Wednesday, March 30, 2016

மியான்மர் நாட்டில் ஜனநாயக முறைப்படி புதிய அதிபர் பொறுப்பேற்பு


அதிபராக முடியாத ஆங் சான் சூகி, அதிபரானார் ஹிதின் கியாவ்.

மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

இந்நிலையில், தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வரும் 31–ந் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து புதிய அதிபர் வரும் ஏப்ரல் 1–ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். 

அண்மையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் மியான்மர் நாட்டின் புதிய அதிபராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, 56 ஆண்டுகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிதின் கியாவ், கடந்த வாரம் தனது புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், ஆங் சான் சூகியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆங் சான் சூகி பல முக்கிய துறைகளின் அமைச்சராக விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: