Thursday, January 10, 2008

வெளிநாட்டில் நிதிதிரட்டும் ‘ஏழை’ நடிகர்கள்



வெளிநாட்டில் நிதிதிரட்டும் ‘ஏழை’ நடிகர்கள்
அன்பன்

மீண்டுமொருமுறை திருவோடேந்தி மலேசியா, சிங்கப்பூர் சென்று வந்திருக்கின்றனர் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர். என்னவொரு வேறுபாடென்றால் வழக்கமாக வெற்றிகரமாகத் திரும்புகிறவர்கள் இம்முறை பாதி வெற்றியும் மீதித் தோல்வியுமாகத் திரும்பியிருக்கிறார்கள்.

கலை, சமுதாயத்தைப் பண்படுத்தும், வெளிஉலகுக்கு அடையாளப்படுத்தும், பிரிந்தவர்களை இணைய வைக்கும், இணைந்தவர்களை இயங்க வைக்கும் ஒரு பெரிய சாதனம். எனவே எல்லாச் சமுதாயத்தினரும் போற்றக் கூடிய இடத்திலிருப்பவர்கள் கலைஞர்கள். தமிழ்த் திரையுலக நடிப்புக் கலைஞர்களில் சிலர்¢ மட்டும் இதற்கு விதிவிலக்கு. இவர்களுக்கு தனிமனிதப் பொறுப்பும் கிடையாது. சமுதாய அக்கறையும் தெரியாது.


சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கென்று ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் நடிகர் நடிகைகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகளை மலேசியா, சிங்கப்பூரில் நடத்தி அதில் கிடைத்த பணத்தில் கடனை அடைத்துவிட்டார்கள். அதோடு அவர்கள் தாகம் தீரவில்லை.
இப்போது நடிகர் சங்கத்துக்குக் கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கலைநிகழ்ச்சி. அதை மட்டும் சொன்னால் காறித்துப்பிவிடுவார்கள் என்பதால் நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக என்றும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு போய் வந்திருக்கிறார்கள்.

டிசம்பர் 21ஆம் நாள் மலேசியாவிலும், டிசம்பர் 23ஆம் நாள் சிங்கப்பூரிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. இதில் கலந்து கொள்ள நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் விஜய், விக்ரம், சிம்பு, சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் சந்தியா, விந்தியா, மும்தாஜ், லட்சுமிராய் உள்ளிட்ட பல நடிகைகளும் போய் வந்தனர்.

இவர்களில் விஜய் நடிக்கும் குருவி, சரத் நடிக்கும் 1977 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆடு மேய்த்த மாதிரியும் ஆச்சு, அண்ணணுக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆச்சு.
இவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சியின் நோக்கம் சரிதானா? உணவு, உடை, கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு இம்மாதிரிக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டினால் கூட ஏற்றுக் கொள்ளலாம். நடிகர் சங்கத்துக்குக் கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கலைநிகழ்ச்சி தேவைதானா?

மலேசியாவில் கடுமையான சூழல் நிலவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர்கள் கலைநிகழ்ச்சி நடத்தியதால் இவர்களின் சுயநல நோக்கம் அப்பட்டமாக வெளியில் தெரிந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு மலேசியாவில் நடைபெறவில்லையென்றால் கூட இவர்களுக்கு நிதி திரட்ட என்ன தார்மீக உரிமை இருக்கிறது?


இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் சுமார் நான்கு கோடி ரூபாய் நடிகர் சங்கத்திற்குச் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்பணத்தை நடிகர் சங்கத்திற்குக் கொடுத்துவிட்டு ராதிகாவின் ரேடான் மீடியா நிறுவனமும் கலாட்டா டாட்காம் நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிக் கொள்ளும். இவர்களோடு ஊடகப் பங்குதாரராக சன் தொலைக்காட்சியும் உண்டு. இதில் பெரும் தொகையை சன் தொலைக்காட்சியே கொடுத்துவிட்டது என்கிறார்கள்.
நடிகர், நடிகைகள் உட்பட 300 பேர் கொண்ட இக்குழுவின் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவு மட்டுமே ஒன்றரை கோடிக்கு மேல் வருமென்கிறார்கள். இதற்கு மேல் வசூலாகும் தொகையைப் பொறுத்துப் பங்கீடு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடந்த அரங்கு சுமார் பனிரெண்டாயிரம் பேர் அமரக்கூடியதாம். கலை நிகழ்ச்சியன்று வந்திருந்தோர் இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரத்துக்குள்தான் இருக்குமாம். இதனால் மலேசியா நிகழ்ச்சியினால் இவர்களுக்குப் பெருத்த நட்டமே ஏற்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் வழக்கம்போல் அரங்கு நிறைந்து வழிய நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
முன்னணி நடிகர் நடிகையர் உட்பட 300 பேர் கொண்ட குழு இரண்டு மாதங்களுக்கு மேலாக முன் தயாரிப்புச் செய்து போய் திரட்டி வந்த நிதி எவ்வளவு? (நிதிக் கணக்கை வெளிப்படையாக அவர்கள் சொல்லமாட்டார்கள்) நாம் தோராயமாகக் கணக்கிட்டு சுமார் பத்து கோடி என்று வைத்துக் கொள்வோம். திரைப்பட நடிகர்களுக்கு இந்தத்தொகை ஒரு பெரிய தொகையா?

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னணி நடிகரான விஜய் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளமே 7 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. விக்ரம்-4, சிம்பு-3, சூர்யா-3 என்று கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். வாங்குகிற சம்பளத்தை அப்படியே நடிகர் சங்கத்துக்குக் கொடுத்துவிடச் சொல்லவில்லை.

விஜய்யோ, விக்ரமோ நடிக்கும் ஒரு படத்தின் மொத்தத் தயாரிப்புச் செலவு 12லிருந்து 15 கோடி ரூபாய், அவற்றின் சந்தை மதிப்பு சுமார் 20 கோடி. இவை படத்துக்குப் படம் மாறுபடக்கூடியதே என்றாலும் கேரளாவைப் போல நடிகர் சங்கமே ஒரு படம் தயாரிக்கலாம்.

கேரளாவில் நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட வேண்டுமென்பதற்காக அம்மாநில முன்னணி நடிகர் தில¦ப் நாயகனாக நடிக்க ஒரு படத்தை நடிகர் சங்கமே தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட அனைத்து நடிகர்களும் சிறப்புத் தோற்றத்தில் கலந்து கொள்கிறார்கள். இதனால் அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறதாம். இதன் விளைவு அப்படம் பெரும் தொகைக்கு விற்பனையாகும். அதன் லாபம் நடிகர் சங்கத்தைச் சேரும் அதுபோல இங்கே.
விஜய்க்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கொடுத்து ஒரு படத்தைத் தயாரித்தால் கூட மூன்று மாதங்களுக்குள் பெரும் தொகையைத் திரட்டிவிட முடியும்.

அண்மையில் மும்பையைச் சேர்ந்த தோதோதனா எனும் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கும் தகவல், இந்தியர்கள் சினிமா பார்ப்பதில் ஆர்வத்துடன் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் எட்டாயிரம் கோடி ரூபாய்க்குச் சினிமா டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் முப்பது விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இவற்றில் நாற்பது விழுக்காட்டை இந்தித் திரையுலகம் எடுத்துக் கொள்கிறது. மீதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் எடுத்துக் கொள்வதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு ஆயிரம் கோடி அளவில் பணம் புழங்கும் ஒரு தொழிலில் அப்பணத்தின் பெரும்பகுதியைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் நடிகர்கள், தங்களுடைய சங்கத்தின் கட்டிட நிதிக்காகக் கையேந்துவது எவ்வளவு கேலிக்குரிய செயல்.

மக்களை மகிழ்விக்கும் எங்களுக்கு அவர்களிடமிருந்து காசு வாங்க உரிமையில்லையா? என்று அவர்கள் கேட்கக் கூடும். உங்களைக் கொண்டாடும் மக்களை மகிழ்விப்பதைவிட மழுங்கடிப்பதையே நீங்கள் செய்து வருகிறீர்கள். அதோடு கலைஞன் தான் கலந்திருக்கும் சமுதாயத்தைப் பிரதிபலிப்பவனாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக நடிகர்கள் பலருக்கோ தேசமே பற்றியெரிந்தாலும் அதுபற்றி எந்தக் கவலையும் இல்லை. வெகுமக்களைப் பாதிக்கும் எந்தச் சிக்கலின் போதும் வாயையே திறக்காமல், மக்களிடம் காசு கேட்கும் உரிமை மட்டும் எப்படி வரும்?.

அரசியல் சிக்கல்களைத் தாண்டி மனிதநேய விசயங்களில்கூட வாய்திறந்¢ததில்லை இவர்கள். ஆழிப்பேரலை தாக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்தபோது வடநாட்டு நடிகன் விவேக் ஓபராய் செய்த அளவு கூட தமிழ் நடிகர்கள் எதுவும் செய்யவில்லை.

கோடி கோடியாகப் பணம் புரளும் ஒரு தொழிலில் ஆண்டுக்காண்டு தங்கள் சொத்து மதிப்பை மேன்மேலும் உயர்த்திக் கொண்டே வரும் தமிழக நடிகர்கள், சில கோடிச் சில்லறைகளுக்காகக் கையேந்தாமல் இருங்கள். ஒருவன் துயரத்தில் பங்கு கொள்ளாத எவனுக்கும் அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்கும் தார்மீக உரிமையும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்னும் குரல் ஒலிக்கிறது.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

No comments: