Thursday, January 10, 2008

பட்டுக்கோட்டை மாப்பிள்ளையின் வைத்தியம் தேவை!

பட்டுக்கோட்டை மாப்பிள்ளையின் வைத்தியம் தேவை!
- கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.

இது பனிபொழியும் பருவம் மட்டுமல்ல; இசை மழை பொழியும் பருவமும் கூட!
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று ஒரு பக்கத்தில் கோயில் பஜனைகள் - இன்னொரு பக்கத்தில் சபாக்களில் இசைக் கச்சேரிகள் ஜாம் ஜாமென்று நடந்து கொண்டு இருக்கின்றன.

ஏதோ பொழுது போக்கு என்றும் இருக்க முடியவில்லை. இரண்டிலும் பல்வேறு சமாச்சாரங்கள் மண்டைக் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன என்பதுதான் நமக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது.

மார்கழி மாத பஜனையில் அப்படி என்னதான் பாடுகிறார்கள்?
பள்ளியறை சுற்றிலும் நிலை விளக்குகள் ஒளி வீச, யானைத் தந்தத்தால் கடையப்பட்ட கால்களை உடைய கட்டிலின் மேல் மிருதுவாயிருக்கும் பஞ்சணையின் மீது ஏறி, கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டியுள்ள கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியின் கொங்கையின் மீது வைத்துத் (?) துயில் கொண்ட விசால மார்பினை உடையவனே!
குத்து விளக்கெரிய
கோட்டுக் கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்¬னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
ஆண்டாள் என்ற பெண் பக்தை கடவுள் மீது மையல் கொண்டு இப்படியெல்லாம் பாடுவதாக இந்தப் பக்தர்கள் பக்தி சொட்டச் சொட்ட பஜனைகள் பாடுவதுதான் மார்கழி மாதத்தின் தேஜஸ்.
சாதாரணமாக அல்ல; ஒலி பெருக்கியை வைத்து அலற விடுகிறார்கள்.
நாள்தோறும் இந்தப் பாட்டைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன நிலையில் இந்தப் பாட்டுக்குப் பொருள்தான் என்ன? சிறுமி கேட்டுவிட்டால் பெரிசுகள் என்ன சொல்லுமோ தெரியவில்லை.

இன்னொரு பக்கம் இசைக் கச்சேரிகள் கன ஜோர்!
இசைக்கும் நமக்கும் காததூரம்; ஆனாலும் விமர்சனங்களைப் படிப்பதில் என்ன கஷ்டம்?
அதுவும் இசை விமர்சகர் சுப்புடு என்றால் கொக்கா?
அவர் எழுதிய விமர்சனம் ஒன்றை - அதுவும் தினமலரில் (18.12.2003) படிக்க நேர்ந்தது. அப்பொழுதுதான் இசைக் கச்சேரியில் எதைப் பற்றி விஸ்தாரமாகப் பாடுகிறார்கள் என்ற ‘குட்டும்’ நமக்கு உடைப்பட்டது.
இதோ சுப்புடு எழுதுகிறார்.

“நமக்குள் இருப்பது போலி ஆச்சாரம். சிலதைப் புனிதம் இல்லைன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மீகம் என்பதை நம்மைப் போல தப்பாப் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. ‘நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வரல்லே? என் தாபம் தாங்கல்லே!’ இப்படி ஒரு பாட்டு தெலுங்குல இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா நடை போட்டுடுவாங்க.
க்ஷேத்திரக் பாட்டு ஒண்ணு இருக்கு. ‘கிருஷ்ணா! வந்திருக்கிறே.. போ.. போயிடு... அப்புறம் வா.. என் புருஷன் வர நேரமிது!’ என்று. யாராவது அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா?
அஷ்டபதி ஒண்ணு இருக்கு. தலைவி சொல்றா... ‘தாபம் அதிகமாயிட்டது. அவனைப் போய் இழுத்¢துக் கொண்டு வாடி என்கிறாள். தோழி போயிட்டு லேட்டா வரா. ‘ஏன் தலை எல்லாம் கலைஞ்சிருக்கு’ என்னும் தலைவி தோழிக்கிட்ட கேட்கிறாள். ‘காத்துல கலைஞ்சு போயிட்டுது’ ன்னு பதில் சொல்றா.

ஜீவாத்மா பரமாத்மாவை அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப்பலாகத் தான் தோன்றது”
இவ்வளவும் சொல்லுவது பாவாத்மாக்களாகிய நாம் அல்ல! பிரபல சங்கீத விமர்சகர் சுப்புடு - தகவல் சொல்லுவதும் ‘விடுதலை’யல்ல - தினமலர்!
கூடுது கூடுது இசைக் கச்சேரிகளில் எல்லாம் கிழடுகள் வரை கூட்டம் கூடுது என்றால் எதற்காகவாம்? எல்லாம் இம்மாதிரி சமாச்சாரங்களுக்காகத்தான் என்பது இதுவரை புரிந்து கொள்ளத் தவறினாலும் இப்பொழுதாவது புரிந்து கொள்ளலாம்.

ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக் கூடுவதற்கு இத்தியாதி இத்தியாதி முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்பதை நம்புவோமாக’
தமிழ்நாட்டில் இசை மழை; தமிழில்தானே கச்சேரிகள் இருக்கும் - தமிழர்கள்தானே பாடுவார்கள் என்று அந்தப் பக்கம் கொஞசம் தலை காட்டினால், அங்கு தமிழும் இல்லை, தமிழர்களும் மருந்துக்கும் கிடையாது.
கேட்டால் இசையில் இந்தக் கண்ணோட்டமெல்லாம் கூடாது; இசைக்கு மொழியில்லை என்று பரந்து விரிந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர்கள் போல எச்சில் சொட்டச் சொட்டப் பேசுவார்கள்.

சரி, இசைக்குத் தான்¢ மொழி கிடையாதே - தமிழ்நாட்டில் அது தமிழில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நாம் கேட்டால் ‘இது விதண்டாவாதம், மொழித் துவேஷப் பார்வை’ என்று தயாராக வைத்திருக்கும் அஸ்திரங்களை நம் மீது ஏவுவார்கள்.
இப்படிச் சொல்லுகிறவர்கள் தான் கோயில்களில் கடவுளுக்கு மொழி உண்டு - அது சமஸ்கிருதம்தான் என்பார்கள்.
இந்தப் போராட்டம் இன்று நேற்று அல்ல - நீண்ட காலமாகவே தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருப்பதுதான்.
தந்தை பெரியார் தாம் நடத்திய மாநாடுகளில் எல்லாம் 1930-களில் தமிழிசை மாநாடு என்றும் இணைத்து நடத்தி, தமிழிசைக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். அந்த மாநாடுகளில் தமிழ்நாட்டு மேடைகளில் இசை நிகழச்சி தமிழில் அமைய வேண்டும் என்று தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்றியும் இருக்கிறார்கள்.

1944 ஏப்ரல் 8ஆம் தேதி பட்டுக்கோட்டையில் ஒரு சம்பவம்; இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பார்ப்பனர் ஒருவர் தந்தை பெரியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் சுவையானது. அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியாரின் இயக்கத் தொண்டர்கள் கொளுத்திய தன்மான உணர்வுக்கு அது ஒரு அடையாளம்.
இதோ அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி.

இராமசாமி நாயக்கருக்கு பட்டுக்கோட்டைவாசி எழுதிக் கொண்டது...
8.4.1944இல் இவ்வூர் நாடியம்மன் உற்சவத்திற்கு மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி செய்ய வந்தார். அப்பொழுது ஸ்ரீமான் நாடி முத்துப்பிள்ளை, போல¦ஸ் சூப்பிரிண்டண்ட், டிப்புடி கலெக்டர், ஸ்பெஷல் கலெக்டர், சப் மாஜிஸ்டிரேட், டிஸ்டிரிக்ட் முன்சீப் இன்னும் இவ்வூர் பிரபலஸ்தர்களும் வீற்றிருந்தார்கள். அப்பொழுது இவ்வூர் சு.ம. காரியதரிசி என்று நினைக்கிறேன். மாப்பிள்ளையன் தமிழில்தான் பாட வேண்டும் என்று சொன்னார். அவர் தமிழில் தெரியாது என்றார். மீண்டும் பாடினார். நிறுத்து என்று மறுபடியும் சொன்னார். உடனே நாடி முத்துப்பிள்ளை மாப்பிள்ளையனை வெளியே பிடித்துத் தள்ளச் சொன்னார். நாடி முத்துப் பிள்ளையைப் பார்த்து மாப்பிள்ளையன் சொல்கிறார்.
‘கொலை விழும் ஜாக்கிரதை’ என்று. தங்கள் கட்சிக் கொள்கை இதுதானா? போல¦ஸ் சூப்பிரிண்டண்டும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்.
உடனே டிப்டி கலெக்டர் தமிழில் பாடும் என்று பாடகரைச் சொன்னார். பிறகு பாடினார் தமிழில். அதில் வெற்றிதான். அது மாதிரி காரியங்களில் தலையிடலாம். முறையுங்கூட! பிராமணர்கள் இருக்கக் கூடாது என்றால் அவர்கள் எங்கு போவது?

என்று தந்தை பெரியார் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை பார்ப்பனர் ஒருவர் கடிதம் எழுதினார். இன்றைக்கு 63 ஆண்டுகளுக்குமுன்
தமிழில் பாடத் தெரியாது என்று முதலில் சொன்ன பார்ப்பனர், எதிர்ப்புக்குப் பின் எப்படித் தமிழில் பாடினார்?
இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை; பார்ப்பனர்கள் வெறியைப் பணிய வைக்கும் அணுகுமுறையையும் நமது பெரியார் இயக்கத் தோழர்கள் 63 ஆண்டுகளுக்கு முன்பே நமக்குக் கற்றும் கொடுத்திருக்கிறார்கள்.
சபாக்களில் இப்பொழுது நடக்கும் கச்சேரிகளைப் பார்க்கும்போது அந்த அணுகுமுறை இன்றைக்கும் தேவைப்படுவதாகவே தெரிகிறது.
ஜேசுதாஸ் என்றால் இசை உலகில் அறியாதார் யாரும் இருக்க மாட்டார்கள்.
பார்ப்பனத் தேள் அவரையும் கொட்டிப் பதம் பார்த்து இருக்கிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
இதற்கான ஆதாரமும் நமது இயக்க ஏடுகள் அல்ல. ஆனந்தவிகடன் தான் (20.12.1992)

பிரபல இசை வல்லுநர் டி.வி.கோபால கிருஷ்ணன் ஆனந்த விகடனுக்காக ஜேசுதாஸ் அவர்களைப் பேட்டி காணுகிறார்.
கேள்வி ஒன்றுக்கு ஜேசுதாஸ் பதில் சொல்லியிருக்கிறார்.

“யாராவது இந்த சீஸன்லே எங்கெல்லாம் பாடறேள்?’னு கேட்டா வீணா லிஸ்ட் கொடுத்திண்டிருக்க வேண்டாமே மியூசிக் அகாடம’¤ தவிரனு ஒரே வார்த்தையில சொல்லிட்டுப் போயிண்டே இருக்கலாமே” என்று ஜேசுதாஸ் பதில் சொல்லுகிறார்.
எவ்வளவு புகழ் பெற்றவராக, இசை உலகில் கொடி கட்டி ஆள்பவராக இருந்தாலும் மியூசிக் அகாடமியில் ஜேசுதாஸ் போன்றவர்கள் பாட முடியாததற்குக் காரணம் என்ன? புரியவில்லையா? அதனை இன்னொரு இடத்தில் புரிய வைத்து விட்டார்.

டி.வி. கோபாலகிருஷ்ணன்: “நாம எல்லோரும் ரொம்ப டிடே„டு பெ˜ச¡ இல்லையா? நமக்குள்ளேயே முதல்ல ஒண்ணு சேர மாட்டோமே! அப்புறம் எங்கே வரிஞ்சு கட்டறது?! இப்போ நீங்க இருக்கீங்க. உங்க கச்சேரிக்கு வர்ற கூட்டத்தைப் பார்த்து நாங்க வாய் பிளக்கிறோம். ஆனா நம்மள்ல சில பேருக்கு அதுவே வயித்தைக் கலக்கிறதே! வயித்தெரிச்சல்ல, ‘பிரமாண்ட கூட்டத்துக்குக் காரணம் - அவருக்கு இருக்கிற சினிமா புகழ்!னு வாய் கூசாம சொல்றவங்க கூட இருக்காங்களே!”

ஜேசுதாஸ் : “இல்லே டி.வி.ஜி. அவங்களுக்கு இருக்கிற பாரம்பரியம் எனக்கு இல்லையே! அந்த ஆதங்கம்கூட இருக்கலாமில்லையா?’’
டி.வி.ஜி. : ‘தயவு பண்ணி அப்படி நமக்குப் பாரம்பரியம் இல்லேன்னு சொல்லிடாதீங்க...’
ஜேசுதாஸ் : “இல்லே... தியாகராஜர் என் தாத்தாவை மடியிலே உட்கார்த்தி வெச்சுண்டு பாட்டுப் பாடி சாதம் ஊட்டியிருக்கார்!னு சொல்றவங்களுக்கு மத்தியிலே, நான் பாரம்பரியம் இல்லாத அந்நியன்தானே! அதைத்தான் சொன்னேன்.’’

ஜேசுதாஸ் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்பொழுது புரிந்திருக்குமே?
மியூசிக் அகாடமியில் அவாள் பாஷையில் ‘சான்ஸ்’ கிடைக்க வேண்டுமானால் முதுகில் பூணூல் தொங்க வேண்டும் என்பதை லாவகமாகப் பாடுவது போலவே ஜேசுதாஸ் இந்த இடத்திலும் சொல்லிவிட்டாரா இல்லையா?
பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் - தமிழ் - தமிழரல்லாத போராட்டம் என்பது நீண்ட காலமாகவே பல வடிவங்களிலும் நடந்து கொண்டு தானிருக்கிறது.

1946 பிப்ரவரி ஒன்பதாம் தேதி ‘குடிஅரசு’ இதழின் 7ஆம் பக்கத்திலே ஒரு கட்டுரை காணப்படுகிறது. அதன் தலைப்பு ‘‘தீட்டாயிடுத்து!’’ என்பதாகும்.
அந்தக் கட்டுரை இதோ
‘‘இந்த ஆண்டு திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் ‘சித்தி விநாயகனே’ என்ற பாட்டைப் பாடினாராம். அடுத்தபடி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமானுச அய்யங்கார் ‘தேசிகர் தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப்படுத்தி விட்டார். நான் இந்த மேடையில் பாட மாட்டேன்’’ என்று கூச்சலிட்டுத் தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.

இது இன்று நேற்றல்ல, மனுமந்தாதா காலத்திலிருந்து ‘தமிழ் பாஷை நீச்ச பாஷை’ என்றும், பிராமணாள் ஸ்நானம் செய்துவிட்டு சாப்பிடும்வரை தமிழ் பேசக் கூடாது’’ என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடாதென்றும் கூறி வந்ததோடு, அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது. அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்துவந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்துவிட்டது. தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு! ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! ‘தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது’’ என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான். தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது. தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை அரியக்குடிவர்க்கம் அகம்பாவத்தோடுதான் வாழும். அரியக்குடிகள் அங்கலாய்ப்புக்கு அவர் இனபந்து காந்தி மகாத்மா(?)வின் விஜயமும் ஒரு காரணமாகும்.

இந்தக் கட்டுரையைத் தீட்டியவர் அன்றைய ‘குடிஅரசு’ இதழின் எழுத்தாளர் - இன்றைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தான்.
தண்டபாணி தேசிகர்கள் முதல் ஜேசுதாஸ் வரை அவமானப்படுத்தப்படுவது தொடந்து கொண்டு தானிருக்கிறது. இதற்கப் பரிகாரம் பட்டுக்கோட்டை மாப்பிள்ளையன்களின் வைத்தியம்தானோ!

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

No comments: