Tuesday, February 05, 2008

புத்தாண்டு அறிவிப்பு போற்றும் வரலாறு

புத்தாண்டு அறிவிப்பு

போற்றும் வரலாறு

இவ்வாண்டு ஆளுநர் உரை, சில இனிப்பான அறிவிப்புகளைத் தந்துள்ளது. தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, அரவாணிகளுக்குத் தனி நல வாரியம், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் என்று பல்வேறு வகையிலும், பல்வேறு துறையினருக்கும் உவப்பளிக்கக் கூடிய செய்திகளை அரசு அறிவித்துள்ளது.

1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரின் தலைமையில் கூடிய குழு எடுத்த முடிவுப்படிதான் திருவள்ளுவர் ஆண்டு இன்றும் கணக்கிடப்படுகிறது. இயேசு நாதர் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பிறந்தவர் வள்ளுவர் என்பது அக்குழுவின் முடிவு. அதனால்தான் இப்போது நடப்பது திருவள்ளுவர் ஆண்டு 2039 என்று நாம் கூறுகிறோம். அதே குழுதான் தை மாதம் முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தது.

மேலே கூறப்பெற்றுள்ள இரண்டு முடிவுகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது, கலைஞர் தலைமையிலான அரசுதான். திருவள்ளுவர் ஆண்டை அரசு ஏற்றுக் கொள்வதாக 1971ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போதும் கலைஞர்தான் முதல்வர். தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டு என அறிவிக்கும் சட்டமுன்வடிவம் நடப்பு சட்டமன்றத்தில் வந்துள்ளது. இப்போதும் கலைஞர்தான் முதல்வர்.

புத்தாண்டு அறிவிப்பென்பது, பண்பாட்டு உலகில் ஒரு புதிய மைல்கல் என்றுதான் கூறவேண்டும். சித்திரைதான் புத்தாண்டு என்று ஆண்டுகள் பலவாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சமுகத்தில், இப்புதிய அறிவிப்பு ஒரு புரட்சிக் குரலாகத்தான் வெளிவந்துள்ளது.

இப்போதெல்லாம் தமிழர்கள் உட்பட, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள், சனவரி முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். சித்திரை முதல் நாளன்றும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளத் தயங்குவதில்லை. ஓராண்டில் இரண்டு புத்தாண்டா என்று கேட்டால், அது ஆங்கிலப்புத்தாண்டு, இது தமிழ்ப் புத்தாண்டு என்று கூறுகின்றனர். வேடிக்கை என்னவென்றால், அது ஆங்கிலப் புத்தாண்டுமில்லை, இது தமிழ்ப் புத்தாண்டுமில்லை. இயேசு நாதர் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்தார். அதுதான் கிறிஸ்மஸ். அவர் பிறந்த 8ஆம் நாள் அவருக்குப் பெயர் சூட்டினார்கள். அதுதான் சனவரி 1. எனவே அந்நாள் ஒரு மதத்தோடு தொடர்புடையதே தவிர, புத்தாண்டோடு எந்தத் தொடர்பும் உடையது அன்று. எனினும் தாங்கள் உலகம் முழுவதும் பெற்றிருந்த ஆட்சி அதிகாரத்தால் அதனைப் புத்தாண்டாக அவர்கள் ஆக்கிவிட்டனர். அறிந்தோ அறியாமலோ, இந்துக் கோயில்களிலும் இப்போது அந்த நாளில் அர்ச்சனைகள் நடக்கின்றன.

தமிழ்ப்புத்தாண்டு என்று கருதப்பட்ட சித்திரை முதல் நாளின் கதையோ, இன்னும் வேடிக்கையானது. ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த 60 குழந்தைகள்தான் அந்தத் தமிழ் வருடங்கள் என்று ஒரு புராணக்கதை சொல்லும். அதை நம்பித்தான் நாம் அதனைப் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறோம். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படும் அவற்றுள் ஒன்றுகூட தமிழ்ப்பெயர் தாங்கி நிற்கவில்லை. அனைத்தும் வடமொழிப் பெயர்கள். ஆனால் இப்போது அந்த ஆண்டுகளுக்கான புதிய புதிய அறிவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். கதிரவனைச் சுற்றி வர வியாழனுக்கு 12 ஆண்டுகளும், சனிக்கு 30 ஆண்டுகளும் ஆகின்றன. இவ்விரு கோள்களும் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஓர் இடத்தில் சந்திக்கின்றன. அதைக்குறிக்கும் வகையிலேயே 60 சுழற்சி ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளன என்று இப்போது கூறுகின்றனர். இரு கோள்கள் ஒரு கோட்டில் சந்திப்பதற்கும், நம்முடைய புத்தாண்டு தொடங்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சிந்துவெளி நாகரிகம் தொட்டு, மண்ணை வணங்குவதே தமிழர்களின் மரபாக இருக்கிறது. நெருப்பை வணங்குவதும், விண் எனப்படும் வெளி அல்லது சூனியத்தைக் கண்டு தம் வாழ்நெறிகளை அமைத்துக் கொள்வதும் நம் மரபன்று. இடையில் வந்தது. விளைத்துக் கொடுக்கும் மண்ணுக்கும், உழைத்து கொடுக்கும் மக்களுக்கும் நன்றி செலுத்தும் நாளே நாம் கொண்டாடும் பொங்கல் திருநாள். அறுவடையாகி நெல் வீட்டிற்கு வரும் நாளே, நம் புதுக்கணக்குத் தொடங்கும் நாள். அதனை அடிப்படையாகக் கொண்டு, தை முதல் நாளை புத்தாண்டு என்று வழங்குவதே பொருத்தமாகும்.

தமிழினத்தின் தொன்மை, பண்பாடு ஆகியனவற்றின் தனித்துவம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்று கருதும் பார்ப்பன ஏடுகள் சில, இப்புத்தாண்டு அறிவிப்பிற்கு எதிராக கருத்தை உருவாக்குவதில் முனைப்போடு இயங்குகின்றன. இவ்வறிவிப்பு நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுபோல ஒரு கருத்தை, தமிழ்ப்பேராசிரியர்களிடமிருந்தே கொண்டுவர ஒரு ஏடு முயல்கிறது. அவர்களும் துணை போகிறார்கள். ஏன் ஒத்துவராது என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான காரணமும் சொல்லப்படவில்லை. முன்பெல்லாம் ஓர் ஆங்கில ஆண்டில் பத்து மாதங்களே இருந்தன. ஜுல¤யஸி சீசர், அகஸ்டஸ் சீசர் ஆகியோரின் புகழ் நிலைப்பதற்காக ஜுலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்கள் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அதனால் அது நடைமுறைக்கு ஒத்துவராமலா போய்விட்டது? எந்த ஒன்றும் தொடக்கத்தில் சற்றுக் கடினமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும். இதுதான் நடைமுறை உண்மை. அரசின் முறையான அறிவிப்பு வந்ததற்குப் பின்னரும், சில ஆண்டுகளுக்கு சித்திரை மாதத்தையும் புத்தாண்டாய்க் கொண்டாடும் பழக்கம் இருக்கவே செய்யும். ஆனால் அடுத்தத் தலைமுறைக்கு அப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. காலம் எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரிக்கும். லை, னை போன்ற எழுத்துகளை முன்பு இப்படியா எழுதினோம்? கொம்பு போட்டு எழுதிய காலம் இன்று இல்லாமல் போய், இப்புதிய எழுத்து வடிவங்கள் இன்று நடைமுறைக்கு ஒத்துவரவில்லையா என்ன?

எனவே காலத்திற்கும், தமிழ்ப்பண்பாட்டிற்கும் ஏற்ற நல்லதொரு அறிவிப்பை தமிழக அரசு செய்திருக்கிறது. இதனை வருங்காலம் ஏற்கும், வரலாறு போற்றும்.

இந்நிலையில் இன்னுமொரு கூடுதல் வேண்டுகோளையும், தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முன்னால் தமிழ்ச் சமுகம் வைக்க விரும்புகிறது. பொருளாதாரமே இவ்வுலகில் பலவற்றைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்பது வெளிப்படை. பொங்கல் திருநாளைப் புத்தாண்டு என்று ஏற்றுக்கொண்ட பின்னும், அதைக் கொண்டாடக் கையில் காசு இருக்க வேண்டுமல்லவா. தீபாவளி நேரத்தில் எல்லோர் கைகளிலும் பணம் புழங்குகிறது. அதற்கான அடிப்படைக் காரணம், ஊக்க ஊதியம் (போனஸ்) அந்த நேரத்தில் வழங்கப்படுவதுதான். கேரளாவில் இன்று ஓணம் திருநாளை ஒட்டியே ஊக்க ஊதியம் வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். அவ்வாறே தமிழகத்திலும் புத்தாண்டுக்கு, அதாவது தை முதல் நாளையொட்டி ஊக்க ஊதியம் வழங்குவதுதானே சரியாக இருக்கும்!

புத்தாண்டைச் சரியாக அறிவித்த கலைஞர், அடுத்த ஆண்டிற்குள் இந்த அறிவிப்பையும் வெளியிட்டு தமிழ்ப்பண்பாடு தலைதூக்க உதவ வேண்டும்.

- இளைய சுப்பு.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

ஈழம் தொடர்பான அவதூறுகளைத் தடை செய்க

ஈழம் தொடர்பான

அவதூறுகளைத் தடை செய்க

சனவரி 21 -

தமிழீழ மக்களைப் படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து, சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கவிஞர் மேத்தாவும், மதுரையில் தலித் விடுதலை இயக்க அமைப்பாளர் இ.பாக்கியராசுவும் போராட்டத்தைத் தொடக்கிவைத்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் முடித்து வைத்தார். வழக்கறிஞர் தமிழ்ச் சங்கத்தலைவர் இரா.மனோகரன் மதுரைப் போராட்டத்தை நிறைவடையச் செய்தார். பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையிலும், வடக்கு மாவட்டங்களின் செயலர் அன்புத் தென்னரசன், மாநில இளைஞரணிச் செயலர் ஆ.சிங்கராயர் ஆகியோர் முன்னிலையிலும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது, மதுரையில், தென் மாவட்டங்களின் செயலர் நா.இராசா தலைமை வகிக்க, மதுரை மாவட்டச் செயலர் இரா.ஜெயபால் சண்முகம், முகவை மாவட்டச் செயலர் மறவர்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழீழம் பற்றிய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்துமே இங்கு குற்றச்செயல்களாக ஒருசிலரால் ஆக்கப்படுகின்றன. தமிழீழம் என்றாலே விடுதலைப்புலிகள் என்றும், அவ்வியக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்துப் பேசுவதே தேச விரோதம் என்றும் சிலர் இங்கே வினோதமான மொழிபெயர்ப்புகளைச் செய்கின்றனர். அன்றாடம் தமிழ் மக்களின் மீது குண்டுகளை வீசும் இலங்கை அரசு, இந்தியாவிடமிருந்து நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பல உதவிகளைப் பெறுகின்றது. பத்து நாட்களுக்கு முன்பு வன்னியில் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டிருக்கின்றது. அங்கு 790 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தால் அவர்கள் உயிர்தப்பிவிட்டனர். இல்லையேல் எல்லாப் பிஞ்சுகளும் மாண்டிருக்கும். இவ்வளவு கொடுமையான அரச பயங்கரவாதம் பற்றி, இந்தியாவும் சரி, உலக நாடுகளும் சரி இன்றுவரை வாய்த்திறக்கவில்லை. இந்நிலையில் பிப்ரவரி நான்காம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் அவர்களின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று, இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு.

நெருப்பில் நின்று மாலை சூட்டிக்கொள்வதா என்னும் கேள்வியோடு, இருபது நாட்களுக்கு முன்பு திராவிடர் கழகம் சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு விழாவில் மன்மோகன்சிங் கலந்துகொள்ளக் கூடாது என்னும் கோரிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட அவ்வார்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி தலைமை ஏற்றார். வேறு கட்சிகளும், அமைப்புகளும் கூட அக்கோரிக்கையை முன் வைத்தனர். இறுதியாக, ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் மன்மோகன்சிங் தன் பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டார்.

அந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பேரவையின் பட்டினிப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகளால் கூட்டப்பட்ட கருத்துரிமை மீட்பு மாநாடும் தமிழகத்தில் ஓர் அசைவை ஏற்படுத்தியுள்ளன. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இன்று விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்றும், திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்புகின்றனர்.

சட்டமன்றத்திலேயே, உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, வாய்மொழி ஆதரவிற்காக யாரையும் கைது செய்ய முடியாது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். எனினும் காங்கிரஸ் கட்சியின் துணையோடு இன்றைய ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், அவ்வாறு ஆதரிப்பவர்களைக் கைது செய்வது குறித்துத் தனிச்சட்டம் கொண்டுவருவது பற்றி ஆராயப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரு நெருக்கடியான நிலைக்குத் தமிழக அரசைக் கொண்டு போவதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் சிறு வெற்றியைப் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.

காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருக்கிற சோனியா காந்தி அம்மையார் பல நேரங்களில் நிதானமாகச் செயல்படுகிறார். ஆனால் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்' காட்டுவதற்காக தவறான பாதையில் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். ஒரு கருத்தை வெளியிடுவது எப்படிக் குற்றமாகும் என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. குசராத்தின் நரேந்திர மோடியை மரண வியாபாரி என்று விமர்சனம் செய்தார் சோனியா காந்தி. அந்த மரண வியாபாரியை மலர் தூவி வரவேற்கும், உள்ளுர் காங்கிரஸ் நண்பர்கள், தமிழீழ மக்களை மட்டும் தடிகொண்டு விரட்ட முயல்வது எந்த வகையில் நியாயம்?

அன்றாடம் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதூறுகளும், வதந்திகளும் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் ஒருவிதமான பயங்கரவாதம்தான். ஆனால் அந்தக் கூற்றுகளில் உள்ள பொய்மையை யாராவது எடுத்துச் சொன்னால், அவர்களைப் பயங்கரவாதிகள் என்கின்றனர் காங்கிரசார்.

தமிழ்நாட்டிலிருந்து புலிகளுக்கு ஆயுதம் கடத்தப்படுவதாக அடிக்கடி சொல்லப்படுகிறது. அவர்கள் உலகிலேயே மிக நவீனமான கருவிகளைத் தங்கள் இனத்தின் தற்காப்புக்காக இன்று பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களிடம் இல்லாத எந்த நவீனமான ஆயுதம் இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. அதைப்போலவே, லண்டனில் இருந்து கொண்டு திருப்பூருக்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய்த் தொலைபேசி புலிகள் பணம் கேட்கின்றனர் என்று ஒரு பச்சைப் பொய்யும் இங்கு கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்ல தமிழ் பேசும் அவர்கள், பணத்திற்காய்க் கூட அரைகுறை ஆங்கிலம் பேசியிருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமில்லாமல், திருப்பூரிலிருந்து பணம் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பதையும், இன்றைக்கும் திருப்பூரையே வாங்கக்கூடிய நிலையில்தான் உள்ளனர் என்றும் அவர்களின் எதிரிகளே குறிப்பிடுகின்றனர். யார் ஒருவர் ஈழத்தமிழில் பேசினாலும், உடனே அவர்களை விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்திவிடும் ஒரு விபரீதப் போக்கு இங்கு எப்போதும் உள்ளது.

இன்று சிறீலங்காவில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா மீது இன்றைக்கும் பல வழக்குகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒரு குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. பல கொலை வழக்குகளும் உள்ளன. புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து போன கருணா கடவூச்சீட்டு மோசடிக்காக லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்றவைகளில் பழகிப்போன சில துரோகக் கும்பல்கள் ஈடுபடக்கூடிய செயல்களில் எல்லாம் ஒரு விடுதலை இயக்கத்தைத் தொடர்புபடுத்திக் கொச்சைப்படுத்துவது மிக மோசமான செயலாகும்.

இந்தச் சூழலில் ஆர்ப்பாட்டமாய், பட்டினிப்போராய், மாபெரும் மாநாடாய்க் கருத்துரிமை மீட்புக் களத்தில் இன்னும் நம் பணி நிறையவே இருக்கிறது.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

தமிழ்தான் நம்மை இணைக்கிறது

தமிழ்தான் நம்மை இணைக்கிறது

(மெட்ராஸ் ஸ்டேட் என்றிருந்த பெயரைத் தமிழ்நாடு என மாற்றுவதற்கான சட்டத்தை 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் முன்மொழிந்து ஆற்றிய உரை, அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 3ஐ ஒட்டி இங்கு மீண்டும் நினைவுகூரப்படுகிறது)

தமிழ்நாடு என்ற பெயர் ஏன் முன்னாலே வைக்கவில்லை? இப்போதுதான் அமைந்திருக்கின்றது, இதற்கு யார் காரணம் என்பதையெல்லாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிற நேரத்திலே நாம் விவாதித்துக்கொண்டிருப்பது அவ்வளவு தேவையல்ல என்று நான் கருதுகிறேன். உண்மையிலேயே நாம் ஒன்றுபட்டு நிறைவேற்றக் கூடிய தீர்மானங்கள் இப்படி ஒன்று இரண்டாகிலும் வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கிடைக்குமானால் உண்மையிலேயே ஜனநாயகப் பண்புகளை வளர்ப்பதற்கு அவை உறுதுணையாக இருக்கும்.

தமிழ் ஒன்றுதான் இப்படி நம்மை இணைத்து வைத்து இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் திரு. தியாகராஜன் அவர்கள் இவ்வளவு தமிழ் செய்யுட்களைச் சொல்லி இதுவரை நான் கேட்டதில்லை. சட்டசபையில் நானும் அவர்களும் ஒன்றாக இருந்தபோது நம்முடைய மாண்புமிகு கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் திருவாய்மொழியில் செய்யுட்களைச் சொல்லுவார்கள். நம்முடைய திரு. தியாகராஜன் அவர்களுடைய தமிழ், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இன்றைய தினம் தமிழ் என்ற உணர்ச்சி அவரை சங்க இலக்கியத்திலிருந்து, தொல்காப்பியம், லெமூரியா கண்டம் வரைக்கும் கொண்டுபோய்க் கடைசியாக அவர் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவந்து இது ஏற்றதுதான் என்று சொன்னார். தமிழ் என்பது எல்லாருடைய உள்ளத்திலேயும் உள்ளது.

இத்தகைய அரிய உணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது. அதிலிருந்து தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் வைப்பதும் ஒரு நல்ல உணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது. அது சோறு போடுமா, துணி கொடுக்குமா என்றெல்லாம்அவர் சொன்னது வேடிக்கைக்காக என்று நான் கருதுகிறேன்.

பெயர் மாற்றத்திலேயே நிலை மாறிவிடும் என்று யாரும் கருதுவதில்லை. திடீரென்று ஒருவர் தன்னுடைய பெயரை மஹாராஜா என்று மாற்றிக் கொள்வதாலேயே அவர் மஹாராஜாவாக ஆகிவிடமாட்டார். அதனாலேயே திரு. தியாகராஜன் அவர்கள் பெயரில் தியாகம் என்று இருப்பதால் அவர் தியாகம் செய்யவில்லை என்று பொருள் அல்ல. அவர் இந்த நாட்டின் விடுதலைக்காக உழைத்தவர், தியாகம் செய்தவர் என்று எல்லோருக்கும் தெரியும், புரியும். ஆனால் அவர் பெற்றோர்கள் இந்த பெயர் சாமி பெயராக இருக்கின்றதே என்று வைத்திருப்பார்கள். அவர் தம்முடைய செய்கையால் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகத் தம்மை ஆக்கிக்கொண்டார்கள். அதைப் போல நம்முடைய இடத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதன் மூலம் நாம் அந்தத் தமிழுக்கு ஏற்றவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள்ள பண்புகளை நாம் பெற்றக்கொள்ள வேண்டுமென்ற எதிர்கால உணர்ச்சிக்குக்கூட நாம் எடுக்கும் முடிவு துணை செய்யும் என்று கருதுகிறேன். ஏற்கனவே தமிழ்நாடு என்ற பெயரை எந்த அரசியல் கட்சியும் உபயோகிக்கத் தவறவில்லை.

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு சோஷலிஸ்ட் கட்சி, தமிழ்நாடு சுதந்திராக் கட்சி என்றுதான் அழைத்து வந்தார்கள். ஆனால் அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் தமிழ்நாடு என்ற பெயர் பட்டியலில் அமையும் நிலைமையை உண்டாக்கி உறுதி அளிக்கப்படவில்லை. இந்த அரசு வந்தபின் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இந்தியப் பேரரசு பெரிய மனதுவைத்து அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள், முன்னால் இருந்த தொழில் அமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்து ஆதரித்துப் பேசியதாகச் சொன்னார்கள். அவர்கள் நினைவு சரியாக இல்லாமல் அப்படிச் சொன்னார்கள் என்று கருதுகிறேன். அந்த தொழில் அமைச்சர்தான் மெட்றாஸ் என்றுதான் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு என்றிருந்தால் சர்வதேச ஒப்பந்தங்கள் எல்லாம் திருத்தி எழுதவேண்டியதிருக்கும் என்றும், ஜெர்மனியை ஜெர்மனி என்றுதான் அழைப்பார்கள் என்றும் கூறினார். ஆகையால் நாம் தமிழ்நாடு என்று அழைக்கலாம், வெளியே உள்ளவர்கள் மெட்ராஸ் என்றே அழைக்கட்டும் என்று சொன்னார். ஆனால் இன்றைய தினம் எல்லாக்கட்சியினராலும் தமிழ்நாடு என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது காலத்தின் மாறுதல் என்று கருதுகிறேனே தவிர வேறு ஒன்றுமில்லை.

நாங்கள் வந்திருக்கும் நேரத்தில் அது நிறைவேற்றப்பட்டிருப்பதை வைதீக பாஷையில் குறிப்பிட வேண்டுமென்றால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அந்தப் பெயர் எனக்கு வரவேண்டுமென்பதற்காக முன்பிருந்தவர்கள் அதைவிட்டுக் கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். அவர்கள் பல விஷயங்களில் நல்ல பெயர் எடுத்த காரணத்தால் இந்தப் பெயர் வைப்பதை விட்டுவிட்டார்கள் என்று கருதுகிறேன். இந்த அரசு நடத்துகின்ற நேரத்தில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் எல்லாக் கட்சியினரும் இதில் ஒத்துழைத்தது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாகும். அதற்காக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர்கள் முழுமனதோடு தமிழ்நாடு என்ற பெயரை இந்த இராஜ்ஜியத்திற்கு ஏற்றுக்கொள்வதில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இந்தியப்பேரரசுக்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ‘ழ' கரம் பற்றி குறிப்பிட்டார்கள். ‘ழ' கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது ஏற்படும் சிக்கல்களை அறிந்தவர்களோடு பழகுகிறவர்களும் ஆங்கிலம் பேசுகிற நாட்டிற்குச் சென்றவர்களும் நன்றாக உணருவார்கள். ‘ழ' என்பதற்கு ஆங்கிலத்தில் எந்த எழுத்துக்களைப் போட்டாலும் அதை ‘ழ' என்று உச்சரிக்க முடியவில்லை பலருக்கு. நான் டெல்லி சென்றிருந்த போது அங்குள்ள பல தலைவர்களிடத்தில் ‘ழ' எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதற்காக அது எப்படிவரும், நாக்கை உள்பக்கம் தொட்டும், விட்டும் உச்சரிக்க வேண்டுமென்றும் அப்போதுதான் ‘ழ' உச்சரிப்பு வருமென்றும் சொல்லிப் பார்த்தேன். அது வரவில்லை முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அவர்கள் சொல்லும்போது ‘கழகம்' என்று சொல்லாமல் எப்போதும் ‘கழுகம்' ‘கழுகம்' என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கழகம் என்று வரவில்லை. வெளியே உள்ளவர்களுக்கும் அந்த நிலையிருக்கிறது. வெளியே உள்ளவர்களின் உச்சரிக்கமுடியாத காரணத்தால்தான் ‘ழ' வராமல் போனது.

இப்போது நாம் அடைந்திருக்கிற வெற்றி இதுவரையில் சென்னை ராஜ்ஜியம் என்றும் மெட்றாஸ் ஸ்டேட் என்றும் இருந்தது, இப்போது தமிழ்நாடு என்ற சிறப்புப் பெயரை, அரசியல் சட்ட ரீதியாகப் பெறுவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கு கொள்ளுவார்கள். அதில் எல்லாக் கட்சியினரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்கும், நல்லவற்றிற்கு இவர்கள் ஒன்றுகூடுவார்கள் போலிருக்கிறதே என்ற நம்பிக்கை ஏற்படும் ஆகவே நல்ல காரியங்களில் இந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டுமென்ற வேண்டுகோளை இணைத்து இந்தத் தீர்மானத்தை முழு அளவில் ஏற்றுக்கொண்டு முழுமனதோடு ஏற்று நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

சமூகநீதியா, அநீதியா?

சமூகநீதியா, அநீதியா?

பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையில் ஒரு புதிய சிக்கலை இப்போது மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. எல்லோருக்குமாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை, இனிமேல் பனிரெண்டாம் வகுப்பில் 60 மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரியது என ஒரு சுற்றறிக்கை வெளிவந்துள்ளது. மத்திய அரசின் சமூகநீதித் துறையிலிருந்து இதுபோன்ற சமூக அநீதி ஒன்று வெளிப்பட்டுள்ளது நம்மை வேதனைக்குள்ளாக்குகிறது.

பனிரெண்டாம் வகுப்பில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே உயர்கல்வியில் இடம்பெற முடியும் என்னும்போது, உதவித்தொகை பெறுவதற்கு மட்டும் எதற்காக 60 விழுக்காடு இருக்க வேண்டும் என்பதற்கான எந்த விளக்கமும் அந்த ஆணையில் இல்லை. ஆண்டுகள் பல போராடிப் பெற்ற உரிமைகளை, அங்கே உள்ள அதிகாரிகள் சிலர் ஓர் ஆணை போட்டுத் தடுத்துவிட முடிகிறது என்பது இன்றைய அமைப்பில் உள்ள பெரும் குறைபாடே ஆகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் அல்லது குறைத்துவிட வேண்டும் என்று கருதுகிற மேல்தட்டு அதிகாரிகள் ஓசைப்படாமல் இப்படிச் சில ஆணைகளைப் பிறப்பித்து விடுகின்றனர். அவர்களை நம்பி அமைச்சர்களும் கையெழுத்துப் போட்டுவிடுகின்றனர். அதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மதிப்பெண் எல்லை ஒன்று வைப்பதன் மூலம், மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்ற கணக்கில்தான் அவ்வாறு செய்யப்படுவதாக நொண்டிச் சமாதானம் ஒன்று கூறப்படுகிறது. இதன்மூலம் அச்சத்திறகும், நம்பிக்கை இழப்பிற்கும்தான் மாணவர்கள் ஆளாவார்களே அல்லாமல், படிப்பின் பக்கம் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நினைப்பது சரியன்று. அதுதான் சேலத்திலும் நடந்திருக்கிறது. இந்த ஆணை வெளிவந்தவுடன் சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மதில்களின் மீதேறி நின்று கீழே குதித்துவிடுகிற நிலைக்கும் வந்துள்ளனர். ஒரு மாணவன் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு, பிறகு காப்பாற்றப்பட்டிருக்கிறான்.

இனிமேல் உதவித்தொகை நிறுத்தப்படும் என்றுகூட அல்லாமல், ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகைகளும் கூட திரும்பப் பெறப்படும் என்னும் அறிவிப்புத்தான் அவர்களை அந்தளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் என்பவர்கள், சமூக நிலையிலே மட்டுமல்லாமல், பொருளாதார நிலையிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவே இங்கு உள்ளனர். வர்க்கமும் சாதியும் இங்கு மிக நெருக்கமாக ஒன்றோடொன்று ஊடாடியும், சில வேளைகளில் இணைந்தும் செல்கின்றன. எனவே உதவித்தொகையை முடக்குவதென்பதும், ஏற்கனவே கொடுத்த தொகையைத் திருப்பிக் கேட்பதென்பதும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் கைவைப்பது போலாகும்.

இந்நிலையில் கடந்த சனவரி 8ஆம் நாள், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் முதலமைச்சரைச் சந்தித்து, இதுகுறித்த அவர் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய அரசிடமிருந்து வருகின்றன எந்த ஒரு ஆணையையும், மாநில அரசுகள் அப்படியே சுற்றுக்கு விட்டுவிடுவதுதான் இயல்பு. அதைப் போன்றே இந்த ஆணையும் சுற்றுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதன் பின்பே சிறுத்தைகள் முதல்வரைக் கண்டு நிலைமையை விளக்கி உள்ளனர். அடுத்த நாளே, அந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதில் தன் நிலைப்பாட்டை மறுஆய்வு செய்து ஆணையை விலக்கிக்கொள்வதோடு, இதுபோன்ற தவறான அறிக்கைகளை அனுப்புகின்ற அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

என்ன தகுதியில்லை இளையராஜாவிற்கு

என்ன தகுதியில்லை இளையராஜாவிற்கு

பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளின் மீது எங்களுக்கொன்றும் ஈடுபாடில்லை. ஆனாலும்.. இந்திய அளவிலான இத்தகைய விருதுகள் எல்லாம்.. அதிகாரமய்ய அக்ரகாரத்து அக்கிரமமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பண்ணைபுரத்து இசைஞானி இளையராஜாவை உலக இசையறிஞர்கள் மிகச்சிறந்த இசைப் பேராசிரியராகப் போற்றிப் பாராட்டுகிறார்கள் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களால்லாம் மரியாதை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இசைப்பேராசான் இந்த முறையும் அவமரியாதை செய்யப்பட்டிருக்கிறார். இந்திய தேசியம் பேசிய நடிகர் திலகம் அவர்களையே தமிழனாய்ப் பார்த்து நிராகரித்த இந்தியர்கள்தாமே அவாள்கள்!

இந்த விருது வழங்குகிற மேதாவிகளிடம் தமிழர்களாகிய நாங்கள் பணிவாக வைக்கிற விண்ணப்பம் ஒன்றே ஒன்றுதான்...

இந்திய ஆண்டைமார்களே! இதற்கு மேலும் எங்கள் இசைஞானிக்கு இத்தகைய விருதுகளைக் கொடுத்து அவமானப் படுத்திவிடாதீர்கள்!

இந்தச் சூழலில் நாங்கள் கேட்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான்... பத்மஸ்ரீ, பத்மபூஷன், ஞானபீடம் போன்ற விருதுகளின் தேர்வுத் தகுதிக்கு இசைஞானி... எந்த வகையில் தகுதியில்லாதவராகிறார் என்பதைக்

கூறமுடியுமா... ஸ்வாமிகளே!

- அறிவுமதி.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

உலகுக்கு ஓர் அகல் விளக்கு

உலகுக்கு ஓர் அகல் விளக்கு

(க.சமுத்திரம்)

கியூபாவில் மக்களாட்சி இல்லை என்று இன்னும் அமெரிக்கா சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆம் அமெரிக்கா சொல்படி நடக்கும் மக்களாட்சி கியூபாவில் இல்லைதான். உண்மையான மக்கள் ஆட்சி அங்கு நடக்கிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றத் தேர்தலும், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 14 மாநிலங்களின் தேர்தல்களும் நடைபெறுகின்றன. 16 வயது முடிந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளில் நடப்பதைப்போல் தேர்தல் திருவிழாவாக நடப்பதில்லை.

கியூபாவில் வேட்பாளர்களை ஆய்வு செய்வது அந்தந்தப் பகுதியிலுள்ள மக்கள்தான், முனிசிபல் தேர்தலுக்கும் மற்ற தேர்தலுக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள மக்கள் யாரைப் வேட்பாளராக நிற்க வைப்பது என்பதைத் தெரிவிக்கிறார்கள். பத்திரிக்கைகளில் விளம்பரம், கண்கவரும் சுவரொட்டிகள், மேடைகளில் மேசையைக் குத்திப் பேசுகிற அனல் பறக்கும் பேச்சு, பாத யாத்திரைகள் இப்படி எதுவுமே அரங்கேறுவதில்லை. மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களின் குடியிருப்புக் கட்டிடத்தின் முன்பக்கத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் ஆகிய அனைத்தையும் ஒட்டிவிடுகிறார்கள். மக்களே தங்களின் வேட்பாளர்களைத் தேர்வு செய்திருப்பதால் அந்த வேட்பாளர்களின் நடத்தை, ஒழுக்கம், குணங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே மக்கள் அறிந்திருப்பார்கள். இப்படிப்பட்ட வேட்பாளர்களில் ஒருவரை தங்களின் பிரதிநிதியாக மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு வேட்பாளரும் 2.5 கோடி டாலர் செலவழிக்கிறார்கள். 1992 தேர்தலில் அமெரிக்காவின் மொத்த செலவு 5040 கோடி டாலர். கியூபாவில் 25 டாலர்கள் கூட வேட்பாளர்கள் செலவழிப்பதில்லை. தேர்வு செய்யப்பட்ட பிறகு கார், பங்களா, சுவிஸ் சேமிப்பு என்று மாறுவதில்லை. மக்களோடு மக்களாக வாழ்கின்றனர், தொழிலாளர்களோடு, விவசாயிகளோடு சேர்ந்து வேலைக்குச் செல்கின்றனர். வேலை முடிந்த பின்னால் தங்கள் தொகுதி மக்களின் தேவை அறிந்து சேவை செய்கின்றனர். இந்தியாவைப்போல் தேர்தல் முடிந்தவுடன் வாக்காளர்களின் கடமை முடிந்துவிடவில்லை. தவறு செய்யும் உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும் அதிகாரம் அங்கு உண்டு. பாராளுமன்ற உறுப்பினர்களில் 22.8% பெண்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் முழு ஈடுபாட்டோடு 99% வாக்களிக்கின்றனர்.

1959 ஜனவரியில் பாடிஸ்டா அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி அரசு ஆட்சியில் அமர்ந்தது. இன்று காஸ்ட்ரோவுக்கு வயது 83. கியூபா அரசுக்கு வயது 49. அடுத்த ஆண்டு 50வது பொன்விழா கொண்டாட உள்ளது.

இதற்கிடையில் 2007 ஜுன் 28ஆம் தேதி சிஐஏ உளவு அமைப்பு ஒரு ஆவணம் வெளியிட்டது. அதில் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய 700 தடவைக்கு மேல் முயற்சி செய்ததை ஒத்துக் கொண்டுள்ளது. அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, நோயோடும் போராடி வென்று உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். ஆட்சிப் பொறுப்பைத் தற்காலிகமாக ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு ஆட்சிக்குத் துணையாக நிமிர்ந்து நிற்கிறார் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயற்சித்ததைப் போலவே, கியூபாவை வீழ்த்த அமெரிக்கா புதுப் புதுச் சட்டங்கள் மூலம் பொருளாதாரத் தடை விதித்தது. தன் தூதுவர் உறவை முறித்துக் கொண்டது. எதிர்ப் புரட்சியாளர்களை தயார் செய்து, நாடு முழுவதும் குண்டுகள் வெடிக்கச் செய்தது. விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. நோய்க் கிருமிகளையும், இரசாயனப் பொடிகளையும் தூவின.

சோவியத் உதவி செய்ய முன் வந்தது. கியூபாவின் மொத்தச் சர்க்கரையையும் சோவியத் வாங்கிக் கொண்டது. அதற்குரிய விலையில் 80 சதத்தைக் கியூபாவுக்குத் தேவையான பொருள்களாகவும், 20 சதம் டாலராகவும் கொடுத்தது. 100 கோடி டாலர் கடன் கொடுத்து உதவியது. சீனா போன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டின.

கியூபா மக்களும் கடும் உழைப்புக்குத் தயாரானார்கள். மக்கள் துணையோடு, நட்பு நாடுகளின் உதவியோடு தடைகளை எதிர்த்துக் கியூபா எழுந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்கா நேரடிப் போர் அறிவித்தது. பே-ஆப்-பாக்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தப் போரில், அமெரிக்கா 40 ஆயிரம் வீரர்களையும், குண்டுகள் தாங்கிய விமானங்களையும், அணு ஆயுதம் சுமந்த நீர்மூழ்கிக் கப்பல்களையும் பயன்படுத்தியது. இந்தப் போர் 73 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா புறமுதுகுகாட்டி ஓடியது. உலக நாடுகள் முழுவதும் அமெரிக்காவைக் கண்டனம் செய்தன.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் கியூபா தன் பயணத்தைத் தொடர்ந்தது.

புரட்சி அரசாங்கம் முதலில் கல்வியில் தனது சீர்திருத்தத்தைத் தொடங்கியது. கல்வி முழுவதுமே இலவசமாக்கியது. 9ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி. தன் பட்ஜெட்டில் 11 சதம் கல்விக்கு ஒதுக்கும் ஓரே நாடு கியூபா தான்.

“நிதி மூலதனத்தை விட, மனித மூலதனம் சக்தியானது, மதிப்பானது” என்ற புதிய தத்துவத்தைக் கியூபா மக்களுக்கு போதித்தது.

1960 செப்டம்பர் 6ஆம் நாள் தன் எழுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கியது. உங்களுக்குத் தெரிந்தால் கற்றுக் கொடுங்கள், இல்லையேல் கற்றுக் கொள்ளுங்கள் என்ற முழக்கம் நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் என இரண்டு லட்சம் பேர் எழுத்தறிவு இயக்கத்தில் இணைந்தனர். இதில் பாதிப் பேர் பெண்கள். இதையும் சீர்குலைக்க அமெரிக்கா பள்ளிக்கூடங்களில் குண்டு வீசியது. 1961 ஜனவரி 5இல் எழுத்தறிவுத் தொண்டர் கான்ரேடே பெனிசிட்டீஸ்-ஐக் படுகொலை செய்தது அமெரிக்கா. சிறிதும் தளரவில்லை கியூபா. எழுத்தறிவு இயக்கத்திற்கு கான்ரேடே பெனிசிட்டீஸின் பெயரைச் சூட்டி முன்னேறியது.

கியூபாவில் மொத்த மக்களும் எழுத்தறிவு உள்ளவர்கள். 170 மக்களுக்கு ஒரு மருத்துவர் வீதம் 68,000 மருத்துவர்கள். ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளில் 68% பெண்கள், விஞ்ஞானிகளில் 60% பெண்கள்.

பார்சிலோனா ஒலிம்பிக் பந்தயத்தில் அந்த சின்னஞ்சிறு கியூபா 31 தங்கப் பதக்கங்கள் உள்பட, 140 பதக்கங்களை வென்று, தரவரிசையில் 5வது இடத்தைப் பிடித்தது. விளையாட்டின் மூலம் கிடைத்த பெரும் பணத்தை கியூப விளையாட்டு வீரார்கள், விளையாட்டுத் துறைக்கு அளித்தனர். ஆனால் இந்தியாவின் கோடிஸ்வர்களின் வரிசையில் டெண்டுல்கர் உள்ளார்.

இன்றும் தடை தொடர்கிறது. தடை என்றால் தலைவலிக்கு ஆஸ்பிரின் மாத்திரை கிடைக்காத அளவுக்குத் தடை. உலக உணவு மாநாட்டில் காஸ்ட்ரோ பின்வருமாறு பேசினார், “எங்கள் சந்தைகளில் மக்கள் வரிசை இல்லை, நெருக்கடியும் இல்லை. ஏன் என்றால் சந்தையில் வாங்குவதற்குப் பொருட்கள் இல்லை. எங்கள் நாட்டுச் சாலைகளில் எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி கிடையாது. ஏன் என்றால் வாகனங்கள் ஒட்ட எங்களிடம் பெட்ரோல் இல்லை. எங்கள் மக்கள் அனைவரும் பால் கலந்த தேனீர் அருந்த மாட்டார்கள். ஏன் என்றால் எங்களிடம் போதிய பால் இல்லை” என்றார்.

ஆம் கியூபாவில் பால் இல்லாத கருப்புத் தேனீர்தான் குடிக்கின்றனர். குழந்தைகளுக்கு மட்டும் பால் வழங்கப்படுகிறது.

1 கோடியே 10 லட்சம் மக்கள் கொண்ட கியூபாவில் 3 லட்சம் மிதிவண்டிகள் உள்ளன.

கியூபாவில் கோடிஸ்வரர்கள் கிடையாது. பட்டினிகிடப்பவர்களும் கிடையாது. ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையின்படி லத்தின் அமெரிக்காவில், மொத்த மக்களுக்கும் சரிவிகித சத்துணவு வழங்கும் ஒரே நாடு கியூபா. எல்லோருக்கும் 3130 கலோரி உணவு வழங்கப்படுகிறது. ஆனால் உலக கோடீஸ்வரர்கள் வாழும் அமெரிக்காவில் இன்றும் 3 கோடிப் பேர் அரைப்பட்டினி. கியூபாவின் சராசரி வயது புரட்சிக்கு முன் 55, புரட்சிக்கு பின் ஆண்கள் சராசரி வயது 75, பெண்கள் சராசரி வயது 79, குழந்தைகள் நோயில் இறக்கும் விகிதாச்சாரம் கியூபாவில் தான் மிகக் குறைவு.

கியூபா மருத்துவர்கள் 70 ஏழை நாடுகளை விரும்பித் தேர்வு செய்து பணியாற்றுகின்றனர். வருமானத்தின் ஒரு பகுதியை நாட்டின் மருவத்துவத்துறைக்கு கொடுக்கின்றனர். 120 மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் 25,000 பேருக்குக் கியூபா பல்கலைகழகம் இலவச மருத்துவக்கல்வி தருகிறது.

அமெரிக்காவின் தடைகளையும், சோதனைகளையும் பற்றி காஸ்ட்ரோ, ‘வானில் மேகம் மறைத்து இருப்பதால் சூரியன் இல்லை என்று பொருளில்லை. மேகம் உடைந்து துகள்களாக நிலத்தில் விழும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூரியன்' என்றார்.

பெட்டிச் செய்தி

20.01.2008 அன்று நடந்து முடிந்துள்ள கியூபாவின் தேசியப் பேரவைத் தேர்தலில் பிடல் கேஸ்ட்ரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். குடலிறக்க நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். அதே நேரத்தில், தேசியப் பேரவையின் நிரந்தர அமைப்பான ஸ்டேட் கவுன்சிலின் தலைவர் பொறுப்புகளைத் தானே கவனித்து வந்தார். கடந்த 50 ஆண்டுகளாக கியூபாவின் ஒப்பற்ற அதிபராக விளங்கியவர் காஸ்ட்ரோ. அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அமையவிருக்கின்ற புதிய நாடாளுமன்றம் அவருக்கு ஓய்வளிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

பிப்.24 அன்று கூடும் தேசியப் பேரவை மீண்டும் ஸ்டேட் கவுன்சில் தலைவராகக் காஸ்ட்ரோவை தேர்ந்தெடுக்குமா என்பது தெரியவில்லை.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

கருத்துரிமை மாநாடு

பதிவுகள்

விடுதலைச் சிறுத்தைகள்

கடலெனத் திரண்ட

கருத்துரிமை மாநாடு

-சுப.வீரபாண்டியன்

“வங்க தேச விடுதலை நியாயம்

பாலஸ்தீனப் போர்க்களம் நியாயம்

கிழக்குத் தீமோர் விடுதலை நியாயம்

எரித்திரியாவின் எழுச்சி நியாயம்

ஈராக் மக்களின் யுத்தம் நியாயம்

அயர்லாந்தில் நீ வைத்திடும் நியாயம்

ஐ.நா. சபையில் வாதிடும் நியாயம்

இத்தனை நியாயமும் இந்திய நியாயம்

ஈழத்துக் கில்லையே இதென்ன நியாயம்?”

என்று கேட்பார் கவிஞர் தணிகைச்செல்வன் இந்திய அரசு ஈழ மக்களுக்கு நியாயம் செய்யவில்லை என்பது ஒரு புறமிருக்க, ஈழ மக்களுக்காக நாம் குரல் கொடுப்பதைக் கூட பயங்கரவாதம் என்று பறைசாற்றும் சிலருக்கு துணைபோகும் அநியாயமும் இங்கு நடக்கிறது.

17 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற துன்பியல் நிகழ்வான இராசீவ் காந்தி கொலையை மட்டுமே மய்யப்படுத்தி, ஈழ ஆதரவையே பயங்கரவாதமாகக் காட்டமுயலும் போக்கு இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பார்ப்பனியக் கும்பல் ஒருபுறமும், உள்ளூர்க் காங்கிரஸ்காரர்கள் மறுபுறமுமாக இந்தப் பல்லவியைத் தொடர்ந்து பாடி வருகின்றனர்.

பொடா வழக்கில் எங்களுக்குப் பிணை வழங்கித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குறிப்பை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது. 16.12.2003 அன்று நீதிபதிகள் இராஜேந்திர பாபுவும், ஜி.பி. மாத்தூரும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு வாய்மொழி ஆதரவு வழங்குவது குற்றமாகாது என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். அன்றைய மத்திய அரசின் கருத்தும் அதுவாகவே இருந்தது. எனினும் இதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், விடுதலைப் புலிகளைப் பற்றி மட்டுமன்று, தமிழீழத்தைப் பற்றிப் பேசுவதே குற்றச் செயல் என்பது போல இங்கு திட்டமிட்டு கருத்துகள் பரப்பப்படுகின்றன.

இச்சூழலில், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில், கருத்துரிமை மீட்பு மாநாடு ஒன்று, சென்னையில், மொழிப்போர் வீரர்கள் நாளான 25.01.2008 அன்று நடத்தப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் தலைகள். எள் விழ இடமில்லாத மக்கள் கூட்டம். ‘பல்லாயிரக்கணக்கில்' என்பது எவ்விதத்திலும் மிகைப்படுத்தப்படாத சொல். அந்த மக்கள் வெள்ளத்தின் நடுவில், ‘கண்டனமும், இரங்கலும் பயங்கரவாதமா' என்ற கேள்வியோடு மாநாடு தொடங்கியது.

சரியான தருணத்தில் சரியான மாநாட்டைக் கூட்டியுள்ள சிறுத்தைகள் கண்டிப்பாய்ப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவ்வமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தமிழினம் என்றும் நன்றி சொல்லும்.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று எவரும் வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்தவும் முடியாது. எந்த ஒன்றையும் ஏற்பதும், மறுப்பதும் அவரவர் உரிமை. ஆனால் அவ்வியக்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டும், எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை வெளியிடலாம், ஆதரிப்பவர்கள் வாய்திறக்கவே கூடாது என்பது கருத்துரிமையைக் காலில் போட்டு மிதிப்பதாகாதா என்பதே அங்கு வைக்கப்பட்ட வாதம். அதைப்போலவே தடையை நீக்கவேண்டும் என்று கோருவதும், எந்த ஒரு குடிமகனுக்கும் உரிய அடிப்படை உரிமையாகும். அதனையும் இங்கு சிலர் மறுப்பது, முற்றுமுழுதான ஜனநாயக மறுப்பாகும்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியாவில் மூன்று முறை அரசினால் தடை செய்யப்பட்டிருந்தது. அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதையடுத்து 1948ஆம் ஆண்டும், 1975இல் நெருக்கடி நிலைக் காலத்திலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு 1992ஆம் ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. மூன்று முறையும் அத்தடையை நீக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டுதான் இருந்தனர். 1949இல் காந்தியாரின் நெருங்கிய நண்பரான பிர்லாவே அந்த முயற்சியை முன்னெடுத்தார். வல்லபாய் படேல் அக்கருத்தை அன்றைய தலைமை அமைச்சர் நேருவிடம் கொண்டு சென்றார். அப்போது காந்தியாரைக் கொன்ற இயக்கத்திற்கா ஆதரவு என்று எவரும் கேட்கவில்லை.

பஞ்சாப் பொறிகோயிலின் உள் நுழைந்து, பிந்தரன் வாலேயை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்ற பிறகு சீக்கியர்கள் சிலரால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதன் விளைவாக அன்று சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்பது ஒரு கசப்பான உண்மைதான் எனினும், சீக்கிய இனமே குற்றவாளி இனம் என்று யாரும் கருதவில்லை. அந்த இனத்தைச் சார்ந்த மன்மோகன்சிங் இன்றைக்கு இந்தியாவின் தலைமை அமைச்சராகவே ஆக்கப்பட்டுள்ளார்.

காந்தியடிகளின் கொலைக்கும், இந்திரா காந்தியின் கொலைக்கும் ஒரு நியாயம், இராசீவ் காந்தியின் கொலைக்கு மட்டும் இன்னொரு நியாயமா? என்னும் வினாவை எல்லோர் நெஞ்சிலும் மாநாடு எழுப்பியது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் உணர்ச்சி மிகுந்த உரையாற்றிய தொல்.திருமாவளவன் மிக அழுத்தமாக சில கேள்விகளை முன்வைத்தார். “ஓர் இயக்கத்தை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டென்றால், அதை ஆதரிப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. கடவுள் உண்டு என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்றால், இல்லை என்று மறுப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு, சாதி வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்றால், சாதியை ஒழிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு” என்று அவர் முழக்கமிட்டபோது அரங்கம் அதிர்ந்து அடங்கியது.

சாதாரண மக்களாகிய எங்களுக்கு மட்டுமன்று, தமிழகத்தின் முதலமைச்சர், சமத்துவப் பெரியார் தலைவர் கலைஞருக்கே கூட அந்த உரிமையை இங்கு சிலர் மறுக்கின்றனர் என்று சொன்ன அவர், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் கவிதை எழுதியதைக் கூட பயங்கரவாதத்திற்குத் துணை போவதென்று சிலர் கூறும் கேலிக்கூத்தைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடினார்.

மாநாடு தொடங்கிய போது, மாண்டுபோன நடராசன், தாளமுத்து உள்ளிட்ட மொழிப்போர் மாவீரர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. இரைச்சலோ, பேச்சோ நடமாட்டமோ இல்லாமல் அமைதி காக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டதை ஏற்று, அந்த மாபெரும் மக்கள் கூட்டம் ஒரு மௌனத் தீவாய் மாறிப் போனது. அதன்பிறகு அங்கு எழுந்த, கருத்துரிமைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுகள், ஈழம் பற்றிப் பேசுவதற்குக் கூட அஞ்சி அடங்கிக் கிடக்கும் தமிழகத்தின் மௌனத்தை மாற்றும் தொடக்கமாய் அமைந்தது.

ஆம்... அன்று மௌனம் காத்தவர்களும் அவர்கள்! தமிழகத்தின் மௌனம் கலைத்தவர்களும் அவர்கள்.

பெட்டிச் செய்தி :

எப்போது ஈழம் பற்றிப் பேசினாலும், இராசீவ் காந்தி கொலையை மட்டுமே இங்கு சிலர் முன்வைக்கின்றனர். சோனியா காந்தி அம்மையார் கூட, யாருக்கும் தூக்குத்தண்டனை கூடாது, எனக்கு நேர்ந்த துன்பம் உலகில் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று பெருந்தன்மையாகப் பேசியிருக்கிறார். ஆனால் இங்குள்ள உள்ளூர்க் காங்கிரஸ்காரர்களோ, இராசீவ் காந்தியின் மரணம் ஏற்படுத்திய துக்கத்திலிருந்து இன்னும் விடுபடாதவர்களைப் போலப் பேசுகின்றனர். என்ன செய்வது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 17 ஆண்டுகளாக, சாப்பிடவே இல்லையாம். இராசீவ் காந்தியை பற்றிய துக்கத்திலேயே மூழ்கிக்கிடக்கிறாராம். வேலூர் ஞானசேகரன் நிலைமையோ இன்னும் மோசம். 17 ஆண்டுகளாக பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லையாம். மனைவியும் பிள்ளைகளும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டார்களாம். இராசீவ் காந்தியே போன பிறகு இனி எனக்கு ஏன் தண்ணீர் எனக் கூறிவிட்டாராம். நம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருக்கிறாரே, துக்கம் தொண்டையை அடைப்பதால், அவர் பல் விளக்கியே 17 ஆண்டுகள் ஆகிறதாம். போயஸ் தோட்டத்து அம்மையாரும், இராசீவ் காந்தியை எண்ணிக் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு உடம்பே மெலிந்து விட்டாராம்.

-மாநாட்டு நிறைவுரையில் தொல்.திருமாவளவன்.

பெட்டிச் செய்தி

கருத்துரிமை மாநாட்டில் உலக அளவிலான மனித உரிமைப் போராளிகள் கலந்து கொண்டனர். செருமனியில் இருந்து வந்திருந்த டாக்மர் எல்மன், கொழும்பிலிருந்து வந்திருந்த, நவ சம சமாஜ் கட்சி உறுப்பினர் குமாரதுங்க ஆகியோர் உரையாற்றினர். சிறீலங்காவில் நடப்பது போன்ற மனித உரிமை மீறல்களும், அரசபயங்கரவாதமும் உலகின் எந்த மூலையிலும் நடைபெறுவதில்லை என்றார் எல்மன். குமாரதுங்க பேசுகையில், சிங்களராகப் பிறந்தாலும், நியாயத்திற்காக குரல் கொடுப்போர் அங்கும் இருக்கவே செய்கின்றனர் என்றும், அவர்களை இராசபக்சே அரசு ‘சிங்களக் கொட்டியா' (சிங்களப் புலி) என்று அழைப்பதாகவும், இப்போது 26 சிங்களப்புலிகள் அங்கே சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

தமிழ்நாடு மகளிர் ஆணையம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கு.மா.இராமாத்தாள் அவர்களுடனான நேர்காணல்)

தமிழ்நாடு மகளிர் ஆணையம் எப்போது, எந்த நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டது?

இந்த ஆணையம் 1993இல் ஏற்படுத்தப்பட்டது. நான் பதவியேற்று ஓராண்டாகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு வகை செய்கின்ற விதத்தில் 33 சட்டங்கள் உள்ளன. இந்த பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி பெண்களுக்குத் தெரியப்படுத்துவது, அச்சட்டங்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவது, அதற்கான சட்ட உதவிகளைப் பெற வழிகாட்டுவது ஆகியன இவ்வாணையத்தின் முக்கியமான நோக்கங்கள். இதனை மையமாகக் கொண்டு எங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.

இப்போழுது இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் என்னவாக இருக்கின்றன?

இதற்கு முன் மூன்று ஆண்டுகள் இந்த ஆணையம் முடக்கிவைக்கப்பட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். நான் பதவியேற்ற பிறகு ஆணையத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறேன். சுற்றுச்சூழல் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற பிற துறைகளின் ஒத்துழைப்புடன் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த இருக்கிறோம். மல்லிகா அக்காவிடம் கேளுங்கள் என்ற சட்ட விழிப்புணர்வு நூல், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற சிறு கையேடு ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறோம். அதோடு இதனை 18 மாவட்டங்களில் கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியிருக்கிறோம். இதற்குப் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம்.

பெண்களுக்கான சட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லுகின்ற அதே நேரத்தில், அவர்களுக்கெதிரான சமூக அடக்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறீர்கள்?

வந்தபின் பரிதவிப்பதை விட, வரும்முன் காத்துக் கொள்வது சிறப்பல்லவா! அந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளில் கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் கல்லூரி மாணவர்களை (ஆண், பெண் இருபாலரையும்) ஒருங்கிணைத்து கருத்தரங்கு ஒன்றினை நடத்தினோம். இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே போன்ற கருத்தரங்குகளை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கல்லூரிகளிலும் நடத்த இருக்கிறோம். பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு ஒன்று உருவாக்க அறிவுறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் நியமிக்கப்படுவார். உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாக இருப்பார்கள். இவர்களுடன், அமைப்புசாரா தொண்டு நிறுவனமோ அல்லது என்.ஜி.ஓ. வோ சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நாம் என்னதான் சட்டப் பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் வராமல் முழுமையான பெண்கள் முன்னேற்றம், விடுதலை என்பது கடினமாகத்தான் இருக்கும்.

இந்த ஆணையத்தின் அதிகாரங்கள் எவை?

எங்களுக்கு இதுவரையிலும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைத் தமிழக அரசு அளிக்கவில்லை. ஆனால் ஆணையத்தின் தலைவருக்கென்று வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்கள் உள்ளன. அதாவது யாராவது மனு கொடுத்தார்கள் என்றால், எதிர் மனுதாரருக்குச் சம்மன் அனுப்பி, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், உரிய துறைகளுக்கு மனுவை அனுப்பி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்யவும் அதிகாரம் உண்டு. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் அவர்களுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் இருக்குமானால் அதில் திருத்தங்கள் செய்யும்படி பரிந்துரைக்கவும் இவ்வாணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வமான தண்டனையோ, தீர்ப்போ சொல்லுகின்ற அதிகாரம் எங்களுக்கு இல்லை. வரையறைகளுக்குள் அடங்கிய அதிகாரங்களாகவேதான் இருக்கின்றன.

பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு, எந்த நிலையில் இவ்வாணையத்தை அணுகலாம்?

ஆரம்ப நிலையிலேயே எங்கள் ஆணையத்தை அணுகலாம். பிரச்சினை வரக்கூடும் என்ற சூழ்நிலையில் முன்கூட்டியே பாதுகாப்பு கருதியும் எங்கள் உதவியை நாடலாம். பெரும்பாலான பெண்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது. காரணம் அதனால் தனக்கு அல்லது தன் குடும்ப வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்துவிடுமோ, தன்னுடைய மாமியாரோ, கணவனோ தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற அச்சம் பெண்களுக்கு இருக்கிறது. நீ ஒழுங்காக இருந்திருந்தால் இந்த மாதிரியான நிகழ்வு நடந்திருக்குமா என்று பெண்ணின் மீதே குற்றம் சுமத்துகின்ற மோசமான கண்ணோட்டம் மாறுகின்ற வரையில் இந்தத் தயக்கங்கள் நீடிக்கத்தான் செய்யும். வேலை செய்துதான் ஆக வேண்டும் என்ற குடும்பச் சூழல், வேலை உயர்வு தடுக்கப்படும் என்ற உயரதிகாரிகளின் மிரட்டல்கள் பெண்களை வாய்மூடி ஊமைகளாக்கிவிடுகின்றன. இந்நிலை மாறி, தங்களது உரிமைகளை எல்லா இடங்களிலும் நிலைநாட்டுகின்ற துணிச்சலைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் எந்த மாதிரியான பிரச்சினைகள் அதிகமாக வருகின்றன?

பெரும்பாலும் வரதட்சணை தொடர்பான வழக்குகளே அதிகமாக வருகின்றன. இன்று மட்டும் 20 மனுக்கள் வந்துள்ளன. நீங்கள் உள்ளே வரும்போது, ஒரு குடும்பத்தினர் என் அறையிலிருந்து வெளியே சென்றார்களே, அவர்களுடைய வழக்கு வித்தியாசமானது. பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது பெற்றோர்கள் தங்களுடைய வரதட்சணை பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள். மேலும் அதிகம் படித்து, பெரிய பதவிகளில் இருப்பவர்களும் இந்தக் கொடுமைகளைச் செய்வதுதான் அதிர்ச்சியாக உள்ளது. தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போல, முதலில் பெண்கள் நகைகள் மீதான மோகத்தை விட்டொழிக்க வேண்டும். உடைகளையும், நகைகளையும் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, உலக நடப்பையும், நாட்டு நடப்பையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதேபோல், இளைஞர்களும், திருமணச் சந்தையில், தாங்கள் விற்பனைப் பொருளாக்கப்படுவதை அவமானமான இழிவான செயல் என்பதை உணர வேண்டும். சுயமரியாதையும், தன்மானமும் உள்ளவர்கள், வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

அடுத்தது, மணவிலக்கு தொடர்பான வழக்குகளும் வருகின்றன. எங்கோ ஒன்றிரண்டு என்றிருந்த நிலைமாறி தொட்டதெற்கெல்லாம் மணவிலக்குக் கோரும் நிலை வந்துவிட்டது. காரணம் நல்ல மனப்பக்குவம் இல்லாதது, வீட்டுப் பெரியவர்களின் வழிகாட்டலின் கீழ் நடக்க விரும்பாத தலைமுறை இடைவெளி போன்றவைதான். கணவன், மனைவி, வீட்டுப் பெரியவர்கள் அனைவருமே விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொண்டால், பிரச்சினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியும்.

அரவானிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அண்மையில் பேசியிருந்தீர்கள், அதைப் பற்றிச் சொல்லுங்களேன்?

அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்ற உண்மையை மறந்து, காரணமே இல்லாமல் அவர்களைத் தள்ளிவைத்து வேடிக்கைப் பொருளாக்கி விட்டோம். வீட்டில் வளர்க்கின்ற ஆடு, மாடு, நாய், பூனை இவற்றைக்கூடப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவர்கள் இவர்களைக் கண்டால் மட்டும் ஒம்போது என்று கேலி செய்கிறார்கள். இப்படிப் பிறந்தது இவர்களின் தவறல்ல. குரோமோசோம்களின் இணைவில் இயற்கை செய்த தவறு. சமுதாயம் மட்டுமல்ல, சொந்த வீட்டினரே புறக்கணிக்கின்ற இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. பெரும்பாலும் அவர்கள் தங்களைப் பெண்களாக அங்கீகரிப்பதையே விரும்புகிறார்கள். இவர்கள் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற வேண்டுமானால், இவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளைத் தர வேண்டும். இட ஒதுக்கீடு என்ற முன்னுரிமையால்-சலுகையால் மட்டுமே இது சாத்தியப்படும். இதனை விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட பொது விசாரணைக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரவானிகள் கலந்து கொண்டனர். தாங்கள் சந்திக்கின்ற இடர்ப்பாடுகளையும் கூறினார்கள். இவர்களின் பிரச்சனைகளை கவனிக்க நான்கு பேர் அடங்கிய புகார் குழுவையும் அமைத்துள்ளோம்.

இவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் உடனே சென்னையில் 28 பேருக்கும், விழுப்புரத்தில் 17 பேருக்கும், மேலும் பலருக்கும் குடும்ப அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அவருக்கு நேரில் எங்கள் நன்றியைத் தெரிவித்தோம். அடுத்த கட்டமாக இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைக்கச் செய்யும் முயற்சியில் இருக்கிறோம். அதேபோல், கல்வியில் எங்கே தடைகள் ஏற்படுகிறதோ, அதை எங்களுக்குத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் பேசித் தடைகளை நீக்கி, கல்வி தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறோம். இவர்களுக்கான எங்களின் பணி உறுதியுடன் தொடரும். அரசிடமும் இதற்கான சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறோம். தேவைகளை முன்உணர்ந்து மக்கள் நலத் திட்டங்களை தீட்டிவரும் நமது முதல்வர் அவர்கள் அரவானிகளுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்காக மகளிர் ஆணையத்தின் சார்பில் முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனித உரிமை ஆணையத்தைப் பற்றி பொதுமக்கள் அறிந்துள்ள அளவிற்கு, மகளிர் ஆணையம் குறித்துப் பெண்களே அறிந்திருக்கவில்லையே ஏன்?

இடையில் மூன்று ஆண்டுகள் இந்த ஆணையம் செயல்படவில்லை. பழைய வரவு-செலவு திட்டங்களே செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் பதவியேற்ற பிறகு செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளேன். போதுமான நிதி இல்லாததால், எனது சொந்த முயற்சியில் சமூக அக்கறையுள்ள நண்பர்களின் உதவியுடன் கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறோம். அடுத்தது, சட்டப்பூர்வமான அங்கீகாரமோ, அதிகாரமோ இல்லை. இந்த காரணங்களால், ஆணையத்தின் செயல்பாடுகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக எங்களால் செயல்படுத்த முடியவில்லை. எனவேதான், மகளிர் ஆணையம் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. வரும் காலங்களில் இந்நிலை மாறும்.

ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டிறகு இப்போதுள்ள அதிகாரங்கள் போதுமென்று கருதுகிறீர்களா? கூடுதலான அதிகாரங்களைப் பெற என்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகிறீர்கள்?

இல்லை. இப்போதுள்ள அதிகாரங்கள் போதாது என்பதுதான் உண்மை. கூடுதல் அதிகாரம் பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். சட்ட வடிவ அங்கீகாரம் பெறவதற்கான வரைவு (டிராப்ட்) அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். அரசு தரப்பில் கேட்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தையும் அளித்திருக்கிறோம். இதற்கான முயற்சி முழுமையான வடிவத்திற்கு வந்துள்ளது. கண்டிப்பாக அரசு, மகளிர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அய்யா பெரியார் வழி வந்த முதல்வர் கலைஞர் அவர்கள்தான் இதற்கு ஒரு விடிவினைத் தரமுடியும் என்று நம்புகிறோம்.

அண்மைக் காலமாக, பெண்கள் மீதான அதிலும் குறிப்பாகப் பள்ளிப் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதைப் பற்றி?

குழந்தைகள் மீதான பெற்றோரின் கவனிப்பு குறைந்து வருகிறது. வேலைக்குப் போகிற பெற்றோர்கள், குழந்தைகளுடன் பொறுமையாக நேரத்தைச் செலவிடுவதில்லை. அவர்கள் தங்களுக்கு நேர்ந்த சிறுசிறு பாலியல் சீண்டல்களைச் சொல்ல வரும்போது காது கொடுத்துக் கேட்பதில்லை. அப்படியே கேட்க நேர்ந்தாலும் குழந்தைகளைத்தான் அதட்டுகிறார்கள். ஆரம்பத்திலேயே அதில் கவனம் செலுத்தியிருந்தால் பெரிய அளவில் விபரீதங்கள் நடக்காமல் தடுக்க முடிந்திருக்கும், மேலும், எந்தக் குழந்தையாக இருந்தாலும், உடற்கூறுகளைப் பற்றி அவர்களிடம் பெற்றோர்கள் பக்குவமாகப் பேச வேண்டும். உங்கள் உடல்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற உரிமை யாருக்கும் கிடையாது என்ற துணிவான புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நல்ல தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்பதனைப் பெண்பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். அப்போதுதான் அவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும். அனைத்துக்கும் மேலாகத் தந்தை பெரியார் அவர்கள் கூறியதைப் போல, பெண்பிள்ளைகளுக்கு, தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குற்றங்கள் குறைந்து, குறையில்லாத சமுதாயம் மலரும்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

என்ன?

புத்தக கண்காட்சியில் இந்த ஆண்டு விற்பனை குறைவு என்று சொல்லப்படுகிறதே காரணம் என்ன?

- வைகறை, சாளரம் வெளியீட்டகம்.

புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்தோர் எண்ணிக்கை குறைந்தது ஏன்? தீவிர வாசகர்கள், வேடிக்கை பார்ப்போர் என்ற இருபெரும் பிரிவினர் புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றனர். இவர்களில் வேடிக்கை பார்க்க வருவோர்தான் இலட்சக்கணக்கான பேர். புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அதே நேரத்திலேயே வேடிக்கைப் பார்ப்போரின் கண்களையும் காதுகளையும் கவரும் வண்ணம் சென்னை சங்கமம் நடைபெற்றது. எனவே இந்நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் சென்றதில் வியப்பில்லை.

தீவர வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த முதலில் பேருந்து போக்குவரத்து வசதி மிகவும் தேவை. இந்த வசதி செய்து தரப்படவில்லை. மேலும் தீவிர வாசகர்களைத் தேடி அவர்களைப் பேரியக்கமாக்கி வரவழைக்க தென்னந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திடம் தொடர் செயற்திட்டம் இல்லை.

பதிப்புத்துறை என்பது பல்வேறு போக்குகள் நிறைந்தது. பல்வேறு கருத்துகள் நிறைந்தது. பல்வேறு வசதி வாய்ப்புகள் நிறைந்தது. இருந்தாலும் ஒன்றுபட்ட பொது நோக்கும் பொதுப் போக்கும் வேண்டும்.

அனுபவங்களையும் அறிவுசார் செய்திகளையும் பதிவு செய்கிற பதிப்புத்துறை சந்தைப் போட்டியில் இறங்கி வசதிபடைத்தவர்கள் செய்யும் செயலே சரி என்பது போல நடை பெற்று வருகின்றது. இதனால் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கின்ற பதிப்பு முயற்சிகள் தோல்வி அடைகின்றன. வசதி படைத்தவர்கள் பல்வேறு பெயர்களில் பல கடைகளை எடுத்து ஒரே புத்தகங்களைக் காட்சிக்கு வைக்கின்றனர். இந்தப் போக்கு வாசகர்களைச் சலிப்படையச் செய்கிறது.

பதிப்பாளர்களிடையே சுயக் கட்டுப்பாடு இல்லை. ஒரே நூலைப் பல பதிப்பகத்தாரும் பதிப்பித்துச் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் விற்பனையாகவில்லை என்ற உண்மை சரியான பாடமாகும்.

வெளிநாட்டு இந்தியர் முதலீட்டால் நடைபெறும் ஒரு பதிப்பகமும், பெரிய வணிக இதழ்கள் நிறுவனப் பதிப்பகமும் தாங்கள் வெளியிட்ட நூல்களை சிறு பதிப்பாளர் கடைகளில் திணித்து விற்கச் செய்தனர். எங்கு பார்த்தாலும் இவர்கள் புத்தகங்களே காணக் கிடைத்தன. எனவே பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குகின்றன.

தமிழ்ப் பதிப்பாளர்கள் வாசகர்களுக்கு உண்மையாக இருந்தால் வாசகர் வருகை மிகுதியாகும். பதிப்பாளர்கள் ஏமாற்றினால் வாசகர்களும் ஏமாற்றுவார்கள்.

இராமேஸ்வரத்தில் உள்ள கோயிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பசுக்கள் பராமரிப்பு இன்றி இறந்துள்ளன, பராமரிக்க முடியாத அரசு விலக வேண்டும் என ஜெயலலிதா கூறக் காரணம் என்ன?

எழில். இளங்கோவன்

ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம். பசுமாடுகள் இறந்து விட்டதாம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டுமாம் கலைஞர், பாவம், கவலைப்படுகிறார் செல்வி செயலலிதா அம்மையார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஆயிரக்கணக்கான அல்ல, இலட்சக்கணக்கான பசுமாடுகள் இறைச்சிக் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பது அவருக்குத் தெரியாதா? அப்படியானால் யார் யாரைப் பதவி விலகச் சொல்லப் போகிறார் அந்த அம்மையார்? முதலில் குசராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்வாரா? அம்மையார் ஆட்சிக்காலத்தில் யானைகளுக்கு முதுமலையில் ஓய்வு தரப்போகிறேன் என்று சொல்லி அவைகளை முதுமலைக்கு அனுப்ப சரக்குந்துகளில் ஏற்றும்போது, சிறிய குன்றைப் போன்ற உடல் பருமன் கொண்ட யானைகள் சரக்குந்துகளில் ஏற முடியாமல், ஏற்றப்பட்ட போது அவைகள் பட்ட கொடுமையான துன்பத்தைத் தொலைக்காட்சிகள் காட்டினவே! அப்போது, குறைந்த பட்சம் அவைகளைத் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூடக் கூற முன்வராத அம்மையார் பசுமாடுகளின் இறப்பைப் பற்றிப் பேசுகிறார்.

அது மட்டுமல்ல இந்த அம்மையார் ஆட்சிக்காலத்தில் திருச்செந்தூர் ஆலயத்தில் 15 மாடுகள் இறந்தனவே! அப்போது இவர் பதவி விலகினாரா?

கலைஞர் சுட்டிக் காட்டியது போல மகாமகம் குளத்தில் நிகழ்ந்த மனித உயிர்ச் சாவுகளுக்கு பதவி விலகினாரா செல்வி ஜெயலலிதா? மாடுகளை விட மனித உயிர்கள் என்ன மலினமானாதா? அவ்வளவு ஏன்? குசராத்தில் நிகழ்ந்த மனிதப் படுகொலைகளின் போது அங்கே முதல்வராக இருந்த நரேந்திர மோடியைப் பதவி விலக வேண்டும் என்று அப்போது இந்த அம்மையார் சொன்னாரா? அவருக்குப் போயஸ் தோட்டத்தில் 45 வகைக் கறிகளுடன் விருந்து, முதல்வராக பதவி ஏற்றமைக்குப் பாராட்டு! வேடிக்கையாக இருக்கிறது.

உண்மையில் பசுமாடுகள் இறந்ததற்காக கவலைப்படவில்லை செயலலிதா. மாறாக, கலைஞரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு, தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்று எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் அவருக்கு இப்போது பசுமாடுகள் அறிக்கைவிட உதவி செய்திருக்கின்றன. “பசு” மாடுகள் என்று சொல்லும் அவரின் கவலையில், அவருடைய சனாதன இந்துத்துவச் சிந்தனை நெடி வெளிப்படுவதை தமிழர்கள் அறியாமலில்லை என்பதை அவர் அறியவில்லையே என்பதுதான் நம்முடைய கவலை.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

ஜல்லிக்கட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்


ஜல்லிக்கட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

- இனியன்

தொன்மையும், போர்க்குணமும் நிறைந்த சமூகங்களுக்கென்று சில தனித்த மரபுகள் இருப்பது இயல்பு.

‘ஏறு தழுவுதல்' என்பது அத்தகைய மரபுகளுள் ஒன்று. முல்லைத் திணைப் பாடல்களில் காணப்படும் அம்மரபின்படி, வீறு கொண்ட காளைகளை அடக்கிவிடும் ஆற்றல் கொண்ட தமிழ் ஏறுகளைக் கன்னியர் விரும்பி மணம் புரிவர். ஏறுதழுவுதல், இளவட்டக்கல் தூக்குதல் போன்ற மரபுகள், திருமணத்திற்கு முன் நிபந்தனையாக இன்றைய உலகில் இல்லை. எனினும், ஏறுதழுவுதலின் ஒரு வடிவமாகவே ‘ஜல்லிக்கட்டு' என்னும் வீர விளையாட்டு, இன்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குடன் திகழ்கிறது.

அண்மையில் அந்த விளையாட்டுக்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம், பிறகு அதை நீக்கிக் கொண்டுள்ளது.

தடைவிதிக்கும்போது, இது போன்ற விளையாட்டுகள், ‘காட்டுமிராண்டி காலத்தவை' என ஒரு தொடரைக் குறித்துள்ளது. இவ்விமர்சனம், தமிழ் மக்களையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. மிகுந்த வேதனைக்குரிய அந்தத் தொடரைச் சில ஏடுகளும் பயன்படுத்தி மகிழ்ந்துள்ளன. ஜல்லிக்கட்டு விளையாட்டுக் குறித்து மறுஆய்வு செய்யலாமா, கூடாதா என்பது வேறு. அதை இழிவுபடுத்துவது வேறு.

எந்த ஒரு மரபும் மறு ஆய்வுக்கு உரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நம்முடைய பழம் மரபுகள் அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். மரபு அறியாத சமூகம் புதுமை படைத்திட இயலாது. கிளைகளின் உயரத்தை, வேர்களின் ஆழமே முடிவு செய்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் மரபுகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

எந்த ஓர் இனமும், மரபுகளைப் பொறுத்தமட்டில், அறிதல், ஆராய்தல், பின்பற்றல் என்னும் மூன்று நிலைகளை மேற்கொள்ள வேண்டும்.


நம் மரபுகளை அறிந்த பின்னர், அவற்றை ஆராய்ந்திட வேண்டும். அந்த ஆய்வு, இரண்டு கோணங்களிலே அமையலாம். பழம் மரபுகளுக்குள் அந்நிய நாகரிகம் உட்புகுந்து, அவற்றைச் சிதைத்துள்ளதா என்ற கோணத்திலும், சிதைக்காத நிலையிலும் கூட அவை இன்றைய நிலைக்குப் பொருத்தமானதாகவும், தேவையானதாகவும் உள்ளதா என்ற கோணத்திலும் நம் ஆய்வுப் பார்வை அமைய வேண்டும்.

நம் பழைய விழாக்கள், கொண்டாட்டங்களில் கூடப் பார்ப்பனீயம் ஊடுருவிச் சிதைத்து வருவதை நாம் அறிவோம். தமிழர் விழாவான பொங்கலையே ‘சங்கராந்தி' ஆக்க முயல்வதை நாம் அறிந்துதானே வைத்துள்ளோம். இப்படிப் பல அந்நிய ஊடுருவல்கள்.

அவ்வாறு இல்லையெனினும், சில மரபுகள், கால வளர்ச்சியோடு ஒட்டாமல் நிற்பதை நாம் காண முடியும். அவற்றுள் ஒன்றுதான் ‘ஜல்லிக்கட்டு'.

இவ்விளையாட்டில் காளைமாடு என்னும் விலங்கு வதை செய்யப்படுவதாகக் கூறிச் சிலர் வருந்துகின்றனர். ஆனால் இதனைவிடக் கூடுதலாகப் பொதி சுமக்கும் மாடுகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் துன்புறுத்தப்படுகின்றன. எல்லா வதைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில், இதற்கும் இடமுள்ளது என்னும் அளவில்தான் அதை ஏற்க முடியும்.

அதனைக் காட்டிலும், விலை மதிப்பற்ற மானுட உயிர்கள் இவ்விளையாட்டில் பலியாகின்றனவே என்பதுதான் நம் கவலை. எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் உயிருக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விபத்துகள் நடந்து கொண்டுதானே உள்ளன என்று நாம் எண்ணலாம். அந்த ஒப்பீடு சரியானதாகாது. எதிர்பாராமல் விபத்து நடப்பதற்கும், விபத்தை நாமே விரும்பி அழைப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.

சென்ற ஆண்டு, மதுரை மாவட்ட ஆட்சியர், எந்த உயிர்ப்பலியும் இல்லாமல் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திக் காட்டுவதாக உறுதியளித்தார். அவ்வாறு செய்தும் காட்டினார். ஆனால், எப்போதும் உயிர்ப்பலிகள் ஏற்படாது என்று எவராலும் உறுதி சொல்ல முடியாது. எனவே, உயிரைப் பணயம் வைத்து ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டுமா என்ற வினா எழவே செய்கிறது.

இத்தகைய விளையாட்டுகள் போர்க்குணத்தைப் போற்றி வளர்ப்பன. இவற்றையெல்லாம் தடுப்பதன் மூலம், இளைய தலைமுறையை நாம் மழுங்கடிக்கின்றோம் என்ற ஆதங்கமும் சிலரிடம் உள்ளது.

போர்க்கலைப் பயிற்சிகள் கூட, இன்று புதிய மாற்றம் பெற்று வருகின்றன. போர்க்களம் செல்பவனுக்கு உடல் வலிமை வேண்டும் என்பது பழங்கணக்கு. இன்று அந்நிலை மாறிவிட்டது. ஜார்ஜ் புஷ் உலகப் பெரும் பயில்வானாகவா உள்ளார்? பொறிகளின் மூலம்தான் இன்றையப் போர்கள் நடக்கின்றன. எனவே, உளவறிதல், பொறிகளை இயக்குதல் போன்றவையே இன்று போர் முறைகள் ஆகிவிட்டன.

அடுத்ததாக, நம் இளைய தலைமுறையினர் அறிவியல் வளர்ச்சி பெறவேண்டியவர்களாக உள்ளனர். அக்கிரகாரத்துப் பிள்ளைகள் கணிப்பொறி பிடிக்க, அலங்காநல்லூர்ப் பிள்ளைகள் மட்டும் காளை மாடு பிடித்துக் கொண்டிருப்பதா? எனவே, இது குறித்து மறு ஆய்வு இன்று மிகத் தேவையாக உள்ளது.

இன்னும் 15, 20 ஆண்டுகளில், தானாகவே இது போன்ற வீர விளையாட்டுகள், மிக அருகிப் போய்விடும் என்பது உண்மை.

எனவே, ‘ஏறு தழுவுதல்' என்பதையொத்த ஜல்லிக்கட்டு விளையாட்டை, நம் பழைய மரபு என்று ஏற்றிப் போற்றலாம். தவறில்லை. ஆனால் தொடர்ந்து அதனைப் பின்பற்றி, உயிர்களைப் பலி கொடுக்க வேண்டுமா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடக்கியே தீர வேண்டிய சாதி மோதல்களும், மத வெறியும் நம் கண்முன்னே தறிகெட்டு ஓடுகின்றன. அவற்றை அடக்க முடியாமல், காளை மாடுகளை மட்டுமே நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு அடக்கிக் கொண்டிருக்கப் போகின்றோம்?

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

தமிழ்ப்பாடம் மராத்தி மொழியில்

தமிழ்ப்பாடம் மராத்தி மொழியில்

- சமீரா மீரான்

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!' என்பதை எப்படி எவரும் மறுக்க முடியாதோ, அதே போல் ‘சென்ற இடத்தையெல்லாம் செழிப்பாக்குபவன் தமிழன்' என்பதையும் எவரும் மறுக்க முடியாது. தங்களது அறிவால், ஆற்றலால், உழைப்பால், உணர்வால், தாங்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருப்பவர்கள் தமிழர்கள். மும்பைத் தமிழர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆனால், சென்ற இடத்தைச் செழிப்பாக்குகிற தமிழனுக்கு அந்த இடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால், இல்லை. எல்லா இடங்களிலும் உரிமைகள் மறுக்கப்பட்டுத் தமிழன் அலட்சியப்படுத்தப்படுகிறான் அல்லது அவமானப்படுத்தப்படுகிறான் என்பதுதான் வேதனைக்குரியது. மும்பையிலும் அதுதான் நிலைமை.

மும்பை மாநகராட்சித் தமிழ்வழிக் கல்விக்குத் தொண்ணூற்றைத் தொடுகின்ற வயது. வெளிமாநிலம் ஒன்றில் சுமார் தொண்ணூறு ஆண்டுகளாகத் தமிழ்வழிக் கல்வி நடைபெறுகிறது என்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், நாம் அறிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், இந்தத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழில் இதுவரை பாடநூல்கள் வழங்கப்படவில்லை என்பதுதான்.

மும்பை மாநகரில் மட்டும் ஏழாம் வகுப்பு வரையிலான 49 மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகள் இப்போது இருக்கின்றன. 400 தமிழர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இந்தக் கல்வி ஆண்டில், சுமார் 15000 மாணவர்கள் இப்பள்ளிகளில் பயிலுகிறார்கள்.

மும்பை மாநகராட்சியில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலம் முதலே, அம் மாணவர்களுக்குத் தமிழில் பாட நூல்கள் வழங்கப்படவில்லை. ஏழாம் வகுப்பு வரையிலான எல்லாப் பாடங்களையும் மராத்தி மொழியில் உள்ள பாட நூல்களைக் கொண்டு, தமிழ் வழி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு வழி தெரியாமல், ஆசிரியர்கள் பாடநூல்களை மராத்தியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்துப் பாடங்களை நடத்துகிறார்கள். ஒரு சில ஆண்டுகள் தமிழ் நாட்டுப் பாடநூல்களைக் கொண்டு சில பாடங்களையும், மராத்திய வழிப் பாடநூல்களைக் கொண்டு சில பாடங்களையும் நடத்த முயற்சித்தனர். தமிழ் மொழிப் பாடம் தவிர பிற அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் அனைத்தும் மராத்திய மாநிலப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. உரிய பாட நூல்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மைய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உதவியோடு பாட நூல்களைத் தமிழில் தயாரிக்கும் தற்காலிக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் அந்தப் பாட நூல்கள் மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டன. தமிழ் மொழிப் பாடம் நடத்துவதற்குத் தமிழ்நாட்டுப் பாடநூல்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மொழிப் பாடநூல்களையும் இங்கேயே தயாரித்து வெளியிடும் முயற்சியிலும் இப்பள்ளி ஆசிரியர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு மும்பை மாநகராட்சிக் கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு வழங்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிடும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையிலான இன்றைய தமிழக அரசு, மும்பைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் மொழிப் பாடநூல்களைத் தொடர்ந்து இலவசமாக வழங்க ஆணை பிறப்பித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறது. செல்வி ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக் காலத்திலும் இருமுறை இலவசப் பாடநூல்கள் வழங்கப்பட்டன. தமிழ் மொழிப் பாடநூல்களை வேண்டுமானால் தமிழக அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மராத்திய மாநில அரசின் பாடத்திட்டத்தில் உள்ள அறிவியல், கணிதம் போன்ற பாடநூல்களுக்கு மாணவர்கள் எங்கே போவார்கள்?

மராத்திய மாநில பாடநூல் கழகம் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டு வெளியிட்டால் மட்டுமே, இந்தப் பாடநூல் சிக்கலுக்கான முழுமையான, நிலையான தீர்வு கிடைக்கும். ஆனால், மராத்திய மாநில அரசோ, மும்பை மாநகராட்சியோ, மராத்திய மாநிலப் பாடநூல் கழகமோ இது பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மராத்தி, ஆங்கிலம் தவிர, குஜராத்தி, உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடநூல்களை அச்சிட்டு வெளியிடுகிற மராத்திய மாநிலப் பாடநூல் கழகம், தமிழில் மட்டும் அச்சிட்டு வெளியிட முன்வராமல் இருப்பது ஏன்?

இது மட்டுமன்று, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வுகளை (ஸ்காலர்சிப் எக்ஸாம்ஸ்) மராத்திய மாநில அரசு தமிழ் மொழி தவிர, மேலே குறிப்பிட்டுள்ள எல்லா மொழிகளிலும் நடத்துகிறது. மும்பை மாநகராட்சியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். அதே வேளையில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடியவர்கள். தகுதியுள்ள தமிழ் அரும்புகளைத் தளிர்க்கவிடாமல் ஏன் செய்கிறார்கள்? தமிழ் இனத்தை அழிக்கும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றா?

பிற மொழியினரைப் போலவே தமிழர்களும் மும்பை மாநகராட்சி, மராத்திய மாநில அரசு, மைய அரசு ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய எல்லா வரிகளையும் செலுத்தி வருகிறார்கள். எந்த மொழிப்பாகுபாடும் பார்க்காமல் வேற்று மொழியினருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்கிறார்கள். தேர்தல் என்று வருகிற போது தமிழர்களின் வாக்கு வங்கியை எல்லா கட்சியினரும் குறி வைக்கிறார்கள். ஆனால் பிறமொழியினருக்குக் கிடைக்கும் அனைத்து உரிமைகளும் தமிழர்களுக்கு மட்டும் ஏன் கிடைப்பதில்லை? பிறமொழிக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எல்லா வசதிகளும் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதுதானே நியாயம். ஆனால், தமிழர்களுக்கு மட்டும் ஏன் எங்கும், எப்போதும் நியாயங்கள் மறுக்கப்படுகின்றன?

மும்பை மாநகராட்சியும், மராத்திய மாநில அரசும் தமிழ் மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்களை, மராத்திய மாநிலப் பாடநூல் கழகத்தின் மூலமாக அச்சிட்டு வெளியிட உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மும்பைத் தமிழர் கூட்டமைப்பு சார்பாக மராத்திய மாநில முதல்வர், மராத்திய மாநிலக் கல்வி அமைச்சர், மும்பை மாநகராட்சி ஆணையர் அனைவருக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கும் மும்பைத் தமிழ் மாணவர்களின் அவலநிலை குறித்து எழுதப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் மாராத்திய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கை நேரில் சந்தித்து பாடநூல் கோரிக்கையை வலியுறுத்தினர். இதுவரை மராத்திய மாநில அரசு தமிழ் மாணவர்களின் கல்வி நலனுக்காக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 மாணவர்கள் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். ஏழாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க அப்பள்ளிகளில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுமார் 1700 மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் தங்களது படிப்பைத் தொடர முடியாமலும், தனியார் பள்ளிகளில் படிக்க வசதி இல்லாமலும் எங்காவது கூலி வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர். சுமார் 300 மாணவர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தனியார் தமிழ்ப் பள்ளிகளில் தங்களது படிப்பைத் தொடர்கின்றனர். சிலர் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்ந்து தோல்விகளைத் தழுவுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்று கணக்குப் பார்த்தால், கடந்த இத்தனை ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் இடைநிலைக் கல்வி பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடியும்.

மாநகராட்சிப் பள்ளிகளிலேயே எட்டாம் வகுப்பு தொடங்கப்பட்டுத் தமிழ் மாணவர்கள் இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (எஸ்.எஸ்.சி) தேர்வைத் தமிழில் எழுதுவதற்கான வாய்ப்பை மராத்திய மாநில அரசு ஏற்படுத்தித்தராதா என்ற ஏக்கம் தமிழ்பெற்றோர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அந்த ஏக்கம் தீரும் காலம் வந்து விட்டது என்று ஏழைத் தமிழ் பெற்றோர்கள் மகிழும் வகையில், இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மும்பை மாநகராட்சி நிர்வாகத்தில் நான்கு தமிழ்ப் பள்ளிகளில் எட்டாம் வகுப்புகளைத் தொடங்க 10.05.07 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, 2007, சூன் முதல் தமிழ் வழி எட்டாம் வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மும்பை மாநகராட்சி துணை ஆணையர் திரு எஸ்.எஸ்.சிண்டேவுக்கு யாரோ சிலர் நெருக்கடி தர, தமிழ் வழியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில்தான் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்ததும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மும்பைத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இது மனித உரிமை மறுப்பு மட்டுமல்லாமல், தமிழும் தமிழர்களும் அவமானப்படுத்தப்படும் போக்காகும் என்று கொதித்துப் போனார்கள். மும்பையில் தனியார் தமிழ்ப் பள்ளிகளை நடத்தும் சில தமிழர்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியின் அளவை அதிகரிக்கும் செய்தியாகும்.

தமிழ் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அநீதி குறித்து கவலை தெரிவித்து, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் தேர்வு எழுத வைக்கும் கொடூரமான திட்டத்தை மும்பை மாநகராட்சி கைவிட வேண்டும் எனக் கேட்டு மும்பைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பாக மும்பை மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.எஸ்.சிண்டேவுக்கு 31.10.07 அன்று கடிதம் எழுதப்பட்டது. இக்கடிதம் கிடைத்த சில நாட்களிலேயே, தொடங்கி ஆறுமாதம் ஆகியுள்ள தமிழ்வழி எட்டாம் வகுப்புகளை உடனே மூட வேண்டுத் எனத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வாய்வழி ஆணை வழங்கப்பட்டது. தமிழ் வழி எட்டாம் வகுப்பு தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆசிரியர்கள் மறைமுகமாக மிரட்டப்படுகிறார்கள் என்பதும் மிகுந்த கவலை தரும் செய்தியாகும். இந்த விவகாரத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும், மும்பைத் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்பது இன்னொரு வேதனை. ஆனால் பாதிக்கப்படுவது ஏழைத் தமிழ்ப் பிஞ்சுகள் அல்லவா?

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், தமிழ் காப்போம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் 12.12.07 அன்று மும்பை மாநகராட்சி துணை ஆணையர் திரு எஸ்.எஸ்.சிண்டேவை நேரில் சந்தித்து தமிழ்வழி எட்டாம் வகுப்பைத் தொடரவேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால், ‘மராத்திய மாநில மேல்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வுக் கழகம் (எச்.எஸ்.சி மற்றும் எஸ்.எஸ்.சி. போர்டு) இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (எஸ்.எஸ்.சி.) தேர்வை தமிழில் நடத்த முன் வராமல் போனால் இந்த மாணவர்களின் நிலை என்னவாகும்? அதனால்தான், நாங்கள் தமிழ்வழி எட்டாம் வகுப்பை மூடலாம் என்றிருக்கிறோம்' என்று நேரடியாகவே கூறிவிட்டார்.

அந்த வகுப்புகளைத் தொடர என்னதான் வழி என்று கேட்டபோது, ‘அதைத் தேர்வுக்கழகம்தான் முடிவு செய்யவேண்டும்' என்று கூறிவிட்டார். மும்பைத் தேர்வுக் கழகத் தலைவரை ஏற்கனவே சந்தித்த விபரத்தைத் தமிழ் அமைப்பு நிர்வாகிகள் கூறியபோது, ‘புனேவில் உள்ள மாநில தேர்வுக் கழகத்திற்குத்தான் இது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது' என்று கூறிவிட்டார்.

மாராத்திய மாநில முதலமைச்சர், கல்வி அமைச்சர், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சித் துணை ஆணையர், மும்பைத் தேர்வுக்கழகத் தலைவர் என்று பலருடைய கவனத்திற்குத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சிக்கலைக் கொண்டு சென்ற பிறகும், மும்பைத் தமிழ் மாணவர்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. அமைச்சர்களும் அதிகாரிகளும் எழுத்து மூலம் பதில் எதுவும் தராமல் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தொடர்ந்து நடைபெறுமா?

இந்த மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வித் (எஸ்.எஸ்.சி.) தேர்வு தமிழில் நடத்தப்படுமா?

ஒன்று முதல் எட்டுவரை தமிழில் பயிலும் இம்மாணவர்களுக்குத் தமிழில் பாடநூல் கிடைக்குமா?

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படுமா?

இந்தக் கேள்விக்குரிய சாதகமான பதிலை தமிழக முதல்வர்தான் மராத்திய மாநில அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்.


நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.