Friday, November 13, 2015

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் ஒரு கொள்கையாக  சுயமரியாதை திருமணம் உள்ளது. அந்த வழியில் வந்த அண்ணா, 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனதும், சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார். இதற்காக இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து திருமண சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை. மாறாக, நண்பர், உறவினர் முன்னிலையில் மாப்பிள்ளையும் பெண்ணும் மாலையோ, மோதிரமோ மாற்றிக் கொண்டாலே அது திருமணமாக கருதப்படும் என்று சுயமரியாதை திருமணச் சட்டம் கூறியுள்ளது.
இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.அசுவத்தாமன் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும்  என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், வழங்கிய தீர்ப்பில்  இந்து மதம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதன்படி, வெவ்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றபடி திருமண சடங்குகளை  வைத்துக்கொண்டு திருமணங்களை நடத்துகின்றனர். 


அந்த வகையில் இந்துக்களிடையே மேலும் ஒரு திருமண முறையாக சுயமரியாதை திருமணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை நோக்கம் இருக்க கூடாது. அந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் என்னவென்றால், திருமணம் என்பது புரோகிதர் முன்னிலையில் நடந்தால்தான் அது செல்லும் என்ற நிலையை மாற்றுவதுதான். அவர்கள் இல்லாமலேயே, மற்றவர்கள் முன்னிலையில் நடப்பதும் செல்லக்கூடிய திருமணம்தான் என்பதுதான் அந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்.

 உறவினர், நண்பர்கள் முன்னிலையில் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது அல்லது தாலி கட்டிக் கொள்வது ஆகிய நிகழ்வோடு திருமணம் முழுமையாக நடந்துவிடுகிறது. இது சட்டப்படி செல்லக்கூடிய திருமணமாகும் என்று  குறிப்பிட்டுள்ளனர். மேலும், 

சுயமரியாதை திருமணங்கள் செல்லக்கூடியவை அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: