Thursday, November 27, 2008

முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன் லெப். சங்கர்

லெப். சங்கர்
(செல்வச்சந்திரன் சத்தியநாதன்-கம்பர்மலை)
வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆனால் தோற்றத்தில் சிறியவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். 'ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றி விட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்" என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால்இ சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப் பயிற்சி பெறத் தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன் சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதி பெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும்இ திட்டங்கள் தீட்டுவதும்இ விவாதிப்பதுமாக... சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது.

அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்புஇ தினசரி துப்பரவாக்கப் பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசுஇ விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்து விட்டது. அவனும் தேடப் பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கர் தாக்குதல் படைப் பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல் முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப் போகும் நாள்இ திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர்இ வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில் எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப் பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப் பாதுகாவலர்கள் தெரிவு செய்யப் படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவு செய்யப் பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுத வரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடம் இருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப் படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர் இதை மோப்பம் பிடித்து விடுகிறது கூலிப்படை.... வீடு முற்றுகை இடப்படுகிறது. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்து விடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்து விட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவி விட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கி விடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை இந்தியா கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரை சேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி 'தம்பி" என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே இந்தியாவில் தகனம் செய்யப் பட்டது. இவனது வீரச்சாவு கூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப் படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000க்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கி உள்ளனர். இம் மாவீரர்களை எல்லாம் நினைவு கூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப் பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

நன்றி : மண்ணோசை

நன்றி எரிமலை நவம்பர் 2000

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை நேரலையில் கேட்க

அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை இடம்பெறப்போகும் இந்த உரையில் தலைவர் பிரபாகரன் என்ன சொல்லப் போகின்றார் என்பதை தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, தமிழக தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அனைத்துலக சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

தாயக மண் விடுதலைக்காக தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள் அனைவரையும் போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை நிகழ்த்தவுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்

தாயக மற்றும் தமிழக நேரம் பிற்பகல் 5:40 நிமிடத்துக்கும்

அவுஸ்திரேலிய சிட்னி, மெல்பேர்ண் நேரம் இரவு 11:10 நிமிடத்துக்கும்

நியூசிலாந்து நேரம் அதிகாலை 2:10 நிமிடத்துக்கும்

கனடாவின் ரொறன்ரோ நேரம் காலை 7:10 நிமிடத்துக்கும்

ஐரோப்பிய நேரம் பிற்பகல் 1:10 நிமிடத்துக்கும்

பிரித்தானிய நேரம் பிற்பகல் 12:10 நிமிடத்துக்கும்

சிங்கப்பூர், மலேசிய நேரம் இரவு 8:10 நிமிடத்துக்கும்

மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இணையத்தளங்கள் வருமாறு:

புலிகளின் குரல் வானொலி - www.pulikalinkural.com

லண்டன் ஐபிசி வானொலி - www.ibctamil.co.uk

கனடிய தமிழ் வானொலி - www.ctr24.com

ஐரோப்பிய தமிழ் வானொலி - www.tamilfm.eu

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - www.atbc.net.au

ரிவிஐ - www.tviondemand.com

ஐரோப்பிய தொலைக்காட்சி - www.eurotvlive.com

வளரி தொலைக்காட்சி - www.valary.tv


நன்றி /

புதினம்






Monday, November 24, 2008

வன்னியில் சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணி

வன்னிக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணிகள் இன்று வன்னியில் நடைபெற்றன.

தருமபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இப்பேரணிகள் இடம்பெற்றன.

பேரணிகளில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு தமது கண்டனக்குரல்களை எழுப்பினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

பேரணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தொடங்கின.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு மனுக்கள் கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி தருமபுரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டன முழக்கங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு தருமபுரம் பாடசாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.

கிளிநொச்சி அரச அதிபர் செயலகம் வரை அவர்கள் பேரணியாகச் சென்றனர். அங்கு கண்டனக்கூட்டம் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பினர் தலைவர் நா.அரசரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

கண்டன உரைகளை அமைப்பின் உறுப்பினர்களான சி.துரைசிங்கம், க.மகாதேவன், அ.வேளமாலிகிதன், கி.வேதவனம் ஆகியோர் நிகழ்த்தினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

வன்னியில் சிறிலங்கா படையினரின் ஒடுக்குமுறையால் மக்கள் படும் அவலம் தொடர்பிலான மனு கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டுசுட்டானில் உள்ள சந்தியில் தொடங்கிய கண்டனப் பேரணி உதவி அரச அதிபர் செயலகத்தில் முடிவடைந்தது.

வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பின் துணைத்தலைவர் சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கண்டன உரையை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் பொது அமைப்புகளின் ஒன்றியச் செயலர் நாகேந்திரராசா, மருதோடை பாடசாலை முதல்வர் நாகராசா ஆகியோர் நிகழ்த்தினர்.

இதிலும் மனு கையளிக்கப்பட்டுள்ளது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

Thursday, November 20, 2008

மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் 14 நாட்கள் சுற்றுப்பயணம்

இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் நாள் வரை 14 நாட்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் எழிலன் தலைமையில் 15 பேர் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.

இதன் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு கறுப்புக் கொடி அசைத்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது:

நம் நாடு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் உண்மை நிலை என்ன? என்று நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் உள்ள பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன.

இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போர் அறிவிப்பு செய்த பிறகு, பாதிரியார் ஒருவரை அவர் தங்கியிருக்கும் இடத்தை விட்டு செல்லுமாறு அரசு ஆணையிட்டது. அதையடுத்து அந்தப் பாதிரியாரும் மூட்டை, முடிச்சுகளை கட்டிக் கொண்டு போக புறப்பட்டார். அப்போது இரண்டு குழந்தைகள் அங்கு வந்தனர். அவர்களிடம் எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாதிரியார் 2 பேனாக்களைக் கொடுத்தார்.

அந்தப் பேனாவை பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகள் பாதிரியாரிடமே அவற்றைத் திருப்பிக் கொடுத்தன. நாங்கள் உயிருடன் இருப்போமா அல்லது இருக்கமாட்டோமா என்று தெரியவில்லை. எனவே, வேறு ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பேனாவைக் கொண்டு போய் கொடுங்கள் என்று அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா?

தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் சுற்றுப்பயணம் செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

சுற்றுப்பயண வேனின் இருபுறங்களிலும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கும் வகையில் அமைந்துள்ளன.





பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ப

பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்:

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாகவுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழா்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:30 நிமிடம் தொடக்கம் மாலை 6:30 மணிவரை இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் பிரித்தானியாவில் உள்ள சில அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவிலான தமிழர்கள் பங்கேற்றனர்.



பிரித்தானிய பிரதமருடனான கேள்வி நேரம் நேற்று என்பதனாலும் நேற்றைய நாளில் பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவார்கள் என்பதனாலும் நேற்றைய நாளினை கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்திருந்ததாக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

பிரித்தானியாவின் தற்போது நிலவும் குளிரான காலநிலையிலும் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் தம்முடன் பாடசாலை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.

மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இக்கவனயீர்ப்பு நிகழ்வு அமைந்தது.

- சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானிய அரசு வற்புறுத்த வேண்டுமென கோருவது

- இலங்கையில் தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பிரித்தானிய அரசு அங்கீகரிக்க கோருவது

- தமிழின எழுச்சிக்கு ஒத்துழைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பது

ஆகியனவே அந்த மூன்று நோக்கங்கள் ஆகும்.



பிரித்தானியாவின் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன் அங்கிருந்த மக்கள் மத்தியில் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு பிரித்தானிய தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கீத் வாஸ், தமிழர்களுக்கான அனைத்து கட்சிக்குழுவின் தலைவரான விரேந்திர சர்மா, சியோப்கெயின் மக்டொனா, சுசான் கிரைமர், அன்ரூ பெலிங், ரொம் பிரேக், ஜோன் ரையன், பரிகார்டினர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாண்ட் வாத்திய இசை முழங்கப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு என தனியான தமிழீழ தனியரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய தமிழர்களின் விருப்பம் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.



சிறிலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாகவும் அங்குள்ள தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாகவும் பிரித்தானிய மக்களுக்கு எடுத்து விளக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

“இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்து”

“தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி”

“தமிழ்நாட்டுக்கு நன்றி - பிரித்தானிய தமிழர்”

“சிறந்த தேசம் - தமிழ்நாடு”

“நன்றியுள்ள மக்கள் - தமிழீழ மக்கள்”

“அப்பாவி தமிழர்கள் மீதான குண்டு வீச்சை நிறுத்து”

“சிறிலங்கா ஒரு பயங்கரவாத அரசு”

”பிரித்தானியாவே சிறிலங்கா அரசு மீது பொருளாதார தடையை விதி”

”ஐ.நாவே சிறிலங்கா மீது ஆயுத தடையை விதி”

“ஐரோப்பிய ஒன்றியமே ஜீ.எஸ்.பீ. பிளஸ் - யுத்த நிதிக்கான வழி”

என ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளின் வாசகங்கள் காணப்பட்டன.

ஆங்கிலம் மற்றும் தமிழில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.



Saturday, November 08, 2008

மும்பையில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு பட்டினிப்போராட்டம்

கடந்த அறுபது ஆண்டு காலமாக தொடர்ந்து சிங்கள இனவெறி அரசினால் பாதிக்கப் பட்டு, உரிமை மற்றும் உடமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களின் மீது இராணுவ அடக்கு முறைகளைக் கையாளும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும்,இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாது காப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதை வலியுறுத்தியும்
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் அடையாள உண்ணாவிரதம் தானே தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.
உண்ணாவிரத்தை தானே பகுதி தேசிய வாத கங்கிரசின் தலைவரும் மராத்திய மாநில மேலவை உறுப்பினருமான திரு ஜீதேந்திர அவாட் துவக்கி வைத்தார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். உண்ணா நோன்பு நிகழ்வில் தானே தமிழ் மன்ற நிர்வாகிகள் ஏ. சித்தார்த்தன், பி.ஒய்.மணி, ஜாகிர் உசேன், ராஜா பால், தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு. குமணராசன், திமு.க செயலாளர்கள் த.மு.பொற்கோ, பொ. அப்பாதுரை, மராத்திய மாநில எழுத்தாளர் மன்ற தலைவர் பேராசிரியர் சமீரா மீரான், கொ. வள்ளுவன், ஆந்திர மகா சபை வி.ராவ், திருவள்ளுவர் மன்ற அமைப்பாளர் இராதகிருஷ்ணன், திராவிடர் கழக செயலாளர் பெ.கணேசன், தமிழ் காப்போம் இராஜேந்திரன் , பால்வண்ணன், மனித உரிமை இயக்க அமைப்பாளர் சங்கர் திராவிட், சிட்டிசன் பாரம் தலைவர் எஸ்.ஏ.சுந்தர், விடுதலை சிறுத்தைகள் இயக்க கு.இராஜ, துரை, சாத்தரசன் பட்டி சேசுராசு, ஆதி திராவிடர் மகாஜன சங்க தலைவர் அசோக் குமார், லாரன்ஸ், தானே தி.மு.க செயலாளார் கி.தனுஷ்கோடி, தமிழர் தேசிய இயக்க நாடோடித் தமிழன், திருமதி நங்கை குமணராசன், லிட்டில் பிளவர் ஆங்கில பள்ளி முதல்வர் திருமதி அமலா ஸ்டான்லி, குண சுந்தரி சித்தார்த்தன் தானே அலெக்சாண்டர் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்களை ஆதரித்து நடை பெற்ற இப்போராட்டத்தை ஆதரத்து முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மனொஜ் சிந்தே, காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ண புர்னேகர் ஆகியோர் உரையாற்றினர். ஈழத்தமிழர் வரலாறு மற்றும் சிங்கள அரசின் தொடர்ந்த கொடுமகளை விளக்கி சு. குமணராசன், த.மு.பொற்கோ, ஜாகி உசேன், வெ.சித்தார்த்தன், எஸ்.ஏ.சுந்தர், அமலா ஸ்டான்லி ஆகியோர் உரையாற்றினர்.
இதற்கிடையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்வதை வலியுறுத்தியும் , இலங்கை அரசுக்கு இராணுவ உதவி அளிப்பதை நிறுத்தக் கோரியும் பிரதம அமைச்சருக்கு மனு ஒன்றும் தானே மாவட்ட ஆட்சியர் திரு எ.எல்.ஜாங்கிட் மூலம் கொடுக்கப் பட்டது. இம்மனுவை த.மு.பொற்கோ, சு.குமணராசன், அமலா ஸ்டான்லி, வெ.சித்தார்த்தன், ராஜாபால் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் கலெக்டரை நேரில் சந்த்தித்து, நிலைமைகளை விளக்கி அளித்தனர்.
பட்டினி நோன்பை தானே சட்டமன்ற உறுப்பினரும் சிவசேனைத் தலைவருமான ஏக்நாத் சிந்தே முடித்து வைத்தார். உண்ணாநோன்பில் பங்கேறற அனைவருக்கும்பழச்சாறு வழங்கினார். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்தை தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மனித நேய இயக்கம், காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் என அனவரும் ஒருமித்து ஆதரவு வழங்கியிருப்பது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி,
தானே தமிழ் மன்றம்.

Thursday, November 06, 2008

வடமராட்சியில் காவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு

வடமராட்சியில் காவியமான ஏழு கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி- இரண்டு படகுகளை மூழ்கடித்து- 20 படையினரை கொன்று வீரவரலாறான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு மூங்கிலாறில் நடைபெற்றது.

மட்டக்களப்பு - அம்பாறை மாவீரர் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உடையார்கட்டு கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல் தலைமையில் வீரவணக்க கூட்டம் இடம்பெற்றது.


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

நிகழ்வில் வீரவரலாறான

கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன்

கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி

கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன்

கடற்கரும்புலி மேஜர் செந்தூரன்

கடற்கரும்புலி மேஜர் கலைமதி

கடற்கரும்புலி கப்டன் கொள்கைக்கோன்

கடற்கரும்புலி கப்டன் அகச்சேரன்

ஆகிய கரும்புலி மாவீரர்களில் இருவரின் வித்துடல்கள் ஏனையோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர்களை பெற்றோர், உறவினர்கள் ஏற்றினர்.


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும் மலர்மாலைகளை சூட்டினர்.

வீரவணக்கவுரையை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது.

தொடர்ந்து விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.

நடுகற்கள் திரைநீக்கம் செய்யப்பட்டன.

Saturday, November 01, 2008

கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்

வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, ஹோவர்கிராப்ட் கலம் மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.


சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்


சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்

இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.

இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் தரையிறக்க கொமாண்டோத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏ-530 தொடரிலக்கத்தினைக் கொண்ட ஹோவர்கிராப்ட் கனரக கலம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீருந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடிவிட்டன.

இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருது


வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருதுகள்: தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு
எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.





தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் உட்பட சிறிலங்கா படைய பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை ஐந்து தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்திய வானோடிகளுக்கு "நீலப்புலி" என்னும் சிறப்பு விருதை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.





மூன்று தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய துணை வானோடிகளுக்கு "மறவர்" விருதையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

அத்துடன் 09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலை நடத்திய வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணிப் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்புப் பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், போராளிகள் உட்பட பெருமளவிலானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.