Monday, November 30, 2015

அசோக் சிங்கால் காலமானார்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் மறைந்த அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் 89 வயதான அசோக் சிங்காலுக்கு கடந்த 14-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக் சிங்கால் உயிர் பிரிந்தது. 
பின்னர் அசோக் சிங்கால் உடல் டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அசோக் சிங்காலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யவர்தன் ரத்தோர் மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி - பிரகாஷ் ஜவடேகர் உறுதி

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றானது ஜல்லிக்கட்டு, தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் மற்றும் கோயில் திருவிழாக்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனிடையே கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை அகற்ற வேண்டும் என தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நவம்பர் 6ஆம் தேதி அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். ஜல்லிக்கட்டை அனுமதிக்க விரைவில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படும். மேலும் மாட்டுவண்டி பந்தயத்தையும் மீண்டும் நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்ட ரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும். பாரம்பரியமான விளையாட்டுகளை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுவதும் அதையடுத்து உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குவதும் வழக்கமாக இருக்கிறது. எனவே இந்தாண்டு போட்டிகள் நடத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு நடத்தும் போட்டியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

சாதியை அடையாளப்படுத்தும் மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் தங்கள் சாதியை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அவரவர் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக, கைகளில் வண்ண கயிறுகளை கட்டுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, செய்திகளும் ஓரிரு வாரங்களுக்கு முன்பு வெளியாயின.  மாணவர்கள் மத்தியில் சாதீய உணர்வு மேலோங்கி வருவதால், பள்ளிகளில் மோதல் சம்பவங்கள் உருவாகும் நிலை உருவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினையை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழ்நாடு சமூக நீதித்துறை மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. 

விஜயகாந்த் - கோவன் சந்திப்பு

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் 28.11.2015 அன்று சந்தித்தார். 

அப்பொழுது அவர் பாடிய பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்களை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது தேமுதிக இளைஞர் அணி செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ், மக்கள் அதிகார மையம்த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.வழக்கறிஞர் ராஜூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வெற்றிவேல் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தப்பிய இளம் குற்றவாளிகள்

பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 12 பேர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கீழரண் சாலை பாபு ரோட்டில் சமூக பாதுகாப்புத்துறையின் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்றவழக்கில் கைது செய்யப்படும் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இதன்படி, 31 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில், மரியவசந்துரு, தர்மா, முருகன், கதிரவன், ஹரிகரசுதன், திவாகர், முத்துமணி, மணிகண்டன், நாகராஜ், ஆகாஷ், தினேஷ், சதீஸ்குமார்  ஆகிய  12 பேர், குளியலறையின் சன்னல் கம்பிகளை அறுத்து, அகற்றி,  போர்வைகளை கயிறு போல் கட்டி, அதன் வழியாக இறங்கி  நவம்பர் 28 அதிகாலை 3 மணியளவில் தப்பி ஓடியுள்ளனர்.

தப்பியோடியவர்கள், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள்.

இது குறித்து கூர் நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் மன்னர் கொடுத்த புகாரின் பேரில், மாநகர துணை ஆணையர் சசிமோகன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு குறைபாடுகளா? அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களை செய்ய திட்டமிட்ட தப்ப வைக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் முதல் முறையாக ஒரே நேரத்தில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 பேர் தப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவீரர் நாள் - டென்மார்க்

டென்மார்கில்  நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு டென்மார்க்  நட்டில் இரண்டு இடங்களில் எழுச்சியாக நடைபெற்றது Herning  மற்றும் Holbæk ல் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றறது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றலுடன்  தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்தனர்.

Sunday, November 22, 2015

தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது இலங்கை அரசு: விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

இலங்கை சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டு அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குலைக்க வழிவகுக்கும் என்றும், இலங்கை அரசு தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது என்றும் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான பேர் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, தங்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்னைக்கு நவம்பர் 7-ம் தேதிக்குள் தீர்வு காண்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து தமிழ் கைதிகள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், நவம்பர் 7-ம் தேதி வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பதால் கடந்த சில நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒருவர் உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழ் அரசியல் கைதிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக அவர்கள், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்படுத்துவார்களே தவிர, கைவிடமாட்டார்கள். சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் இலங்கை அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்க வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாசர், கார்த்தி, கருணாஸ், மற்றும் பொன்வண்ணன்  ஆகியோர்  21.11.2015 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். 
தேமுதிக இளைஞரணி செயலாளர் திரு எல்.கே. சுதீஷ் அவர்கள் உடனிருந்தார். 
இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.பி. அணையில் மதகு பழுது - வீணான தண்ணீர்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக தொடர்ந்து இரண்டாவதாக நாளாக சுமார் 1000 கன அடி  தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது இதனால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடந்த பத்து நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.  அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை தன் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக முழு கொள்ளளவான 52 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது, இதனால் அதிகாரிகள் அணையில் பிரதான ஏழாவது மதகு வழியாக வெளியேற்றப்பட்ட நீரை நிறுத்த முற்பட்டனர் அனால் மதகு பழுது காரணமாக மூட முடியவில்லை.

இதனால் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் மதகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் இன்னமும்  மதகு சரிசெய்ய முடியாததால் அணையில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் தொடர்ந்து ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது, இதனால் அணையின் நீர்மட்டம் 52 அடியில் இருந்து 50.95 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது - பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் மலேசியவாழ் தமிழர்களிடையே, பிரதமர் மோடி வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் உள்ள நட்பு, வெறும் முகத்தில் மட்டுமே சிரிப்பைக் காட்டும் நட்பு இல்லை என்று கூறினார். திருவள்ளுவரின் "முகநக நட்பது நட்பன்று"  என்ற குறளுக்கேற்ப, இந்திய -மலேசிய நட்பு உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மலேசிய வாழ் இந்தியர்களின் அன்பும், நட்பும் தனது இதயத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையத்திற்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டீப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டீக்கப்பட்டுள்ளது. 8 தமிழர் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இலங்கையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 தமிழர் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீது அப்போதைய ராஜபக்சே அரசு தடை விதித்தது. 


இந்தத் தடையில் தற்போது மாற்றம் செய்துள்ளது சிறிசேன அரசு. தனிநபர்கள் மீதான தடையிலும் மாற்றம் செய்யப்பட்டு, 155 பேர் மீதான தடையும் தளர்த்தப்பட்டுள்ளது. 
பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு, உலக தமிழர் அமைப்பு, கனடிய தமிழர் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் ஆகியவை தடை நீக்கப்பட்ட அமைப்புகளில் சில. இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கம், நாடு கடந்த ஈழத் தமிழ் அரசாங்கம் உள்ளிட்ட மேலும் 8 அமைப்புகள் மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Sri Lankan government by a gazette extraordinary issued on Friday delisted several alleged pro-LTEE Tamil organizations and individuals proscribed by the previous government last year. The previous government on March 21, 2014, delisted 16 organizations and 424 individuals under the UN Act No: 45 of 
1968. The Extraordinary Gazette notification issued by the Secretary to the Defense Ministry on 20 November 2015 replaces the previous notification and bans eight organizations and 155 individuals.
Liberation Tigers of Tamil Eelam (LTTE), Tamil Rehabilitation Organization (TRO), Tamil Coordinating Committee (TCC), World Tamil Movement (WTM), Transnational Government of Tamil Eelam (TGTE), Tamil Eelam Peoples Assembly (TEPA), World Tamil Relief Fund (WTRF) and Headquarters Group (HQ) are continued to be listed as terrorist organizations. Global Tamil Forum (GTF), British Tamil Forum (BTF), National Council of Canadian Tamils (NCCT), Tamil Youth Organization (TYO), World Tamil Coordinating Committee (WTCC), Canadian Tamil Congress (CTC), Australian Tamil Congress (ATC), and Tamil National Council (TNC) have been de-listed.
Sri Lanka's Foreign Minister Mangala Samaraweera in March 2015 said the government will review the proscription of 16 Tamil organizations and over 400 individuals by the previous government.

Thursday, November 19, 2015

லேடி வெல்லிங்டன் கல்லூரி பெயரை மாற்றமுடியாது - உயர் நீதிமன்றம்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெல்லிங்கடன் கல்லூரி பெயரை மாற்றி விட்டு அதற்கு சுதந்திர போராட்ட வீரர் சிங்காரவேலரின் பெயரை வைக்க கோரி கவுதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே, சிங்காரவேலரின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு நினைவில்லம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிங்காரவேலரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டினர். மேலும் வில்லிங்டன் கல்லூரியின் பெயரை மாற்றுவது குறித்து தாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாகவும் தெரிவித்தனர். 

Sunday, November 15, 2015

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவகாலம் டிசம்பர் 24இல் ஆரம்பம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி பூரணைத் தினத்துடன் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தை முன்னிட்டு சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நல்லதண்ணியில் அமைந்துள்ள கிராம சேவகர் அலுவலுகத்தில் நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான சிவனொளி பாதமலை யாத்திரைப் பருவக் காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி காலை சுபவேளையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பவனி பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை அன்றையதினம் இரவு வந்தடையவுள்ளது.
அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப் பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர், 24 ஆம் திகதி அதிகாலை விசேட பூஜைகள் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2015, 2016 ஆம் வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.

சிவனொளிபாத மலைப்பிரதேசத்தில் பொலித்தீன் பாவனை, மதுபாவனை என்பன இம்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டது.மேலும், சிவனொளிபாத மலைக்கு வருகை தரவுள்ள யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த யாத்திரிகர்களுக்காக ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்குவரத்துச் சேவைகளை நல்லத்தண்ணி நகர் வரை நடத்துவதற்கு ஹட்டன் பஸ் டிப்போ நடவடிக்கை எடுக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

126 மீனவர்கள் தமிழகம் வந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் தாயகம் வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், நாகபட்டினம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற 127 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின் மன்னார், ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் புத்தளம் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 126 பேர் சிறை வைக்கப்பட்டனர். இவர்களில் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.


இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதனால், சிறையில் இருந்த மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இதன்படி தீபாவளிக்கு முந்தைய தினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால், கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் தீபாவளியன்று நாடு திரும்ப முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.

இதன்படி விடுவிக்கப்பட்ட 126 மீனவர்களில் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 48 மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கும், எஞ்சிய 78 மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 17 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்தான். இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்றம் ஊர்காவல்துறை நீதிமன்றம் என்பதால் அங்கிருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு அனுப்பி வைககப்பட்டனர்.


நவம்பர் 13 அன்று இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 126 மீனவர்களில் 48 பேர் இரவு 7 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகள், மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜ், எமரிட் மற்றும் சிறையில் இருந்து மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் வரவேற்றனர். 

அதிக கட்டணம் வசூலித்த நடத்துனருக்கு அபராதம்

கொழும்பில் இருந்து மாத்தளைக்கு பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த  நடத்துனருக்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தை இரண்டு தினங்களுக்கு சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பிலிருந்து மாத்தளைக்கான கட்டணம் 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் சொகுசு பேருந்து, பயணிகளிடம் 355 ரூபா கட்டணம் வசூலித்ததாக மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையிடம் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. 
சம்பந்தப்பட்ட பஸ் வண்டியின் நடத்துனரையும் உரிமையாளரையும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏ.ஜீ. ரணசிங்க விசாரணைக்கு உட்படுத்தினார். இதனையடுத்து பஸ் நடத்துனருக்கு அபராதமும் குறிப்பிட்ட பஸ் வண்டிக்கு இரண்டு நாள் போக்குவரத்து தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

செஸ் போட்டியில் 11 பதக்கங்கள் வென்று சாதனை

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்கள் சென்னை திரும்பினர்.

உலகளவில் சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டி கடந்த வாரம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐம்பது பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய சிறுவர் சிறுமியர்கள் மொத்தம் 11 
பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த மகாலட்சுமி, வைசாலி, பிரக்கனந்தா, ரக்‌ஷிதா மற்றும் பரத் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்க பத்தகங்களை வென்றுள்ளனர். மேலும் வர்ஷினி மற்றும் தேவ் ஷா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.


இந்த உலக தர செஸ் போட்டியில் இதற்கு முன்பு இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் கடந்த 2006ம் ஆண்டு ஐந்து தங்க பதக்கங்களை வென்றனர். அதன் பிறகு 9 வருடங்களுக்கு பிறகு அதிக பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இன்று அதிகாலை சென்னை திரும்பிய பதக்கங்கள் வென்ற சிறுவர் சிறுமியர்க்கு ஆல் இந்தியா செஸ் பெட்ஃரேஷன், பெற்றோர் மற்றும் உறவினர் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Friday, November 13, 2015

எல் அண்ட் டி யிடமிருந்து அதானி குழுமத்திற்கு மாறிய காட்டுப்பள்ளி துறைமுகம்

எல் அண்ட் டி நிறுவனத்திடமிருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழும நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2,500 கோடி 
ரூபாய்க்கு இது கையகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி துறைமுகம் நிறுவனம் தமிழகத்தில் லார்சன் அண்ட் டூப்ரோ நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக அதானி குழுமம் எடுத்துள்ள நடவடிக்கை இது என்று கருதப் படுகிறது.

அதானி குழும நிறுவனமான அதானிபோர்ட்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல 
நிறுவனம் (ஏபிஎஸ்இஇஸட்) நிறுவனம் ஏற்கெனவே கேரள மாநில அரசுடன் 
ஒப்பந்தம் செய்துள்ளது. கேரள மாநிலத்தில் விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. ரூ. 4,089 கோடிக்கான 
இந்த சர்வதேச ஆழ்கடல் பன்முக துறைமுகத்தை பிபிபி அடிப்படையில் அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் 
லிமிடெட் நிறுவனம் (எல்டிஎஸ்பி) நிறுவனம் காட்டுப் பள்ளியில் துறைமுகத்தை  நிர்வகித்து வருகிறது. இதை அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு இந்தத் துறைமுகம் வாங்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரூ.2,500 கோடி இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக இரு நிறுவனங்களும்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. காட்டுப்பள்ளி துறைமுகமானது எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்கும் பணியில் அதானி குழும நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த விற்பனைக்கு மாநில மற்றும் 

மத்திய அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான அனுமதிக்காக காத்திருக்கும் அதேவேளையில் இந்நிறுவன செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனம் செய்து கொண்டுள்ளது.காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உள்ளன. இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை. இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் டியுஇ சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.

நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டில் காட்டுப்பள்ளி துறை முகத்தைக் கையகப்படுத்தியது மிகவும் முக்கியமான நடவடிக்கை என்று அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமம் 7 துறைமுகங்கள் அதாவது முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட்டினம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

திப்பு ஜெயந்தி விழா - போராட்டம்

கர்னாடகாவில் நவம்பர் 10ம் தேதி அன்று திப்பு ஜெயந்தி விழா
கொண்டாட்டத்தின் போது விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம்
நடத்தினர். இதில் குடகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம் நடத்திய போது வன்முறை வெடித்தது.

இச்சம்பவத்தின் போது குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின்
மாவட்ட செயலாளர் குட்டப்பா பலியானார். இது விபத்து அல்ல கொலை என்றும் மாநில அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியும், கெம்ப கவுடா விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என் கூறிய எழுத்தாளர் கிரிஷ் கார்னாடை கண்டித்தும் நவம்பர் 11 அன்று பெங்களூரு டவுன் ஹால் முன்பு விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் சித்தராமையா முஸ்லீம்களின் ஆதரவை பெறுவதற்காக திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர்.


இதனிடையே கிரிஷ் கார்னாடின் பேச்சை கண்டித்து பாஜக சார்பிலும் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்பட்டது. வாக்கு வங்கியை பெறுவதற்காக காங்கிரஸ் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது என்றும், காங்கிரசின் இந்த செயல் பெங்களூரு நகரை வடிவமைத்த கெம்ப கவுடாவை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்றும் பாஜக வினர் குற்றம் சாட்டினர். இதனிடையே இதுகுறித்து கர்னாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது, குடகு சம்பவத்தை வைத்து பாஜகஅரசியல் செய்து வருவதாகவும், அரசியல் சுயலாபத்திற்காக மக்களை தூண்டிவருவதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே இதுகுறித்துவிசாரணை நடத்த மைசூர் மண்டல ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் பலியான குட்டப்பாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ஈழப்பிடும் அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

போராட்டத்தின் போது போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின் செயலாளர் குட்டப்பா 15 அடி சுவர் மீது ஏற முயன்று தவறி விழுந்து பலியானார். ஆனால் இந்து  அமைப்பை சேர்ந்தவர்கள், குட்டப்பா முஸ்லீம் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார் என குற்றம் சாட்டி வரும் விஷ்வ இந்து அமைப்பினர், நவம்பர் 13 அன்று கர்னாட மாநிலத்தின் மைசூரு, கோலார், சிக்மகளூரு ஹாசன் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். 

ரயில் முன்பதிவில் மாற்றம்


இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால் டிக்கெட் முன்பதிவு 
செய்யலாம். நவம்பர் 12-ம் தேதி முதல், ரயில்கள் புறப்படுவதற்கு அரை மணி நேரம்  முன்னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பயண இறுதி அட்டவணை தயாராகும் முறையில் மாற்றங்கள் செய்துள்ள தொடர்வண்டி துறை, இப்போது இரண்டு முறை அட்டவணையை தயாரிக்க உள்ளது.

முதல் முன்பதிவு பயண அட்டவணை, தொடர்வண்டி கிளம்புவதற்கு நான்கு மணி நேரங்கள் முன்னால் தயாரிக்கப்பட்டு வந்த முறையோடு இப்போது, அரை மணி நேரம் முன்பாக ஒரு முறை இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது. 


மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இணையம் மற்றும் முன்பதிவு கவுண்டர்களில் என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்யலாம். இருக்கும் பெர்த்களின் எண்ணிக்கையைப் பொருத்து, குறிப்பிட்ட ரயில்களுக்கு, முதல் முன்பதிவு பயண அட்டவணை தயாரான பின்னரும், முன்பதிவு செய்ய முடியும்.

இதற்காக நவம்பர் 12-ம்  தேதியில் இருந்து, முதல் முன்பதிவு பயண அட்டவணையை 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே இறுதி செய்யும்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனிலோ அல்லது இல்லை தொடர்வண்டி நிலையத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தெந்த ரயிலில் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ரயில் கிளம்பும் முன்னதாக இரண்டாவது மற்றும் இறுதி முன்பதிவு பயண அட்டவணை, ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பதக்கங்களை திருப்பி அளித்த ராணுவ வீரர்கள்

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டம்: பதக்கங்களை திருப்பி அளித்த முன்னாள் 
ராணுவ வீரர்கள் மத்திய அரசின் விருதுகளையும், அங்கீகாரங்களையும் திருப்பி அளிக்கும் தற்காலத்திய போக்கை அடியொட்டி ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தில் கோரிக்கையை முழுமையாக ஏற்காத மத்திய அரசை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பெற்ற பதக்கங்களை திருப்பி அளித்தனர்.


போருக்காக பெற்ற பதக்கங்கள் மற்றும் பிறவற்றை அங்கீகரித்து வழங்கிய 
பதக்கங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் சண்டிகர் அருகே பஞ்சகுலாவில் 
உதவி ஆணையரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதே போல் ஜலந்தர், அமிர்தசரஸ்,  பாடியாலா, ரோஹ்டக், ஹிசார், அம்பாலா ஆகிய இடங்களிலும் முன்னாள்  ராணுவ வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்ததாக தகவல்கள் வந்துள்ளன. 

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்திய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு 
மேற்கொண்ட அறிவிப்பின் மேல் தற்போது தங்கள் எதிர்ப்பைத் திருப்பியுள்ளனர் முன்னாள் ராணுவ வீரர்கள். மோடி அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதியில் பின்வாங்கியதால் இந்த தீபாவளி 'கருப்பு தீபாவளி' தினமாக அனுசரிக்க போவதாக தெரிவித்தனர்.

காதலிக்க மறுத்தவருக்கு வெட்டு

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மதூர் தாலுக்காவை சேர்ந்தவர் பிருந்தா குமாரி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது அவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த ரவிக்குமாரால் சரமாரியாக வெட்டபட்டார். ரவிக்குமார் கடந்த ஒன்றரை வருடமாக பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். 
மேலும் ரவிகுமார் கடந்த இரண்டுவருடமாக பிருந்தா குமாரி வீட்டில் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவர் பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தது தெறிந்தவுடன் அவரை பெற்றோர்கள் பணியிலிருந்து நீக்கியுள்ளனர். ஒருபுறம் காதல் மறுக்கப்பட்ட விரக்தி மறுபுறம் வேலையை 
விட்டு நீக்கியதால் ஏற்பட்ட அவமானத்தாலும் பிருந்தா குமாரியை பலிதீர்க்க 
முடிவு செய்த ரவிகுமார் கடந்த சனிகிழமை அன்று பிருந்தா ல்லூரி முடித்து வீடு  திரும்பிக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் 3 பேருடன் முகமூடி அணிந்து சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். குறிப்பாக பிருந்தாவின் முகத்தை குறிவைத்து ரவிகுமாரும் அவரது நண்பர்களும் வெட்ட முயற்சிசெய்துள்ளனர். 

இந்த தாக்குதலில் தன்னை பாதுகாத்துகொள்ள பிருந்தா தனது கையால் தடுத்து முயற்சி செய்த போது சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுகள் பிருந்தாவின் இரண்டு கைகளிளும் விழுந்து அவர் கைகள் துண்டாகும் நிலைக்கு காயம்  அடைந்தது. மண்டியா அரசுமருத்துவமனியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உடனடியாக பிருந்தாவை பெங்களூரில் உள்ள ஹொஸ்மட் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

கடந்த இரண்டு தினங்களாக சுமார் 14  மணிநேரம் அருவைசிகிசைக்கு பிறகு பிருந்தாவின் கைகள் தற்பொழுது பாதுகாக்கப்பட்டுள்ளன.குறைந்தது 6 வாரங்கள் பிருந்தா ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மண்டியா காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரவிகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் ரவிக்குமாருடன் இந்த  தாக்குதலில் ஈடுபட்ட இருவர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது 
செய்ய தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள தேர்தலில் அஇஅதிமுக வெற்றி

கேரளா மாநில உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கோவை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து
பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான, பாலக்காடு மாவட்டம்,  கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டு எஸ்.ஹெலன் அமலோற்பவமேரி, 7-வது வார்டு ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டு  எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டு பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 3-வது வார்டு எல்.பாலகிருஷ்ணன்,  பீர்மேடு பஞ்சாயத்து 1-வது  வார்டு எஸ்.பிரவீணா ஆகிய 6 பேர் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர்.  அதிலும், 5 மகளிர் வெற்றி பெற்றுள்ளனர். 
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கொட நாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோவை விமான நிலையத்தில் வாழ்த்து பெற்றனர்.


தேவிகுளம், மறையூர், பீர்மேடு பகுதிகளில் அதிமுக பெற்றுள்ள வெற்றி, முல்லை பெரியாறு அணைப்பகுதியில் கேரள வனத்துறை மற்றும் நீர்பாசனத் 
துறையினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பீகார் தேர்தல் - மதச்சார்பின்மைக்கு வெற்றி, சகிப்புத்தன்மைக்கு தோல்வி

பீகார் தேர்தல் - மதச்சார்பின்மைக்கு வெற்றி, சகிப்புத்தன்மைக்கு தோல்வி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் - நிதிஷ்குமார் கூட்டணிமிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. இந்த தேர்தல் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் இந்த தேர்தல் முடிவுகளை மிக ஆவலோடு எதிர்நோக்கி இருந்ததது. பாஜக தலைமையிலான மதவெறி கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருப்பது நாட்டு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நிதிஷும் லாலுவும் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள், தங்களுக்கென்று வாக்கு வங்கிகளை வைத்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அரசியல் களத்தில் நின்றவர்கள். 


ஆனால், நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அவர்கள் கூட்டணி அமைத்தது மிகவும் பாராட்டுக்குரியது. தங்களது மனமாச்சரியங்களை, கருத்து முரண்களை அரசியல் எதிர்ப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, நிதிஷ்குமாரும், லாலுவும்  மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டும் - நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தை தேர்தல் நிலைப்பாடாகக் கொண்டு மக்களை சந்தித்தனர். இந்த நிலைப்பாட்டை பீகார் மக்கள் வரவேற்று, வெற்றியும் தந்துள்ளனர். நாட்டில் மதவாதத்தை, வெறுப்பு அரசியலை, சகிப்பின்மையை விதைப்பவர்களை 
மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற யதார்த்த உண்மையை இந்தத் 
தேர்தல் மூலம் நாட்டுக்கு பீகார் மக்கள் உணர்த்தியிருக்கின்றனர். 

பீகார் மக்களின் தீர்ப்பு என்பது மதவாத சக்திகளுக்கு மட்டுமான சமிக்ஞை அல்ல; வெற்றி பெற்ற லாலு-நிதிஷ் கூட்டணிக்கும் இதில் படிப்பினை இருக்கிறது. மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்தால் இதுதான் நிலை என்பதையும் சேர்த்தே பீகார் மக்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி உணர்ந்து செயல்பட வேண்டும். 

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா?

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா?
-வாலாசா வல்லவன்


சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் தமிழ்நாட்டில் நடத்தி வந்ததை அனைவரும் அறிவோம். சுயமரியாதை திருமணத்திற்கான தேவை ஏன் வந்தது என்றால் நமக்கு (சூத்திரர்களுக்கு) பார்ப்பன சாத்திரப்படி திருமணம் செய்துகொள்ள தகுதி இல்லை என்பதாலும், பார்ப்பான் நம்மை அவமரியாதையாக நடத்துவதாலும், நம்முடைய மொழியைஅவன் புறக்கணிப்பதாலும் சுயமரியாதைத் திருமணத்திற்கான தேவை ஏற்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் சுயரியாதை திருமணங்களை நடத்தி வந்தாலும், அவற்றில் பார்ப்பனர்கள் இல்லையயன்பதைத் தவிர சடங்குகள் இடம் பெற்றிருந்தன. முதன்முதலாக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் குத்தூசி குருசாமிக்கும்-குஞ்சிதம் அம்மையாருக்கும் 8.12.1929இல் நடத்தி வைத்ததே சடங்குகளற்ற சாதி மறுப்பு திருமணம் ஆகும், அதன் பிறகு, தமிழகத்தில் வேகமாக சுயமரியாதைத் திருமணங்கள நடைபெற ஆரம்பித்தன.

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் ஏன் தேவைப்பட்டது?

இன்றைய திராவிடர் கழகத் தலைவரான கி. வீரமணியின் மாமனாரின் (சிதம்பரம் செட்டியார்) முதல் மனைவியின் பிள்ளைகளுக்கும், மூன்றாம் மனைவியின் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக வழக்கு நடைபெற்று வந்தது.

அது என்னவென்றால், வீரமணியின் மாமனார் சிதம்பரம் செட்டியார் அவருடைய முதல் மனைவியின் பெயர் நாச்சியம்மை, இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தெய்வ யானை, முதல் மனைவி இறந்தவுடன் வள்ளி யம்மை என்பவரை இரண்டாவது மனைவியார் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மக்கள் இல்லை. அவரும் இறந்துவிட்டார். மூன்றாவது மனைவியாக திருவண்ணா மலையைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்ற ரெட்டியார் சாதியைச் சார்ந்த விதவையை 14.7.1934 இல் பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் சிதம்பரம் செட்டியாரின் முதல் மனைவியின் மகள் தெய்வயானை ஆச்சி என்பவர் தேவ கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் தன் தந்தை சிதம்பரம்-ரெங்கம்மாள் என்பவரை சுய மரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அத் திருமணம் செல்லாது, அவர்களது வாரிசுகளுக்கு என் தந்தை யின் சொத்தில் இருந்து பாகப்பிரிவினை செய்து கொடுக்கக் கூடாது என்பதே அவ் வழக்கு. சிதம்பரம் செட்டியார் தன் சொந்த உழைப்பில் வந்த சொத்தை யாருக்கு வேண்டு மானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத் தீர்ப்பை எதிர்த்து 28.9.1948இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நீண்ட நாட்கள் விசாரணை செய்யப்பட்டு 20.8.1953 அன்று சென்னை உயர்நீதி மன்றம் 25 பக்கத் தீர்ப்பை வழங்கியது. அத் தீர்ப்பில் புரோகித ஒழிப்புச் சங்கம் மூலம் செய்யப்பட்ட திருமணம் ஏற்புடையது அல்ல. சிதம்பரம் செட்டியாராக இருந்தாலும் அவருக்கு வைசியருக்கான தகுதி கிடையாது. அவர் சூத்திரர்தான், செட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல், ரெங்கம்மாளின் ரெட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல் இத் திருமணம் நடைபெற்றிருப்பதால் இதை, சட்டபூர்வத் திருமணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதுடன், இவர்களுக்குப் பிறந்த குழந்தை சட்டப்படியான வாரிசு அல்ல என்ற போதிலும் ஆதிகாலம் தொட்டே இந்துக்கள் வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கு சொத்து எழுதிவைக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. சிதம்பரம் செட்டியார் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. இதனால்தான் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் தேவைப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்த உடனே அன்றைய இராசாசி அரசு சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டது. சட்டமன்றத்தில் மசோதா முன்மொழியப் பட்டது. ஆனால் குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புப் போர் காரணமாக இராசாசி விரைவிலேயே ஆட்சியை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

1957இல் தி.மு.க.வைச் சேர்ந்த களம்பூர் அண்ணாமலை சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீவிரமாகப் பேசினார், அரசு செவி சாய்க்கவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்த செ. மாதவன் சுயமரியாதைத் திருமணச் சட்டம் தொடர்பாக ஒரு தனியார் மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்றும்படி வேண்டினார். அப்போதைய காங்கிரசு சட்ட அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் என்கிற பார்ப்பனர் அம் மசோதாவை தோற்கடித்தார்.

1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி யாகும்படி சட்டம் செய்ய தீவிர முனைப்பு காட்டி சட்ட மன்றத்திலும் 27.11.1967இல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதற்கு 17.1.1968 அன்று குடிஅரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. 20.1.1968 நாளிட்ட அரசிதழில் இச்சட்டம் வெளியிடப்பட்டது.

இந்த சட்டம் முழு வெற்றியா என்பதுதான் என்னுடைய வினா?

முதலில் இந்தச் சட்டத்திற்கு பெயர் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் (Self Respect Marriage Validaity Act) என்று இருந்திருக்க வேண்டும். வேறு எந்தச் சட்டத்திலும் இதை பிணைத்திருக்கக்கூடாது. ஆனால் தமிழக அரசின் சட்டமோ இச்சட்டம் “1967ஆம் ஆண்டு இந்து திருமணச் (தமிழ்நாடு திருத்த) சட்டம்'' எனப் பெயர். 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (மத்திய சட்டம் 25/1955) 7ஆவது பிரிவுக்கு பின்னர் ‘7-A’ என்ற புதிய பிரிவை சேர்த்துக்கொள்வது என்கிற தன்மையில் அமைந்துள்ளது.

இந்து திருமணச் சட்டம்

சாதி வழக்கம் உள்ளூர் வழக்கம் போன்றவற்றிற்கு இடமுண்டு. இவறறை பயன்படுத்தி இது நீண்டகாலமாக நடப்பதால் 1928முதல் Local custom என்ற அடிப்படையில் இதில் நுழைக்கப்பட்டுள்ளது.

ஆரியச் சட்டங்கள் மிகவும் வலிமையானவை. சதபதி என்கிற மணவலம் 7 தப்படி வைக்கவில்லை என்றால்கூட திருமணம் செல்லாது என்று உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது. ஆனால் நம்முடைய சட்டமோ பலவீனமானது இதையும் ஒன்றாக அதில் சேர்த்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சுவது போன்றது. நாம் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்க வழி செய்யாமல் சந்து பொந்து ஆளை தேடி ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன்.

எந்த இந்துச் சட்டம் நம்மை காலம் காலமாக சூத்திரனாக வைத்துக்கொண்டு இருக்கிறதோ அதே இந்து சட்டத்தில், இந்து திருமணச் சட்டத்தின் உட்பிரிவில் இதைச் சேர்த்திருப்பது எப்படி சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளுக்கு வெற்றியாகும். ஏற்கெனவே இந்து திருமணச் சட்டத்தில் எட்டு வகை திருமண முறை உள்ளது. இது ஒன்பதாவது வகை இந்து திருமண முறையாகும். அதற்கு மேல் இதில் என்ன உள்ளது?

மணமேடையில் பார்ப்பான் சூத்திரத் தன்மை இருக்காதே ஒழிய சட்டப்படி இத்திருமணம் செய்து கொண்டாலும் சூத்திரப்பட்டம் ஒழியப் போவது இல்லை. குறைந்த பட்சம் இந்தச் சட்டத்தை சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவிலாவது சேர்ந்திருக்க வேண்டும் (Special Marriage ACt 1882) இல் இயற்றப்பட்டது. இரண்டு வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் இத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்துகொள்ள வழிவகை உண்டு. எந்த இந்துச் சட்டம் நம்மை சூத்திரனாக வைத்திக்கிறதோ அதே இந்துச் சட்டத்தில் சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தைச் சேர்த்திருப்பதின்மூலம் அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி பலி என்பது போன்றதுதான் அது.

பகுத்தறிவாளர்கள் இதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.

நன்றி - கீற்று இணையதளம்

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் ஒரு கொள்கையாக  சுயமரியாதை திருமணம் உள்ளது. அந்த வழியில் வந்த அண்ணா, 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனதும், சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார். இதற்காக இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து திருமண சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை. மாறாக, நண்பர், உறவினர் முன்னிலையில் மாப்பிள்ளையும் பெண்ணும் மாலையோ, மோதிரமோ மாற்றிக் கொண்டாலே அது திருமணமாக கருதப்படும் என்று சுயமரியாதை திருமணச் சட்டம் கூறியுள்ளது.
இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.அசுவத்தாமன் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும்  என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், வழங்கிய தீர்ப்பில்  இந்து மதம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதன்படி, வெவ்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றபடி திருமண சடங்குகளை  வைத்துக்கொண்டு திருமணங்களை நடத்துகின்றனர். 


அந்த வகையில் இந்துக்களிடையே மேலும் ஒரு திருமண முறையாக சுயமரியாதை திருமணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை நோக்கம் இருக்க கூடாது. அந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் என்னவென்றால், திருமணம் என்பது புரோகிதர் முன்னிலையில் நடந்தால்தான் அது செல்லும் என்ற நிலையை மாற்றுவதுதான். அவர்கள் இல்லாமலேயே, மற்றவர்கள் முன்னிலையில் நடப்பதும் செல்லக்கூடிய திருமணம்தான் என்பதுதான் அந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்.

 உறவினர், நண்பர்கள் முன்னிலையில் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது அல்லது தாலி கட்டிக் கொள்வது ஆகிய நிகழ்வோடு திருமணம் முழுமையாக நடந்துவிடுகிறது. இது சட்டப்படி செல்லக்கூடிய திருமணமாகும் என்று  குறிப்பிட்டுள்ளனர். மேலும், 

சுயமரியாதை திருமணங்கள் செல்லக்கூடியவை அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் 54-வது முறையாக விபத்து

சென்னை விமான நிலையத்தில் 54-வது முறையாக விபத்து

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள், கிரானைட் கற்கள்,  மேற்கூரை விழுவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரை நடந்த 53 விபத்துகளில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) 9.11.15 பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. 
அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!

தமிழுக்கு நன்கொடை அளிப்போம்!
ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!


அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 376 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. உலகத் தர வரிசையில் அது முதன்மையான இடத்தை பெற்றுள்ளது.  உலகின் பிற செம்மொழிகளுக்கு அங்கு இருக்கைகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.  ஆனால் செம்மொழியான ஆதி தமிழுக்கு இது வரையில் அங்கு இருக்கை உருவாகவில்லை.  இது நாள் வரை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இரண்டு சமூகங்கள் தான் தம் மக்களின் முயற்சியால் இருக்கைகள் நிறுவியுள்ளன.  நூற்றுக்கணக்கான பிற இருக்கைகள் எல்லாம் பெரும் செல்வந்தர்களாலும், அரசாங்கங்களாலும் ஏற்படுத்தப்பட்டவை.  தமிழுக்காக ஓர் இருக்கை  நிறுவும் மூன்றாவது மக்கள் தொகையாக  நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.  


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை உலகத்தின் அறிவு  மையம் என்று
சொல்வார்கள். அறிவும் ஆற்றலும் உள்ள முதல்தரமான பேராசிரியர்களை
ஹார்வார்ட் ஈர்க்கும். அதேசமயம் உலகத்து பல நாடுகளிலிருந்தும் ஆர்வமான, தரமான மாணவர்கள் தமிழை கற்பதற்கும்  ஆராய்வதற்குமாக ஹார்வார்ட்டை  நாடுவார்கள்; உலகத் தரத்தில் ஆராய்ச்சிகளும் பயிற்றுவித்தலும் நிகழும். இங்கே நிறுவப்பட்ட ஆய்வு முறைகளும் ஒப்பியல் முறைகளும் உலக அங்கீகாரம் பெற்றவை; மதிப்பு வாய்ந்தவை. அதனால் தமிழ் ஆராய்ச்சிகளின் பயன் பலரையும் சென்றடையும் என்று கூறப்படுகிறது.

தமிழ் இருக்கை தொடங்குவதற்கு ஆறு மில்லியன் டாலர்கள் (சுமார் 40 கோடி 
ரூபாய்) தேவைப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் திரு 
ஜானகிராமனும் திரு திருஞானசம்பந்தமும் கூட்டாக ஒரு மில்லியன் டாலர்கள் செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள். மீதி ஐந்து மில்லியன் டாலர்களை உலகத்து தமிழ் மக்களிடமிருந்து திரட்டி இருக்கை உருவாக வழி செய்யவேண்டும். இந்த இருக்கையின் உருவாக்கத்தில் தமிழ் நாடு அரசின் உதவி பெரிதும்  எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பல்கலைக்கழகங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை  நழுவவிடாமல் உதவலாம். அவைகளுக்கு எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன்  ஏற்படப்போகும் தொடர்பு இரு பல்கலைக்கழகங்களின்  வளர்ச்சிக்கும் உதவும். தமிழ் நிறுவனங்கள்,  தொழிலதிபர்கள், கல்வியாளர்கள்,  தமிழ் பற்றாளர்கள் என அனைத்து மக்களிடமிருந்தும் உதவி எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க 5000 தமிழர்கள் ஒன்றுபட்டாலே போதும்,  ஒரு வருட கால அவகாசத்துக்குள் வேண்டிய நிதியை திரட்டிவிடலாம்.

மூன்று விதங்களில் நிதி வழங்கலாம்:

1) உங்கள் காசோலையை “Tamil Chair Inc.” என்ற பெயருக்கு எழுதி
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.


Tamil Chair Inc.
Attn: Dr. Sornam Sankar,
4113 Tiber Falls Dr,
Ellicott City, MD 21043,
USA

2) உங்கள் காசோலையை “Harvard University” என்ற பெயருக்கு எழுதி  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.மறக்காமல் காசோலையில் Memo என்றிருக்கும் கோடிட்ட இடத்தில் Tamil Chair என்று குறிப்பிடுவது அவசியம். இல்லையெனில் அது பிற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

Office of the Recording Secretary
Harvard University
124 Mount Auburn Street
Cambridge, MA 02138
USA

3) வங்கி மூலம் நேரடியாக பணம் செலுத்துதல்.

Bank of America
100 Federal Street,
Boston, MA 02110
President & Fellows of Harvard College,
RSO account
Account #: 9429263621
ACH ABA: 011000138
Wire ABA: 026009593
Swift Code: BOFAUS3N
Donor: (To be provided by donor)
Purpose: Sangam Professorship in Tamil

தமிழில் ஆர்வமான இளம் தலைமுறையினர் இன்று வெளிநாடுகளில்  பல  துறைகளில் கல்வி கற்கின்றனர். அவர்களும் பிற நாட்டினரும்  தமிழின்  பழமையான இலக்கியங்களைப் படித்து ஆராய இந்த இருக்கை உதவும்.   
உன்னதமான சான்றோர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக பேணி வளர்க்கப்பட்ட சுவையான செம்மொழி நம்முடைய தமிழ். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து நாம் சிறப்பிக்க வேண்டும். 1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் செல்டிக் மொழிக்கு இரண்டு இருக்கைகள் ஹார்வார்டில் இருக்கின்றன. 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஓர்  இருக்கையாவது நிறுவவேண்டியது எத்தனை அவசியம்? இந்த இருக்கை அமைய 
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு நிதி வழங்கி ஆதரவு 
தரவேண்டும். இதனால் தமிழுக்கு பெருமை. எங்கள் வருங்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுப் போகும் அரிய செல்வமாக இது விளங்கும்.

இது தொடர்பான
இணைய முகவரி http://harvardtamilchair.com/