் கட்டுரையில் கூட, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளைத் திறந்து, மறைமுகமாகத் தமிழ்க் கல்வியை அழிக்கும் முயற்சியில் ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளதே, அதனை எங்கேனும் தமிழண்ணல் கண்டித்துள்ளாரா?

நம் தமிழறிஞர்கள் தமிழை மட்டுமன்று, எந்த ஆட்சியை எதிர்த்து வீராவேசமாகப் பேசலாம், எந்த ஆட்சியை எதிர்த்து வாயைக் கூடத் திறக்கக் கூடாது என்பதையும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்!