Tuesday, December 15, 2015

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது மூடநம்பிக்கைதான்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைபோடுவது மூட நம்பிக்கை என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் மைசூருவில் டிசம்பர் 13ல்  நடந்த நோபல் பரிசு நூற்றாண்டு தொடர்சொற்பொழிவு-4-இல் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப் பில் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் பேசினார்.


அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ளதற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்ததல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின் தங்கிவிட்டன. மூடநம்பிக்கைகள், ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன என்று கூறினார்.


ஜோதிடமும் ஹோமியோபதியும் மனரீதியான நம்பிக்கையால் செயல் படுகின்றன. ஜோதிடம், குத்துமதிப்பாக கூறப்படும் ஆலோசனைகளால் ஆனது. அவரவர் வீட்டை தூய்மையாகவும் வெளிச் சமாகவும் வைப்பதற்கு ஜோதிட ஆலோசனைகள் தேவையில்லை. இந்தியர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட வேண்டும் அல்லது குறையவேண்டும். இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப் போது, அது வெற்றிகர மாக விண்ணில் ஏவுவதற்காக அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று கூறினார் .


மங்கள்யான் விண்கலத்தை ஏவுவதற்கு பொருத்தமான நாளாக செவ்வாய்க்கிழமையையும் தேர்ந்தெடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்தியநாடுகளில் காணமுடியாதது. மக்களிடையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தி யாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்? என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நாடகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் கூறினார்.


ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக் கையும் இந்தியாவில் குவிந்துள்ளன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர் வினையால் தான் உண் மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களி டையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் கருதியதன் விளைவால் கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதிடம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன்.


மண்ணின் மைந்தர்களை நினைவுகூர்ந்த மாணவர்கள்

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 21.11.2015 அன்று காலை 11.15மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வன் கிரிஷாந்த் நகுலதாஸ் ஏற்றிவைத்தார். அதன்பின்பு   அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடரினை வீரவேங்கை சாந்தன் அவர்களின் தங்கை திருமதி சுகுமாரன் ஏற்றிவைக்க மாவீரர் துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட்டது. 

எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சகோதரர் அல்லது உறவினர்களில் எமது மண்ணுக்காக தம் உயிரை மாய்த்தவர்களின் பெற்றோர்களும் இச்சுடரை ஏற்றினார்கள்.  அடுத்து மாவிரரர் தொடர்பான தலைமை உரையினை எமது பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி சசிகரன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து மாவீரர் தொடர்பான நிகழ்ச்சிகளான கவிதை, பேச்சு, நடனம் மற்றும் நாடகம் போன்ற மாவிரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எமது பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக விழ விழ எழுவோம் என்ற எழுச்சி பாடலுக்கு நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் தட்டி எழுப்பினார்கள் வளர்தமிழ் 4 மாணவர்கள்.  

உல்பா தலைவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம்

உல்பா இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர் அனுப் சேத்தியாவை, 20 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் நவம்பர் 11 அன்று இந்தியாவிடம் ஒப்படைத்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு வந்த சோட்டா ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்நிலையில் உல்பா அமைப்பின் முக்கிய தலைவர் கோலப் பருவா என்ற அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் வங்கதேசம் ஒப்படைத்தது. இவர் மீது கொலைகள், கடத்தல்கள், வங்கி கொள்ளைகள் உட்பட பல வழக்குகள் உள்ளது. கடந்த 91ம் ஆண்டில் அனுப் சேத்தியா அசாமில் கைது செய்யப்பட்டார். அப்போதைய அசாம் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியா, இவரை சிறையில் இருந்து விடுவித்தார். அதன்பின் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றார். இவரை ஒப்படைக்கக் கோரி இந்தியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்து வந்தது. ஆனால் வங்கதேசத்தில் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த அரசுகள் இதை கண்டு கொள்ளாமல் இருந்தன. 

கடந்த 1997ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சிக்காலத்தில் அனுப் சேத்தியா கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் ஊடுருவியது மற்றும் வெளிநாட்டு பணம், ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை முடிந்ததும், அரசியல் தஞ்சம் கோரினார். அதனால் இவரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பும், இந்தியாவிடம் அவரை ஒப்படைக்காமல் வங்கதேச அரசு இழுத்தடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் அரசியல் தஞ்சம் அளிக்கக் கோரி, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அனுப் சேத்தியா கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் நேரடியாக தலையிட்டனர். இதையடுத்து அனுப் சேத்தியா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கிடையே, அசாம் முதல்வர் தருண் கோகோய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அனுப் சேத்தியா, தற்போது அரசுக்கும், உல்பா அமைப்புக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். மத்திய அரசும் அனுப் சேத்தியாவை விடுவித்து, அமைதி நடவடிக்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

அனுப் சேட்டியா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை போனில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா மேற்கொள்ளும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.