Thursday, January 10, 2008

மலேசியத் தமிழர்களே கவனம்!

மலேசியத் தமிழர்களே கவனம்!
- இனியன்
மலேசியாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர், தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்னும் செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிலும், மக்களவையின் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த பாரிசான் கட்சியின் உறுப்பினர் டத்தோஸ்ரீ யூசுப் பின் யாக்கோப், நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரனைப் பார்த்து, “மானா அடா பங்சா தமிழ், யாங் பெர்ஹொர்மாட்” (தமிழினம் என்று ஒன்று இருக்கிறதா, அவர்கள் எங்குள்ளனர்?) என்று கேட்டதை அறிந்தபோது நமக்குக் கொதித்துப் போனது.
பிரித்தானியர்களின் ஆட்சியின்போது, தமிழர்கள் பலர், கூலித் தொழிலாளர்களாக உலகின் பல நாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவற்றுள் மலேசியாவும் ஒன்று. இலங்கை, மலேசியா, பிஜித் தீவுகள், மொரீசியஸ், தென் ஆப்ரிக்கா என்று பல நாடுகள் செல்வ வளமடையத் தங்களின் வியர்வையையும், குருதியையும் தமிழர்கள் சிந்தியுள்ளனர்.
அந்த உழைப்பை மறந்து, நன்றி ஏதுமின்றி “தமிழினம் என ஒன்று உள்ளதா?” என்று கேட்பது, நெஞ்சைச் சுடும் நெருப்பாகவே உள்ளது.
ஈழத்தில் அடிபட்ட தமிழன் இப்போது மலேசியாவிலும் அடிபடுகிறானோ என்று வேதனையாக இருக்கிறது.
25.11.2007 அன்று தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைத் தொலைக்காட்சியில் கண்டபோதும், ஐந்து முன்னணித் தலைவர்களைச் சர்வதேசப் பாதுகாப்புச் சட்டத்தின் (ஐஎஸ்ஏ) கீழ்ச் சிறையில் அடைத்துள்ளதை அறிந்தபோதும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் பெரும் வேதனைக்குள்ளாயினர்.
அமைதியான பேரணிக்கு ஏன் அனுமதி மறுப்பு என்பதும் புதிராகவே உள்ளது.
சுமத்ரா தீவிற்குப் பாலம் கட்ட வேண்டும் என்ற ஒன் பின் ஜாபரின் கனவை இன்று நனவாக்கத் திட்டமிடுகின்ற முகமது அலி ரஸ்தாம் போன்ற மேல்தட்டு மலாய்க்காரர்களின் தூண்டுதலால்தான், தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று ஒரு தகவல் கிடைக்கிறது.
இயல்பாக மலாய் மக்கள் மிக நல்லவர்கள். சில மேல்தட்டினர் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளுக்குக்¢ காரணம் என்னும் கருத்தும் உள்ளது.
எனினும் இங்கு சில செய்திகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நேற்றுவரை, தமிழர்களுக்கும், மலாய் மக்களுக்குமிடையே பெரிய பிணக்கு ஏதும் இல்லை.
கேபினட் அமைச்சர், துணை அமைச்சர் நிலை வரை தமிழர்கள் எட்டியுள்ளனர். அந்நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற அஜீத்சிங் ஒரு தமிழர். இன்னும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தமிழர்கள் பலர் உள்ளனர். தமிழர்களுக்கான வானொலி, தொலைக்காட்சி, தமிழ்ப் பள்ளிகள், தமிழ் நாள், வார, மாத இதழ்கள், தமிழ்ப் படங்கள் ஓடும் திரையரங்குகள் அனைத்துமே இன்று வரை உள்ளன.
பிறகு எப்படித் தமிழர்களுக்கும், மலாய் மக்களுக்குமிடையே ஓர் உரசல் ஏற்பட்டது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இயல்பாகவே செயல் ஊக்கம் உடைய தமிழர்கள் மற்றும் சீனர்களின் வளர்ச்சி, மலாய் மக்களிடம் ஓர் உறுத்தலை ஏற்படுத்தியது. தங்கள் மண்ணில் தங்களைக் காட்டிலும் பிற இனத்தினர் ஏற்றம் பெறுவது கண்டு அவர்களுக்கு ஓர் இயற்கையான சீற்றம் ஏற்படத் தொடங்கியது. ‘பூமிபுத்ரா’ என்ற இயக்கம், மண்ணின் மக்களுக்கே கல்வி, வேலை வாய்ப்பு அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
அரசும் அக்கோரிக்கையைச் சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது. சிறு பிணக்குகளும் தொடங்கின.
கடந்த நவம்பர் மாதம் மலேசியாவில் உள்ள ‘ஹிண்ட்ராப்’ என்னும் அமைப்பு, பிரித்தானியர் இந்தியாவில் இருந்து அழைத்து வந்த தொழிலாளர்களுக்குச் சரியான நியாயம் வழங்கவில்லை. அதற்குரிய பொறுப்பை ஏற்று பிரித்தானிய அரசு அவர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியே பேரணி நடத்தியது.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, லண்டனில் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளது. அவ்வழக்கை நடத்த, அரசி எலிசபெத்தே நல்ல வழக்குரைஞர்களை நியமித்துத் தர வேண்டும் என்ற மனுவை, அங்குள்ள பிரித்தானியத் தூதரகத்தில் ஒரு பேரணியாகச் சென்று கொடுக்கத் திட்டமிட்டது.
மலேசிய அரசு மனுவைக் கொடுக்க ஏற்பாடு செய்த போதும், பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஹிண்ட்ராப் அமைப்பினர் தடையை மீறிப் பேரணி நடத்தத் திட்டமிட்டபோதுதான், அது தடியடியிலும், கலவரத்திலும் முடிந்தது.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு செய்திகள் உள்ளன.
1. தமிழர்களுக்கும், பிரித்தானிய அரசுக்கும் இடையிலான சிக்கல், மலேசிய அரசுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான சிக்கலாக மாறியது எப்படி?
2. தமிழர்கள் தங்கள் அமைப்பிற்குத் தமிழ் இனம் சார்ந்த பெயரைச் சூட்டிக் கொள்ளாமல், “இந்து உரிமை நடவடிக்கைப் படை” (Hindu Rights Action Force - Hindraf) எனப் பெயர் வைத்துக் கொண்டது ஏன்?
இரண்டாவது வினாவை ஆராய்ந்தால், அதில் முதல் வினாவிற்கும் விடை கிடைக்கும் என்று மலேசியத் தமிழர்கள் சிலரே கூறுகின்றனர்.
இது குறித்து, மலேசியா-சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்த, ‘சன்’ தொலைக்காட்சி வீரபாண்டியன் தரும் சில தகவல்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. அவர் எழுதுகின்றார்:-
“உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. செந்தூர் முருகன் கோவிலும், பத்துமலை முருகன் கோவிலும் தைப்பூச விழா கொண்டாடி மகிழ்கின்றன. 59 விழுக்காடு மலாய் முஸ்ல¦ம்கள் இருக்கும் நாட்டில் 4000 பள்ளி வாசல்கள் இருக்கின்றன. அதே நேரம், 8 விழுக்காடு இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அரசாங்கமே நிதியுதவி செய்து கட்டிக்கொடுத்த மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்திப் பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை நாடு பார்த்து ரசித்துள்ளது. பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களை மட்டுமின்றிப் பள்ளிவாசல்களையும் கூட அரசு இடித்துள்ளது.”
இத்தனை உரிமைகள் இருக்கும்போது, இந்துக்கள் என்ற பெயரில் உரிமை கோரியதின் அடிப்படை என்ன என்று நாம் காண வேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் உள்ள சில இந்து அமைப்புகளுக்கும், மலேசியாவில் வாழும் சில (பார்ப்பனத்) தமிழர்களுக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, மலேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியப் பிரிவில், நேற்று வரை நடைபெற்று வந்த தமிழ்க் கலை விழாவிற்குப் பதிலாக, ‘பாரதீயப் பண்பாட்டு விழா’ நடைபெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து சென்றவர்கள் சமஸ்கிருத ஸ்லோகம், பஜனை, பயிற்சி ஆகியனவற்றை மேற்கொண்டு அதனைப் பாரதிய ஜனதா விழாவாகவே மாற்றியுள்ளனர்.
எல்லாம் போதாதென்று அமைப்புக்கும் ‘ஹிந்து’ வின் பெயரால் பெயர் சூட்டியுள்ளனர்.
ஓர் இஸ்லாமிய அரசை இச்செயல்கள் அச்சம் கொள்ளவும், சினங் கொள்ளவும் செய்துள்ளன. எனவேதான், பிரித்தானியத் தூதரகத்துக்கு மனுக் கொடுப்பதைப் பேரணியாகச் சென்று கொடுக்க மலேசிய அரசு தடுத்துள்ளது.
ஆக மொத்தம், மலேசிய அரசுக்கும், தமிழ் மக்களுக்குமிடையே இருந்த நல்லுறவை, இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் இடையில் புகுந்து கெடுத்துள்ளது என்பதையும், இவ்வுண்மை அறியாத தமிழர்கள் பலர் அதற்குப் பலியாகியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
மலேசியத் தமிழர்களுக்காக இல.கணேசனும், இராம.கோபாலனும் கண்ணீர் வடித்தபோதே, நமக்குச் சந்தேகம் தட்டியது. ஆராய்ந்து பார்க்கையில், இப்படிப் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
தமிழர்களே கவனம்.....
ஆமை புகுந்து வீடு உருப்படுமோ, உருப்படாதோ நமக்குத் தெரியாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். புகுந்த நாடு உறுதியாய் உருப்படாது!

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

No comments: