Monday, January 25, 2016

15 ஆண்டுகளில் அணுவிஞ்ஞானிகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன?- பதில் அளிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 15 ஆண்டுகளில் அணு விஞ்ஞானிகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய மும்பை உயர் நீதிமன்றத்தில் அணு சக்தி துறையும், மகாராஷ்டிர அரசும் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன. அதன்படி இருவாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சேத்தன் கோத்தாரி என்பவர் “பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த அணு விஞ்ஞானிகளில், கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் எத்தனை பேர் திடீரென உயிரிழந்துள்ளனர்” என கேள்வி எழுப்பி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதற்கு 5 பேர் உயிரிழந்திருப்பதாக அவருக்கு பதில் அனுப்பப்பட்டது.

இதையடுத்து அணு விஞ்ஞானிகள் பணியாற்றுவதற்கு இந்தியா மிகுந்த அபாயகரமான நாடாக மாறி வருவதாக குற்றம்சாட்டிய கோத்தாரி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

மேலும் அதில், ‘கணித அறிவியல் மையம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் பணியாற்றி வந்த விஞ்ஞானிகளும் மர்மமான முறையில் உயிரிழந்த தகவலும் எனக்கு கிடைத்தது. தவிர கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சில அணு விஞ்ஞானிகளின் சடலங்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்கை மூடிவிட்டனர். எனவே உண்மையை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம் அணு விஞ்ஞானிகளின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மர்ம மரணம் தொடர்பாகவும் பதில் அளிக்கும்படி மகாராஷ்டிர அரசுக் கும், அணுசக்தி துறைக்கும் உத்தர விட்டது. அதன் அடிப்படையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அணு விஞ்ஞானிகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய கால அவ காசம் வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றம் இரு வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

No comments: