Saturday, May 07, 2011

ராஜபக்சேவை நீதிமன்ற கூண்டிலே ஏற்ற இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: சுப.வீரபாண்டியன்

திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை தாங்கிப் பேசிய திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், சமீபத்தில் வெளியான ஐ.நா. அறிக்கையில் இலங்கையில் நடந்த போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வீசிப்பட்டது போன்ற போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது கண்டனத்துக்கு உரியது என்று ஐ.நா. கூறியுள்ளது.


இதன் காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவித்து, அவரை சர்வதேச நீதிமன்ற கூண்டிலே நிறுத்த வேண்டும். இந்திய அரசு ராஜபக்சேவை நீதிமன்ற கூண்டிலே ஏற்ற அனைத்து விதத்திலும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழர்களை நினைவில் கொண்டு ராஜபக்சேவை ஆதரிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.