Monday, November 30, 2015

தப்பிய இளம் குற்றவாளிகள்

பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 12 பேர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கீழரண் சாலை பாபு ரோட்டில் சமூக பாதுகாப்புத்துறையின் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்றவழக்கில் கைது செய்யப்படும் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இதன்படி, 31 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில், மரியவசந்துரு, தர்மா, முருகன், கதிரவன், ஹரிகரசுதன், திவாகர், முத்துமணி, மணிகண்டன், நாகராஜ், ஆகாஷ், தினேஷ், சதீஸ்குமார்  ஆகிய  12 பேர், குளியலறையின் சன்னல் கம்பிகளை அறுத்து, அகற்றி,  போர்வைகளை கயிறு போல் கட்டி, அதன் வழியாக இறங்கி  நவம்பர் 28 அதிகாலை 3 மணியளவில் தப்பி ஓடியுள்ளனர்.

தப்பியோடியவர்கள், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள்.

இது குறித்து கூர் நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் மன்னர் கொடுத்த புகாரின் பேரில், மாநகர துணை ஆணையர் சசிமோகன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு குறைபாடுகளா? அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களை செய்ய திட்டமிட்ட தப்ப வைக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் முதல் முறையாக ஒரே நேரத்தில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 பேர் தப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments: