Monday, February 29, 2016

அன்புமணி ஆகிய நான்...

சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார்.
அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது. தமிழத்தில் மாற்றம் வேண்டும். புதுமை வேண்டுமென்ற எண்ணத்தின் என்னை முதல்வராக தேர்வு செய்ய லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். 

கடந்த 50 ஆண்டுகள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளீர்கள். அந்த வாய்ப்பை இந்த முறை எனக்கு கொடுங்கள். 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்யாததை அன்புமணி ஆகிய நான் 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன்.அது மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் சேர்த்து என்னால் திட்டமிட முடியும். இது எங்களால் மட்டும்தான் செய்ய முடியும். இது ஆணவமான பேச்சு அல்ல. நம்பிக்கைமிகுந்த பேச்சு 

இந்த இடத்தில் நான் மகாத்மா காந்தியின் வாசகங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன். முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள். அடுத்து ஏளனம் செய்வார்கள். அடுத்து உங்களை கடுமையாக எதிர்ப்பார்கள், கடைசியில் உங்ககளை ஏற்றுக் கொள்வார்கள்.  

கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த கூட்டத்தில் என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த போது ஏளனம் செய்தார்கள். இவர் முதல் அமைச்சரா? இவரால் முடியுமா? என்று கிண்டலடித்தார்கள். ஆனால் 32 மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து மக்களையும் மனம் தளராமல் சந்தித்தேன். எட்டு திசைகளிலும் 8 மண்டல மாநாடுகளை நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை பெண்களை கவர்ந்து இழுத்திருக்கிறோம்.

நாம் கடந்து வந்த பாதை சாதாரண பாதை கிடையாது. ராமதாஸ் அவர்களின் 34 ஆண்டு கால உழைப்பு. தொண்டர்களின் உழைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது.  இப்போது அவர்களுக்கு நம்மை கண்டு பயம் வந்து விட்டது. காந்தி சொன்ன வார்த்தை இப்போது நிறைவடையப் போகிறது. ஆம் அடுத்த இரண்டே மாதத்தில் நாம் வெற்றி பெறப் போகிறோம். 

தமிழகத்தில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு மாற்றம் நிகழப் போகிறது. ஒரு பக்கம் சாத்தான். இன்னொரு பக்கம் கடல். இருவருக்கும் மத்தியில் டாக்டர் என்ற வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. 35 வயதிலேயே பதவியை நான் பார்த்து விட்டேன். எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. 

தற்போதைய நிலையில் தேர்தல் களத்தில் வீர நடை போடும் ஒரே கட்சி பா.ம.கதான். திமுக அதிமுகவைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என ராமதாஸ் கூறியிருக்கிறார். வந்தால் மகிழ்ச்சி... வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் மக்களை நம்பி களம் இறங்குகிறோம். மது விலக்கு வேண்டுமென்று கதறும் பெண்களை நம்பி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். 

இந்த தேர்தலில் 66 வயது நிரம்பிய திமுக தனித்து நிற்கத் தயங்குகிறது. 44 வயது அதிமுக தனித்து போட்டியிட பயந்து நிற்கிறது. யாராவாது வருவார்களா? என்று கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார். எதிரிகளே இல்லையென்று சொன்ன ஜெயலலிதாவை சுற்றி எதிரிகளாகத்தான் இருக்கிறார்கள். 

மதுவை விலக்குதான் முதல் கையெழுத்து 


தமிழகத்தின் முக்கிய பிரச்சினை மது. தமிழகத்தில் உள்ள  1 கோடியே 97 லட்சம் குடும்பங்களில் இந்த மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை. தாத்தாவில் இருந்து பேரன் வரை அல்லது குடும்ப உறுப்பினர்கள் என யாராவது ஒருவர் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பார். அதிக மது விற்பனை, கணவனை இழந்த பெண்கள் அதிகமான இருப்பது, குடி பழக்கத்தால் சாலை விபத்துக்கள், தற்கொலைகள் அதிகமாக நடப்பது என தமிழகம் எதிர்மறையான விஷயங்களில்தான் முதலிடத்தில் உள்ளது.
பல ஆண்டு காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ராமதாஸ் மதுவை ஒழிக்கப் போராடி வருகிறார். பெண்கள், மாணவர்கள் மது குடிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையே அழிந்து விடும். மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடி வரும் ஒரே கட்சி பா.ம.கதான்.திமுகவின் முன்னோடிகள் பெரியார், அண்ணா ஆகியோர் மதுவை எதிர்த்தார்கள். ஆனால் இன்று தமிழகத்திற்கு மதுவை கொடுத்த கட்சியாக திமுக இருக்கிறது.

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்தே மது விலக்கு கையொப்பமாகத்தான் இருக்கும். அதே வேளையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுரவமான மற்றொரு வேலை வழங்கப்படும். மது அடிமைகளை மீட்க மறு வாழ்வு மையம் அமைக்கப்படும். சாதாரண மக்களின் பங்களிப்புடன் தமிழகத்தில் கள்ளச்சாரயம் ஒழிக்கப்படும். 

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் பொறுங்கள். மது விலக்கு கையெழுத்து போட்டு விட்டுதான் அடுத்த வேலையை பார்ப்போன். மது சமூகத்தின் ஒழுக்கக் கேடுகளுக்கு நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் ஒரு பிரச்னை. அதனால்தான் அதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டியது உள்ளது. 

தமிழகத்தின் வருமானத்தை பெருக்க அன்பு மணியின் திட்டங்கள்


தமிழகத்தில்  ஆற்றில் ஒரு யூனிட் மணல் எடுக்க ரூ.674 வசூலிக்கப்படுகிறது. வெளியே ஒரு யூனிட் மணலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்கிறார்கள். 5 ஆயிரம் யூனிட் மணல் அள்ளினால் ஆயிரம் யூனிட்டுக்குதான் கணக்கு தருவார்கள். இதன் முலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை வருவாயாக மாற்றினால் தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும்.  

அடுத்து தாதுமணல் கொள்ளை. இதனை முறையாக செய்தால்  50,000 கோடி வருமானம் வரும். கிரானைட் கொள்ளையை தடுத்தால் 30,000 கோடி வருமானம் வரும். இவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும். 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தனியாக  டோல் ஃப்ரீ நம்பர் தருவோம்.  தமிழகத்தில் எந்த பகுதியில்  கள்ளச் சாரயம் விற்றாலும்  அந்த எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் உண்மையாக இருந்தால்ரூ.ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும். ரகசியம் பாதுகாக்கப்படும். அதே வேளையில் அந்த கிராம நிர்வாக அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கத்துக்குள்ளாவார்கள். 

டாஸ்மாக்கில்  82 பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கவுரவமிக்க மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும்.  

தமிழகத்தில் 12 மது ஆலைகளில் திமுகவுக்கு 6 அதிமுகவுக்கு 3 சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மது ஆலைகள் இருக்கிறது. மது விற்பனை மூலம் திமுகவுக்கு ஆண்டுதோறும் ரூ.16ஆயிரத் கோடி கிடைக்கிறது. மதுவை ஒழிப்பதாக சொல்லும் ஸ்டாலின்  மக்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் 6 மது ஆலைகளை மூட வைக்க முடியுமா? 

அன்புமணி பிடிவாதக்காரன். சொன்னால் செய்வான். நான் மதுவை ஒழிப்பேன். என்னால் மட்டும்தான் மதுவை ஒழிக்க முடியும் என்று ஆணவத்தில் சொல்லவில்லை. தைரியத்தோடு நம்பிக்கையோடு சொல்கிறேன்.


ஊழலை ஒழிக்க தீர்வு 


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழலின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. இதற்கு ஒரே தீர்வு. ஊழல் பெருச்சாளிகளான அதிமுக, திமுக வேண்டாம். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். சுயாட்சி அந்தஸ்த்துடன் அது செயல்படும். ஆண்டு தோறும் முதல்வர், அமைச்சர்கள் சொத்து மதிப்பு வெளியிடப்படும். ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். முதல் கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். இதனால் முதல்வர் தவறு செய்தால் கூட தப்பிக்க முடியாது. லஞ்சம் கேட்டால் டோல்ப்ரீ எண்ணில் புகார் தரலாம். இதுவெல்லாம் நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும். 

கடந்த 50 ஆண்டுகளில் சீர்குலைந்து போய் கிடக்கும் நிர்வாகத்தை சுண்ணாம்பு அடித்து புதிய நிர்வாகமாக மாற்றுவேன். சுகாதரத்துறை அமைச்சராக இருந்த போது 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மண்டபத்தில் தண்டனை காலம் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்காது. 

சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது? அம்மாவில் ஆரம்பித்து அம்மாவில் முடிகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறைகள் கடைபிடிப்போம். எதிர்கட்சிகளுக்கு எங்களை விட அதிகமாக பேச வாய்ப்பு அளிப்போம். ஆட்டுக்குட்டி, மிக்ஸி தரமாட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு அளிப்பேன். தமிழக மக்களை தன்மானத்துடன் வாழ வைப்பேன்.
 
தமிழகத்துக்கு  திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும். தமிழகத்தை முன்னேற்றபாதைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது'' என்று பேசினார். 

No comments: