Wednesday, October 15, 2008

தமிழக தீர்மானம்- சுப.வீரபாண்டியன்

தமிழக தீர்மானம்- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது: சுப.வீரபாண்டியன்

தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


தமிழீழத் தாயக உறவுகளுக்காக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒரு அதிச்சித் தரத்தக்க-

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத்தக்க

ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

இன்னும் இரு வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படவில்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்னும் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புடையதாக அமைந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜய டி ராஜேந்தர், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராதார்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அவர்கள் தமிழர்களே இல்லை என்றார். ஈழ மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றார்.

உடனே இடைமறித்த முதலமைச்சர் கலைஞர், அப்படிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மிக அரிய விளக்கம் ஒன்றையும் கொடுத்தார்.

அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிர்ப்பாக இங்கு வராமல் இருக்கிறார்கள் என்று கருதவேண்டாம். எனக்கு எதிராகத்தான் வராமல் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் வெளியில் இருந்தாலும் நம்மைப் போலவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் எதிராக இருப்பதைப் போலக்காட்டுவது சிங்களவர்களுக்குத்தான் நன்மை பயக்கும் என்று விளக்கம் அளித்தபோது அவருடைய பெருந்தன்மையையும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அவர் கொண்டுள்ள அக்கறையையும் அறிய முடிந்தது.

எனவே முதல்வர் கலைஞர் ஆளும் காலத்திலேயெ தமிழீழம் அங்கு மலரும் நாளும் வந்து சேரும் என்ற நம்பிக்கை இப்போது பலருக்கும் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்றார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

நன்றி புதினம்